திருஇராமேச்சுரம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

திரிதரு மாமணி நாகமாடத் திளைத்தொரு தீயழல்வாய்
நரிகதிக்க வெரியேந்தி யாடு நலமே தெரிந்துணர்வார்
எரிகதிர் முத்த மிலங்குகான லிராமேச் சுரமேய
விரிகதிர் வெண்பிறை மல்குசென்னி விமலர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

அரிய மாணிக்கங்களையுடைய நாகங்களைப் படமெடுத்து ஆடுமாறு தம் உடலில் அணிந்துள்ளவர் சிவபெருமான் . அவர் மகாசங்கார காலத்தில் நரிகள் ஊளையிடும் சுடுகாட்டில் நெருப்பேந்தி நடனம் செய்வார் . மிக்க ஒளியுடைய முத்துக்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , ஒளிக்கதிர் வீசும் வெண்மையான பிறைச்சந்திரனைச் சடைமுடியில் தரித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான சிவபெருமானின் அச்செயல் , உயிர்கள் இளைப்பாறும் பொருட்டுச் செய்யப்படும் அருட்செயல் என்பதை உணர்ந்தவர்களே மெய்ஞ்ஞானிகள் ஆவர் .

குறிப்புரை :

திரிதரு - திரிகின்ற நாகம் . திளைத்து - அணிந்து . தீ அழல்வாய் - கொடிய நெருப்பில் நின்று . ( நரி ) கதிக்க - பாட . கதித்தல் - சொல்லல் , இங்குப் பாடுதல் என்னும் பொருளில் வந்தது . மயானம் ஆதலில் நரி கூவியது பாடல் போலத் தோன்றியது , எரி ஏந்தி ஆடும் நலம் ; உயிர்களின் இளைப்பொழித்தற்குச் செய்யும் நன்மை , மயானத்து ஆடல் மகா சங்காரத்தைக் குறிப்பது . எரி கதிர் முத்தம் ;- முத்துத் தண்மையுடையதாதலின் , எரி , ஒளிக்கு மட்டும் கொள்க . இராமேச்சுரம் மேய விமலர் செயும் செயலாகிய , நாகம் ஆடத் திளைத்து , நரி கதிக்க , எரியேந்தி , அழல்வாய் நின்று ஆடும் நலத்தைத் தெரிந்துணர்வாரே ` மெய்ஞ்ஞானிகளாவார் ` என்பது குறிப்பெச்சம் . இப்பொருளுக்கு நலமே என்பதின் ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுதல் பொருத்தமாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

பொறிகிளர் பாம்பரை யார்த்தயலே புரிவோ டுமைபாடத்
தெறிகிள ரப்பெயர்ந் தெல்லியாடுந் திறமே தெரிந்துணர்வார்
எறிகிளர் வெண்டிரை வந்துபேரு மிராமேச் சுரமேய
மறிகிளர் மான்மழுப் புல்குகையெம் மணாளர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

வெண்ணிற அலைகள் துள்ளிவீசும் கடலுடைய இராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இள மான்கன்றையும் , மழுவையும் ஏந்தியுள்ள சிவபெருமான் புள்ளிகளையுடைய பாம்பை இடையிலே கட்டிக் கொண்டு , பக்கத்திலே சுருண்ட கூந்தலையுடைய உமாதேவி பாட , அதற்கேற்ப விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை ஒலிக்க , நள்ளிரவில் நடனமாடும் செயலின் உண்மையைத் தெரிந்து உணர்பவர் மெய்ஞ்ஞானிகளாவர் .

குறிப்புரை :

பொறி - புள்ளிகள் , கிளர் - விளங்குகின்ற , பாம்பு , அரை ஆர்த்து - இடுப்பிற் ( கச்சையாகக் ) கட்டி , அயலே - பக்கத்திலே ( நின்று ) புரிவோடு உமைபாட அதற்கேற்ப , தெறி ( கிளர ) - விரலால் தெறித்துப் பண்ணும் யாழ் முதலியவற்றின் இசை , கிளர - ஒலிக்க , தெறி - தெறித்தல் என்னும் பொருள் தரலால் தொழிற்பெயர் , ( யாழ் ) ஓசைக்கு ஆயினமை ஆகுபெயர் . எல்லி - இரவு . எறி கிளர் - வீசுதல் . மிக்க வெண்திரை . கிளர் - துள்ளும் . மறிமான் - மான் கன்றும் மழு ( வும் ). புல்கும் - தங்கிய , கையையுடைய , உமை மணவாளராகிய பெருமான் - எல்லியாடும் திறம் தெரிந்துணர்வார் . இவை இராமேச்சுரம்மேய ( உமை ) மணவாளன் செய்யும் செயலே என்பர் என , ஒரு சொல்லெச்சம் வருவித்து வினை முடிவு கூறினும் அமையும் . சதி - ( மனைவி ) யென்ற பொதுச் சொல் வட மொழியில் , இறைவியைக் குறித்து வழங்கல் போலத் தமிழில் பிள்ளை ( யார் ) என்ற பொதுச் சொல் ( மூத்த பிள்ளை யார் ). முருகக் கடவுளையும் குறித்து வழங்கும் . அதுபோல மணாளன் ( பதி - வடசொல் ) என்ற சொல் இறைவனைக் குறித்தது . எமது ஆளுடைய பிள்ளையார் அருண் மொழியின் திறம் அரிதின் உணரற்பாலது . மணாளன் என்பது சிவபெருமானுக்கு ஒரு பெயர் . அது ` மஞ்சா போற்றி மணாளா போற்றி ` என்னும் போற்றித் திருவகவலாலும் , ` மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் ` என்னும் அப்பர் திருவாக்காலும் அறிக . ( தி .4. ப .21. பா .2.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

அலைவளர் தண்புனல் வார்சடைமே லடக்கி யொருபாகம்
மலைவளர் காதலி பாடவாடி மயக்கா வருமாட்சி
இலைவளர் தாழை முகிழ்விரியு மிராமேச் சுரமேயார்
தலைவளர் கோலநன் மாலைசூடுந் தலைவர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

தழைகளை உடைய தாழை மரங்கள் மலர்களை விரிக்கும் திருஇராமேச்சுரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற . அழகிய தலைமாலைகளைச் சூடிய , தலைவராகிய சிவபெருமான் தமது நீண்ட சடைமுடிமேல் அலைபெருகிவரும் கங்கைநீரை அடக்கி , ஒரு பாகமாக அமைந்த மலையிலே வளர்ந்த உமாதேவி பாட , நடனமாடித் தம் தன்மை இதுவென்று பிறர் அறியாதவாறு செய்து வரும் அருஞ்செயலின் மாட்சியை மெய்ஞ்ஞானிகளே உணர்வர் .

குறிப்புரை :

அலைவளர் தண்புனல் - அலை பெருகி வந்த கங்கை நீரை , வார் - தொங்கும் , சடைமேலடங்கச் செய்து . ஒரு பாகத்திலுள்ள ( தனது காதலி , பாட , ஆடி மயக்க - ( தன் தன்மை இதுவென்று ) அறியாவாறு செய்து வரும் மாட்சி . ஏனை மரங்களிற் போலக் கோடு , கவடு , வளார் இன்றித் தழையே யுண்மையால் இம் மரம் தாழையென்னப் பட்டதெனப் பகுதிப் பொருள் கூறுவார் போன்று எமது புகலியர் பெருமான் இலை வளர் தாழை யென்றது போற்றத் தக்கது . ` தலைவளர் சூடும் ` மிக்க தலைகளைக் கோத்த அழகிய நல்ல மாலையைச் சூடும் தலைவர் ; தலைமாலை தலைக் கணிந்த தலைவன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

மாதன நேரிழை யேர்தடங்கண் மலையான் மகள்பாடத்
தேதெரி யங்கையி லேந்தியாடுந் திறமே தெரிந்துணர்வார்
ஏதமி லார்தொழு தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேயார்
போதுவெண் டிங்கள்பைங் கொன்றைசூடும் புனிதர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

குற்றமற்ற அடியவர்கள் தொழுது போற்றத் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , அரும்பு போன்ற இள வெண்ணிறப் பிறைச்சந்திரனையும் , கொன்றை மலரையும் சூடியுள்ள புனிதரான சிவபெருமான் , பெரிய கொங்கை களையுடையவளாய் , ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்த , பெரிய கண்களையுடைய , மலையான்மகளான உமாதேவி பாட , ஒளிபொருந்திய நெருப்பை உள்ளங்கையிலேந்தி நடனமாடும் செயலின் திறத்தைத் தெரிந்துணர்வார் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

மாதனம் - பெரிய தனங்கள் , நேர் இழை - நேரிய ஆபரணங்கள் . தே ( ய ) து - ஒளியையுடையதாகிய , எரி - நெருப்பை . தேயு அது , தேயது : ( அது பகுதிப் பொருள் விகுதி ) தேது என மருவி வந்தது . போது - அரும்பு போன்ற வெண்திங்கள் ` முகிழ் வெண்டிங்கள் வளைத்தானை ` என்ற திருவாலவாய்த் திருத் தாண்டகத்தால் உணர்க . வினை முடிவு இரண்டாம் பாடலிற் போற்கொள்க . தேசெரியுமாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

சூலமோ டொண்மழு நின்றிலங்கச் சுடுகா டிடமாகக்
கோலநன் மாதுடன் பாடவாடுங் குணமே குறித்துணர்வார்
ஏல நறும்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
நீலமார் கண்ட முடையவெங்கள் நிமலர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

ஏலம் முதலிய செடிகளையுடைய நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற நீலகண்டமுடைய , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவரான எங்கள் சிவபெருமான் , சூலம் , ஒளி பொருந்திய மழு ஆகியவற்றை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு அழகிய உமாதேவி அருகில் நின்று பாட , நடனம் செய்யும் குணத்தைக் குறித்துணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நின்று - கையில் தங்கி , நல்மாது - உமா தேவியார் , பாட ஆடும் , குணம் - தன்மை , ஏல ( ம் ) நறும் பொழில் - ஏலம் முதலிய செடி களையுடைய நறும் மணம் கமழும் பொழில் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

கணைபிணை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம்
இணைபிணை நோக்கிநல் லாளோடாடு மியல்பின ராகிநல்ல
இணைமலர் மேலன்னம் வைகுகான லிராமேச் சுரமேயார்
அணைபிணை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

சிறந்த தாமரை மலர்களில் அன்னங்கள் வாழும் சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சேர்த்துக் கட்டப்பெற்ற கரந்தைமாலை சூடிய சிவபெருமான் , ஐம்மலர்க்கணைகளைத் தொடுக்க வில்லைக் கையில் ஏந்திய மன்மதனை எரித்தவர் . அப்பெருமான் மான் போன்ற மருண்ட கண்களையுடைய உமாதேவியோடு நடனமாடும் இயல்புடையவர் .

குறிப்புரை :

கணைபிணை - ( மலர் ) அம்புகளைக் கோத்த கொடிய ( கரும்பு ) வில்லை யேந்தியவனாகிய காமனை . இணை - இரண்டாகிய ( நோக்கு ). பிணை - பெண்மானின் கண் போன்ற . நோக்கி - கண்களையுடைய அம்மையார் , இணை ( இதழ்கள் ) அடுக்கிய . மலர் - தாமரை மலர் . அணை - ஒன்றோடொன்று சேர்த்து . பிணை - கட்டப்பட்ட . புல்கு - பொருந்திய . கரந்தை - கரந்தை மாலை . அடிகள் செயும் செயல் எவரானும் அறிய வருவதொன்று அன்று என்பது குறிப்பெச்சம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

நீரினார் புன்சடை பின்புதாழ நெடுவெண் மதிசூடி
ஊரினார் துஞ்சிருள் பாடியாடும் உவகை தெரிந்துணர்வார்
ஏரினார் பைம்பொழில் வண்டுபாடு மிராமேச் சுரமேய
காரினார் கொன்றைவெண் டிங்கள்சூடுங் கடவுள் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

வண்டுகள் பாடும் அழகிய சோலைகள் சூழ்ந்த திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , கார்காலத்தில் மலரும் கொன்றையையும் , வெண்ணிறப் பிறைச் சந்திரனையும் சூடியவரான சிவபெருமான் , கங்கையைத் தாங்கிய புன்சடை பின்புறம் தொங்க , மிக்க வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சூடி , உலகமே உறங்கும் நள்ளிரவில் பாடி ஆடும் உவகையின் செயல் தன்மையை உணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நீரின் - கங்கை நீரினால் . ஆர் - நிறைந்த . நெடுவெண் - மிக்க வெண்மையையுடைய . தூங்கும் இரவில் ஆடும் . உவகை - மகிழ்ச்சியை ஆராய்ந்து அறிபவர் . காரின் ஆர் - கார்காலத்தில் மலர்தலையுடைய . கொன்றை , முதல் அடியில் நெடுவெண்மதி சூடி என்று வந்தமையால் , ஈற்றடியில் வரும் வெண்டிங்கள்சூடும் கடவுள் என்பது சிவபெருமான் என வாளா பெயரளவாய் நின்றது , ` மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு ` ( குறள் . 610) என்றதில் வரும் ` அடி அளந்தான் ` என்பது போல . இருள் - இலக்கணையாய் இரவையுணர்த்திற்று .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

பொன்றிகழ் சுண்ணவெண் ணீறுபூசிப் புலித்தோ லுடையாக
மின்றிகழ் சோதியர் பாடலாடன் மிக்கார் வருமாட்சி
என்றுநல் லோர்கள் பரவியேத்து மிராமேச் சுரமேயார்
குன்றினா லன்றரக் கன்றடந்தோ ளடர்த்தார்கொளுங் கொள்கையே.

பொழிப்புரை :

என்றும் நல்லோர்கள் போற்றி வணங்கும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , கயிலைமலையால் அன்று இராவணனின் அகன்ற வலிமையான தோள்களை அடர்த்த சிவபெருமான் , நறுமணமிக்க அழகிய திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசி , புலித்தோலாடை அணிந்து , மின்னல் போன்று ஒளிரும் செவ்வண்ணத்தராய் , பாடி ஆடி வரும் செயலின் பெருமையை உணர்பவர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

பொன் திகழ் - வெண் பொன்னாகிய வெள்ளியைப் போல் விளங்குகின்ற நீறு பூசி . மின்திகழ் சோதியர் - மின்னலைப் போல விளங்கும் ஒளியையுடையவராய் . சோதியர் - முற்றெச்சம் . மிக்காராய் வரும் மாட்சி ( அனைத்தும் ) அரக்கன் தோளடர்த்தாராகிய இராமேச்சுரம் மேயார் கொள்கைகளேயாகும் . பொன் திகழ் - பொன்னில் திகழ்வதுபோற் காணப் படுகின்ற எனினுமாம் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

கோவல னான்முக னோக்கொணாத குழக னழகாய
மேவல னொள்ளெரி யேந்தியாடு மிமையோ ரிறைமெய்ம்மை
ஏவல னார்புகழ்ந் தேத்திவாழ்த்து மிராமேச் சுரமேய
சேவல வெல்கொடி யேந்துகொள்கையெம் மிறைவர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

அம்பு எய்தலில் வல்ல இராமபிரான் புகழ்ந்து ஏத்திவாழ்த்தும் திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் , விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இடபம் பொறித்த வெற்றிக் கொடியை ஏந்திய சிவபெருமான் , திருமால் , பிரமன் இவர்களால் அறியப்படாதவர் . இளமையும் , அழகும் அமைந்த திருவுருவினர் . ஒளி பொருந்திய நெருப்பைத் தம் கையிலேந்தி ஆடுகின்ற , தேவர்கட்கெல்லாம் இறைவனான அப்பெருமானின் அருட்செயலின் மெய்ம்மையை அறிவோர் சிவஞானிகளாவர் .

குறிப்புரை :

நோக்கொ ( ண் ) ணாத - நோக்க ஒண்ணாத . குழகன் - இளமையையுடையவன் . மேவலன் - அனைவராலும் விரும்பப்படுபவன் . மேவுதல் - விரும்புதல் . ஏவலன் - அம்பு எய்தலில் வல்லவன் ஆகிய இராமன் ; இறைவனைப் புகழ்ந்து ஏத்தி வாழ்த்திய தன்மையால் , ஏவலனார் - உயர் சொற்கிளவியாற் குறித்தார் . சே - இடபமாகிய . வ ( ல் ) ல - வல்ல . வெல் கொடி - வெல்லும் கொடியை , ஏந்து கொள்கை .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

பின்னொடு முன்னிடு தட்டைச்சாத்திப் பிரட்டே திரிவாரும்
பொன்னெடுஞ் சீவரப் போர்வையார்கள் புறங்கூறல் கேளாதே
இன்னெடுஞ் சோலைவண் டியாழ்முரலு மிராமேச் சுரமேய
பன்னெடு வெண்டலை கொண்டுழலும் பரமர் செயுஞ்செயலே.

பொழிப்புரை :

முதுகிலும் , மார்பிலும் தடுக்கை அணிந்து , ஒதுக்கப்பட்ட இடங்களில் திரியும் சமணர்களும் , பொன் போன்ற சீவரம் என்னும் ஆடையைப் போர்த்த புத்தர்களும் கூறும் புறங்கூற்று மொழிகளைக் கேளாமல் , யாழிசை போல் வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளி , பல்லையுடைய பெரிய மண்டையோட்டில் பலியேற்றுத் திரியும் சிவபெருமான் செய்யும் செயல்களைக் கேட்டு உணர்ந்து , அவரை வழிபட்டு உய்திபெறுங்கள் .

குறிப்புரை :

முன் - மார்பிலும் . பின் - முதுகின் புறத்திலும் . இடு - தொங்க விடப்பட்ட . தட்டை - தடுக்கை . சாத்தி - அணிந்து . பிரட்டே - ஒதுக்கப்பட்ட இடங்களில் , திரிபவர்களாகிய சமணரும் சீவரம் என்னும் ஆடையைப் போர்த்தவர்களாகிய புத்தர்களும் . புறம் கூறல் - அல்லாத பொருள்களைக் கூறுதலைக் கேளாமல் , இனிய நெடிய சோலையில் வண்டுகள் யாழ் ஓசையைப்போல ஒலிக்கும் இராமேச்சுரமேய பரமர் செய்யும் செயலே கேட்டுணர்ந்து உய்தி கூடுமின் என்பதாம் . பல்நெடும் வெண்தலை கொண்டு உழலும் - பல்லையுடைய பெரிய வெள்ளிய கபாலம் கைக்கொண்டு ( பிச்சைக்குத் ) திரியும் ( பரமர் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் றிறல்வாட்டி
ஏவியல் வெஞ்சிலை யண்ணல்நண்ணு மிராமேச் சுரத்தாரை
நாவியன் ஞானசம் பந்தனல்ல மொழியா னவின்றேத்தும்
பாவியன் மாலைவல்லா ரவர்தம்வினை யாயின பற்றறுமே.

பொழிப்புரை :

சீதாதேவியைக் கவர்ந்த தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமையை அழித்து , அம்பு எய்யும் வில்லேந்திய இராமபிரான் வழிபட்ட திருஇராமேச்சுரம் என்னும் திருத்தலத்தில் , விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை , நாவலராகிய ஞானசம்பந்தர் , நல்ல மொழியால் போற்றிப் பாடிய பாட்டின் இலக்கணம் வாய்ந்த இப்பாமாலையை , ஓதி வழிபட வல்லவர்களின் வினைகள் , முற்றிலும் அழியும் .

குறிப்புரை :

தேவி - சீதை . திறல் வாட்டி - வலிமையை யழித்து . ஏ இயல் - அம்பு எய்யும் . வெஞ்சிலை - கொடிய வில்லை யேந்திய . அண்ணல் - வீரனாகிய இராமன் . நண்ணும் - போற்றிய . வெஞ் சிலை - ` காய்சினவேல் ` திருக்கோவையாரிற் போலக் கொள்க . நல்ல மொழி - பயன் தரும் சொற்களாகிய . பா இயல் - பாட்டின் இலக்கணம் வாய்ந்த மாலை . வினை பற்று அறும் - வினை முற்றும் அழியும் .
சிற்பி