திருப்பிரமபுரம்


பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 1

வரமதேகொளா வுரமதேசெயும் புரமெரித்தவன் பிரமநற்புரத்
தரனனாமமே பரவுவார்கள்சீர் விரவுநீள் புவியே.

பொழிப்புரை :

தவம் செய்து பெற்ற வரத்தை நன்முறையில் பயன்படுத்தாது , தமது வலிமையைப் பயன்படுத்தித் தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களை எரித்தவர் சிவபெருமான் . திருப்பிரமபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியார்களின் பெருமை இவ்வகன்றபூமி முழுவதும் பரவும் .

குறிப்புரை :

வரம் அதே கொளா - வரம் பெற்ற பயனை அடையாமல் , உரம் அதே செயும் - தங்கள் வலிமைக்குரிய தீங்கையே செய்த , திரிபுரங்களை எரித்தவனாகிய பிரமபுரத்திலுள்ள சிவ பெருமானின் புகழையே துதித்துப் போற்றும் அடியார்களின் பெருமை இவ்வகன்ற பூமிமுழுதும் பரவும் என்பது இப் பாட்டின் பொழிப்பு .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 2

சேணுலாமதில் வேணுமண்ணுளோர் காணமன்றலார் வேணுநற்புரத்
தாணுவின்கழல் பேணுகின்றவ ராணியொத் தவரே.

பொழிப்புரை :

ஆகாயத்தை அளாவிய மதில் விண்உலகத்தவர் இறங்குவதற்கு வைத்த மூங்கில் ஏணி என மண்ணுலகத்தவர் காணும்படி அமைந்த , நறுமணம் கமழும் திருவேணுபுரம் என்னும் நன்னகரில் வீற்றிருந்தருளும் தாணுவாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுகிறவர்கள் ஆணிப்பொன் போன்று சிறந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

சேண் உலாம் மதில் - ஆகாயத்தை அளாவிய மதில் . வேணு - விண்ணுளோர் இறங்குவதற்கு வைத்த மூங்கிலால் செய்த ஏணியைப் போல் . மண்ணுளோர் காண - பூவுலகில் உள்ளோர் காணும்படி ( பொருந்திய ). மன்றல் ஆர் - வாசனை மிகுந்த . வேணுபுரத்தில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடிகளைப் பாராட்டிப் போற்றுபவர் யாவரும் சிறந்தவராவர் என்பது பிற்பகுதியின் பொழிப்பு . பொருந்திய என ஒரு சொல் வருவிக்க . தாணு - சிவபெருமான் . ஆணி - உரையாணிப்பொன் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 3

அகலமார்தரைப் புகலுநான் மறைக் கிகலியோர்கள்வாழ் புகலிமாநகர்ப்
பகல்செய்வோனெதிர்ச் சகலசேகர னகிலநா யகனே.

பொழிப்புரை :

விரிந்த இப்பூமியிலுள்ளவர்களால் சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற நான்கு வேதங்களிலும் வல்லவர்கள் வாழ்கின்ற திருப்புகலி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருந்தருள்கின்றவரும் , சூரியனுக்கு எதிரான கலையோடு கூடிய சந்திரனை முடியில் அணிந்தவருமான சிவபெருமானே அகில உலகத்திற்கும் தலைவர் ஆவார் .

குறிப்புரை :

அகலம் ஆர் - இடம் அகன்ற . தரை - பூமியிலுள்ளாரால் . புகலும் - சிறப்பித்துச் சொல்லப் பெறுகின்ற . நான்மறைக்கு இகலியோர் - நான்கு வேதங்களிலும் வாதிட்டு வென்றவர் . பகல் செய்வோன் - சூரியனுக்கு . எதிர் - எதிராகிய . சகலன் - கலையோடு கூடியவனாகிய சந்திரனை . சேகரன் - முடியில் அணிந்த சிவ பெருமான் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 4

துங்கமாகரி பங்கமாவடுஞ் செங்கையானிகழ் வெங்குருத்திகழ்
அங்கணானடி தங்கையாற்றொழத் தங்குமோ வினையே.

பொழிப்புரை :

உயர்ந்ததும் , பெரியதுமான யானை துன்புறும்படி கொன்று அதன் தோலையுரித்த சிவந்த கைகளையுடையவனும் , புகழுடன் விளங்கும் திருவெங்குரு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அழகிய கண்களை உடையவனுமான சிவபெருமான் திருவடிகளைத் தங்கள் கைகளால் தொழுபவர்களிடம் வினைகள் தங்கா .

குறிப்புரை :

துங்கம் - உயர்வு . பங்கம் ஆ - துன்புறும்படி . அடும் - கொன்று தோலை உரித்த . நிகழ் - பொருந்திய . வெங்குருத்திகழ் அங்கணான் - வெங்குரு என்னும் தலத்தில் விளங்குகின்ற சிவபெருமானது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 5

காணியொண்பொருட் கற்றவர்க்கீகை யுடைமையோரவர் காதல்செய்யுநற்
றோணிவண்புரத் தாணியென்பவர் தூமதி யினரே.

பொழிப்புரை :

நிலங்களையும் , அறவழியில் ஈட்டிய பொருள்களையும் கற்றவர்கட்குக் கொடையாகக் கொடுப்போர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் நல்ல வளமைமிக்க நகரில் வீற்றிருந்தருளுகின்ற ஆணிப்பொன் போன்று அரிய பொருளாய் விளங்கும் சிவபெருமானைத் துதிப்பவர்கள் தூய சிவஞானம் பெறுவர் .

குறிப்புரை :

காணி - நிலங்களையும் . ஒண்பொருள் - நல் வழியால் ஈட்டிய பொருள்களையும் , புலவர்களுக்குக் கொடை கொடுக்கும் தன்மையுடையோர் விரும்பி வாழ்கின்ற திருத்தோணி புரத்தின்கண் அரிய பொருளாய் இருப்பவனே என்று துதிப்போர் தூய சிவஞானம் படைப்பர் என்பது ஈற்றுப் பகுதியின் பொழிப்பு . ஆணி என்பதற்கு இரண்டாம் பாட்டில் உரைத்தது உரைக்க .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 6

ஏந்தராவெதிர் வாய்ந்தநுண்ணிடைப் பூந்தணோதியாள் சேர்ந்தபங்கினன்
பூந்தராய்தொழு மாந்தர் மேனிமேற் சேர்ந்திரா வினையே.

பொழிப்புரை :

படம் விரிக்கும் பாம்பிற்கு ஒப்பான நுண்ணிய இடையை உடையவளாய்ப் பூ அணிந்த குளிர்ந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந் தருளுகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தைத் தொழும் மக்கள்மேல் பிணி முதலிய துன்பங்கள் உடம்பைப் பற்றி நில்லாமல் விலகிவிடும் .

குறிப்புரை :

ஏந்து - படம் விரிக்கும் . அரா எதிர் - பாம்பிற்கு ஒப்பு . வாய்ந்த - பொருந்திய . நுண்ணிடை - சிற்றிடையையும் . பூ - பூவையணிந்த . தண் - குளிர்ந்த . ஓதியாள் - கூந்தலையும் உடைய அம்பிகை . வினை - பிணி முதலிய துன்பங்கள் . மேனிமேல் சேர்ந்திரா - உடம்பைப்பற்றி நில்லா , விலகிவிடும் என்பது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 7

சுரபுரத்தினைத் துயர்செய்தாரகன் துஞ்சவெஞ்சினக் காளியைத்தருஞ்
சிரபுரத்துளா னென்னவல்லவர் சித்திபெற் றவரே.

பொழிப்புரை :

தேவருலகத்தைத் துன்புறுத்திய தாரகாசுரனைக் கொல்லும்படி வெஞ்சினம் கொண்ட காளியை அம்பிகையின் அம்சமாகத் தோற்றுவித்தருளிய திருச்சிரபுரத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வழிபடுபவர்கள் அட்டமாசித்திகள் அனைத்தும் பெறுவர் .

குறிப்புரை :

சுரபுரத்தினை - தேவருலகை . துயர்செய் - துன்புறுத்திய ( தாரகன் ) அசுரர்களுக்குப் பற்றுக் கோடாயிருந்த மகிடாசுரன் ஒழியத் துர்க்கையை அம்பிகையின் அம்சத்தினின்றும் தோற்றுவித்தருளிய , சிரபுரத்திலுள்ள சிவன் என்ன அட்டமா சித்திகளும் கைகூடும் . புரம் - இங்கு உலகு என்னும் பொருளில் வந்தது .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 8

உறவுமாகியற் றவர்களுக்குமா நெதிகொடுத்துநீள் புவியிலங்குசீர்ப்
புறவமாநகர்க் கிறைவனேயெனத் தெறகிலா வினையே.

பொழிப்புரை :

வறியவர்கட்கு உறவினராகி அவர்கட்கு மாபெருஞ் செல்வத்தைக் கொடுத்து அருள்செய்கின்ற , இந்த நீண்டபூமியில் மக்கள் புகழுடன் விளங்குகின்ற திருப்புறவம் என்னும் மாநகரில் வீற்றிருந் தருளுகின்ற சிவபெருமானே என்று போற்றி வணங்குபவர்களை வினைகள் துன்பம் செய்யா .

குறிப்புரை :

அற்றவர்க்கு - வறியோர்க்கு . உறவும் ஆகி - ( தம் செல்வப் பெருக்கைக் கருதாது ) உறவினர்போல ஆகியும் . மாநெதி கொடுத்து - மிக்க செல்வத்தைக் கொடுத்து . நீள்புவி இலங்குசீர் - ( இவ்வாறு உதவி புரிந்துவரும் தன்மையால் .) நெடிய பூமி முழுதும் புகழ் விளங்கும் , புறவமாநகர் . தெறகிலா வினை - அழிக்க வந்த வினை ( தாம் , அழிந்துவிடும் ).

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 9

பண்புசேரிலங் கைக்குநாதனன் முடிகள்பத்தையுங் கெடநெரித்தவன்
சண்பையாதியைத் தொழுமவர்களைச் சாதியா வினையே.

பொழிப்புரை :

பெருமைகள் பலவுடைய இலங்கைக்கு அரசனான இராவணன் முடிகள் பத்தையும் நெரித்த , திருச்சண்பை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற ஆதியாகிய சிவபெருமானைத் தொழுபவர்களை வினைகள் துன்புறுத்தா . வலியிழந்துபோம் .

குறிப்புரை :

பண்புசேர் இலங்கைக்கு நாதன் என்றது - ` எழில் செய் கூகை ` ( சிந்தாமணி . 102) போலக் கொள்க . சாதியா - துன்புறுத்தா .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 10

ஆழியங்கையிற் கொண்டமாலய னறிவொணாததோர் வடிவுகொண்டவன்
காழிமாநகர்க் கடவுணாமமே கற்றல்நற் றவமே.

பொழிப்புரை :

சக்கரப்படையை அழகிய கையில் கொண்ட திருமாலும் , பிரமனும் அறிய வொண்ணாதபடி நெருப்புப் பிழம்பு வடிவாய் நின்றவனும் , சீகாழி என்னும் மாநகரில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளுமான சிவபெருமானின் புகழ்களையே கற்றல் நல்ல தவமாகும் .

குறிப்புரை :

கடவுள் நாமமே கற்றல் நல்தவம் - கடவுளின் புகழைக் கற்றலே நல்ல தவமாகும் .

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 11

விச்சையொன்றிலாச் சமணர்சாக்கியப் பிச்சர்தங்களைக் கரிசறுத்தவன்
கொச்சைமாநகர்க் கன்புசெய்பவர் குணங்கள் கூறுமினே.

பொழிப்புரை :

மெய்யுணர்வு தரும் கல்வியறிவு இல்லாத சமணர் , புத்தர்களாகிய பித்தர்களின் குற்றங்களை நீக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கொச்சை மாநகரிடத்து அன்பு செய்பவர்களுடைய குணங்களை எடுத்துக் கூறுங்கள் .

குறிப்புரை :

விச்சை யொன்று இலா - மெய்யுணர்வு வரும் கல்வியறிவு ஒரு சிறிதுமில்லாத . பிச்சர் பித்தர் என்பதன் போலி . கரிசு அறுத்தவன் - தீமையாகிய வேரையறுத்தவன் , அன்பு செய்பவர் குணங்கள் கூறுமின் ! ` நல்லார் குணங்களுரைப்பதுவும் நன்றே ` ( மூதுரை . 8.)

பண் :பழம்பஞ்சுரம்

பாடல் எண் : 12

கழுமலத்தினுட் கடவுள்பாதமே கருதுஞானசம் பந்தனின்தமிழ்
முழுதும்வல்லவர்க் கின்பமேதரு முக்கணெம் மிறையே.

பொழிப்புரை :

திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற கடவுளாகிய சிவபெருமானின் திருவடிகளையே தியானிக்கின்ற ஞானசம்பந்தனின் இத்தமிழ்மாலையை முழுமையாக ஓதவல்லவர்கட்கு முக்கண் இறையாகிய அச்சிவபெருமான் அனைத்து இன்பங்களையும் தந்தருள்வான் .

குறிப்புரை :

திருக்கழுமலத்துள் கடவுள் பாதத்தைக் கருதிய ஞானசம்பந்தனின் தமிழ் வல்லவர்க்கு முக்கண் எம்மிறை இன்பமே தரும் என்பது இப்பாட்டின் பொருள்கோள் .
சிற்பி