திருஓமாம்புலியூர்


பண் :புறநீர்மை

பாடல் எண் : 1

பூங்கொடி மடவா ளுமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்
வீங்கிரு ணட்ட மாடுமெம் விகிர்தர் விருப்பொடு முறைவிடம் வினவில்
தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்
ஓங்கிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

இறைவன் பூங்கொடி போன்ற உமாதேவியை ஒரு பாகமாக உடையவர். முறுக்குண்ட சடைமுடியையுடைய அடிகள். உலகம் சங்கரிக்கப்பட்டு ஒடுங்கிய ஊழிக்காலத்தில் நடனமாடும் விகிர்தர். அப்பெருமான் விருப்பத்துடன் வீற்றிருந்தருள்கின்ற இடம் எது என வினவில், தேன்மணம் கமழும் சோலைகளிலுள்ள செழுமையான மலர்களைக் குடைந்து நெருங்கிக் கூட்டமாயமைந்த வண்டுகள் இசைபாடுகின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற ஓமமாம்புலியூரில் அப்பெருமானுக்குரிய உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

கோதுதல் - கிளறுதல்; உளர்தல். இவை ஒரு பொருட்கிளவி. \\\\\\\"வீங்கிருள் நட்டமாடும் எம் விகிர்தர்\\\\\\\' \\\\\\\"நள்ளிருள் நட்டம் பயின்றாடும் நாதனே\\\\\\\" என இக்கருத்துத் திருவாசகத்திலும் வருகிறது. தளி - கோயில்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 2

சம்பரற் கருளிச் சலந்தரன் வீயத் தழலுமிழ் சக்கரம் படைத்த
எம்பெரு மானா ரிமையவ ரேத்த வினிதினங் குறைவிடம் வினவில்
அம்பர மாகி யழலுமிழ் புகையி னாகுதி யான்மழை பொழியும்
உம்பர்க ளேத்து மோமமாம் புலியூ ருடையவர் வடதளியதுவே. 

பொழிப்புரை :

சம்பரன் என்னும் அசுரனுக்கு அருள்செய்தவரும், சலந்தரன் என்னும் அசுரன் அழியும்படி நெருப்பினை உமிழ்கின்ற சக்கரத்தைப் படைத்தவருமான எம் சிவபெருமானார் தேவர்களெல்லாம் வணங்கிப் போற்ற இனிதாக வீற்றிருந்தருளும் இடம், வேள்வி ஆற்ற அதன் புகைமண்டலமானது ஆகாயத்தினை அடைந்து மழைபொழிவதும், தேவர்களால் போற்றப்படுகின்றதுமான திரு ஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக் கோயிலாகும்.

குறிப்புரை :

பொழியும் - ஏத்தும் என்னும் பெயரெச்சங்கள் ஓமாம்புலியூர் என்னும் பெயர் கொண்டு முடிந்தது.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 3

பாங்குடைத் தவத்துப் பகீரதற் கருளிப் படர்சடைக் கரந்தநீர்க் கங்கை
தாங்குத றவிர்த்துத் தராதலத் திழித்த தத்துவ னுறைவிடம் வினவில்
ஆங்கெரி மூன்று மமர்ந்துட னிருந்த வங்கையா லாகுதி வேட்கும்
ஓங்கிய மறையோ ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

சிறந்த குணமுடைய பகீரதனுடைய தவத்திற்கு அருள்செய்து, தனது படர்ந்த சடையில் மறைத்தருளிய கங்கை நதியினைத் தாங்குதலைத் தவிர்த்துப் பூமியில் சிறிதளவு பாயும்படி செய்த தத்துவனாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற இடம், மூன்று எரி வளர்த்துத் தம் அழகிய கைகளால் நெய், சமித்து போன்றவைகளை வார்த்து வேள்விகள் செய்கின்ற, ஓங்கிய புகழையுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

தத்துவன் - தத்துவ சொரூபியாய் இருப்பவன்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 4

புற்றர வணிந்து நீறுமெய் பூசிப் பூதங்கள் சூழ்தர வூரூர்
பெற்றமொன் றேறிப் பெய்பலி கொள்ளும் பிரானவ னுறைவிடம் வினவில்
கற்றநால் வேத மங்கமோ ராறுங் கருத்தினா ரருத்தியாற் றெரியும்
உற்றபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வசிக்கும் இயல்புடைய பாம்பை அணிந்தவர். திருநீற்றினைத் தன்மேனி முழுவதும் பூசியவர். பூதகணங்கள் சூழ்ந்து வர, இடபத்தின் மேலேறி ஊரூராகச் சென்று பிச்சையேற்பவர். அப்பெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தாங்கள் கற்ற நான்கு வேதங்கள், ஆறு அங்கங்கள் இவற்றின் கருத்தை உணர்ந்தவர்களாய், அன்பும், புகழுமுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம்புலியூர் உடையவர் வடதளியே.

குறிப்புரை :

பெய்பலி கொள்ளும்பிரான்:- என்றது \\\\\\\"குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்\\\\\\\" என்பது போலும் ஓர் நயம்.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 5

நிலத்தவர் வான மாள்பவர் கீழோர் துயர்கெட நெடியமாற் கருளால்
அலைத்தவல் லசுர ராசற வாழி யளித்தவ னுறைவிடம் வினவில்
சலத்தினாற் பொருள்கள் வேண்டுதல் செய்யாத் தன்மையார் நன்மையான் மிக்க
உலப்பில்பல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

மண்ணுலகத்தவர்கள், வானுலகை ஆள்பவர்கள், பாதாள உலகத்தினர் ஆகியோரது துன்பம் கெடக் கொடிய அசுரர்கள் புரியும் தீமைகளை அழிக்குமாறு, நெடிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்த சிவபெருமான் இனிதாக வீற்றிருந்தருளும் இடம், தீய செயல்களால் பொருள் சேர்த்தலைச் செய்யாத நல்லொழுக்க சீலர்களும், பெரும்புகழ் மிக்க செயல் செய்யும் சான்றோர்களும் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரிலுள்ள உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

\\\\\\\"சலத்தினால் பொருள்கள் வேண்டுதல் செய்யார்\\\\\\\" - \\\\\\\"சலத்தாற் பொருள் ... பெய்திரீஇ யற்று\\\\\\\" (குறள் . 660) சலம் - தருக்கபரிபாடை. இங்குத் தீயவினைகளைக் குறித்தது. ஆளுடைய பிள்ளையார், திருக்குறட்கருத்தை அமைத்துப் பாடினமைக்கு இது ஒரு சான்று.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 6

மணந்திகழ் திசைக ளெட்டுமே ழிசையு மலியுமா றங்கமை வேள்வி
இணைந்தநால் வேத மூன்றெரி யிரண்டு பிறப்பென வொருமையா லுணரும்
குணங்களு மவற்றின் கொள்பொருள் குற்ற  மற்றவை யுற்றது மெல்லாம்
உணர்ந்தவர் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

எட்டுத் திசைகளும் புகழ்மணங் கமழ்கின்றதும், ஏழிசைகள் மலிந்துள்ளதும், ஆறங்கங்கள், ஐந்து வேள்விகள், நான்கு வேதங்கள், மூன்று எரிகள், இரண்டு பிறப்புக்கள் என இவற்றை ஒருமை மனத்தால் உணரும் குணங்களும், அவற்றின் பொருளும், குற்றமற்றவை, குற்றமுள்ளவை இவற்றை உணர்ந்து தெளிந்தவர்களும் ஆன அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவரான சிவபெருமான் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

`திசைகள் எட்டு இசை ஏழு ... ஒருமை இவ்வாறு வருவதனை எண்ணலங்காரம் என்பர் மாதவச் சிவஞான யோகிகள். \\\\\\\"ஒரு கோட்டன் இரு செவியன்\\\\\\\" என்பது (சிவஞான சித்தி - காப்பு.) காண்க.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :புறநீர்மை

பாடல் எண் : 8

தலையொரு பத்துந் தடக்கைய திரட்டி தானுடை யரக்கனொண் கயிலை
அலைவது செய்த வவன்றிறல் கெடுத்த வாதியா ருறைவிடம் வினவில்
மலையென வோங்கு மாளிகை நிலவு மாமதின் மாற்றல ரென்றும்
உலவுபல் புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

பத்துத் தலைகளும், நீண்ட இருபது கைகளும் உடைய அரக்கனான இராவணன் ஒளிபொருந்திய திருக்கயிலை மலையினை அசைக்கத் தொடங்க, அவனது வலிமையைக் கெடுத்த ஆதியாராகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் எதுவென வினவில், மலைபோல் ஓங்கியுயர்ந்த மாளிகையும், அதனுடன் விளங்கும் பெரிய மதிலும் கூடிய, செல்வநிலை என்றும் மாறாதவராய் விளங்குகின்ற பல்வகையான புகழ்களையுடைய அந்தணர்கள் வசிக்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

அலைவு (அது) செய்த:- அசைக்கத்தொடங்கிய மலையென ஓங்கும் மாளிகை. மாளிகைக்கு மலை உவமை. தென் திருமுல்லை வாயில் திருப்பதிகத்தில் \\\\\\\"குன்றொன் றொடொன்று குழுமி\\\\\\\" (தி.2. ப.88. பா.4.) என உருவகித்து இருத்தலையும் அறிக. செய்குன்று.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 9

கள்ளவிழ் மலர்மே லிருந்தவன் கரியோ னென்றிவர் காண்பரி தாய
ஒள்ளெரி யுருவ ருமையவ ளோடு முகந்தினி துறைவிடம் வினவில்
பள்ளநீர் வாளை பாய்தரு கழனிப் பனிமலர்ச் சோலைசூ ழாலை
ஒள்ளிய புகழா ரோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே.

பொழிப்புரை :

தேனுடைய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும், கருநிறமுடைய திருமாலும் இருவரும் காண்பதற்கு அரியவனாய் நெருப்புப் பிழம்பாய் நின்ற சிவபெருமான் உமா தேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடம் , பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரோடு வாளை மீன்கள் பாயும் வயல்களும், குளிர்ச்சி பொருந்திய மலர்ச்சோலைகள் சூழ்ந்த கரும்பு ஆலைகளும் உடைய, மிக்க புகழுடைய அந்தணர்கள் வாழ்கின்ற திருஓமமாம்புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

பள்ளநீர் - பள்ளத்தில் தங்கியநீர். வாளைபாய் தரு - வாளை மீன்கள் பாய்கின்ற.

பண் :புறநீர்மை

பாடல் எண் : 10

தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவர முடுக்கும்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளா ருறைவிடம் வினவில்
நள்ளிருள் யாம நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யதுவே. 

பொழிப்புரை :

தெளிந்த அறிவில்லாத காவியாடை போர்த்திய புத்தர்களும், தடுக்கினை உடுக்கும் சமணர்களும் ஆகிய கள்ள உள்ளத்துடன் விளங்கும் கீழ் மக்கட்கு அருள்புரியாத கடவுளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , நள்ளிருள், யாமம் முதலிய அவ்வக் காலங்கட்கு ஏற்ப, நான்கு வேதங்களிலும் கூறியபடி தெய்வமந்திரங்களை ஓதி, நன்மை தரும் மூன்று அக்கினிகளை வளர்த்து வேள்வி செய்யும் மாசற்ற அறிவுடைய அந்தணர்கள் வாழும் திருஓமமாம் புலியூர் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலாகும்.

குறிப்புரை :

கலதிகள் - கொடியவர்கள். `கள்வன் கடியன் கலதியிவன் என்னாதே\\\'. (தி.8 திருவாசகம். 10.19.)

பண் :புறநீர்மை

பாடல் எண் : 11

விளைதரு வயலுள் வெயில்செறி பவள மேதிகண் மேய்புலத் திடறி
ஒளிதர மல்கு மோமமாம் புலியூ ருடையவர் வடதளி யரனைக்
களிதரு நிவப்பிற் காண்டகு செல்வக் காழியுண் ஞானசம் பந்தன்
அளிதரு பாடல் பத்தும்வல் லார்க ளமரலோ கத்திருப் பாரே. 

பொழிப்புரை :

நல்ல விளைச்சலைத் தருகின்ற வயல்களில் ஒளிமிக்க பவளங்கள், எருமைகள் மேய்கின்ற இடங்களில் அவைகளால் இடறப்பட்டு மேலும் ஒளியைத் தருகின்ற திருஓமமாம் புலியூரில் உடையவர் வடதளி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை, களிப்பை உண்டாக்கும் உயர்ந்த காணத்தக்க செல்வத்தையுடைய சீகாழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் போற்றிய, அருளை விளைவிக்கும் இத்திருப்பாடல்கள் பத்தையும் ஓதவல்லவர்கள் சிவலோகத்தில் வீற்றிருப்பர்.

குறிப்புரை :

களிதரு நிவப்பிற்காண்டகு செல்வம் - களிப்பை உண்டாக்கத் தக்க மிகுந்த காணத்தக்க செல்வம்.
சிற்பி