திருக்குருகாவூர் வெள்ளடை
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 1
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்
தெண்ணரும் பல்கண மேத்தநின் றாடுவர்
விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
பொழிப்புரை :
சிவபெருமான் பொடியாகிய வெண்ணிறத் திருநீற்றினை அணிந்த மார்பில் யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு எண்ணுதற்கரிய பல கணங்களும் போற்ற நடனம் செய்வார் . அத்தகைய சிவபெருமான் தேவர்களும் விரும்பும் பசுமையான சோலைகள் சூழ்ந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு விரும்பி வீற்றிருந்தருளும் தலைக்கோலமுடையவர் .
குறிப்புரை :
பதினெண்கணம் , பூதகணம் , பேய்க்கணம் , முனிகணம் , உருத்திரபல்கணம் என இவையொவ்வொன்றிலும் பல ஆதலின் எண்ணரும் பல்கணம் என்றார் .
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 2
திரைபுல்கு கங்கை திகழ்சடை வைத்து
வரைமக ளோடுட னாடுதிர் மல்கு
விரைகமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரைமல்கு வாளர வாட்டுகந் தீரே.
பொழிப்புரை :
நறுமணம் கமழும் குளிர்ச்சி பொருந்திய சோலைகளையுடைய திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பெருமானே ! இடுப்பில் விளங்கும் ஒளிமிக்க பாம்பை ஆட்டுதலை விரும்பி நின்றீர் . அலைகளையுடைய கங்கையை ஒளிமிக்க சடையில் வைத்துக் கொண்டு மலைமகளோடு ஆடுகின்றீர் .
குறிப்புரை :
அரவு ஆட்டு உகந்தீர் - பாம்பை ஆட்டுதலை விரும்பினீர் .
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 3
அடையலர் தொன்னகர் மூன்றெரித் தன்ன
நடைமட மங்கையொர் பாக நயந்து
விடையுகந் தேறுதிர் வெள்ளடை மேவிய
சடையமர் வெண்பிறைச் சங்கர னீரே.
பொழிப்புரை :
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்துள்ள சங்கரராகிய நீர் பகைவருடைய தொன்மையான மூன்று நகரங்களையும் எரித்தீர் . அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்துள்ளீர் . எருதின்மீது விருப்பத்துடன் ஏறுகின்றீர் .
குறிப்புரை :
அடையலர் - பகைவர் ; நகர்மூன்று - திரிபுரம் .
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 4
வளங்கிளர் கங்கை மடவர லோடு
களம்பட ஆடுதிர் காடரங் காக
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர்சடை யெம்பெரு மானே.
பொழிப்புரை :
குளிர்ச்சி பொருந்திய சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , இளம்பிறைச்சந்திரனை அணிந்த சடையையுடைய எம் பெருமானே ! வளங்களைப் பெருக்குகின்ற கங்கையாளொடு சுடுகாட்டு அரங்கமே இடமாகக் கொண்டு ஆடுகின்றீர் .
குறிப்புரை :
வளம் கிளர் கங்கை - பாய்தலால் வளங்கள் அதிகரித்தற்குக் காரணமாகிய கங்கை . அரங்கு ஆக - காடு அரங்கு களம் ஆகப் பட ஆடுதிர் எனக்கூட்டிச் சுடுகாடு அரங்கினிடமாகக் கொண்டு ஆடுதிர் எனப் பொருள் கூறுக .
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 5
சுரிகுழ னல்ல துடியிடை யோடு
பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை யெந்தை பிரானே.
பொழிப்புரை :
விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பு , மழு , வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய பெருமானே ! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும் , உடுக்கை போன்ற இடையினையுமுடைய உமாதேவியோடு , வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில் , உலகுமீள உளதாக , ஆடுகின்றீர் .
குறிப்புரை :
( நல்ல ) சுரிகுழல் துடியிடை - சுரிந்த கூந்தலையும் உடுக்கை போன்ற இடையையும் உடைய அம்பிகை . அன்மொழித் தொகை . பன்மொழித்தொடர் . பொரிபுல்கு காட்டிடை - வெப்பத்தின் மிகுதியால் மரங்கள் முதலியவை பொரி பொருந்திய சுடுகாடு .
பண் :அந்தாளிக் குறிஞ்சி
பாடல் எண் : 6
காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினி லைந்துகொண் டாட்டுகந் தீரே.
பொழிப்புரை :
தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற , பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே ! குவளை மலர் போன்ற அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ அகல் ஏந்தி நின்று ஆடுகின்றீர் .
குறிப்புரை :
தீயகல் ஏந்தி நின்று ஆடுதிர் என்பது ` கரதலத்தில் தமருகமும் எரியகலும் பிடித்து ஆடி ` எனச் சுந்தரமூர்த்திகள் திரு வாக்கில் வருவதும் காண்க .