திருநல்லூர்ப் பெருமணம்


பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 1

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேயநம் பானே. 

பொழிப்புரை :

அடியார்கள் சூழ, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானே! மிக்க மணமாகிய பொருள்கள் பொருந்திய பாடல்களாகிய மலர்களைச் சூடுதலை உடையீர். அம்மிக்கல் மிதித்துச் செய்யும் சடங்குகள் பலவுடைய திருமணம் எனக்கு வேண்டா. கழுமலம் முதலாகிய பல திருத்தலங்களிலும் சென்று நான் பாடிய திருப்பதிகங்கள் வாயிலாக என்னுடைய விருப்பம் மெய்யாகத் தெரியவில்லையா? என இறைவனிடம் வினவுகின்றார்.

குறிப்புரை :

திருமணத்தில் தமக்கு விருப்பமில்லை என்பதைக் குறித்தது. தொண்டர் - அடியார்கள் சூழ்ந்த. நல்லூர்ப்பெருமணம் - திரு நல்லூர்ப்பெருமணம் எனும் தலத்தில். மேய - மேவிய. நம்பானே - சிவபெருமானே. பெருமணம் - மிக்க மணமாகிய பொருள்கள். ஊர் - பொருந்திய. சொல் - பாடல்களாகிய மலர்களை. சூடலரே - சூடுதலை உடையீர்! கல் ஊர் - அம்மியின்மேல் மனைவியின் காலை வைத்தல் முதலிய சடங்குகளை உடையதாகிய, பெருமணம் - பெரிய திருமணம். வேண்டா - எனக்கு வேண்டா. கழுமலம் - திருக்கழுமலம் முதலாகிய. பல்லூர் - பலதலங்களிலும் (நான் - பாடிய), பாட்டு - தேவாரப் பதிகங்களும். மெய் ஆய்த்தில - மெய்யாக வில்லையா? எத்தலத்திலேனும் எனக்குத் திருமணம் வேண்டுமென்று கேட்டதுண்டா? ஆய்த்து - ஆயது. \\\"நரரிடைப் பாலன் செய்தபாதகம் நன்மையாய்த்தே\\\" என்ற சித்தியாரிற்போல. கல்லூர்ப் பெருமணம்:- கல்லூர் + பெருமணம் இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை. மெய்யாய்த்தில - இதில் வினா எழுத்து மறைந்து நின்றது. \\\"தெருளில்நீர் இது செப்புதற்காம்\\\' (தி.12 பெரிய புராணம் - 9) சொல்லூர் பெருமணம் ஏகதேச உருவகம். சொல் - பாடலுக்கானது ஆகுபெயர். நம்பன், நம்பான் என ஈற்றயல் நீண்டு விளித்தது. ஏகாரம் ஈற்றசை.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 2

தருமண லோதஞ்சேர் தண்கட னித்திலம்
பருமண லாக்கொண்டு பாவைநல் லார்கள்
வருமணங் கூட்டி மணஞ்செயு நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்ணோர் பாகங் கொண்டானே. 

பொழிப்புரை :

கடலலைகள் அழித்துவிடாமல் வைத்துள்ள இயற்கைக் கரையிலுள்ள மணலோடு, பதுமை போன்ற சிறுமியர் அலைகள் வீசிக்குவித்த, குளிர்ச்சி பொருந்திய கடலில் விளைந்த முத்துக்களையே, பருத்த மணலாகக் கொண்டு சிற்றில் இழைத்து, சிறுசோறிட்டு, நறுமணம் கமழும் மலர்களை வைத்துக் கொண்டு, பாவைகட்கு மணம் செய்து விளையாடுகின்ற சிறப்பினையுடையது நல்லூர்ப் பெருமணம். அப்பெருமணத் திருக்கோயிலின்கண் வீற்றிருந்தருளும் சிவபெருமான் தன்னிற் பிரிவில்லா உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டருளினன்.

குறிப்புரை :

சிறுமியர் விளையாட்டு: பாவை நல்லார்கள் - பதுமைபோன்ற சிறுமியர்கள். தரு - பொருந்திய. மணல் - மணலோடு. ஓதம் - அலைகள். சேர் - வீசிக்குவித்த. தண்கடல் நித்திலம் - குளிர்ந்த கடலில் உண்டாகிய முத்துக்களையே. பருமணலாகக்கொண்டு - பருத்த மணலாகக்கொண்டு. வரும்மணம் - பொருந்திய மணத்தை உடைய மலர் முதலியவைகளை. கூட்டி - வைத்துக் கொண்டு. மணம் செயும் - மணம் செய்து விளையாடுகின்ற (நல்லூர்ப் பெருமணம்) பெண் ஓர் பாகம் கொண்டான் - பெண்ணை இடப்பாகத்தில் கொண்டவன். கடந்த ஞானிகளுக்கே இல்லறத்தார் நடத்தும் மனைவாழ்க்கை வீதியில் சிறுமியர்கள் மணம்செய்து விளையாடும் விளையாட்டைப் போன்று தோன்றும் என்பது இப்பாடலால் குறிக்கப்பெறுகிறது. பெண் ஓர்பாகம் கொண்டான் ஆதலின் என்னையும் இவ்வாறு அருளினான்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 3

அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்
றின்புறு மெந்தை யிணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே. 

பொழிப்புரை :

மெய்யடியார்கள் சிவபெருமானிடம் கொண்ட பத்தி காரணமாக, அனைத்துயிர்களிடத்தும் நீங்காத அன்பு நிறைந்த சிந்தையராவர். அவர்கள் சிவத்தை வழிபடுகின்ற நற்றவத்தைச் செய்வர். அவர்கள் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, அனைத்துயிர்கட்கும் இன்பம் தருகின்ற எம் தந்தையாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வணங்குவார்கள். அத்தகைய வழிபாடு செய்பவர்கட்கு எக்காலத்திலும் துன்பம் இல்லை. அவர்கள் நாளும் நல்லின்பத்தை மிகுவிக்கும் சிவத்தொண்டு செய்வர்.

குறிப்புரை :

அடியவர் பெருமை: நன்புஉறு - முத்தியை அடைகின்ற நன்பு - பு, பண்புப்பெயர் விகுதி. ஆகுபெயர். \\\\\\\"இணையடி ஏத்துவார் துன்புறுவாரல்லர் தொண்டு செய்வார்\\\\\\\" தாம் செய்வன சிவனுக்கு என்றும், வருவன அனைத்தும் அவன் அருள் என்றும் தொண்டு செய்வார் ஆகலின் இணையடி புத்திபண்ணி ஏத்துவார் துன்புறு வாரல்லர் என்று கூறினார்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 4

வல்லியந் தோலுடை யார்ப்பது போர்ப்பது
கொல்லியல் வேழத் துரிவிரி கோவணம்
நல்லிய லார்தொழு நல்லூர்ப் பெருமணம்
புல்கிய வாழ்க்கையெம் புண்ணிய னார்க்கே. 

பொழிப்புரை :

சிவபெருமான் வலிமையான புலியின் தோலை ஆடையாக உடுத்துள்ளவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலைப் போர்வையாகப் போர்த்தவர். விரிந்த கோவணத்தை அணிந்தவர். அப்பெருமான் சிவநெறி ஒழுகும் நற்பண்பாளர்களால் தொழப்படும் வண்ணம் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் வாழ்க்கையையுடையவர். இதுவே புண்ணியரான சிவபெருமானின் இயல்பாகும்.

குறிப்புரை :

இறைவன் கோலம்: வல்லியந் தோல் - புலித்தோல் வன்மைக்கு இனமாகத் திரிந்தது. செவிக் கினிமை கருதி. உடை ஆர்ப்பது - உடையாக இடுப்பில் உடுப்பது; வேழத்துரி போர்ப்பது - யானையின் தோல் போர்வையாகப் போர்ப்பது. விரி கோவணம் - படம் விரித்த பாம்பினைக் கோவணமாகக் கட்டுவது. விரி - முதனிலைத் தொழிற்பெயர். ஆகுபெயர். நல்லியலார் - நற்பண்புகளை உடைய மெய்யடியார். இவை நல்லூர்ப் பெருமண வாழ்க்கை எம் புண்ணியனார் கோலங்களாம்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 5

ஏறுகந் தீரிடு காட்டெரி யாடிவெண்
ணீறுகந் தீர்நிரை யார்விரி தேன்கொன்றை
நாறுகந் தீர்திரு நல்லூர்ப் பெருமணம்
வேறுகந் தீருமை கூறுகந் தீரே. 

பொழிப்புரை :

இறைவனே! நீவிர் இடபத்தை விரும்பி வாகனமாகக் கொண்டுள்ளீர். நெருப்பேந்திச் சுடுகாட்டில் ஆடுகின்றீர். திருவெண்ணீற்றினை விரும்பிப் பூசியுள்ளீர். வரிசையாக அழகுடன் விளங்கும் தேன் துளித்து நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளீர். செல்வம் பெருகும் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளும் நீர் உமாதேவியை ஒரு கூறாகக் கொண்டு உகந்துள்ளீர்.

குறிப்புரை :

இறைவன் செயல்: ஏறு - இடபத்தை. உகந்தீர் - விரும்பி ஏறினீர். நிறை - வரிசையாக. ஆர் - பொருந்திய. விரி - மலர்ந்த. தேன் - தேனை உடைய. கொன்றை - கொன்றை மலரின். நாறு - மணம் வீசுதலை. உகந்தீர் - விரும்பினீர். நாறு - நாறுதல் (நல்லூர்ப் பெருமணத்து) வேறுகந்தீர் - வேறாக விரும்பினீர்!

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 6

சிட்டப்பட் டார்க்கெளி யான்செங்கண் வேட்டுவப்
பட்டங்கட் டுஞ்சென்னி யான்பதி யாவது
நட்டக்கொட் டாட்டறா நல்லூர்ப் பெருமணத்
திட்டப்பட் டாலொத்தி ராலெம் பிரானிரே.

பொழிப்புரை :

சிவபெருமான் நியமம் தவறாது வழிபடுபவர்கட்கு எளியர். வேடுவக் கோலத்தில் நெற்றிப்பட்டம் கட்டிய தலையினை உடையவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது நாட்டியங்களின் கொட்டு வாத்திய ஓசையும், திருவிழா முதலிய கொண்டாட்டங்களின் ஓசையும் ஒழியாத, திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் கோயிலாகும். எம் தலைவராகிய நீர் ஏனைய தலங்களிலும் விரும்பி வீற்றிருக்கின்றீர்.

குறிப்புரை :

தலச்சிறப்பு: சிட்டப்பட்டார்க் கெளியன் - நியமம் தவறாது வழிபடுவர்களுக்கு எளியவன். வேட்டுவப் பட்டம் கட்டும் சென்னியான் - வேடுவக் கோலத்தில் நெற்றிப் பட்டம் கட்டிய தலையினை உடையவன். நட்டம் - நாட்டியங்களின். ஆட்டு - திரு விழா முதலான கொண்டாட்டங்களின் ஓசையும், கொட்டு வாத்திய ஓசையும். அறா - ஒழியாத. இட்டப்பட்டால் ஒத்திரால் ஏனைத் தலங்களிலும் மிகவிருப்பம் உடையவர் போல் காணப்படுகின்றீர். எம் பிரான் நீர் - எமது தலைவராகிய நீர். ஆல் - அசை

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 7

மேகத்த கண்டன்எண் தோளன்வெண் ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத் தான்நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே. 

பொழிப்புரை :

இறைவன் மழைமேகம் போன்ற இருண்ட திருநீல கண்டத்தன். எட்டுத் திருத்தோள்களை உடையவன். வெண்ணீற்று உமையாள் என்னும் திருநாமம் தாங்கிய அம்பிகையை ஒரு பாகமாகக் கொண்டவன். பதுங்கியிருந்து பாயும் தன்மையுடைய புலியினை உரித்து அதன் தோலினை ஆடையாக உடுத்தவன். அதன்மேல் பாம்பைக் கச்சாக இறுகக் கட்டியவன். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத் தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில், உயிர்கள் போகம் துய்க்கும் பொருட்டுப் போகவடிவில் விளங்குகின்றான். மேலும் மன்னுயிர்கள் நற்றவம் புரிந்து திருவடிப் பேறெய்தும் பொருட்டு யோகத்தையே புரிந்தருள்வன்.

குறிப்புரை :

அம்பிகையின் சிறப்பு: மேகத்தகண்டன் - காளமேகம் போலும் கரிய கண்டத்தை உடையவன். எண்தோளன் - எட்டுத் தோள்களையுடையவன். வெண்ணீற்றுமை பாகத்தன் - திருவெண்ணீற்றுமை யம்மையை இடப்பாகமாக உடையவர். பந்தித்த - கச்சாகக் கட்டிய. நாகத்தன் - பாம்பை உடையவன். (நல்லூர்ப் பெரு மணத்தான்). நல்ல போகத்தன் - உமையம்மையை இடப் பாகமாக உடையவனாகி மிக்க போகத்தை உடையவன்போல் காணப்படினும். யோகத்தைப் புரிந்தான் - உண்மையில் அவன் யோகத்தையே செய்தான்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 8

தக்கிருந் தீரன்று தாளா லரக்கனை
உக்கிருந் தொல்க வுயர்வரைக் கீழிட்டு
நக்கிருந் தீரின்று நல்லூர்ப் பெருமணம்
புக்கிருந் தீரெமைப் போக்கரு ளீரே. 

பொழிப்புரை :

இறைவனே! யாண்டும் உம்முடைய சிறந்த முழுமுதல் தன்மைக்கேற்ப வீற்றிருந்தருளுகின்றீர். முன்னாளில் இலங்கையை ஆண்ட அசுரனான இராவணன் கயிலையைப் பெயர்த்தெடுக்க முயன்றபோது, உயர்ந்த அம்மலையின்கீழ் அவன் உடல் குழைந்து நொறுங்கும்படி சிரித்துக் கொண்டிருந்தீர். இந்நாளில் திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகின்றீர். அடியார்களாகிய நாங்கள் உம் திருவடிகளைச் சேர்வதற்கு அருள்புரிவீராக!.

குறிப்புரை :

வேண்டுகோள்: தக்கு இருந்தீர் - தக இருந்தீர். உக்கு இருந்து ஒல்க - உடல் நொறுங்கிக் குழைய. வரைக்கீழ் இட்டு - கயிலை மலையின் கீழ் அழுத்தி. நக்கு இருந்தீர் - சிரித்துக்கொண்டிருந்தீர். அன்று - இது அக்காலத்துச் செய்தது. இன்று - இன்றைக்கும் இராவணனைத் தன் வழியில் செல்ல அருளியதைப்போல. எமை - எங்களை. போக்கு - உமது திருவடியில் சேர்வதற்கு. அருளீர் - அருளுவீர்களாக.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 9

ஏலுந்தண் டாமரை யானு மியல்புடை
மாலுந்தம் மாண்பறி கின்றிலர் மாமறை
நாலுந்தம் பாட்டென்பர் நல்லூர்ப் பெருமணம்
போலுந்தங் கோயில் புரிசடை யார்க்கே. 

பொழிப்புரை :

குளிர்ச்சி பொருந்திய செந்தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் சிவபெருமானுடைய மாண்பை ஒரு சிறிதும் அறிந்திலர். இறைவனின் அடிமுடியைத் தேட முயன்றும் காண்கிலர். நால்வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானே அவ்வேதங்களின் உட்பொருளாய் விளங்குகின்றார் என நல்லோர் நுவல்வர். அப்பெருமான் திருநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் நிலையாக வீற்றிருந் தருளுகின்றார்.

குறிப்புரை :

இறைவன் பெருமை: தம்மாண்பு - தமது பெருமையை. (தாமரையானும் மாலும் அறிகின்றிலர்). தம்பாட்டு - தம்முடைய பாடல், மாமறை நாலும் என்பர். (அதுபோலவே) தம் கோயில் - தமது கோயில் நல்லூர்ப் பெருமணம் என்பர்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 10

ஆத ரமணொடு சாக்கியர் தாஞ்சொல்லும்
பேதைமை கேட்டுப் பிணக்குறு வீர்வம்மின்
நாதனை நல்லூர்ப் பெருமண மேவிய
வேதன தாள்தொழ வீடெளி தாமே. 

பொழிப்புரை :

இறைவனை உணரும் அறிவில்லாத சமணர்கள், பௌத்தர்கள் ஆகியோர்கள் கூறும் புன்னெறியைக் கேட்டு, நன்னெறியாம் சித்தாந்தச் சிவநெறிக்கண் இணங்காது பிணங்கி நிற்கும் பெற்றியீர்! வாருங்கள். அனைத்துயிர்க்கும் தலைவன் சிவபெருமான். திருநல்லூர் என்னும் திருத்தலத்தில் பெருமணம் என்னும் திருக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வேதங்களின் பொருளான சிவபெருமானின் திருவடிகளை வழிபடுங்கள். அவ்வாறு வழிபட்டால் வீடுபேறு எளிதில் கிட்டும்.

குறிப்புரை :

அனைவரையும் அழைத்தல்: நாதனும் (நல்லூர் பெருமணம் மேவிய) வேதன் - வேதங்களின் பொருளாகியவனும் ஆகிய சிவபெருமானின், தாள்தொழ - திருவடிகளை வணங்க. வீடு - (அரியதாகிய) முத்திஉலகம், எளிதாம் - எளியதாகும். ஆதர் - அறிவிலிகள்.

பண் :அந்தாளிக் குறிஞ்சி

பாடல் எண் : 11

நறும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன வொண்டமிழ் வல்லார்க்
கறும்பழி பாவ மவல மிலரே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெறுதற்கரிய முத்திப்பேற்றை அருளும், திருமணநல்லூர் என்னும் திருத்தலத்தில், பெருமணம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, அவர் திருவடியில் இரண்டறக் கலக்கும் கருத்தோடு பாடிய சிறந்த பயனைத் தரவல்ல இத்தமிழ்த் திருப்பதிகத்தைப் பக்தியுடன் ஓதவல்லவர்கட்குப் பழியும், பாவமும் அற்றொழியும். பிறப்பு இறப்புக்களாகிய துன்பம் நீங்கப் பேரின்பம் வாய்க்கும்.

குறிப்புரை :

நறும்பொழில் - நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த. காழியுள் - சீகாழியுள் அவதரித்தருளியவராகிய. ஞானசம்பந்தன் - திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராகிய யான். பெறும் - பெறுதற்குரிய, பதம் - பதவியை. அருளும் நல்லூர்ப் பெருமணத்தானை - திருநல்லூர்ப் பெருமணத்தில் எழுந்தருளிய சிவலோகத் தியாகேச மூர்த்தியை, உறும் - திருவடியில் இரண்டறக் கலக்கும். பொருளால் - கருத்தோடு. சொன்ன - பாடிய. ஒண் தமிழ் - சிறந்த பயனைத் தரவல்ல, தமிழ் - இத்தமிழ்ப் பதிகத்தை. வல்லார் - பொருள் அமைதியோடு இன்னிசையால் மனங்கசிந்து பாடவல்லார்க்குப் பழிபாவம் அறும். (அதுவன்றியும்), அவலம் - பிறவித்துன்பம். இலர் - இலராவர். \\\\\\\"அந்தமில் இன்பத்து அழிவில் வீடும் எய்துவர்\\\\\\\" என்பது குறிப்பு.
சிற்பி