திருவாரூர்


பண் :காந்தாரம்

பாடல் எண் : 1

மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள்தொ ழாதே
உய்யலா மென்றெண்ணி யுறிதூக்கி யுழிதந்தென் னுள்ளம் விட்டுக்
கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலு மாரூ ரரைக்
கையினாற் றொழா தொழிந்து கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வ னேனே. 

பொழிப்புரை :

உடம்பெல்லாம் வெண்ணீறு பூசிய பெருமானுடைய திருவடிகளை வழிபடாமல், கடைத்தேறலாம் என்று நினைத்துச் சமணசமயத்தைத் தழுவி உறியைத் தூக்கிக்கொண்டு திரிந்து மனத்தை அச்சமயத்தில் பறி கொடுத்து, கொய்தற்காக அடியவர்கள் உலவும் பூக்களை உடைய சோலைகளில் குயில்கள் கூவவும் மயில்கள் ஆடவும் அமைந்திருக்கும் திருவாரூரில் உகந்தருளியிருக்கும் பெருமானைக் கையினால் தொழாது காலத்தை வீணாக்கிச் சுவையுடைய இனிய கனி இருக்கவும் அதனை விடுத்துச் சுவையற்ற காய்களை விரும்பிய கள்வனாகி விட்டேனே.

குறிப்புரை :

சண்ணித்தல் - பூசுதல், பொருந்தல், உழிதந்து:- திரிந்து (உழிதரல்) `உழிதருகாலும்` (தி.8 திருவா. 12) உள்ளம் விட்டு - மனத்தைப் பறிகொடுத்து. மயில் ஆலும் - மூன்றாவது திருமுறைக் குறிப்புரையில் `வீடலால வாயிலாய்` என்பதன் விரிவுரையாக யாம் எழுதியுள்ளதைக் காண்க. (தருமை ஆதீன வெளியீடு). `ஆமாத்தூர் சண்ணிப்பானை`. `மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே என் உள்ளம் விட்டு`, `ஆரூரரைக் கையினால் தொழா தொழிந்து` என்னும் பகுதியால் கனியைக் கவராமை போல்வது உணர்த்தப்பட்டது. `உய்யலாமென்றெண்ணி உறிதூக்கி உழிதந்து` என்பதால் காய்கவர்தல் போல்வது குறிக்கப்பட்டது. விட்டு ஒழிந்து (கள்வனேன்) ஆனேன் என்று ஆக்கம் வருவித்து இயைக்க.
உடையான் இசையக் காய்கவர்தல் இயலாமையின், அவன் அறியாவாறு கவர்ந்தமையால், `கள்வன்` என்றார். சமண் சமயம் புக்கது காய்போல்வது. அது சிவசம்மதம் பெற்ற புகல் அன்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 2

என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோ ருருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி யடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த வாரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே. 

பொழிப்புரை :

எலும்புகளை அடித்தளமாக அமைத்து நரம்புகளையும் தோலையும் பொருந்துமாறு இணைத்து எனக்கு ஓர் உருவத்தைக் கொடுத்து, இன்பங்களை நுகர் பொருளாக வைத்து, முன்பு அடியேன் செய்து குவித்திருந்த வினைகளைப் போக்கி அடியேனுடைய உள்ளத்தைத் தம் இருப்பிடமாகச் செய்து அடியேன் உள்ளத்தில் அன்பினை நிலைநிறுத்தி, அடியேனை ஆளுதலைக் கடமை (கூழைமை)யாகக் கொண்ட ஆரூர்ப் பெருமானுடைய திரு முன்னர் இருக்கும் வாய்ப்பினை நெகிழவிட்டு, கைப்பற்றுதற்கு எளிதாய் உண்பார்க்குச் சுவையை உடையதான முயலை விடுத்துக் கைப்பற்றுதற்கும் அரிதாய்க் கைக்கொண்டாலும் உணற்குத் தகுதியற்றதாய் உள்ள காக்கை பின் சென்ற அறிவிலியைப் போல ஆகிவிட்டேனே!

குறிப்புரை :

என்பு:- (எல் + பு) வல் + பு, வன்பு. மெல் + பு = மென்பு. எலும்பை இருத்தி, நரம்புகளைத் தோலினுட்புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி, இன்பம் இருத்தி, முன் இருந்த வினை (களைத்) தீர்த்திட்டு என் உள்ளம் கோயிலாக்கி, அன்பு இருத்தி, `சிந்தைப் பாழறை பள்ளியறையாக்கி` (கழுமல மும்மணிக்கோவை. 4.) அடியேனைக் கூழாட்கொண்டு அருள் செய்த ஆரூரருடைய திருமுன் இருக்கும் விதியிலேன். முன்பு இருக்கும் விதியில்லை என்றதால் பின்பு இருக்கும் விதியுளது எனல் பெறப்பட்டது. எதன் பின்பு? சமண் சமயக் கொள்கையின் நீங்கிவந்ததன் பின்பு. கூழ் - உணவு. (பைங்கூழ்). உணவுக்கு ஆட்படுதல் கூழாட்படுதல். ஆட்கொள்ளல்; கூழாட் கொள்ளல். அதன் தன்மைக்குக் `கூழைமை` என்று பெயர். `தில்லை அம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டிருப்பதன்றோ நம் தம் கூழைமையே` (தி.4 ப.81 பா.5). ஈண்டுக் கூழ் அருளுணவின் மேலது. குழையும் இயல்பும் ஆம். `குழை` முதல் நீட்சி `கூழை`.
குழைந்து நடக்கை (திவ். பெரியாழ்வார். 3.2.5.) முயலின் பின் போதல் எளிது. காக்கையின் பின் போதல் பறத்தல் ஆகிய இயல்பில்லாத உயிர்க்கு அரிது; இல்லை என்றவாறு முயல். சைவ சமயத்துக்கு உவமை. காக்கை - சமண் சமயத்துக்கொப்பு. அருள் வழிச் செல்லாது மருள் வழிச் செலவுக்கு உவமையுமாம்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 3

பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங் குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
உருகுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
அருகுவித்துப் பிணிகாட்டி யாட்கொண்டு பிணிதீர்த்த வாரூ ரர்தம்
அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க மறம்விலைக்குக் கொண்ட வாறே. 

பொழிப்புரை :

முன்பெல்லாம் உடல்பருத்த சமணத்துறவியரின் சொற்களையே செவிமடுத்து அடியேனுடைய தீவினைகளையே பெருகச் செய்து, உளம் உருகி உள்ளத்தில் தேங்கியிருந்த கள்ள உணர்வை அடியோடு நீக்கி, பிணியை உண்டாக்கித் தம் அருகு வரச் செய்து, அடியவனாகக் கொண்டு அடியேனுடைய பிணியைப் போக்கிய ஆரூர்ப் பெருமானுடைய அருகிலே இருத்தற்குரிய நல்வினையில்லாமல் பல்லாண்டுக் காலம், விலைகொடுத்தாகிலும் பெறத்தக்க அறம் விலை கொடுக்காமலேயே கிட்டவும் அதனை விடுத்து, விலையின்றிக் கிட்டிலும் வெறுக்கத்தக்க பாவத்தை விலை கொடுத்துப் பெற்ற அறிவில்லாதவனாக ஆகிவிட்டேனே.

குறிப்புரை :

(என் பாவத்தைப்) பெருகுவித்து - பெருகச் செய்து, (வளர்த்தல்). பண்டு - மீண்டு சைவநெறி புக்கதற்கு முற்காலம். குண்டர்கள் தம் சொல் - சமணர் அறவுரைப் போலி. உருகுவித்து - உருக்கி. உள்ளம் - உயிர். உள் இருந்த கள்ளம்:- சிவபிரானது நிலைமை குறித்தது. தள்ளிப்போக்கி அருகுவித்து:- சிவநெறிக்கு அணுகி வரச் செய்தமை குறித்தது. பிணி - சூலைநோய். பிணி - மும்மலப் பிணி. ஆரூரது அருகிருத்தலுக்கு ஒப்பு அறம் கொள்ளல். அருகனது அருகிருந்ததற்கு ஒப்பு மறம் கொள்ளல். விலைக்குக் கொள்ளத்தக்க அறத்தை வறிதே விட்டு, விலையின்றிக் கிடைப்பினும் வெறுத்தற்குரிய மறத்தை விலைக்குக் கொண்ட பேதைமையை ஏற்றிக் கொண்டுரைத்தவாறுணர்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 4

குண்டனாய்த் தலைபறித்துக் குவிமுலையார்  நகைநாணா துழிதர் வேனைப்
பண்டமாப் படுத்தென்னைப் பாறலையிற் றெளித்துத்தன் பாதங் காட்டித்
தொண்டெலா மிசைபாடத் தூமுறுவ லருள்செய்யு மாரூ ரரைப்
பண்டெலா மறியாதே பனிநீராற் பாவைசெயப் பாவித் தேனே.

பொழிப்புரை :

உடல் பருத்தவனாய்த் தலை மயிரை வலியப் பறித்துத் தலையை மொட்டையாக்கிக்கொண்டு, இள மகளிருடைய ஏளனச் சிரிப்பிற்கும் வெட்கப்படாமல் திரிந்த அடியேனை ஒரு பொருளாக ஏற்றுக் கொண்டு, பால் முதலிய பஞ்சகவ்வியத்தால் தூய்மை பெறச் செய்து தன் திருவடிகளைத் தரிசிப்பதற்குத் தொண்டர்கள் எல்லோரும் தம்புகழைப் பாட அதனைச் செவிமடுத்துப் புன்முறுவலோடு அருள் செய்யும் அப்பெருமானை என் வாழ்க்கையின் முற்பகுதியில் அறியாமல் திரவவடிவமாக இருக்கும் குளிர்ந்த நீரினால் திடப் பொருளாகிய பொம்மையைச் செய்ய முற்படுபவரைப் போல, உண்மையறிவுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டேன் ஆனேனே.

குறிப்புரை :

குண்டன்:- உடலின் தோற்றம் பற்றிய பெயர். தலை பறித்தல்:- தலை மயிரைப் பிடுங்கியெறிதல். இடவாகுபெயர். குவி - குவிந்த. நகை - எள்ளி நகைத்தல். உழிதர் வேற்கு திரிதர்வேனை - (தி.4 ப.5 பா.6) `செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை` (தி.8 திருவா. 5.1-9). பண்டம் - (என்னையும்) ஒரு `பொன்னாகத்து அடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த ஆரூரர்` (தி.4 ப.5. பா.5) `ஒரு பொருட்படுத்த`. பால் தலையில் தெளித்தல்:- பஞ்ச கவ்வியத்தால் தூய்மையாக்கல்;- அபிடேகம் முதலியவற்றொடு கூடிய சிவதீக்கையுமாம். தன் பாதம் காட்டல்:- சிவஞானோபதேசம். தொண்டு -தொண்டர்கள். எலாம் - எல்லாரும். இசை - இசைப்பாக்கள் (தோத்திரங்கள்) (தி.4 ப.56 பா.4). தூமுறுவல்` - தூய புன்னகை. `கொம்புநல் வேனிலவனைக் குழைய முறுவல் செய்` (தி.4 ப.4 பா.4) தது வேறு, இது வேறு எனத் `தூமுறுவல்` என்று அருளினார். பனி நீராற் பாவை செயப் பாவித்தல்:- பனி நீராற் பொம்மை செய்யக் கருதுவது போற் சிவநெறியல்லாத (சமண் முதலிய) பிற நெறிகளால் வீடு பெறக் கருதுதல். `பரவை` என்றுள்ள பாடம் பொருந்துமேற்கொள்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 5

துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர் சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் றிடவுண்ட ஏழை யேனான்
பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து பொருட்படுத்த வாரூ ரரை
என்னாகத் திருத்தாதே யேதன்போர்க் காதனா யகப்பட் டேனே. 

பொழிப்புரை :

கொடிய பாம்பினை ஒத்தேனாகித் தீயவர் சொற்களைக் கேட்டு, கடுக்காயை உண்பதால் அதன் கறை படிந்த பற்களை உடையேனாய், என்விருப்பம்போலத் திரிந்து இரு கைகளையும் இணைத்து அவற்றில் பிச்சை ஏற்ற உணவினை உண்ட அறிவிலியாகிய அடியேன், பொன்போன்ற செவ்விய உடலிலே அடியேனை இருத்திக் குறிப்பிடத்தக்க பொருளாக அடியேனை ஆக்கிய ஆரூர்ப் பெருமானை என் உள்ளத்தில் நிலையாக இருக்கச் செய்யாமல், ஒருவன், விளைத்த சண்டையில் அதனோடு யாதும் தொடர்பில்லாத மற்றவன் அகப்பட்டுத் துன்புறுவதுபோலப் நவீனரான சமணர்கள் செய்த செயல்களில் பரம்பரைச் சைவனாகிய அடியேன் அகப்பட்டுப் பல்லாண்டுகள் துன்புற்றேனே.

குறிப்புரை :

துன்நாகத்தேன் - (துர் + மதி = துன்மதி. துர் + நாகம் = துன்னாகம்) கொடிய பாம்பை ஒத்தேன். துர்ச்சனவர் - (துர் + ஜனம்) தீயோர். துட்ட சனங்கள். துவர் வாய்க்கொள்ளல் - துவரேறிய பல்லினராயிருந்தனர் அக்காலச் சமண தருமத்தர். அதற்குக் காரணம் துவர்ப்புடைய கடுக்காயை வாய்க்கொள்ளல். `பாசிப்பல் மாசு மெய்யர்` (தி.4 ப.39 பா.4) என் ஆக - என்பாட்டுக்கு. `குறிக்கோளிலாது கெட்டேன்` (தி.4 ப.67 பா.9) `தலக்கமே செய்து வாழ்ந்து தக்கவாறு ஒன்றும் இன்றி விலக்குவாரிலாமையாலே விளக்கத்திற் கோழி போன்றேன்`. (தி.4 ப.31 பா.5) என்பவற்றிற் போல ஈங்கும் கொள்க. திரிதந்து:- `திரிதரு` என்னும் துணை வினையுடன் கூடிய முதனிலையிற் பிறந்த வினையெச்சம். திரிதரல்:- தொழிற்பெயர். இரு கையிலும் ஏற்று உண்ட. இட உண்ட, ஏழையேன் - அறிவிலேன். `நுண்ணுணர்வின்மை வறுமை` (நாலடியார்.) பொன் ஆகத்து - பொன் போலும் ஒளியுடைய செவ்வுடலினுள். அடியேனைப் பெய்து, புகப்பெய்து. பொருட்படுத்த:- `பண்டமாப் படுத்து` (தி.4 ப.5 பா.4). என் ஆகத்து இருத்தாதே - என் உடலினுள் வீற்றிருந்தருளச் செய்யாமலே, `வினை படும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே` (தி.9 திருவிசை. 117) எனல் காண்க. ஏதன் போர்க்கு ஆதன் அகப்பட்டது போலானேன்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 6

பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு தலையோடே திரிதர் வேனை
ஒப்போட வோதுவித்தென் னுள்ளத்தி னுள்ளிருந்தங் குறுதி காட்டி
அப்போதைக் கப்போது மடியவர்கட் காரமுதா மாரூ ரரை
எப்போதும் நினையாதே யிருட்டறையின் மலடுகறந் தெய்த்த வாறே. 

பொழிப்புரை :

உலகில் பிறக்கும் பிறவிகளையே நல்கும் நூல்களை ஓதிச் சமணனாய் வலிய மயிர் நீக்கப்பட்ட மொட்டைத் தலையோடு திரியும் அடியேனை நிகரில்லாத வகையில் உவமையிலாக் கலை ஞானத்தை உபதேசித்து என் உள்ளத்தினுள்ளே தங்கி உயிருக்கு உறுதியானவற்றைத் தெரிவித்து ஒவ்வொரு கணமும் அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமாக உள்ள ஆரூர்ப் பெருமானை எப்பொழுதும் நினையாமல், கறப்பவனொருவன், பயனின்மை மட்டிலன்றிக் காலுதையும் பட்டினைப்பவனாய் இருட்டறையில் மலட்டுப் பசுவை பால் வேண்டிக் கறந்து இளைப்பது போலப் பயனின்றித் துன்புறுதலோடு வாழ்நாளின் முற்பகுதியைக் கழித்தேனே.

குறிப்புரை :

பப்பு ஓதி - பிரவிருத்தியை வளர்க்கும் நூல்களைச் சொல்லி. `பப்பற வீட்டிருந்துணரும் நின் அடியார் (தி.8 திருவா, திருப்பள்ளி, 6) பம்பு - பப்பு பரப்பு, விரிதல். குவிதல் (நிவிர்த்திக்கு இடம்) இல்லாமை. பவணன் - பவணந்தி. `நாகலோக வாசி` அல்லர். `கனகநந்தியும் புட்பநந்தியுந் பவணநந்தியும் குமணமாசுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா அநகநந்தியர்` (தி.3 ப.39 பா.6). சைனன் என்றதாம். (தி.4 ப.5 பா. 4) ஒப்பு - நிகர். ஓடல் ஈண்டு இன்மை குறித்து நின்றது. ஓடல் - நின்ற இடம் வறிதாக விரைந்து ஏகல். ஒப்போடவோதுவித்தல்:- `உவமையிலாக் கலைஞானம்` உபதேசித்தல். ஓதுவித்தற்கு ஒப்பு ஓடல் உரித்தேனும் ஓதப்பட்ட ஞானத்திற்கும் கொள்ளப்படும். உள்ளத்தின் உள் இருந்து:- `உள்ளத்தின் உள்ளே நின்ற கருவே` (தி.6 ப.47 பா.1) எனல் காண்க.
உறுதிகாட்டல்:- சிவகதியை உணர்த்துதல். `உழைத்தால் உறுதி உண்டோ தான்` (தி.8 திருவாசகம் 496). `ஊடுவது உன்னோடு உவப்பதும் உன்னை உணர்த்துவது உனக்கு எனக்கு உறுதி` (தி.8 திருவாசகம் 50) பெறுதி, அறுதி, புகுதி, தகுதி என்பன போலும் பெயர்ச்சொல் இது.
அப்போதைக்கு அப்போதும் - நினையும் அவ்வப் பொழுதும். பொழுது - போழ்து - போது. பொழுதை - போதை. மரூஉ. `அப்போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரன்` (திருக்குறுந். 1) `அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்` (திவ். பிர.)
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" நின்னையெப்போதும் நினையவொட்டாய் நீ நினையப் புகில்
பின்னை அப்போதே மறப்பித்துப் பேர்த்து ஒன்று நாடுவித்தி
உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும்
என்னை ஒப்பார் உளரோ? சொல்லு வாழி இறையவனே. \\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\" (தி.4 ப.112 பா.4)
ஒருபோது, இருபோது. முப்போது. நாற்போது என்று வழிபடுகாலம் சிவாகம விதிப்படி நான்கு. எப்போதும் (சதாகாலமும்) வழிபாடு செய்யும் ஞானியர் அல்லார்க்கு இவ் விதி. அதனால் இவ்வாறு கூறினார். எப்போதும் நினையாதே என ஞானியர் செயல் வாயாமைக்கு வருந்தியவாறு. கைப்போது மலர்..... ... வைத்தேனே (தி.4 ப.7 பா.3) எனல் காண்க.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 7

கதியொன்று மறியாதே கண்ணழலத் தலைபறித்துக் கையி லுண்டு
பதியொன்று நெடுவீதிப் பலர்காண நகைநாணா துழிதர் வேற்கு
மதிதந்த வாரூரில் வார்தேனை வாய்மடுத்துப் பருகி யுய்யும்
விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க மின்மினித்தீக் காய்ந்த வாறே. 

பொழிப்புரை :

இனிச்சென்று சேரும் வழியை அறியாமல், கண் எரியுமாறு தலைமயிரை வலியப்பறித்து, கைகளிலேயே உணவை வாங்கியவாறே உண்டு ஊர்களிலுள்ள பெருந்தெருக்களில் பலரும் காண அவருடைய ஏளனச் சிரிப்புக்கு வெட்காமல் திரியும் அடியேனுக்கு நல்லறிவை வழங்கி ஆரூரில் நிறைந்த தேனாகிய பெருமானை நுகர்ந்து கடைத்தேறும் வாய்ப்பினைப் பெறாத நல்லறிவு இல்லாத அடியேன், விளக்கு இருக்கவும் மின்மினியினுடைய தீயைக் குளிர்காயக் கொள்வாரைப் போலப் பயனுடைய பொருளை விடுத்துப் பயனில்லாத பொருளைக் கைகொண்டு வாழ்நாளை வீணாய்க் கழித்தேனே.

குறிப்புரை :

கதி - ஊர்த்துவ கதி. செல்கதி எனலுமாம். ஒன்றும் - யாதும். அழல - எரிய, வெம்மை எழ. பதி - ஊர், ஊரில் உள்ள பெருந்தெரு. மதி - சிவஞானம். திருவாரூரிற் புற்றிடங் கொண்டாராகிய தேனை வாயில் மடுத்துக் குடித்துப் பிறவித் துயரினின்றும் உய்தி பெறுதற்கு நல்லூழ் இன்றி, அறிவிலியாகிய யான், விளக்கு இருக்கவும் அது கொண்டு தீ வளர்த்துக் குளிர்காயும் அறிவின்றி, மின்மினியில் தீக்காய்தற்கு முயன்றவாற்றை ஒத்த வினையை மேற்கொண்டேன். உழிதர்வேற்கு மதி தந்த ஆரூர்த் தேன் என்க.
உய்யும் விதி என்பதில் `உய்யும்` காரியப்பொருளில் வந்த பெயரெச்சம். மதியிலியேன் காய்ந்தவாறு என்றியையுமாயின், மதியிலியேன் செயல் காய்ந்தவாறாகும் என்க. மதியிலேன் காய்ந்தவாறு என்றியையுமாயின், மதியிலியேன் செயல் என்றதும் மதியிலியேன் என்றதும் ஒன்றாகா. `மதியிலி` என்பது படர்க்கை. அதனொடு தன்மையுணர்த்தும் ஈற்று நிலை (விகுதி) சேர்ந்து `மதியிலியேன்` என்றாயிற்று.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 8

பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற சமண்நீசர் சொல்லே கேட்டுக்
காவிசேர் கண்மடவார்க் கண்டோடிக் கதவடைக்குங் கள்வ னேன்றன்
ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை யாட்கொண்ட வாரூ ரரைப்
பாவியே னறியாதே பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்த வாறே.

பொழிப்புரை :

தலைமயிரை வலியப் பறித்து, நல்வினையில்லாத கீழோராகிய சமணத் துறவியரின் உபதேசத்தைச் செவிமடுத்துச், சொல்வதைக் கேட்டுக் கேட்டு அச்சொற்றொடர்களை அப்படியே திருப்பிச் சொல்லும் திறமை உடைய நாகணவாய்ப் பறவை போன்று அவற்றையே சொல்வேன் ஆகிக், குவளை மலர் போன்ற கண்களை உடைய பெண்களைக் காண்டலே தீவினை என்று அவர்களை ஒரோவழிக் கண்டவழி ஓடிச் சென்று இருப்பிடத்தின் கதவினை மூடிக்கொள்ளும் கள்ளத்தன்மை உடைய அடியேனுடைய உயிர் சூலைநோயால் நீங்காதபடி காத்து, என்னை அடிமை கொண்ட ஆரூர்ப் பெருமானை அடியேன் உள்ளவாறு அறியாதே மக்கள் குடிபோகிய ஊரிலே பிச்சை எடுக்கச் சென்று இளைத்தவர் போல் ஆகிவிட்டேனே.

குறிப்புரை :

பொறி - அறிவு. ஐம்பொறிவாயிலாக வரும் புலன்களுள் ஒழுங்குடையதே பொறி என்பர். சமண் + நீசர் = சமணீசர். சமணராகிய நீசர். காவி கண்ணுக்கு உவமம். மடவார்க்கண்டு:- மடவாரைக் கண்டு. உயர்திணைக்கண் தொக்கு நின்றது இரண்டனுருபு. வல்லொற்று மிகாதேல் எழுவாய்த் தொடராய்விடும். மடவாரைக் கண்டு ஓடிக் கதவை அடைக்கும் கள்வன் என்றதால், சமண் சமயத் துறவிகள், மகளிரைக் காணார். கண்டால் ஓடிக் கதவை அடைத்துக்கொள்வர். புறத்தே மகளிரைக் கண்டு ஓடிக் கதவை அடைத்துக்கொண்டு, கருத்தை அடைக்காது அகத்தே அவரால் எய்தும் சிற்றின்பத்தை விழைவோர், `கள்வர்`. அம்முறைமையால், தம்மைக் `கள்வனேன்` என்றருளினார். ஆவி:- ஆவித்தலால் வந்த காரணப்பெயர்; உயிர்த்தலால் உயிரென்றாயது போல்வது. பாழாய்ப்போன ஊரில் பிச்சை புகுந்து இளைத்தால்தான், `பிச்சை` எடுக்கத் துணியும் எண்ணம் மிகக் கொடியது எனல் விளங்கும். பயிக்கம் - பிச்சை. `பிச்சை புகுதல்` என்னும் வழக்குணர்க. `பலியும் படிகமும் பாகமும் பயிக்கமும் பிண்டமும் சரியையும் ஐயமும் பிச்சை (பிங்கலந்தை. 2123). `போற்றிய பயிக்கம் பாகம் பொருந்திய பலியே பிண்டம் சாற்றிய பிடிதம் ஐயம் சரிதை ஏழ் பிச்சையின் பேர்`(சூடாமணி நிகண்டு. 9:-11).

பண் :காந்தாரம்

பாடல் எண் : 9

ஒட்டாத வாளவுணர் புரமூன்று மோரம்பின் வாயின் வீழக்
கட்டானைக் காமனையுங் காலனையுங் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை யாரூரி லம்மானை யார்வச்செற் றக்கு ரோதம்
தட்டானைச் சாராதே தவமிருக்க அவஞ்செய்து தருக்கி னேனே.

பொழிப்புரை :

தன்னோடு நட்புறாத கொடிய அசுரர்களின் மும்மதில்களும் ஓரம்பினால் உருக்குலையுமாறு அழித்தவனாய், காமன் தன் கண்ணினாலும், காலன் தன் காலினாலும், அழியுமாறு அவர்களைத் துன்புறுத்தியவனாய், ஆரூரின் தலைவனாய், பற்று, பகைமை, கோபம், என்ற தீப்பண்புகள் தன்மாட்டு அணுகப் பெறானாய் உள்ள பெருமானை அணுகாமல், தவம், செய்தற்குரிய செயலாய் இருக்கவும், அதனை விடுத்து, பயனற்ற செயல்களைச் செய்து பெருமிதம் கொண்டு திரிந்தேனே.

குறிப்புரை :

ஒட்டாத - வேறுபட்ட `ஒட்டாத பாவித் தொழும்பர்` (தி.8 திருவாசம் 221) நண்பால் ஒட்டுதல். வாள் - கொடுமை. (முப்புரத்தியல்பு. 1037). `அம்பின் வாயின்` என்றதில் உள்ள இன் இரண்டும் முறையே சாரியையும் ஏழனுருபும் ஆகும். அம்பினது வாய் என்றுரைக்க. கட்டான் - களைந்தான். காமனைக் கண்ணின் வீழவும், காலனைக் காலின் வீழவும் அட்டான். அடுதல் - கொல்லல். `ஆர்வம்` என்றதால் காமம், மோகம், உலோபம் மூன்றும் கொள்ளப்பட்டன. `செற்றம்` என்றதால் மதமும் மாற்சரியமும் அடங்கும். அடங்கவே ஆறும் கூறப்பட்டன. தட்டான் - தட்டுப்படாதவன். ஆறு குற்றங் கட்கும் அப்பாற்பட்டவன். குற்றமிலி என்றவாறு. தட்டாதவன் - தவறாதவன். அக்குற்றங்களைச் சார்ந்து தவறுவன உயிர்கள். அத்தவறு சாராதவன் இறைவன் எனலுமாம். அவனைச் சாராமலே கழிந்தமைக்கு இரங்கியவாறு. தவம் என்பதன் மறுதலை அவம் ஆதல் பல நூலினும் காணப்படும். `தவமே புரிந்திலன் தண்மலர் இட்டு முட்டாது இறைஞ்சேன் அவமே பிறந்த அருவினையேன்` (தி.8 திருவாசகம். 9) `வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே, ஊன்பாவிய உடலைச்சுமந்து அடவிமரம் ஆனேன்` (தி.8 திருவாசகம் 515). `தவப் பெருவாயிடைப் பருகித் தளர்வொடும் அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன` (தி.8 திருவாசகம் 3-81-2). தருக்குதல். இஃது உடல் பற்றியதாதல் `முன்கைத் தருக்கைக் கரும்பின் கட்டிக் கடிகையினால் எறி உழவர்` (தி.1 ப.5 பா. 7) என்னும் திருஞான சம்பந்த சுவாமிகள் திருவாக்கால் அறியப்படும்.

பண் :காந்தாரம்

பாடல் எண் : 10

மறுத்தானொர் வல்லரக்க னீரைந்து முடியினொடு தோளுந் தாளும்
இறுத்தானை யெழின்முளரித் தவிசின்மிசை யிருந்தான்றன் தலையி லொன்றை
அறுத்தானை யாரூரி லம்மானை யாலால முண்டு கண்டம்
கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க இரும்புகடித் தெய்த்த வாறே. 

பொழிப்புரை :

தேர்ப்பாகன் கூற்றை மறுத்துக் கயிலையைப் பெயர்க்க முற்பட்ட வலிமை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளும் தோள்களும் அடிகளும் செயலறும்படி நசுக்கியவனாய், அழகிய தாமரை மலரிலிருந்த பிரமன் தலையில் ஒன்றை அறுத்தவ னாய், விடமுண்ட நீலகண்டனாய் உள்ள ஆரூர்ப் பெருமானை மனத்து நினையாமல் மெல்லுதற்கு ஏற்றதாய் மிகுசுவை உடையதாய் இருக்கும் கரும்பை விடுத்து, கடிக்க இயலாத சுவையற்ற இரும்பைக் கடித்து அடியேன் வாழ்வின் முற்பகுதியில் இளைத்தேனே.

குறிப்புரை :

மறுத்தான் - திருக்கயிலையை எடுக்க எண்ணுவதே தீவினை என்றதை மறுத்து எடுப்பேன் எனச் சொல்லிச் செய்தும் அடங்கியவன். அறுத்த அறத்தின் நீங்கி, மறுத்த (பிறன் மனையை நாடிய) மறத்தைச் செய்தவன் எனலுமாம். இறுத்தல் - முரித்தல். எழில் - எழுச்சி. முளரி - (முள் + அரி) தாமரை மலர். தவிசு - (தவிர் + து) தங்குதலுடையது, இருக்கை. காரணப்பெயர். தவிர்து என்றதன் மருஉ. இருந்தான் - ஐந்தலையனாயிருந்தவன்(படைப்பவன்). கண்டம் - கழுத்து. கறுத்தல் - கருநிறம் அடைதல். கருமை:- பண்பு. கறுத்தல்:- தொழில். வெகுளியால் கண் கறுப்பும் சிவப்பும் அடைதலின், `கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள` என்று கூறிய தொல்காப்பியர், `நிறத்துரு வுணர்த்தற்கும் உரிய வாகும்` என்றமை உணர்க. இஃதறியாதார் கருத்தான் என்றெழுதுகின்றனர். சிவத்யாநம் அல்லாதன எல்லாம் அவத்யாநமே என்பார், `கரும்பிருக்க இரும்பு கடித்து எய்த்தவாறே` என்றருளினார். எய்த்தல் - இளைத்தல்.
சிற்பி