திருவாரூர் அரநெறி


பண் :இந்தளம்

பாடல் எண் : 1

எத்தீ புகினு மெமக்கொரு தீதிலை
தெத்தே எனமுரன் றெம்மு ளுழிதர்வர்
முத்தீ யனையதொர் மூவிலை வேல்பிடித்
தத்தீ நிறத்தா ரரநெறி யாரே.

பொழிப்புரை :

உலகம் அறிந்த தீயின் நிறத்தவராகிய அரநெறிப் பெருமானார் முத்தீக்களைப் போன்று , மூன்று இலைவடிவாக அமைந்த வேலினை ஏந்தித் தெத்தே என்ற பண் ஒன்றினை நுணுகிப் பாடிக் கொண்டு எம் உள்ளத்தில் கூத்து நிகழ்த்துகின்றார் . ஆதலின் எமக்கு எந்தத் தீயினிடைப் புக நேரினும் , அத்தீயினால் தீங்கு யாதும் நிகழாது .

குறிப்புரை :

`அரநெறி ` என்றிருப்பதால் , ` அறநெறி ` என்றோ ` அரனெறி ` என்றோ இருந்து பிழைத்ததாதல் வேண்டும் . இது பொருத்தம் இல்லாதது . அரனெறியார் அத் தீநிறத்தார் . அவர் முத்தீப் போல்வதொரு மூவிலை வேலைப் பிடித்து , எம் உள்ளே தெத்தே என்ன முரன்று திருக்கூத்தாடுகின்றார் . அதனால் , எமக்கு எத் தீ புகினும் தீது இல்லை . ( தி .4 ப .94 பா .2) ` விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு அவலம் அடையா ; அருவினை சாரா ; நமனை அஞ்சோம் ` ( தி .4 ப .94 பா .3) தெத்தே எனல் அநுகரண வோசை . ` எத்திசை` என்றல் பொருந்தாது . ` முத்தீ மூவிலை வேல் ` ` அத்தீ நிறத்தார் அற நெறியார் ` ஆதலின் எத் தீ புகினும் எமக்கு ஒரு தீதும் இல்லை என்பதே பொருந்தும் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 2

வீரமும் பூண்பர் விசயனொ டாயதொர்
தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
வாரமும் பூண்ப ரரநெறி யாரே.

பொழிப்புரை :

அரநெறிப் பெருமான் நல்ல பசிய கண்கள் ஒளிவீசும் பாம்பினை மாலையாக அணிபவர் . தம்மிடம் அன்புடையவருடைய பொறுப்புக்களைத் தாமே ஏற்று அருளுபவர் . பார்வதியையும் உடன் அழைத்துச் சென்று அருச்சுனனோடு நிகழ்த்தப்பட்ட போரில் வீரச் செயல்களை நிகழ்த்துவர் .

குறிப்புரை :

அரநெறியார் நல்ல பசிய கண் மிளிரும் பாம்பு மாலையைப் பூண்பர் . விசய ( அருச்சுன ) னொடு போர் செய்ய வேண்டி அம்மையுடன் சென்றாராதலின் தாரமும் பூண்பர் . ( தி .7 ப .66 பா .4) தாரம் - கிழத்தி ; உமையம்மையார் . தமக்கு அன்பு பட்டவர் - திருவடிப் பற்றுள்ளவர் . பற்று :- ( அன்பு ) பத்து என மருவி வழங்கும் . அரவு ஆரம் - பாம்பு மாலை . ` சர்ப்பாபரணம் `.

பண் :இந்தளம்

பாடல் எண் : 3

தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமுமொர்
வஞ்ச வண்ணத்தர் வண்டார்குழ லாளொடும்
துஞ்ச வண்ணத்தர் துஞ்சாதகண் ணார்தொழும்
அஞ்ச வண்ணத்த ரரநெறி யாரே.

பொழிப்புரை :

அரநெறிப் பெருமானார் தம்மைத் தஞ்சம் என்று அடைந்தவருக்குத் தாம் அடைக்கலம் நல்கும் இயல்பினர் . சடை முடியை உடையவர் . அடியவர் அல்லாதாருக்கு வஞ்சனையான இயல்பினர் . வண்டுகள் பொருந்திய கூந்தலை உடைய பார்வதியோடும் பொருந்தும் இயல்பினர் . இமையாக் கண்களை உடைய மேலோர் தொழும் அம்சமந்திர ஜபயோகம் புரிபவர் .

குறிப்புரை :

தஞ்சவண்ணத்தர் - ( தம்மைச் சரண் என்று அடைந்தவர்க்குத் ) தஞ்சமாகும் இயல்பினர் . ( தண் + து + அம் ) தஞ்சம் . எளிமையராயிருப்பவர் . ` தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே ` ( தொல் . இடை . 18). வஞ்சம் ( வல் + து + அம் ). தஞ்சமும் வஞ்சமும் மறுதலைச் சொற்கள் . ` தஞ்சமும் தருமமும் தகவு மேஅவர் நெஞ்சமும் கருமமும் உரையு மேல்நெடு வஞ்சமும் பாவமும் பொய்யும் வல்லநாம் உய்ஞ்சுமோ அதற்கொரு குறைஉண் டாகுமோ ?` - கம்பர் . யுத்த . கும்ப . 85. இதில் தஞ்சம் x வஞ்சம் ; தருமம் x பாவம் ; தகவு x பொய் ஆகிய மூவேறு வகையும் முறையே இராமராதி இராவணாதிகட்கு நெஞ்சமும் கருமமும் உரையுமாதலைக் குறித்தல் காண்க . வண்டு ஆர் குழல் . குழலாள் - புவனேசுவரி . துஞ்ச - துயில . துஞ்சாத கண்ணர் - துயிலாத கண்ணையுடையர் . ` விழித்தகண் குருடாய்த் திரிவீரர் ` ( திருவிளையாடல் ) ` விழித்துறங்கும் தொண்டர் ` ` மெய்யுணர்ச்சி ` க்கண் விழிப்பத் தூங்குவார் ` ( குமரகுருபரர் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் . 75. நீதிநெறிவிளக்கம் . 102 ) ` துஞ்சாக்கண்ணவடபுலத்தரசு ` ( புறம் .31 ) அஞ்சவண்ணத்தர் - அம்சமந்திர ஜபயோகம் புரியும் வண்ணத்தர் அஜபாயோகம் . திருவாரூரில் நிகழ்த்தும் இறைவன் திருக்கூத்து . ` அஜபாநடனம் ` எனப்படும் . ( தி .5 ப .28 பா . 1 - 10) பார்க்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 4

விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவம்
கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
அழித்தன ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானார் காமன் பொடியாய் விழுமாறு அவனை நெற்றிக் கண்ணால் நோக்கியவர் . வானத்திலிருந்து கங்கையைத் தம் சடையில் இறங்கச் செய்தவர் . தம்மை வழிபடுபவருடைய தீவினைகளைப் போக்குபவர் . கற்களால் சூழப்பட்ட காவல் பொருந்திய மும்மதில்களையும் அழித்தவர் .

குறிப்புரை :

காமனை - மன்மதனை . வீழ்தர - வீழ . உயிர்கள் விரும்ப ; போகம் உற . விழித்தனர் - நெற்றி விழி திறந்தார் . யோகத்தில் இருந்து விழித்தார் . கங்கையை வானிலிருந்து கீழ் இழியச் செய்தனர் . ஏத்தி வழிபட்டவரது தீவினைகளைக் கழியச் செய்தார் . திரிபுரம் எரித்து அழித்தார் .

பண் :இந்தளம்

பாடல் எண் : 5

துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணம்
தற்றவர் தம்வினை யானவெ லாமற
அற்றவ ராரூ ரரநெறி கைதொழ
உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.

பொழிப்புரை :

மண்டையோட்டில் பிச்சைவாங்கி உண்பவரும் , சுருண்ட கோவணத்தை இறுக்கிக் கட்டியவரும் , இயல்பாகவே வினையின் நீங்கியவருமாய் உள்ள எம்பெருமானாருடைய ஆரூர் அரநெறிக் கோயிலைத் தம் வினைகளாயின எல்லாம் நீங்குமாறு கையால் தொழும் வாய்ப்புப் பெற்றவர் , ஞான ஒளி பெற்றவராவர் .

குறிப்புரை :

வெண்டலையில் - பிரமகபாலத்திலே , துற்றவர் - பிச்சை வாங்கி உண்டவர் . சுருள் கோவணம் :- வினைத்தொகை . தற்றவர் - இறுக்கிக் கட்டியவர் . தற்றல் - இறுகவுடுத்தல் . ` குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும் ` ( குறள் . 1023 ). தம் வினையான எல்லாம் அற அற்றவர் :- இயல்பாகவே வினையின் நீங்கி விளங்கிய துறவாளர் . ` அற்றவர்க்கு அற்ற சிவன் ` ` அற்றவர்க்கு அற்றவன் ` ( இருபா இருபஃது 20 .) கைதொழவுற்ற அடியவர்தம் வினை எனக் கொண்டுரைத்தல் நன்று . தொழ உற்றவரே சிவப்பிரகாசம் பெற்றவராவார் . உறார் பெறார் என்க . ( ப .17 பா .7. பார்க்க ) உற்றவர் வினை எல்லாம் அற அற்றவர் (- அறுவித்தவர் ) என்க . ஒளி - ` உள்ளொளி ` உரைமாண்ட உள்ளொளி ( தி .8 திருவாசகம் . 326).

பண் :இந்தளம்

பாடல் எண் : 6

கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
நீடர வத்தர்முன் மாலை யிடை யிருள்
பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
தாடர வத்த ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானார் திருவடிகளிலே அரிபெய்சிலம்பினராய் ஒலிக்கும் , கிண்கிணியால் ஏற்படும் நீண்ட ஒலியினை உடையவராய் , மாலையின் முற்பட்ட பகுதியில் இருளிலே பாடும் ஒலியினராய் , படம் விரித்து ஆடும் பாம்பை அணிந்தவராய் உள்ளார் .

குறிப்புரை :

அரநெறியார் எழுவாய் . ` அரவத்தர் ` என்னும் நான்கும் பயனிலைகள் . கூடும் சிலம்பினர் . திருவடியிலே குரலை ( ஒலியை ) யுடைய கிண்கிணியால் நீடும் பேரொலியினர் . முன் மாலையிடை யிருளிலேபாடும் பேரொலியினர் . பை - படம் . அஞ்சுபணம் - ஐந்தலை ; பணம் - பாம்பின் படம் . ஈண்டுத் தலையின் மேற்று ; பை என வேறுள்ளதால் . அரவத்தர் - பாம்பினையுடையவர் . பணம் உடையது பணி . குணம் உடையது குணி . கரம் உடையது கரி (- யானை ). இவ்வாறு தமிழில் அமையா . பிணம் - பிணி , மணம் - மணி எனல் இல்லை . பண்பு பண்பி உறுப்பு உறுப்பி என்னும் முறைமை வேறு .

பண் :இந்தளம்

பாடல் எண் : 7

கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
ஆடவல் லார்திரு வாரூ ரரநெறி
நாடவல் லார்வினை வீட வல்லாரே.

பொழிப்புரை :

உமாதேவியின் குறிப்பறிந்து அவளோடு இணைந்திருத்தலில் வல்லவராய் , நண்பகல் அந்தியிலும் காலை மாலைச் சந்திகளிலும் பலகாலும் பாடவல்லவராய் , கூத்து நிகழ்த்துதலில் வல்லவராய் உள்ள பெருமானார் உறையும் திருவாரூர் அரநெறியை விரும்பித் தொழவல்லவர்கள் வினைகளைப் போக்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராவர் .

குறிப்புரை :

உமையாளொடும் குறிப்பிற் கூடவல்லார் . குறித்தல் - இடைவிடாது நினைத்தல் . ( நினைந்தவர் உள்ளத்தில் ) உமையாளொடும் கூடவல்லார் - அம்மையப்பராயெழுந்தருளிப் பேரின்பம் நல்கவல்லார் எனலும் பொருந்தும் . அந்தியும் சந்தியும் பாடவல்லார் :- அந்தி சந்தி ஆதல் ` ( தி .6 ப .5 பா .9; ப .78 பா .5) ` அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி முந்தியெழும் பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர் புக்கெந்தை பிரானாரை என்று கொல் எய்துவதே .` ( தி .7 ப .83 பா .1) என்பதில் , அந்தி நண்பகல் சந்தி என்பன கொள்க . இரவும் பகலும் சேர்வதும் பகலும் இரவும் சந்திப்பதும் அந்தி சந்தி . இரவு பகல் அந்தத்தில் விளங்குவது அந்தி . காலையந்தி மாலையந்தி முச்சந்தி என்று வழங்குவதாற் சந்தியின் திரிபென்றே கொள்க . ` அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகந்தொறும் சந்திகள் தோறும் பலிக்குச் செல்வது தக்கதே ` ( தி .7 ப .43 பா .8) ` முட்டாத முச்சந்தி மூவாயிரர்க்கு மூர்த்தி என்னப்பட்டான் ` ( தி .7 ப .90 பா .7) அரநெறி கைதொழ உற்றவரே ஒளி பெற்றனர் என்றவாறே ஈண்டும் அரநெறி நாட வல்லாரே வினை வீடவல்லார் என்றதுணர்க . தில்லையில் நள்ளிராக் காட்சியும் திருவாரூரில் திருவந்திக் காப்புக் காட்சியும் மிக்க சிறப்புடையன . ( திருவாரூருலா . 203-4.368-377 )

பண் :இந்தளம்

பாடல் எண் : 8

பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
மாலையுங் கண்ணியு மாவன சேவடி
காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
ஆலைய மாரூ ரரநெறி யார்க்கே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறிப் பெருமானாருக்குப் பாலை ஒத்த வெண்ணிறமுடைய குளிர்ந்த பிறையும் பசிய கொன்றை மாலையும் முடிமாலைகள் ஆகும் . அவர் திருவடிகளைக் காலையும் மாலையும் கைதொழவல்ல அடியவர் உள்ளங்களே அவருக்கு உறைவிடமாகும் .

குறிப்புரை :

அரநெறியார்க்கு , பாலைச் சிரிக்கும் வெண் பிறை கண்ணியாகும் . பைங்கொன்றை மாலையாகும் . அவர்தம் சேவடியைக் காலையும் மாலையும் கைதொழுவாரது மனம் ஆலயமாகும் . ` நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் ` ( தி .5 ப .2 பா .1) ` கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி ` அடியவர் திருமேனி , திருவுள்ளம் எல்லாம் கோயிலாகக் குறித்தல் உண்டு . ` காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக , வாய்மையே தூய்மையாக மனமணி யிலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் , பூசனை ஈசனார்க்குப் போற்றுஅவிக்காட்டினோமே ` ( தி .4 ப .76 பா .4) ` உள்ளம் பெருங்கோயில் ஊன் உடம்பு ஆலயம் ` என்ற தி .10 திருமந்திரம் உடலையும் உள்ளத்தையும் முறையே கோயிலும் மூலட்டானமுமாகக் குறித்தலை உணர்க . ` ஓங்குடலம் திருக்கோயில் உள்ளிடம் உள்ளிடமாம் ` ( ஞானபூசாவிதி ) என்றதும் அதுவே . ` மறவாமையாலமைத்த மனக் கோயில் ` ( தி .12 சேக்கிழார் ), ` நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதும் துன்று மலரிட்டுச் சூழும் வலம் செய்து தென்றல் மணம் கமழும் தென்திருவாரூர் புக்கு என்றன் மனம் குளிர என்று கொல் எய்துவதே .` ( தி .7 ப .83 பா .2) என்றருளியதும் காண்க . ` ஆலையம் ` எதுகை நோக்கிய போலி .

பண் :இந்தளம்

பாடல் எண் : 9

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.

பொழிப்புரை :

திருவாரூர் அரநெறியார்க்கு முடியின் நிறம் மேகத்தின் மின்னலின் நிறமாகும் . அவர் மார்பில் அணிந்த திருநீற்றின் நிறம் அவர் வாகனமான காளையின் நிறமாகும் . அவருடைய திரு மேனியின் நிறம் பாற்கடல் நிறமாகும் . அவர் திருவடியின் நிறம் சிவந்த காலை ஞாயிற்றின் நிறமாகும் .

குறிப்புரை :

திருவாரூர் அரநெறியார்க்குத் திருமுடிவண்ணம் மேகத்தின் மின்னல்வண்ணம் . அவர்தம் திருவெண்ணீற்று வண்ணம் அவர்தம் புகழும் ` நரைவெள்ளேறு ` ( வெள்விடையூர்தியு ) ம் உற்ற வண்ணம் . அவரது திருமேனிவண்ணம் பாற்கடல் வண்ணம் . அவரது திருவடிவண்ணம் செஞ்ஞாயிற்று வண்ணம் , புகழூர்தி :- உம்மைத் தொகை . இரண்டனுருபும் பயனும் உடன்றொக்க தொடருமாம் . ( தி .12 பெரியபுராண . திருமலைச் சிறப்பு . 2. 12. பார்க்க ) காஞ்சிப் . நாட்டுப் . 10. வன்மீக . 3. தணிகைப் . 24. 126. 689. 2892. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் . 30. 82. என்றவற்றிலும் செந்தலை வரலாற்றிலும் புகழ் வெண்மை நிறத்தது என்றதைக் காண்க . ` படி எழுதலாகாத மங்கையோடுமேவன் ` என்பதில் , மங்கை வடிவைப் படி எழுதலரி தென்றலுணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 10

பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
அன்னவ ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறியார் பொன்போன்ற சிவந்த முறுக்கேறிய சடையை உடையவர் . அவர் அவருடைய திருவடி நிழலிலே இனிய அருளைச் சூடி வழிபடுதலை வெறுக்காது இரவும் பகலும் அரசர்களும் கின்னரர் என்ற தேவகணத்தாரும் வானவர்களும் தொழும் அத்தன்மையை உடையவர் .

குறிப்புரை :

அன்னவர் (- அத்தன்மையர் .) அரநெறியார் ` அவன் ` ` அன்னவன் ` இரண்டும் ஒரு பொருளன அல்ல . ` அவன் என்பது ஆடூஉவை மட்டும் சுட்டும் . ` அன்னவன் ` என்பது அத் தன்மையன் எனல் குறிக்கும் . பொன் நவில் புன்சடையான் :- பொன்போலும் சடை . மென்மையுடைய சடை . புன்மை (- அற்பம் ) எனலாகாது என்று மேலும் குறித்தாம் . ஈண்டுப் ` பொன் ` என்று வேறுள்ளமையால் , புன்மை மென்மை குறித்து நின்றது . திருவாரூரில் பூவேந்தரும் கின்னரரும் தேவேந்திரன் முதலியோரும் இரவும் பகலும் வந்து வழிபடுதலை வெறாது , சிவனடி நிழலாம் இனிய அருளைச் சூடித் தொழுகின்றனர் . அத்தகு பெருமையுடையவர் அரநெறியார் . அருள் சூடல் :- திருவருட்சூழலுள் இருத்தல் . சூழ் + து + அல் = சுற்றல் . சூழ் + து + அல் = சூடல் . சூழ்த்தல் பிறவினை . முழ் + து = முற்று . மூழ் + து + இ = மூடி . ( தமிழ்ச்சொல்லமைப்பு . பக் . 25,48. ) எள்காது - இகழாமல் . இரவும் பகலும் இடையீடின்று அரசரும் கின்னரரும் தேவரும் தொழும் பெற்றியினையுடையவர் திருவாரூர் அரநெறியார் என்ற சிறப்பு உணர்க .

பண் :இந்தளம்

பாடல் எண் : 11

பொருண்மன் னனைப்பற்றிப் புட்பகங்கொண்ட
மருண்மன் னனையெற்றி வாளுட னீந்து
கருண்மன்னு கண்டங் கறுக்கநஞ் சுண்ட
அருண்மன்ன ராரூ ரரநெறி யாரே.

பொழிப்புரை :

ஆரூர் அரநெறியார் , குபேரனைப் பிடித்து அவனிடமிருந்து புட்பக விமானத்தைக் கைப்பற்றிக்கொண்ட , உள்ள மயக்கம் கொண்ட அரசனாகிய இராவணனை முதலில் வருத்திப்பின் அவனுக்கு வாளும் உடனே அளித்து , கழுத்துக் கறுக்குமாறு கருமை பொருந்திய விடத்தை உண்ட அருள் வடிவான தலைவராவார் .

குறிப்புரை :

பொருள் மன்னன் - குபேரன் . புட்பகம் - புட்பக விமானம் ; இராவணன் திக்குவிசயம் புரிந்து குபேரனிடத்தில் இருந்து பறித்தது . மருள்மன்னன் - காமத்தால் தனது திறனும் புகழும் அறிவும் ஆற்றலும் கெட மயங்கிய வேந்தன் ; இராவணன் . எற்றி - திருவடிப் பெருவிரலால் ஊன்றி இறுத்து . வாள் , நாள் , பெயர் கொடுத்து . கருள் - கருமை . கருணையின் கடைக்குறை எனின் பொருந்துமோ ? ` அருள் மன்னர் ` என்று மேல்வருதலாலும் பொருந்தாது . கண்டம் (- கழுத்து ). கறுக்க உண்ட நஞ்சு , ஆரூரது அருட் பெருக்கை உணர்த்துங் குறி . ` வானவரும் இந்திரனும் மாலொடயனும் செத்துப்போன விடம் புல்முளைத்துப் போகாதோ ? தான் அமுதாய் , அத்தர் அருணேசர் அன்பாக நஞ்சுதனைப் புத்தியுடன் உண்ணாத போது ` என்பது , குகை நமச்சிவாயர் அருளிய பாடல் .
சிற்பி