கோயில்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கே னென்னைநீ யிகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை யம்பலத் தாடு கின்ற
அத்தாவுன் னாடல் காண்பா னடியனேன் வந்த வாறே.

பொழிப்புரை :

அநாதியான வினையின் நீங்கியவனே ! எல்லாருக்கும் முற்பட்டவனே ! தில்லை அம்பலத்தே ஆடுகின்ற தலைவனே ! மேம்பட்டவனே ! மேம்பட்ட யோகியே ! அடியேன் பத்தனாய்ப் பாடும் ஆற்றல் இல்லேன் . யாதனால் அடியேன் பத்தி செய்வேன் ? அடியேனை நீ இகழவேண்டா . அடியேன் உன் ஆடலைக் காணத் தில்லை வந்துள்ளேன் .

குறிப்புரை :

பத்தன் ஆய் - பத்தி உடையவனாகி . பரமன் - முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருள் . பரமயோகம் - சிவாநந்தப் பேறு . ஆன்மயோகம் , ஞானயோகம் , சிவயோகம் ( சிவப்பேறு ) என்னும் மூவகையோகத்துள் , தன்னுயிர்தானறப் பெறல் ஆன்மயோகம் . அவனருளே கண்ணாகப் பெற்று அருளாதல் ஞான யோகம் . அச்சிவஞானத்தால் சிவனைப் பெறுதல் சிவயோகம் . ( யோகம் மூன்றும் :- சிவ . போதம் . சூ . 3, 7, 8. சிவயோகம் சூ . 10. சிவாநந்தப்பேறு . சூ . 11. ஆன்மயோகம் சூ . 3, 7 ). எஃது - எத்து . அஃது முதலிய சுட்டுப் பெயரும் பஃது என்பதும் இவ்வாறு மருவி வழங்குகின்றன . செய் + கு + ஏன் . முத்தன் - அநாதி முக்தன் . முதல்வன் - பரத்துவக் கடவுள் . அத்தன் - மலத்துன்பினின்றும் நீக்கி உயிர்க் குழவிகளையாள ஆடல் முயற்சியுடைய அப்பன் . காண்பான் வந்தவாறு ( ஆகும் ) என்று ஆக்கம் வருவித்து முடிக்க . அடியனேன் வந்தவாறு ஆடல் காண்பான் என்றும் ஆம் . ஆய் - போன்று எனலுமாம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கருத்தனாய்ப் பாட மாட்டேன் காம்பன தோளி பங்கா
ஒருத்தரா லறிய வொண்ணாத் திருவுரு வுடைய சோதீ
திருத்தமாந் தில்லை தன்னுட் டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
நிருத்தநான் காண வேண்டி நேர்பட வந்த வாறே.

பொழிப்புரை :

மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகனே ! ஒருவராலும் அறியமுடியாத அழகிய ஒளிவடிவு உடையவனே ! பரிசுத்தமாயுள்ள தில்லையிலே விளங்குகின்ற சிற்றம்பலத்தில் உன் திருக்கூத்தைக் காணவேண்டி உன்னை உள்ளத்தில் இருத்தி கருத்தொன்றிப் பாடமாட்டாதேனாகிய அடியேன் வந்துள்ளேன் .

குறிப்புரை :

கருத்தன் ஆய் - கருத்துடையேனாகி . ( பாடுங்கால் , அப்பாட்டின் பொருளிற் கருத்து ஊன்றி நிற்க , உரையும் செயலும் ஒத்த பாவனையுள்ளேனாகி ). ` கையொன்று செய்ய நாவொன்று பாடக் கருத்து ஒன்று எண்ண ` நிகழும் வழிபாட்டாற் பயனில்லை என்றவாறு . காம்பு - மூங்கில் . அன - ஒத்த . தோளி - சிவகாமவல்லி . பங்கா - பங்குடையாய் . ஒருத்தராலும் அறிய ஒன்றாத . திருவுரு - ஞானரூபம் . பாசஞானத்தாலும் பசு ஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனுக்கு அப் பதிஞானமே ரூபம் . ஒருத்தராலும் அறிய ஒண்ணாத திருவுருவம் அதுவே . தேகமான அதுவே தன்னையும் தேகியான சிவனையும் காட்டும் . ` அருளுரு உயிருக்கு என்றே ஆக்கினன் அசிந்தன் ` ( சித்தியார் ). திருத்தம் - தூய்மைமிக்கது . நிருத்தம் - திருக்கூத்து . நேர்பட - நேர்பட்டதால் ; நேர்படற்பொருட்டு எனின் , காணவேண்டி என்றது மிகையாகும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கேட்டிலேன் கிளைபி ரியேன் கேட்குமா கேட்டி யாகில்
நாட்டினே னின்றன் பாதம் நடுப்பட நெஞ்சி னுள்ளே
மாட்டினீர் வாளை பாயு மல்குசிற் றம்ப லத்தே
கூட்டமாங் குவிமு லையாள் கூடநீ யாடு மாறே.

பொழிப்புரை :

அடியேன் இதற்குமுன் உன் பெருமையை உள்ளவாறு கேட்டறியேன் . இப்பொழுது உன் அடியார்குழாத்தைப் பிரியாமல் உன் பெருமையைக் கேட்குமாறு கேட்பித்தருளி உதவுவாயானால் , நீர் நிலைகளில் வாளை மீன்கள் பாயும் வளம் மிகுஞ் சிற்றம்பலத்திலே உன்னோடு கூடியிருக்கும் குவிந்த தனங்களை உடைய பார்வதியோடு கூட நீ ஆடுமாற்றால் ( ஆடுதலின் பேறாக ) உன் திருவடிகளை நெஞ்சின் நடுவிலே உறுதியாக நிலை நிறுத்தினேன் ஆவேன் .

குறிப்புரை :

மாடு - பொன் . மாட்டின் - பொன்னைப்போல . நீரில் வாளை பாய்கின்ற தோற்றம் பொன்னொளித் தோற்றமும் ஒக்கும் என்றபடி . மாடு - பக்கம் ; இடம் . நீர்மாட்டின் - நீர்ப்பக்கத்தில் , நீரிடங்களில் எனலுமாம் . உருபு முன்னும் உருபேற்ற பெயர் பின்னும் நிற்றல் உண்டு . மட்டில்லாத ( மட்டு இல் ) என்று கொண்டு முதல் நீட்சி எனல் தக்கதன்று . கூட்டம் ஆம் - கூடிக் களிப்பதற்குரியவள் ஆகும் . முன்னம் கேட்டில்லேன் . ( அடியார் ) கிளையைப் பிரியேன் . ( நினைக்குமாறு நினைப்பித்தும் பாடுமாறு பாடுவித்தும் ) கேட்குமாறு கேட்பித்தருளியும் உதவுவாய் ஆகில் ( என் ) நெஞ்சின் உள்ளே நடுப்பட நின்றன் பாத மலர்களை நாட்டினேன் ஆவேன் . ( கேட்பித்தருளாயாகில் நாட்டவல்லேனல்லேன் என்றபடி ) ` நினைக்குமா நினைப்பியாதே ` ( பா .9) என்புழிப்போலக் கேட்குமா கேட்டல் . அது மறை . இது விதி . ( சிவஞானபோதச் சிற்றுரை . சூ . 11. முதல்வன் உடன் நின்றறிதல் பற்றிய விளக்கம் ) ` தொண்டனேன் நினையுமா நினையே ` ` விரும்புமா விரும்பே ` ` தொடருமா தொடரே ` ` நுகருமா நுகரே ` என்பன காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

சிந்தையைத் திகைப்பி யாதே செறிவுடை யடிமை செய்ய
எந்தைநீ யருளிச் செய்யா யாதுநான் செய்வ தென்னே
செந்தியார் வேள்வி யோவாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அந்தியும் பகலு மாட அடியிணை யலசுங் கொல்லோ.

பொழிப்புரை :

சிவந்த தீயை ஓம்பும் அந்தணர்களுடைய வேள்விச் செயல்கள் நீங்காத தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் நீ கூத்து நிகழ்த்துதலால் உன் திருவடிகள் சோர்வு அடையும்போலும் . அடியேன் உள்ளத்தை உலகப் பொருள் நுகர்ச்சியிலிருந்து மாறுபடும் படியாகச் செய்யாமலும் உன்னை அணுகிச் செய்யும் அடிமைத் திறத்தை அடியேனுக்கு அருள் செய்யாமலும் உள்ளாய் . இனி அடியேன் செயற்பாலது யாது உள்ளது ?.

குறிப்புரை :

எந்தை ! சிந்தையைத் திகைப்பித்தல் செய்யாதே அடிமை செய்ய யாதும் நீ அருளிச் செய்யாய் . என்னே நான் செய்வது ? செந்தீயார் - செய்ய வேள்வித் தீ வளர்க்கும் அந்தணர் . அவர் செய்யும் வேள்வி ஓவாது நடக்கும் இடம் தில்லைச்சிற்றம்பலம் . ஓவாமை பண்டு . அந்தி :- காலையந்தி ( மாலைச்சந்தி ). பகல் - உச்சிப்பகல் . இடைவிடாது ஆடலால் திருவடியிணை சோர்வுறுமோ ? அலசல் - சோம்பல் . ஈண்டுச் சோர்தலின் மேற்று . செறிவுடையடிமை :- ஆண்டானோடு செறிவிலா அடிமையும் உண்டு . செறிவு - அன்பு நிறைவாலான உள்ளத்தியைபு . ` சீலம் நோன்பு செறிவு அறிவு ` ( தி .8 திருவாசகம் ) என்பவற்றுள் ஒன்றான செறிவு யோகமும் ஆம் . தீயார் :- தியார் . முதற்குறுக்கம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கண்டவா திரிந்து நாளுங் கருத்தினா னின்றன் பாதங்
கொண்டிருந் தாடிப் பாடிக் கூடுவன் குறிப்பி னாலே
வண்டுபண் பாடுஞ் சோலை மல்குசிற் றம்ப லத்தே
எண்டிசை யோரு மேத்த விறைவநீ யாடு மாறே.

பொழிப்புரை :

அடியேன் அனுபவத்தில் கண்டவாறு ஞான நிலைக்குப் பொருந்தியவண்ணம் உலகியலுக்கு மாறுபட்டு உள்ளத்தில் நின் திருவடிகளை நிலையாகக் கொண்டு ஆடிப்பாடி உன் திருவருட் குறிப்பினாலேயே , வண்டுகள் பண்களைப்பாடும் சோலைகள் மிகுந்த சிற்றம்பலத்திலே எட்டுத் திசைகளில் உள்ளவர்களும் துதிக்குமாறு இறைவனாகிய நீ ஆடும் கூத்தினைக் காண்பதற்கு வந்து சேருவேன் .

குறிப்புரை :

வண்டுகள் பண்களைப்பாடும் சோலை மல்கிய திருச்சிற்றம்பலத்தே , எட்டுத் திசையிலுள்ள யாவரும் ஏத்த , இறைவ நீ ஆடும் வண்ணத்தைக் கூடுவன் . கண்டவாறு திரிந்து நாள்தோறும் கருத்தொடு நின் திருவடியை உளங்கொண்டு ஆடிப்பாடிக் கூடுவன் . நின் திருவருட் குறிப்பினாற் கூடுவன் . ` அண்ணல் பாதம் கொண்டு அவன் குறிப்பினாலே தாபரத்தைக் கூப்பினான் . அவன் தாதை கண்டு பாய்வான் கால் அறஎறியக் கண்டு சண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர் ஆப்பாடியாரே ` ( தி .4 ப .49 பா .4). கண்டவா - அநுபவத்திற் கண்டவாறு . கருத்தில் நான் எனலுமாம் . திரிந்தது ஞானநிலைக்குப் பொருந்தியவண்ணம் . நீ ஆடுமாறு எண்டிசையோரும் ஏத்த எனலும் கூடும் . பா .8 இல் உள்ளவாறு , ` கருத்தினான் ` என்பது , கருத்தையே உயர்திணை ஆண்பாலாகக் கூறினார் ஆகக்கொண்டு , கருத்தினான் கண்டவாறு திரிந்து கொண்டு இருந்து ஆடிப்பாடிக் கூடுவன் எனலும் பொருந்தும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பார்த்திருந் தடிய னேனான் பரவுவன் பாடி யாடி
மூர்த்தியே யென்ப னுன்னை மூவரின் முதல்வ னென்பன்
ஏத்துவா ரிடர்க டீர்ப்பாய் தில்லைச்சிற் றம்ப லத்துக்
கூத்தாவுன் கூத்துக் காண்பான் கூடநான் வந்த வாறே.

பொழிப்புரை :

வழிபடும் அடியவர்களுடைய துயரங்களைத் தீர்ப்பவனே ! தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள கூத்தனே ! உன் கூத்தினைப் பார்த்து இருந்து உன்னை முன்னின்று துதிப்பேன் . ஆடிக் கொண்டும் பாடிக்கொண்டும் உன்னை மூவரினும் முதல்வனாகிய மூர்த்தியே என்று அழைப்பேன் . உன் கூத்தினைக் காண்பதற்கு அடியவருடன் நான் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தா உன் திருக்கூத்தைக் காண்பான் கூட நான் வந்தவாறு . அடியனேன் நான் பார்த்திருந்து பரவுவன் . பாடி ஆடி மூர்த்தியே என்று அழைப்பேன் . ` உன்னை ` இடை நிலை விளக்கு . மூவருள் அன்று . மூவரினும் முதல்வன் . ( தி .8 திருவாசகம் . 8) ` மூவர் உருத் தனதா மூலமுதற் கரு ` ( தி .7 ப .84 பா .7) ` மூவர் கோனாய் நின்ற முதல்வன் ` ( தி .8 திருவாசகம் . 5.30) ` மூவர் அறியாச் சிந்தூரச் சேவடி யான் ` ( தி .8 திருவாசகம் 8.5) ` முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற்று அறிவார் ` ( தி .8 திருவாசகம் 20.8) ` ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் :- தி .1 ப .23 பா .4,9. ` ஏத்துதல் ஈண்டு அருள்வழி நிற்றல் மேற்று `. ( சிவஞான போதமாபாடியம் . சூ . 11. அதி . 2 ) என்பதும் ஈண்டுச் சிவாநந்தாநு பூதியாரைக் குறித்துக் கொள்ளற்பாலதாகும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பொய்யினைத் தவிர விட்டுப் புறமலா வடிமை செய்ய
ஐயநீ யருளிச் செய்யா யாதியே யாதி மூர்த்தீ
வையகந் தன்னின் மிக்க மல்குசிற் றம்ப லத்தே
பையநுன் னாடல் காண்பான் பரமநான் வந்த வாறே.

பொழிப்புரை :

அழியும் பொருள்களிலுள்ள பற்றினை நீங்குமாறு விடுத்து அகத்தடிமையாகிய மெய்யடிமையைச் செய்ய , என் தலைவனே ! எல்லோர்க்கும் ஆதியாய முதல் தெய்வமே ! நீ அருள் செய்வாயாக . இவ்வுலகிலே மேம்பட்ட மிகுஞ் சிதம்பரத்தில் உன் கூத்தினை சற்றே காண அடியேன் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

வையகம் தன்னில் மிக்க - உலகிலே மேன்மையுற்ற . ` ஞாலமாந்தில்லை ` ( தி .4 ப .22. பா .10) கோயில் எல்லாவற்றிற்கும் கோயில் ஆதலின் , மிக்கதாயிற்று . பைய - மெல்ல . ` நுன் ` நின் என்றதன் திரிபு . ( நீன் , நின் - நுன் - உன் எனத் திரிந்தது . ` நீன் ` என்னும் வழக்கு இன்றும் உளது . யான் , நீன் , தான் , யாம் , நீம் , தாம் என்பவை பண்டைய ஆட்சி . பொய் - அநித்தியம் . தவிர - ( நீங்க ; ஆண்டாண்டுத் ) தங்க . விட்டு - விண்டொழியப்பண்ணி . புறம் அல்லா அடிமை :- அகத்தடிமை . மெய்யடிமை . ` பசு பாசங்களின் இயல்புகளை உள்ளவாறு உணர்ந்து , செய்வன எல்லாம் அவன் அருளின்வழி நின்று செய்யும் செயலாகக் கண்டு கொண்டிருக்கும் ` இறைபணியாகிய அடிமைத் திறம் ( மாபாடியம் ) புறம் அலா அடிமைத்திறம் ஆகும் . செய்யாய் - செய்வாய் . ஆதியே - முதல்வனே . ஆதி மூர்த்தி - ஆதி சத்தியாகிய மூர்த்தி ( யையுடையவனே ; மூர்த்தி ) மானே .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மனத்தினார் திகைத்து நாளு மாண்பலா நெறிகண் மேலே
கனைப்பரா லென்செய் கேனோ கறையணி கண்டத் தானே
தினைத்தனை வேதங் குன்றாத் தில்லைச்சிற் றம்ப லத்தே
அனைத்துநின் னிலயங் காண்பா னடியனேன் வந்த வாறே.

பொழிப்புரை :

விடக்கறையை அணிந்த நீலகண்டனே ! அடியேனுடைய மனம் நிலைகொள்ளாமல் தடுமாறி நாள்தோறும் பெருமை தாராத வழிகளிலே செருக்கித் திரிகின்றது . அடியேன் யாது செய்வேன் . வேதங்களை ஓதுந்திறஞ் சிறிதளவுங் குறைவுபடாத தில்லைச் சிற்றம்பலத்தில் உன் இருப்பிடத்தைத் தரிசிப்பதற்கு அடியேன் வந்தவாறு இதுவாம் .

குறிப்புரை :

மனத்தையே ` மனத்தினார் ` என்றார் . மனத்தினார் கனைப்பர் - நெருங்குவர் . மாண்பு அல்லா நெறிகள் :- பிறவிதரும் வழிகள் . கறை - நஞ்சின் கறுப்பு . தினைத்தனை - தினையளவும் . தனை - அளவு . தினை சிறுமைக்குக் காட்டும் ஓர் அளவை ( குறள் . 104. பரிமே . உரை ) வேதம் குன்றாமை :- செந்தீயார் வேள்வி ஓவாமை . பா . 4. ` நரியனார் ` ` தென்றலார் என்பனபோல்வது , ` மனத்தினார் `. அனைத்தும் - எல்லாம் . நின் நிலயம் - உனது திருவருளகம் . எல்லாம் நினது நிலயம் ; உறையுள் . நின் இலயம் எனப் பிரித்து நின்கண் ஒடுக்கம் ; கூத்து எனலும் பொருந்தும் . ` அனைத்து வேடம் ஆம் அம்பலக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்துய்வனோ `. ( தி .5 ப .2 பா .1)

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பி யாதே
வஞ்சமே செய்தி யாலோ வானவர் தலைவ னேநீ
மஞ்சடை சோலைத் தில்லை மல்குசிற் றம்ப லத்தே
அஞ்சொலாள் காண நின்று வழகநீ யாடு மாறே.

பொழிப்புரை :

தேவர்கள் தலைவனே ! அடியேனுடைய நெஞ்சினைத் தூய்மை செய்து உன்னை எப்பொழுதும் அடியேன் நினைக்குமாறு திருவுள்ளம் பற்றாமல் வஞ்சனை செய்கின்றாயே . மேகங்கள் தங்குதற்கு வந்து சேரும் உடயரமான சோலைகளையுடைய தில்லையம்பதியிற் சிதம்பரத்திலே அழகிய சொற்களையுடைய பார்வதி காண, நீ ஆடுந்திறம் இருந்தவாறு என்னே !

குறிப்புரை :

நெஞ்சினைத் தூய்மை செய்தல் :- துகளறுபோதம் உறுதற்குத் துணையாக்கல் . ` நினைக்குமா நினைப்பியாதே `: தி .4 ப .23 பா .3. வஞ்சம் - ( வல் + து = அம் ) வன்பு . வானவர் - பேரின்ப வீடுற்றோர் ; வானவர் தலைவனாகிய இந்திரனல்லன் ; ஆயின் , தேவர் ஆவர் . மஞ்சு - கார்மேகம் . அஞ்சொலாள் :- திருக்கூத்திற்கு ஏற்பத் தளிரிள வளரொளி பாடிய சிவகாமவல்லி . அஞ்சொலாள் காண நின்றாடுமாறு :- அண்டத்தும் உணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மண்ணுண்ட மால வனு மலர்மிசை மன்னி னானும்
விண்ணுண்ட திருவு ருவம் விரும்பினார் காண மாட்டார்
திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச்சிற் றம்ப லத்தே
பண்ணுண்ட பாட லோடும் பரமநீ யாடு மாறே.

பொழிப்புரை :

பூமியை உண்ட திருமாலும் , மலர்மேலுறையும் பிரமனும் விண்ணளவும் ஒளிநிறைந்த உன் திருவுருவைக் காணும் வேட்கையராயிருந்துமே , தானாக நிலைத்துத் திணிந்திருக்கும் சிவத்திரு மேம்பட்ட தில்லைச் சிற்றம்பலத்தின் கண்ணே பண்ணுக்கு அமைந்த பாடல் ஒலிகளின் இடையே பரம்பொருளாகிய நீ வெளிப்படையாக ஆடுமாற்றை - அதன் மாண்பை ( இன்னும் ) காணமாட்டாராகின்றனர் . ( அவர் விதி இருந்தவாறென்னே !)

குறிப்புரை :

மண் - நிலவுலகு . மாலவன் - மாயன் . மலர் - தாமரை . ` பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை ` ( தி .4 ப .12 பா .2) விண் உண்ட திருவுருவம் :- ` பாரும் திசையும் படரொளியாலே நிறைந்த ` பேருருவம் . ( போற்றிப் பஃறொடை :- 1.5. ) காண விரும்பினார் காணமாட்டாராயினார் . அவ்வாறாக விண்ணுண்ட திருவுருவம் தோன்றிற்று . திண் உண்ட திரு :- ` சென்றடையாத திரு ` ` சென்றடையாச் செல்வம் `. பண் உண்ட பாடல் :- நாடொறும் வீடுதோறும் பண் பாடல் உளது .
சிற்பி