திருவதிகைவீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

இரும்புகொப் பளித்த யானை யீருரி போர்த்த வீசன்
கரும்புகொப் பளித்த வின்சொற் காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கரும்பின் இனிமை மிகும் சொற்களை உடைய பார்வதியின் பாகராய் , வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு கொப்பளிக்கும் பூவினை அணிந்த கங்கையாளாகிய நீர் வடிவைச் சடையில் ஏற்றவராய் , அரும்புகள் தேனை மிகுதியாக வெளிப்படுத்தும் சென்னியை உடைய அதிகை வீரட்டனார் , இரும்பின் நிறத்தை கொப்பளித்து விட்டாற்போன்ற செறிவான கருமையுள்ள யானையின் ஈரப்பசுமை கெடாத தோலைப் போர்த்த ஈசனாவார் .

குறிப்புரை :

இரும்பு ( இருள் + பு என்பதன் மரூஉ ) கொப்பளித்தாற் போன்ற மிகக் கரிய யானை ( ஆணவம் ). கரும்பு சொற்குஉவமை . சுரும்பு - ( சுருள் + பு என்பதன் மரூஉ ) வண்டு இனத்துள் ஒன்று . துவலை - துளி . ` கொப்பளித்தல் `. இத்திருப்பதிகத்திற் பல பாடலிலும் சொற்பொருட்பின் வருநிலையுற்றுளது . பொருத்தமாகப் பொருள் கூறிக் கொள்க . ( காஞ்சிப்புராணம் இரண்டாவது காண்டம் . இருபத்தெண்டளிப் . 89. பார்க்க ).

பண் :

பாடல் எண் : 2

கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க வெய்தா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

கொம்பின் கூர்மை அதிகரித்த கூரிய வளைந்த வெண் பிறையைச் சூடி , அதன்மேலும் நறுமணம் அதிகரித்த கொன்றை மலரை வளரும் சடையில் அணிந்து , செம்பு மயமான உறுதியான மும்மதில்களும் அழியுமாறு வில்லை வளைத்து அம்பின் விறல் அதிகரிக்குமாறு புரங்களை எய்தவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

கொம்பு - ஊதும் கொம்பு . வாத்தியம் . வெண்டிங்கட் பிறைக் கோணலுக்குக் கொம்பின் கோணல் ஒப்பு . வம்பு - மணம் . வள் + பு = வம்பு . செம்பு மதில் மூன்றும் :- முப்புரம் . அம்பு - திருமாலான கணை .

பண் :

பாடல் எண் : 3

விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தம் வெண் ணீறுபூசி
உடையுங்கொப் பளித்த நாக முள்குவா ருள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

இடபத்தில் தழும்பேற்றும் தம் திருவடிகளைத் தேவர்கள் பாடித் துதிக்க சடைக்கு ஒளித் ததும்ப வைக்கும் சந்திரனின் நிலவு போன்ற வெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி உடைமேல் பல்கித் தோன்றும் நாகங்களின கட்டியிருக்கும் திருவடிவை தியானிப்பவரது உள்ளத்தில் நீங்காது சேர்ந்திருந்திருப்பவர் அதிகை வீரட்டனாரே .

குறிப்புரை :

சிவபிரான் திருப்பாதம் விடைமேல் அடைதல் குறித்தது . ` ஏறுகொப்பளித்த பாதம் .` பா . 5. சடைமேல் திங்கள் . திருவெண்ணீற்றைச் சாந்தமாகப் பூசி , ` சாந்தம் ஈது என்று எம் பெருமான் அணிந்த நீறு ` ( சம்பந்தர் ) உடை ... ... நாகம் :- அரவக் கச்சு . உள்குவார் - நினைப்பவர் . உள்ளத்து என்றும் அடைவார் :- ` நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் `. அடையும் - சேரும் ; முழுதும் . அடைதலையும் எனலுமாம் . அடை :- முதனிலைத் தொழிற் பெயர் .

பண் :

பாடல் எண் : 4

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவே ளுருவ மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணா ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

விடக்கறை துலக்கமாக விளங்கும் கழுத்தினராய் , மன்மதன் வடிவம் அழியுமாறு தீயைச் சிறிது வீசிய நெற்றிக் கண்ணினை உடையவராய் , தம்மைத் துதிக்கும் அடியவர் துயர்களைத் தீர்ப்பவராய் , வேதம் மிக்குத் தொனிக்கும் நாவினராய் , வண்டுகள் தேன் உண்டு பாடப்படுவதும் , எல்லோராலும் புகழப்படுவதுமான கொன்றை மலரைச் சூடிய சென்னியராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . கண்டர் - ` திருநீலகண்டர் `. காம வேள் - காமனாகிய வேள் . வேள் - விரும்பப் பெறுவோன் . கருவேள் ( மன்மதன் ). மங்க - அழிய . செவ்வேள் ( முருகன் ). வேள் உருவம் மங்கத் தீயைச் சிறிது கொப்பளித்த நெற்றிக்கண்ணார் . இறை - சிறிது . ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் ; தி .1:- ப .21 பா .6, ப .23 பா .9. மறை - வேதம் . நாவர் - நாவினையுடையவர் . கொன்றையில் தேனை உண்டு வண்டு பாடும் ஒலியைத் தோற்றும் இடமாகிய சென்னி (- தலை ).

பண் :

பாடல் எண் : 5

நீறுகொப் பளித்த மார்பர் நிழறிகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதைக் கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாத மிமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

திருநீறு பரந்து விளங்கும் மார்பினராய் , ஒளி விளங்கும் மழுப்படையைக் கையில் ஏந்தி , எல்லோரும் புகழும் மாலையும் திரண்டவளைகளும் அணிந்து ஒரு பாகத்தை விளக்கும் பார்வதி சமேதராய் , காளையைத் தழும்பேற வைத்த தம் திருவடிகளைத் தேவர்கள் துதிக்குமாறு கங்கை நதி பெருகித்தங்கியிருக்கும் செஞ்சடையை உடையவராய் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

நீறு பூசிய திருமார்பு , அதனைக் கொப்பளித்தது போலத் திகழ்கின்றது . நிழல் - ஒளி . மழு - தீய்க்கும் படை . கூறு - கூந்தலின் ஐம்பால் . கோதை - கூந்தல் . கோல்வளை - அழகிய வளையல் . மாது - உமாதேவியார் . பா .10 ` விடையும் கொப்பளித்த பாதம் ` பா . 3. ` இமையவர் பரவி ஏத்த ` பதி . பா . 5. ஆறு - கங்கை . பா . 9.

பண் :

பாடல் எண் : 6

வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி யதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

வேத மந்திரங்களைச் சொல்லி வணங்குதலை மிகவும் பொருந்திய திருவடிகளைத் தேவர்கள் முன் நின்று போற்றிப் புகழ , ஒன்றோடொன்றுணங்காதவை அதிகம் விளங்கும் சடையினை உடைய பெருமை மிக்க தலைமையாளராய் , தேமல் மிகவும் பரவிய கொங்கைகளை உடையவளாய்ச் சுருண்ட கூந்தலை உடைய பார்வதியின் பாகராய் , தெய்வத் தன்மையை வெளிப்படுத்தும் திருமேனியை உடையவராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

எல்லாவுயிர்களும் , ( எல்லாமக்களும் , எல்லாத் தேவர்களும் ) செய்யும் வணக்கமெல்லாம் சிவபெருமான் திருவடிக்கே உரியன என்று வணக்கஞ் சொல்லும் மந்திரங்களான அதர்வசிரசு , உருத்திராத்தியாயம் , தேவவிரதம் முதலியன உணர்த்துகின்றன . ` ஸ்தோமம்வோ அத்யருத்ராய ` ` யஸ்மை நமஸ்தஸ்மை த்வாஜுஷ்டந் நியுநஜ்மி ` என்பன முதலிய மந்திரங்களால் , வணக்கங்களெல்லாம் சிவபிரானையே சாரும் என்பது பெறப்படும் . ` மொழிந்திடும் எல்லா வணக்கமும் எல்லா மொழிகளும் உன்னையே சாரும் ` ( சிவதத்துவ விவேகம் . 33 ). சடை ஒன்றோடொன்று இணங்குதல் இன்மையே பிணங்குதல் உடைமை . சுணங்கு - தேமல் . அணங்கு - அழகு . சுரி குழல் - சுரிகுழலாள் . வினைத்தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை .

பண் :

பாடல் எண் : 7

சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பி னுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

சூலம் ஒளிமிகுந்து வீசும் கையினராய் , ஒளிவீசும் மழுப்படையை சுழற்றிக் கொண்டு , முப்புரிநூல் ஒளிவீசும் மார்பில் நுண்ணிய புள்ளிகளை உடைய பாம்பினை அணிந்து வண்டுகள் பண்பாடும் கொன்றை மலர்களைச் சூடித் திருமால் மகிழ்ந்திருக்கும் பாகத்தை உடையவராய் , விடத்தின் சுவட்டினை வெளிப்படுத்தும் நீலகண்டராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

சூலம் ஏந்திய கையினார் . சுடரினை விடுகின்ற மழுவாள் . நூல் - முப்புரி நூல் . நுண்பொறி - சிறியப் படப் புள்ளிகள் . மால் ... ... பாகர் :- ` இடம் மால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4). ` மையரிக் கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகி ` ( தி .4 ப .22 பா .4). ` வண்டு பண் பாடுங்கொன்றை ` ( ? 5). ஆலம் - நஞ்சு .

பண் :

பாடல் எண் : 8

நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளா ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

பாம்பு மகிழ்வோடு விளங்கும் கையினராய் , நான்கு வேதங்களையும் பாடிக்கொண்டு , மேகம் மிக்குச் செறிந்த வானில் மிளிரும் பிறையை விரிந்த சடைமேலே சூடி , ஒருபாகமாக விளங்கும் உமாதேவி பண்ணோடு பாடக் கூத்தாடுவதற்குத் திருமேனிக்கண் பூரிப்படைந்து விம்முந் தோள்களை உடையவர் அதிகை வீரட்டனார் ஆவர் .

குறிப்புரை :

நாககங்கணர் ஆதலின் , நாகங்கொப்பளித்தகையர் எனலாயிற்று . ` அரவு கொப்பளித்த கையர் `. நான் மறை ஆய - நான்கு வேதங்களானவற்றை . பாடி ஆடக் கொப்பளித்த தோளார் என்று முடிக்க . திங்கள் மேகத்தின் மறைந்து வெளிப்படல் கருதி , மேகங்கொப்பளித்த திங்கள் என்றருளினார் . திங்களை விரி சடைமேல் வைத்து . அம்பிகை பண்ணுடன் பாடி ஆட . பாகம் - இடப்பால் . ஆகம் - மார்பு . உடலுமாம் . ` மாதர் பண்ணுடன் பாடி ஆட ` என்பது அம்பிகை பண்ணொடு பாடுதலும் அன்றி ஆடுதலும் செய்தார் என்று குறித்தாலும் , ஆடுதல் காளியம்மைக்கே உரியதாக்கிக் கூறுதலாலும் , சிவகாம வல்லிக்கு ஆட்டம் உண்டு என்னல் மரபன்றாதலாலும் , பாடி என்றதைப் பாட என்று செயவெனெச்சமாகத் திரித்துக் கொள்ளல் நன்று .

பண் :

பாடல் எண் : 9

பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்த ரேத்த
விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்ட ரேத்துவா ரிடர்க டீர்ப்பார்
அரவுகொப் பளித்த கைய ரதிகைவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

துதித்தற்கு ஏற்ற வாழ்த்துக்களைத் துலங்க வெளிப்படுத்தும் பாடல்களைப் பண்ணுடன் பாடி அடியவர்கள் போற்ற , சடைமுடியில் கலந்து தங்குதற்கு மகிழும் கங்கையைத் தம் விரிந்த சடையில் மகிழுமாறு வைத்து , இருள் கம்மிக் கறுத்த நீலகண்டராய் , தம்மை வழிபட்டுப் புகழ்பவர்களின் துயரங்களைத் தீர்ப்பவராய் , பாம்பு மகிழ்ந்து ஆடும் கையினராய்க் காட்சி வழங்குகிறார் அதிகை வீரட்டனார் .

குறிப்புரை :

பரவு - வாழ்த்து . ` பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம் ` ` பாழ்த்த பிறப்பறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே ` ( தி .8 திருவா . 5.16) பத்தர் - தொண்டர் . பண்ணுடன் ஏத்தக் கங்கையைச் சடைமேல் வைத்து , தீர்ப்பார் என்று முடிக்க . நஞ்சுண்ட கறுப்பு , இரவைக் கொப்பளித்தது போலிருந்தது . இரவு கொப்பளித்தது போன்ற இருட் கண்டமும் ஆம் . ` ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் `. தி .4 ப .23 பா .6. அரவு கொப்பளித்த கையர் :- ` நாகங் கொப்பளித்த கையர் `. ? .9 பரவு ... ... பாடப் பண்ணுடன் ஏத்த என்றதால் , ` வேதத்தின் கீதம்பாடும் பண்ணவனைப் பண்ணில்வருபயனானை ` ப் பண்ணொடு கூட்டிப் பாடுதலே திருவருட் பரிசளிக்க வல்லது எனல் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 10

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

தொண்டைக்கனி அழகுவீசும் சிவந்தவாய் , துடி போன்ற இடை , கடல்போன்ற பரந்த அல்குல் , மயிர் முடிக்கும் விதங்களில் ஒன்றான கொண்டை பிராகாசிக்கும் கூந்தல் , திரண்ட வளையல்கள் எனும் இவற்றை உடைய பார்வதிபாகராய் , வண்டுகள் உண்டு மிகுதி என்று வெளிப்படுத்திய தேனைக் கோடுகளை உடைய கயல் மீன்கள் பருகத் தாம் பருகுவற்குக் கெண்டை மீன்கள் தாவிவரும் தெளிந்த நீரை உடைய கெடில ஆற்றின் கரையிலுள்ள அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் பெருமானாகக் காட்சி வழங்குகிறார் .

குறிப்புரை :

தொண்டை - தொண்டையங்கனி. செவ்வாய்க்கு உவமை. துடியிடை - உடுக்கை நடுப்போலும் இடை. பரவை - கடல். தி.4 ப.25 பா.6 பார்க்க. கொண்டை:- ஐம்பாலுள் ஒன்று. கோதை - கூந்தல். கூறு கொப்பளித்த கோதை (தி.4 ப.24 பா.5) என்றதும் ஐம்பாற் கூந்தலை உணர்த்தியதாகும். கோல்வளைபாகம்:- `கோல்வளை மாதோர் பாகம்`( ?5). வண்டு ... ... கெடிலம்:- கெடில வளம் உணர்த்திற்று. கயல் தேனைப் பருகி மாந்த நீர் கெண்டையைக் கொப்பளித்தது. தேனை வண்டு கொப்பளித்தது.
சிற்பி