திருவதிகை வீரட்டானம்


பண் :

பாடல் எண் : 1

முன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்
கண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்
பின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்
அன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானாரே , உள்ளத்திலே உமக்கு அன்பனாய் வாழமாட்டேனாய் , அடியேனுடைய இளமைக்காலமான அம்முற்பட்ட காலமெல்லாம் உம் திருவடிவைத் தியானம் செய்யாமல் அலைந்து , மூப்பு நிலையில் கணீர் என்ற ஓசை உண்டாகுமாறு இருமிக் கருதற்பாலதாகிய சிவ சிந்தனையே இல்லாது , பயனுடைய செயல்கள் செய்யாமல் , உணவு வேளைக்கு உதவுமாறு முற்பகலில் சோறு வடிக்காமல் காலம் கடத்தி அகாலமான பிற்பகலில் உண்டற்கிதமில்லாதவற்றை உலையிலிட்டு சமைக்கவும் இல்லக் கிளத்தியர் போலாகின்றேன் . உளமார்ந்த மெய்யன்பினால் வாழ இயலாதவனாகின்றேன் .

குறிப்புரை :

முன்பு - இளமையில் . இளைய காலமாகிய முன்பெலாம் . இது முதுமையிற்பாடியது . எண்பத்தொன்றாண்டிருந்த உண்மைக்கு ஈதொரு சான்று . ` விளைக்கின்ற வினையை நோக்கி வெண்மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையைப் போக முயல்கிலேன் ` ( தி .4 ப .78 பா .8) எனப் பின்னுள்ளதும் உணர்க . அப்பர் திருவுருவத்தை அருளநுபவம் மிக்க முதுமையைத் தோற்றும் வண்ணம் அமைப்பதே பொருத்தம் . மூர்த்தி :- திரிமூர்த்திக்கும் மேலான சிவமூர்த்தி . ஓடி - பெண்மயலில் விரைந்து . கண்கண - கணீல் கணீல் என்று . இருமி - இருமல் செய்து . நாளும் - அவ்விளமை கழியும் அளவும் . கருத்து அழிந்து - கருதற்பாலதாய சிவசிந்தனையே இல்லாது . அருத்தம் - பொருளே . முன் பகலிற் சமைக்காத குற்றத்தொடு . உணங்கல் (- வற்றல் ) அட்டுங் குற்றத்தையும் செய்யும் அறிவிலாப் பெண்டிரை ஒத்தேன் . கருத்தழிந்து மூர்த்தியை நினையாத குற்றத்தொடு , இளமைக் குறும்புகளைச் செய்யும் குற்றத்தையும் புரிந்தேன் . அன்புருவான உள்ளத்தேனாகி வாழும் ஆற்றல் இல்லேன் .

பண் :

பாடல் எண் : 2

கறைப்பெருங் கண்டத் தானே காய்கதிர் நமனை யஞ்சி
நிறைப்பெருங் கடலுங் கண்டே னீள்வரை யுச்சி கண்டேன்
பிறைப்பெருஞ் சென்னி யானே பிஞ்ஞகா விவை யனைத்தும்
அறுப்பதோ ருபாயங் காணேன் அதிகைவீ ரட்ட னீரே.

பொழிப்புரை :

அதிகைப் பெருமானாரே ! பெரிய நீலகண்டரே ! பிறைசூடீ , தலைக்கோலம் அணிந்தவரே ! உயிர்களைக் கோபித்துக் கவரும் காலனுக்குப் பயந்து கடல்நீரில் தீர்த்தமாடியும் நீண்ட மலை உச்சியை அடைந்து அங்குத் தவம் செய்தும் பிறப்பு , பிறப்பச்சம் என்ற இவற்றை நீக்கிக் கொள்வதற்குரிய வழியினை அறிந்தேன் அல்லேன் .

குறிப்புரை :

கறை - நஞ்சின் கறுப்பு . ` நாளென ஒன்று போற்காட்டி உயிரீரும் வாள் `. காய்தல் கதிர்த்த நமன் ; சினம் மிக்கவன் என்றுமாம் . ` பரவையிடை மூழ்கியும் ...... மலைநுழைவு புக்கியும் .... வீறு சித்தி செய்தும் ஞானம் அலது கதி கூடுமோ ` ( தாயுமானவர் . 36 ) என்றதாகக் கொண்டு , இறவாது பேரின்ப வீட்டில் அழியாத வாழ்வுறக் கடலாட்டும் மலைக்குகைத் தவமும் மேற்கொண்டேன் . இறப்பினை அஞ்சி விருத்திராசுரனைப் போலக் கடற்குள் ஒளிந்திடினும் மலை உச்சியிலேறிடினும் இறவாமை பிறவாது என்றலும் கூடும் . பிறையைச் சூடிய பெருந்தலையன் . பிஞ்ஞகா - கோலக் குழற்சடையாய் . இவை அனைத்தும் அறுப்பதோர் உபாயம் :- பிறப்பு இறப்பச்சம் முதலிய துன்பம் எல்லாம் போக்கும் வழி .

பண் :

பாடல் எண் : 3

நாதனா ரென்ன நாளு நடுங்கின ராகித் தங்கள்
ஏதங்க ளறிய மாட்டா ரிணையடி தொழுதோ மென்பார்
ஆதனா னவனென் றெள்கி யதிகைவீ ரட்ட னேநின்
பாதநான் பரவா துய்க்கும் பழவினைப் பரிசி லேனே.

பொழிப்புரை :

சான்றோர்கள் யாரேனும் தம்மைத் தலைவர் என்று குறிப்பிட்டால் அதைக் கேட்டு எம்பெருமானாருடைய அடியவராகிய தமக்கு அடியார் என்ற பெயரைத் தவிரத் தலைவர் என்ற பெயர் ஏலாது என்று நடுங்கித் தம்மைத் தலைவராகக் கருதும் தவறுகளைச் செய்ய அறியாதவராய் யாங்கள் அடியவர்க்கு அடியராய் உங்கள் திருவடிகளை வழிபடுகிறோம் என்று பதில் கூறுவர் . ஆனால் அறிவிலியான யானோ என்னைத் தலைவன் என்று நினைத்து உம்மை இகழ்ந்து அதிகை வீரட்டராகிய உம்முடைய திருவடிகளை வழிபடாது உலகியல் தீமைகளிலேயே அடியேனைக் செலுத்தும் பழந் தீவினையாகிய பரிசிலை உடையேன் .

குறிப்புரை :

திருவதிகை வீரட்டானேசுவரரே , கற்றல் கேட்டலுடைய பெரியோர்களை நோக்கி , ` நீங்கள் எங்கள் நாதனார் ` என்று சொல்லக் கேட்டலும் எப்பொழுதும் நடுங்குவர் அவர்கள் . தம்மைத் தலைவர் என்று எண்ணுதல் முதலிய குற்றங்களைச் செய்து அறிந்தவரே அல்லர் . தாம் அடிமையர் என்பதை மறவாமல் இணையடி தொழுதோம் என்றே சொல்லுவர் . அவர் நிலை அது . என் நிலையோ இது :- ஆதன் ( அறிவிலி ) நான் அவன் என்று எள்கித் தேவரீர் பாதங்களைப் பரவாது காலம்போக்கும் பண்டைத் தீவினைப் பரிசிலையுடையேன் . ஏதங்கள் - ஈண்டுப் பழவினையும் எதிர்வினையும் . ` தங்கள் மேலை ஏதங்கள் தீரநின்றார் ` ( தி .4 ப .35 பா .5) தங்களைத் தலைவரென்னக் கேட்டலும் நடுங்கும் பெற்றியராய் யானெனதென்னும் செருக்கற்று , வினையேறா வகை ஏகனாகி இறைபணி நின்று , இடைவிடாது திருவடி இணையை மறவாது தொழுதோம் என்பார் தலைவராகுந் தகுதியுடையோர் அனைவரும் . ஆதனான நான் (- அறிவிலி ). நானே நாதன் என்று எண்ணி இகழ்ந்து . நாதனாகிய நின் இணையடியை வாழ்த்தி வணங்காது கெடுகின்றேன் . இவ்வாறு செலுத்துகின்றது என் பழவினைப் பரிசு . நான் அப்பழவினைப் பரிசிலை யுடையேனாதலின் உன் இணை யடியைப் பரவுகிலேன் . பழவினைப் பரிசிலை ( ஏதங்களை ) அறியா ( இல்லா ) தவராய் எல்லாம் சிவன் என்ன நின்று உன் இணையடி களையே தொழும் சிவ புண்ணிய சீலர் ஆதலின் , பிறர் ( அடியர் ) எல்லாரும் அப்பெறலரும் பேற்றினராயுளர் .

பண் :

பாடல் எண் : 4

சுடலைசேர் சுண்ண மெய்யர் சுரும்புண விரிந்த கொன்றைப்
படலைசே ரலங்கன் மார்பர் பழனஞ்சேர் கழனித் தெங்கின்
மடலைநீர் கிழிய வோடி யதனிடை மணிகள் சிந்தும்
கெடிலவீ ரட்ட மேய கிளர்சடை முடிய னாரே.

பொழிப்புரை :

மருத நிலத்தைச் சார்ந்த வயல்களுக்கு அருகே வளர்ந்த தென்னை மட்டைகள் பிளக்குமாறு மோதிப் பரவி அவற்றின் மேல் இரத்தினங்களைச் சிதறுகின்ற கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டத்தில் விரும்பி உறையும் உயர் சடைமுடிப்பெருமான் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிய உடம்பினராய் , வண்டுகள் மொய்க்குமாறு இதழ்கள் விரிந்த கொன்றைப்பூ மாலை சேர்ந்த மார்பினராய் உள்ளார் .

குறிப்புரை :

சுடலைசேர் சுண்ணம் - சுடலைப்பொடி . மெய்யர் - திரு மேனியுடையவர் . சுரும்பு - வண்டு . படலை - கொத்து . அலங்கல் - அசைதல் . பழனம் - நன்செய் . கழனி - விளைவு உடைய பகுதி . தெங்கின் மடலைக் கெடிலநதி நீர் ஓடிக் கிழிக்க அதனிடையிருந்த மணிகள் சிந்தும் வளம் உடைய திருவீரட்டானம் . மேய - மேவிய ; விரும்பித் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள . கிளர்தல் - விளங்குதல் .

பண் :

பாடல் எண் : 5

மந்திர முள்ள தாக மறிகட லெழு நெய்யாக
இந்திரன் வேள்வித் தீயி லெழுந்ததோர் கொழுந்தின் வண்ணம்
சிந்திர மாகநோக்கித் தெருட்டுவார் தெருட்டவந்து
கந்திர முரலுஞ்சோலைக் கானலங் கெடிலத்தாரே.

பொழிப்புரை :

மந்தர மலையாகிய மந்திரத்தை உள்ளமைத்துக் கொண்டு கடலையே நெய்யாகக்கொண்டு இந்திரன் செய்த பாற்கடல் கடையும் வேள்வித் தீயின் கொழுந்தாக வெளிப்பட்ட விடத்தின் நீலநிறத்தைத் தம்மை நீலகண்டர் ஆக்கும் சித்திரத்திற்கு உரிய பொருளாகக் கருதித் தம்மால் அறிவுறுத்தப்படும் அடியவர்களுக்கு அறிவிப்பதற்காகப் பெருமான் இந்நிலவுலகிற்கு வந்து மேகங்கள் ஒலிக்கும் சோலைகளை உடைய நறுமணங் கமழும் கெடில நதிக்கரையினதாக அதிகை வீரட்டத்து உள்ளார் .

குறிப்புரை :

இந்திரன் வேள்வியாகப் , பாற்கடலைக் கடைந்ததைக் குறித்தருளினார் . அவன் மகபதி அல்லனோ ? அவன் செய்யும் அனைத்தும் மகமே போலும் . அம் மகத்துக்கு மந்திரமும் கடலும் பிறவும் உபகரணங்கள் . அவ்வேள்வித் தீயில் எழுந்த கொழுந்து நஞ்சு . அதன் வண்ணம் வெண்மை . சிந்திரம் - சிந்தூரம் ; செய்யது . சித்திரம் என்பது எதுகை நோக்கி மெலித்ததுமாம் . தெருட்டுவார் - அறிவுறுத்துவார் . தெருட்ட - அறிவுறுத்த . தெருட்டுவார் தெருட்ட - இரண்டாம் வேற்றுமைத் தொகை . ` த் ` மிகாது நின்றது . தெருட்ட வந்து கெடிலத்தார் என்க . வந்து என்பது வினைக்குறிப்புக் கொண்டது . தம் பரத்துவத்தை உணர்த்துவதே தெருட்டல் எனப்பட்டது . ( தி .7 ப .64 பா .10). தணிகை . களவு . ( தி ,4 ப .31 பா .1) பார்க்க . கந்தரம் - மேகம் . எதுகை நோக்கித் திரிந்தது . முரல - ஒலிக்க . ( மழையொலி , இடியொலி ). வேள்விக்குரிய மந்திரம் அக்கடலில் இட்டுள்ளதாகிய மந்தரமலையே ஆக நெய் அதில் எழுவதேயாக இந்திரன் செய்த ( கடல் கடைதலாகிய ) வேள்வியின் தீயில் எழுந்ததொரு கொழுந்து நஞ்சு எனலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 6

மைஞ்ஞல மனைய கண்ணாள் பங்கன்மா மலையை யோடி
மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு காதலா லினிது சொன்ன
கிஞ்ஞரங் கேட் டுகந்தார் கெடிலவீ ரட்ட னாரே.

பொழிப்புரை :

அதிகை வீரட்டனார் மைக்கு அழகு தரும் , தமக்குத் தாமே நிகரான கண்களை உடைய பார்வதிபாகராகிய தமது கயிலைமலையை நோக்கி ஓடி அதனைப் பெயர்க்க முற்பட்டு உடம்பிலுள்ள நரம்புகளும் குருதியும் சிந்த , விழுந்து நசுங்கி வேகம் தணிந்து இராவணன் கை நரம்புகளையே வீணையின் நரம்புகளாக அமைத்து அவற்றை ஒலித்துக்கொண்டு அன்பூர இனிமையாகப் பாடிய பாடலைக் கேட்டு உகந்து அவனுக்கு அருளியவர் ஆவார் .

குறிப்புரை :

மைஞ்ஞீலம் , மெய்ஞ்ஞரம்பு , கைஞ்ஞரம்பு என்பன மைந்நீலம் , மெய்ந்நரம்பு , கைந்நரம்பு என்பவற்றின் போலி . தி .4 ப .60 பா .4; ப .80 பா .5 பார்க்க . இதிலும் ஈற்றடியிற் ` கிஞ்ஞரம் ` என்றிருந்ததேயாகும் . தி .4 ப .76 பா 4 போல் ஈற்றடி எதுகை வேறுபட்டிருத்தலும் இசைதற்குரித்தே ஆயினும் , ` மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப் பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார் மெய்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாங் கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே `. ( சூளாமணி . துறவு . 60 ). என்று பாடியவாறு பாடியிருத்தலும் மறுக்கப்படாதது . மெய்ந் நரம்பு - உடலின் நரம்புகள் . உதிரம் - குருதி . பில்க - சிந்த . விசை - எடுத்த வேகம் . கைநரம்பு - யாழ் . எழுவி - இசையெழுப்பி . காதல் - பத்தி . கின்னரம் :- ` விஞ்சையர் கிந்நரம் பயில் பாடல் ` ( கந்த . திருக்கயிலாயப் . 9). கின்னர யாழ் என்றலும் உண்டு .
சிற்பி