திருமறைக்காடு


பண் :

பாடல் எண் : 1

இந்திர னோடு தேவ ரிருடிக ளேத்து கின்ற
சுந்தர மானார் போலுந் துதிக்கலாஞ் சோதி போலும்
சந்திர னோடு கங்கை யரவையுஞ் சடையுள் வைத்து
மந்திர மானார் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

மேம்பட்ட மறைக்காட்டுப் பெருமானார் இந்திரனோடு தேவர்களும் முனிவர்களும் புகழுகின்ற அழகராய், எல்லோரும் போற்றும் ஞானஒளியினராய்ச் சந்திரன் கங்கை பாம்பு என்பனவற்றைச் சடையில் வைத்தவராய், தம்மைத் தியானிப்பவரைக் காப்பவராய் உள்ளார்.

குறிப்புரை :

ந்திரனும் தேவரும் இருடிகளும் ஏத்துகின்ற. சுந்தரம். புகழ்தற்குரிய மெய்யொளி. திங்களையும் கங்கையாற்றையும் பாம்பினையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனவர். மந்திரம்:- நினைப்பவனைக் காப்பது. மாமறை - திருமறை. திருமறைக்காட்டில் எழுந்தருளிய சிவமூர்த்தியின் அழகு இந்திரன் முதலோர் ஏத்திய சிறப்பைக் குறிக்கும் வண்ணம் இருத்தலை இன்றும் உணரலாம். சென்று கண்டு. `மறைக்காடு\\\\\\\\\\\\\\\' ஆதலின், அம் மறையின் மந்திரம் ஆன உண்மை குறிக்கப் பட்டது.
துதிக்கல்:- (துதி + க் + கு + அல்). குகரச்சாரியையும் சந்தியாகிய ககரவொற்றும் தொழிற்பெயர் விகுதியாகிய அல்லும் துதி என்னும் வடசொற் பகுதியுடன் இயைந்து தொழிற்பெயர்ப் பகுபதம் ஆயிற்று. கதி, மதி, திதி, உதி முதலிய பிற வடசொற் பகுதிகளுடனும் இவ்வாறு இயைந்து ஆன சொற்கள் உள. பழந் தமிழில் இன்னோரன்னவை இல. நாதம்:- நாதித்து (திருவெங்கைக் கலம்பகம். 56) என்றாரும் உளர்.

பண் :

பாடல் எண் : 2

தேயன நாட ராகித் தேவர்க டேவர் போலும்
பாயன நாட றுக்கும் பத்தர்கள் பணிய வம்மின்
காயன நாடு கண்டங் கதனுளார் காள கண்டர்
மாயன நாடர் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

தெய்வத் தன்மையே வடிவான அத்தகைய வீட்டுலகத்தை உடைய தேவர்கள் தலைவரான மாமறைக்காடரைப் பலவாகப் பரவியுள்ள உலகப்பற்றுக்களைத் துறக்கும் பக்தர்களே! வழிபட வாருங்கள். நாடுகளையும் கண்டங்களையும் கோபிப்பனவாய பலகூறுகளாகப் பரவிவந்த ஆலகால விடத்தின் கோபத்தை மனத்துள் கொண்டு அதனை விழுங்கிய நீலகண்டராம் பெருமானார், திருமாலால் தேடப் படுபவராவார்.

குறிப்புரை :

தேயனநாடர்:- கொடைக்குரிய நாடு (பேரின்பவீடு) டையவர்; தியாநிக்கப்படும் பொருளினுடைய உயரிய நாட்டில் உறைபவர். தேயன் - தியாநிக்கப்படும் பொருள். தே - திசை. தேயன - திசைகளிலுள்ளன (வாகிய நாடுகளையுடையவர்) எனலுமாம். ஆகி என்னும் எச்சம் தேவர் என்னும் வினைக்குறிப்பைத் தழுவிற்று. பாயன நாடு - பரப்பினாலொத்த நாடு; (உலகம்) அஃது `அறுக்கும்\\\\\\\' என்றதால், ஈண்டு நாட்டுப் பற்று என்னும் பொருட்டு, உலகப் பற்றுக்களை அறுக்கும் சிவத்தொண்டர்காள், மறைக்காடனாரைப் பணிய வம்மின்.
பாயனம் (பாசனம்):- நீர்பாய்த்துகின்ற நாடு எனலும் ஆம். பாயனம் வடசொல். (ஆப்தே அகராதி: பக்: 612 பார்க்க) பாசனம்:- தி.4 ப.26 பா.9 காயன நாடு கண்டம் கதனுளார்:- நாடுகளையும் கண்டங்களையும் காய்ந்தாலன்ன கோபம் உள்ளவர். நாடு கண்டம் - நாடும் கண்டமும். புரமெரித்த வரலாறு முதலியன. காள கண்டர் - நஞ்சுண்ட திருநீலகண்டர். காயனம் (-ஒலி இசைப்போர்) நாடுகின்ற கண்டம் எனல் பொருந்தாது; `கதனுளார்` `காளகண்டர்` எனப் பின் உள்ளமையால்.மாயன நாடர்:- கரியோனது நாடுதலை யுடையவர். மாயன் - கரியன் (திருமால்). `மாயோன் மேய காடுறை யுலகம்\\\\\\\' (தொல்காப்பியம்) என்றது கொண்டு, மாமறைக்காடனார் அம் மாயோன்றன் நாடாகிய காட்டிலுள்ளார் எனல் பொருந்துமேற் கொள்க.

பண் :

பாடல் எண் : 3

அறுமையிவ் வுலகு தன்னை யாமெனக் கருதி நின்று
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளா னலிவு ணாதே
சிறுமதி யரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து
மறுமையு மிம்மை யாவார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் அழியும் இயல்பினை உடைய இவ்வுலகை நிலைபெற்றது என்று நினைத்துக் கொண்டு உலக வாழ்க்கை வழி நின்று வீணாக இல்வாழ்க்கை நடத்தி இரு வினைகளால் துன்புறுத்தப்படாத வகையில், பிறை பாம்பு கொன்றை இவற்றைச் சடையுள் வைத்த பெருமானாய், தம் அடியவர்களுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் வழங்குபவராவார்.

குறிப்புரை :

அறுமை - அறும் இயல்பு; நிலையின்மை பண்பு. இவ்வுலகு நிலையில்லாதது (அழியுந்தன்மையது). இதனை அழியாது நிலைபெறும் இயல்புடையது என்று எண்ணி நின்று, வீணிலே இல்வாழ்க்கை நடாத்தி, வினைத் தொடர்புகளால் வருத்தமுறாதே. சிவனை வழிபடு. பிறையையும் பாம்பினையும் கொன்றை மாலையினையும் பூவையும் மின்னுகின்ற செஞ்சைடையுள் வைத்து, இம்மையும் ஆவார்; மறுமையும் ஆவார். `இம்மை மறுமைவீடு\\\\\\\' என்னும் மூன்றனுள், வீடொழிய மற்றிரண்டும் எழுமையைக் குறித்தவை. எழுமையுள் இம்மை ஒன்று கழிய நின்றவை அறுமையாகும். அவ் அறுமைக்குத் துணையாவது உலகு. அது குறித்து `அறுமையிவ்வுலகு\\\\\\\' என்றார் எனலுமாம். வெறுமை:- வறுமையின் முதலுயிர் அகரம் எகரமாயது. பயன் இலாததும் ஆம். `அறுமை ... ... இருமை\\\\\\\' (கல்லாடம். 11, 18).

பண் :

பாடல் எண் : 4

கால்கொடுத் திருகை யேற்றிக் கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
தோல்படுத் துதிர நீராற் சுவரெடுத் திரண்டு வாசல்
ஏல்வுடைத் தாவ மைத்தங் கேழுசா லேகம் பண்ணி
மால்கொடுத் தாவி வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் கால்களைக் கொடுத்து கைகளை ஏற்றி எலும்புக் கழிகளை நிரைத்து மேலே புலாலை வேய்ந்து குருதிநீரைக் கலந்து தோலை தட்டிச் சுவரை வைத்து இரண்டு வாயில்களையும் ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

குறிப்புரை :

1. கால்கொடுத்தல், 2. கையேற்றல், 3. கழிநிரைத்தல், 4. வேய்தல், 5. சுவர் எடுத்தல், 6. வாசல் அமைத்தல், 7. சாலேகம் பண்ணல் (தி.4 ப.44 பா.2) ஆகிய செயல்கள் வீடு கட்டுதற்கண் நிகழ்வன. அவ்வாறே இவ்யாக்கையாகிய வீடு கட்டுதற்கண்ணும் அச் செயல்கள் நிகழ்கின்றன. இருகால் கொடுத்தும் இருபாலும் இருகை ஏற்றியும் என்புகளாகிய கழிகளை நிரைத்தும், இறைச்சியாகிய கூரை வேய்ந்தும், உதிரமாகிய நீரால் தோல் படுத்துச் சுவர் எடுத்தும் பொருத்தம் உடையதாக இரண்டு வாசலை அமைத்தும், அச் சுவர்களில் ஏழு பலகணிகளை வைத்தும் ஒரு வீடு கட்டி, அதில் ஆவியை வாழவைத்து, அதற்கு வேண்டிய செல்வமாக மால் (மயக்கம், காற்று, வேட்கை) கொடுத்தார் மாமறைக்காடனார். உலகை நோக்கி மயக்கம்; உடலை நோக்கிக் காற்று; உயிரை நோக்கி வேட்கை; கொடுத்த மறைக்காடனார் அருளை நோக்கி (மால்-) அன்பு. `மாலும் காட்டி வழிகாட்டி வாராவுலக நெறி ஏறக் கோலம் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே\\\\\\\'. (தி.8 திருவாசகம். 643) சாலேகம்:- `கொய் தளிர்த் தண்டலைக் கூத்தப் பெருஞ்சேந்தன், வைகலும் ஏறும் வயக்களிறே - கைதொழுவல், `காலேக வண்ணனைக் கண்ணாரக் காண எம் சாலேகம் சார நட\\\\\\\' (முத்தொள்ளாயிரம். நன்னூல். 397. சங்கரநமச்சிவாயருரை).

பண் :

பாடல் எண் : 5

விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி யோதப்
பண்ணினார் கின்ன ரங்கள் பத்தர்கள் பாடி யாடக்
கண்ணினார் கண்ணி னுள்ளே சோதியாய் நின்ற வெந்தை
மண்ணினார் வலங்கொண் டேத்து மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

நிலவுலக மக்கள் நகரையே வலம் வந்து போற்றும் மகிமையுள்ள திருமறைக்காட்டுப் பெருமான் விண்ணுலகில் உளரேனும் விண்ணினும் மேம்பட்டவர். உலகம் வேதத்தை விரும்பி ஓதப்பண்ணியவர். பத்தர்கள் இசைப்பாடல்களைப் பாடியாடத் திருவுளம் பற்றியவர். அகக்கண்ணினுள்ளே ஞானவொளியை எய்தி திகழும் எம் தலைவரும் அவராவார்.

குறிப்புரை :

விண்ணிலுள்ளார். விண்ணினும் மேற்பட்ட நிலையவர். வேதங்களை விரும்பி ஓதப் பண்ணியவர். பத்தர் (- தொண்டர்)கள் கின்னரங்களைப் பாடி ஆடப் பண்ணினவர். வேதங் களை விரும்பி ஓதக் கின்னரங்களைப் பண்ணினார் எனலுமாம். கின்னரங்கள்:- `கின்னரங் கேட்டுகந்தார்\\\\\\\' (தி.8 ப.28 பா.6). இசையின் குணம் அகுணம் இரண்டும் அறிவதொரு பறவை; கின்னரர்கள். ஆடக் கண்ணினார் எனின், ஆடத் திருவுளங் கொண்டார். கண்ணல் - கருதல். கண்ணினுள்ளே சோதியாய் நிற்றல்:- `கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய்\\\\\\\'. மண்ணினார் - மண்ணுலகில் வாழ்பவர். வலம் கொண்டு - வலமாகச் சுற்றி வழிபட்டு. (தி.4 ப.43 பா.4) `விண்ணினார் ...... கண்ணின்\\\\\\\':௸ ப.35 பா.4

பண் :

பாடல் எண் : 6

அங்கையு ளனலும் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார்
தங்கையில் வீணை வைத்தார் தம்மடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கை யோடு திகழ்தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் பார்வதி பாகராய், உள்ளங்கையில் தீயையும், ஒரு கையில், வீணையையும் வைத்தார். அறுவகைச் சமயங்களைப் படைத்து அடியவர்கள் தம் திருவடிகளை வழிபடுமாறு செய்தவராவார். விளங்குகிற சடையில் சந்திரனைக் கங்கையோடும் வைத்தவர் ஆவார்.

குறிப்புரை :

அங்கை - அழகியகை. அகங்கை. அனல் - தீ. அறுவகைச் சமயம்:- `ஒத்தாறு சமயங்கட்கு ஒரு தலைவன்\\\\\\\' (தி.1 ப.131 பா.1). `இருமூன்று சமயங்களவையாகிப் பின்னை அருள் செய்த பிறை யாளன்\\\\\\\'. (தி.2 ப.29 பா.5) `சமயமவை ஆறினுக்கும் தலைவன்\\\\\\\' (தி.6 ப.65 பா.7) `அறுவகைச் சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆரருள்புரிந்து\\\\\\\' (தி.7 ப.55 பா.9) தம் கையில் வீணை வைத்தார்:- தி.4 ப.30 பா.1 பார்க்க. தம் அடி பரவ - தம் திருவடி ஞானத்தை வாழ்த்த. திகழ்தரல் - விட்டுவிட் டொளிர்தல். திங்கள், கங்கை, மங்கை:- அங்கை:- தி.4 ப.38 பா.1 பார்க்க.

பண் :

பாடல் எண் : 7

கீதராய்க் கீதங் கேட்டுக் கின்னரந் தன்னை வைத்தார்
வேதராய் வேத மோதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய் நட்ட மாடி யிட்டமாய்க் கங்கை யோடு
மாதையோர் பாகம் வைத்தார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் பார்வதி பாகராய், கங்கை யிடம் விருப்பம் உடையவராய், இசைவடிவினராய்ப் பாடலைக் கேட்டு மகிழும் இசை உணர்வை உலகுக்கு வழங்கியவராய், வேத வடிவினராய், வேதம் ஓதுதலால் ஏற்படும் ஞான ஒளியை வழங்குபவ ராய், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் ஆதிகாரணராய்க் கூத்து நிகழ்த்துபவ ராய் உள்ளார்.

குறிப்புரை :

கீதர் - பாட்டுடையர்; பாடுமவர். கீதம் - பாட்டு. கின்னரம் - இசை; தி.4 ப.28 பா.6; ப.33 பா.5 ப.38 பா.9. வேதர் - வேதமுதல்வர். வேதம் ஓதி விளங்கிய சோதியாவது சிவஞானப்ரகாசம். ஏதர் - காரணர். ஏது - காரணம். நட்டம் - திருக்கூத்து. இட்டம் - விருப்பம் (இஷ்டம்). இட்டமாய் வைத்தார். இட்டமாய் ஆடி வைத்தார் என்றியைத்தல் சிறவாது. கீதரானது `ஏழிசையாய்\\\\\\\' நின்ற நிலை. கீதங்கேட்டது:- தும்புரு, நாரதர் அசுவதரர் கம்பளதரர் பாடிய இசை இராவணன் சாமகீதம், நால்வர் தமிழ் முதலியவற்றைக் கேட்டல். கின்னரம் வைத்தல்:- ஏழிசையமைதியையும் அதன் வளர்ச்சியையும் அதனால் எய்தும் இன்பத்தையும் தோற்றி நிலைபெறச் செய்தல். `வேதனைமிகு வீணையில் மேவிய கீதனை\\\\\\\' (தி.5 ப.61 பா.4).

பண் :

பாடல் எண் : 8

கனத்தினார் வலியு டைய கடிமதி லரண மூன்றும்
சினத்தினுட் சினமாய் நின்று தீயெழச் செற்றார் போலும்
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம்மடி பரவு வார்க்கு
மனத்தினுண் மாசு தீர்ப்பார் மாமறைக் காட னாரே. 

பொழிப்புரை :

மாமறைக் காடனார் செருக்குற்ற அசுரர்களுடைய மும்மதில்களையும் கோபத்தின் கோபமாய்க் காட்சி வழங்கித் தீக்கு இரையாகுமாறு அழித்தவர்! உலகச் செல்வத்தின் பற்றுக்களை விடுத்துத் தம் திருவடிகளை முன்நின்று போற்றும் அடியார்களின் மனத்திலுள்ள களங்கங்களை எல்லாம் போக்குபவர்.

குறிப்புரை :

கனத்தினார் - துன்பம் விளைப்பதிற் பெரியர். அரணம் - காவற்கோட்டை. (திரிபுரம்). `சினத்தின் உட்சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார்\\\\\\\' என்றதால், முப்புர தகனத்திற்கு ஏதுவின் இன்றியமையாமை புலப்படும். படவே மும்மலத்தையும் நீக்குவதில் எல்லாரும் அந்நிலையை எய்துதல் வேண்டும் என்பதாம். `தனம்\\\\\\\' ஈண்டுப் பொருட்பற்று. தவிர்ந்து - நீங்கி. தம் அடி:- மறைக் காடனார் திருவடி. பரவுவார் - வாழ்த்துவார். `பரவுவார் இமையோர்கள்\\\\\\\'. மனத்தின் உள் மாசு:- மனத்தின் அகத்துக் குற்றம். உள் ஏழனுருபுமாம். மனத்தின் அகத்துக் குற்றம் மனத்தின் புறத்துக் குற்றம் என்று இரண்டுமுண்டு, முன்னது அதன் உள் நிகழ்வது. பின்னது அதன் வெளியில் அம் மனத்தால் நிகழ்வது. `உள் மாசுகழுவது நீறு என்றே உபநிடதம் உரைக்கும்\\\\\\\' (திருவிளையாடல்). `திருக்குறும் அழுக்காறு அவாவொடு வெகுளி செற்றம் ஆகிய மன அழுக்கைத் தியான மென்புனலால்; பொய்புறங் கூறல் தீச்சொல் என்கின்ற வாய் அழுக்கை அருட்கிளர் நினது துதி எனும் புனலால்; அவத்தொழில் என்னும் மெய் அழுக்கை அருச்சனை என்னும் புனலினால் கழுவா அசுத்தனேன் உய்யும் நாள் உளதோ? ... ... ஈசனே மாசிலாமணியே\\\\\\\' என்ற (சிவப்பிரகாசர் - நெடுங்கழிநெடில் 6) பாடலில் அவ் விரண்டும் அறிக. (மறு + து = மறுது, மறுசு, மாசு, மரூஉ.)

பண் :

பாடல் எண் : 9

தேசனைத் தேசன் றன்னைத் தேவர்கள் போற்றி சைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்
காசினைக் கனலை யென்றுங் கருத்தினில் வைத்த வர்க்கு
மாசினைத் தீர்ப்பர் போலு மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

மாமறைக் காடனார் ஒளி வடிவினராய், எல்லா உலகங்களையும் உடையவராய் உள்ளார். அவரை நறுமணப் பொருள்களைக் கொண்டு வழிபடும் அடியார்களே! நாள்தோறும் வணங்குங்கள். பொன்போல ஒளி வீசுபவராய்க் கனல் போல மாசுகளை எரித்து ஒழிப்பவராய் உள்ள அப்பெருமானாரை என்றும் தியானிப்பவருடைய மாசுகளை அவர் அடியோடு போக்குபவராவார்.

குறிப்புரை :

தேசன் - ஒளிவடிவினன்; தேசு - ஒளி, திசையினன், தேஎம் - திசை, தே + அம் = தேயம், தேசம். காலதேச வர்த்தமானம் என்றாற்போல வடசொல்லுமாம். வாசனை செய்தல்:- நறும்புகை, நறுமலர், நறுநீர் முதலியன கொண்டுவழிபடல். வைகலும் - காலைமாலை இரண்டனிலும். வைகு - இரவு. `நெய்யுமிழ் சுடரிற் கால் பொரச் சில்கி வைகுறு மீனிற்றோன்றும்\\\\\\\' (அகம். 17) `வைகுறு மீனிற் பையத் தோன்றும்\\\\\\\' (பெரும்பாண். 318). வைகறை - இரவு அறும் வேளை. காசு - பொன். `தேனைப் பாலைத் திகழொளியை\\\\\\\' (தி.6 ப.1 பா.1). கருத்தினில் வைத்தல்:- `நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்\\\\\\\' என்றதிற் செயப்படுபொருள் நெஞ்சம். இதில் மறைக்காடனார் கருத்திற் போலக் காட்டில் மறைந்தவர். மாசு - மும்மலக்குற்றம்.

பண் :

பாடல் எண் : 10

பிணியுடை யாக்கை தன்னைப் பிறப்பறுத் துய்ய வேண்டில்
பணியுடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றி னாலே
துணிவுடை யரக்க னோடி யெடுத்தலுந் தோகை யஞ்ச
மணிமுடிப் பத்தி றுத்தார் மாமறைக் காட னாரே.

பொழிப்புரை :

கயிலையைப் பெயர்த்து அப்புறப்படுத்தலாம் என்ற துணிவினை உடைய இராவணன் விரைந்து சென்று கயிலையைப் பெயர்க்க முற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அவன் தலைகள் பத்தனையும் நசுக்கியவர் மாமறைக் காடனார், பலபற்றுக் களையும் உடைய இவ்வுடல் தொடர்புக்கேதுவான பிறவிப் பிணியைப் போக்கி ஒழிக்கக் கருதினால், தம் பணிவைப் புலப் படுத்தலுக்கு உரிய இறை தொண்டினை மேற்கொண்டு அடியவர்கள் விருப்பத்தோடு மாமறைக்காடனாரை வழிபடுங்கள்.

குறிப்புரை :

பிணியுடையாக்கை:- துன்பத்திற்கே கொள்கலம் என்னும் இவ்வுடல், துன்பம் விளைக்கும் பலவற்றுள் ஒன்றாய பிணையையுடையது என்று அறிவரேல், யாக்கையெடுத்தலாகிய பிறவியை அறுக்க முயல்வர். அதனை அறுத்து உய்ய வேண்டில், பக்தர்களுக்குப் பற்றுவைத்துச் செய்யும் அடிமைத் திறத்தால் அறுத் துய்யலாம் என்று வருவித்து வினை முடிவு செய்க. இத் திருப்பாடலில் விளங்காத சொல் ஒன்றுமின்றெனினும், முன்னீரடிக்குப் பொருட் பொருத்தமும் அதனொடு பின்னீரடிப் பொருட்டொடர்பும் புலப் பட்டில. பற்றினாலேதான் உய்யலாம் என்று முற்று வினை வருவித் துரைக்க. மணி முடிப்பத்தும். பத்து:- தலைகட்கு ஆகுபெயர்.
சிற்பி