திருநெய்த்தானம்


பண் :

பாடல் எண் : 1

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.

பொழிப்புரை :

கூற்றுவன் கீழே விழுமாறு அவனை உதைத்த வீரக்கழலணிந்த திருவடிகள் இரண்டும் என்தலைமேல் இருத்தலைப் பெற்றேன் . ஆதலின் மிகச் சிறப்பாகக் காட்சிவழங்குகின்ற அழகிய நெய்த்தானத் திருப்பதியின் குளிர்ந்த பொழில்களிடையே அமைந்த கோயிலில் விரும்பி உறைகின்ற நீலகண்டனே ! தற்போதம் அற்று நின்போதத்தால் தியானிக்கும் வகையில் உன்னைத் தியானிக்கின்றேன் .

குறிப்புரை :

காலனை வீழச் செற்ற கழலடி :- காலின் கீழ்க் காலன்றன்னைக் கடுகத்தான் பாய்ந்து ` காற்றனார் காலற் காய்ந்து `. ( தி .4 ப .36 பா .6,8) காலனைச் செற்ற கழலடி யிரண்டும் என் மேலனவாகியிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற . ( தி .4 ப .35 பா .9) கோலம் - அழகு , குளிர் பொழிற் கோயில் - குளிர்ந்த சோலைக்குள் இருக்கும் திருக்கோயில் . மேய - மேவிய ; விரும்பி எழுந்தருளிய . நீலம் வைத்த அனைய கண்ட - நீல நிறத்தை வைத்தாற்போன்ற நஞ்சுண்டு உட்புகாது நிறுத்திக் காட்டுஞ் சீகண்டனே . நினைக்குமா - தற்போதம் அற்று நின் போதத் தால் நினைக்குமாறு .

பண் :

பாடல் எண் : 2

காமனை யன்றுகண் ணாற் கனலெரி யாக நோக்கித்
தூமமுந் தீபங் காட்டித் தொழுமவர்க் கருள்கள் செய்து
சேமநெய்த் தான மென்னுஞ் செறிபொழிற் கோயின் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த வாறே.

பொழிப்புரை :

மன்மதனை ஒரு காலத்தில் நெற்றிக்கண்ணால் நெருப்பாகப் பார்த்து அழித்து , நறும்புகையும் தீபமும் காட்டித் தொழும் அடியவர்களுக்கு அருள்கள்செய்து , எல்லா உயிர்களுக்கும் பாதுகாவலைத் தரும் சோலைகளால் சூழப்பட்ட நெய்த்தானம் என்னும் இருப்பிடத்தில் பொருந்தியுள்ள சிவபெருமானைத் தியானிக்கும் அடியேனுடைய மனம் நல்வாழ்வுக்கு உரிய செய்தியைத் தியானித்த செயல் போற்றத்தக்கது .

குறிப்புரை :

காமனை - மன்மதனை . அன்று சிவபிரான் யோகிருந்த காலத்தில் , கண்ணுதல் நெற்றி (த்தீ)க் கண்ணால் , கனல் எரி - கனலும் எரி , தூமம் - புகை , தீபம் - திருவிளக்கு , காட்டி :- தூப தீபங்களை , பூசிக்கப் பெறும் பரமேசுவர சந்நிதியிற் சிவாகம விதிப்படி அசைத்துக் காணச்செய்து . தொழுமவர் :- வழிபடும் அடியார் . சேமம் - காவல் . வாமன் - சிவபிரான் .

பண் :

பாடல் எண் : 3

பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.

பொழிப்புரை :

பிறைதங்கிய சடையின்மேலே கங்கைதங்குமாறு வைத்த எங்கள் மேம்பட்ட தலைவனாய் , பல ஊழிகளின் வடிவினனாய் , பலசோலைகளாலும் சூழப்பட்ட நெய்த்தானமாகிய அவன் உகந்தருளும் திருப்பதியைக் குறையிரந்து வேண்டிக் கொள்ளும் திருவடித்தொண்டர்களுக்கு இளையவனாகிய எம்பெருமான் அடைவதற்கு எளியவனாய் உள்ளான் .

குறிப்புரை :

பிற - பிறை ; பிறத்தலுடையது . பிறைதருசடை - பிறையைத் தரப்பெற்ற சடை . பிறை இடப்பொருள் ( தானி ). சடை இடம் ( தானம் ). உறைதரல் - தங்குதல் . உறு - உறை . நிறு - நிறை . குறு - குறை . என முதனிலை ஐஉறல் உணர்க . குறைதரும் அடியவர் - குறையிரந்து வேண்டிக்கொள்ளும் திருவடித் தொண்டர் . ` நாளும் மிகும் பணிசெய்து குறைந்தடையும் நன்னாளில் ` ( தி .12 பெரிய . அப்பர் 45) ` இல்வாழ்வு பெறத்தரு சூலையினுக்கு எதிர்செய் குறை என் கொல் எனத்தொழுதார் ` ( தி .12 பெரிய . அப்பர் 73) என்புழிப்படும் நன்றியுமாம் . சிவ . போ . மாபாடியம் . சூ . 12 வெண்பா (` தன்னை அறிவித்து `) உரையில் உள்ளதுணர்க .

பண் :

பாடல் எண் : 4

வடிதரு மழுவொன் றேந்தி வார்சடை மதியம் வைத்துப்
பொடிதரு மேனி மேலே புரிதரு நூலர் போலும்
நெடிதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மேவி
அடிதரு கழல்க ளார்ப்ப வாடுமெம் மண்ண லாரே.

பொழிப்புரை :

சிள்வீடு என்ற வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ நிலைபெற்ற நெய்த்தானத்தில் விரும்பி உறைந்து திருவடிகளில் அணிந்த கழல்கள் ஒலிக்குமாறு கூத்து நிகழ்த்தும் எம் மேம்பட்ட தலைவர் காய்ச்சி வடிக்கப்பட்டுக் கூரிதாக்கப்பட்ட மழுவைக் கையிலேந்தி , நீண்ட சடையிலே பிறையை அணிந்து திருநீறு அணிந்த மார்பிலே பல நூல்களை முறுக்கி அமைக்கப்பட்ட பூணூலை அணிந்தவராவார் .

குறிப்புரை :

வடிதரு மழு - வடித்துக் கூரியதாக்கிய மழுப்படை . வார் ( சடை ) - வார்ந்த சடை ; நீள் சடையுமாம் . பொடி தருமேனி - பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறு `. புரிதரு நூலார் - ஒன்பான் கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் ` அணிந்தவர் . நெடி - சிள்வண்டு , பொழில்களின் அடை , அடிதரு கழல் - திருவடியிற் பூட்டிய வீரக் கழல் , ஆர்ப்ப - ஒலிக்க . அண்ணலார் - சிவனார்க்கு இடுகுறிப் பெயர் .` ஆடல் மேவிய அண்ணலார் ` ( தி .12 பெரிய . ஏயர்கோன் 98)

பண் :

பாடல் எண் : 5

காடிட மாக நின்று கனலெரி கையி லேந்திப்
பாடிய பூதஞ் சூழப் பண்ணுடன் பலவுஞ் சொல்லி
ஆடிய கழலர் சீரா ரந்தணெய்த் தான மென்றும்
கூடிய குழக னாரைக் கூடுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

கையில் ஒளிவீசும் நெருப்பை ஏந்திச் சுடுகாட்டை இடமாகக் கொண்டு பாடுகின்ற பூதங்கள் தம்மைச் சூழப் பண்ணோடு பல பாடல்கள் பாடி ஆடிய திருவடிகளை உடையவராய்ச் சிறப்புமிக்க அழகிய குளிர்ந்த நெய்த்தானத்தில் எப்பொழுதும் உறைகின்ற இளையவராகிய எம்பெருமானை அடையும் திறத்தை அறியாது இருக்கின்றேனே !

குறிப்புரை :

காடு இடம் ஆக நின்று ஆடிய கழலர் . கனல் எரி ஏந்தி ஆடிய ; பாடிய பூதம் சூழ ஆடிய ; பண்ணுடன் பலவும் சொல்லி ஆடிய ; சீரார் - சீருடையார் . சீர் ஆர் நெய்த்தானம் எனலும் பொருந்தும் . அம் - அழகு , தண் - குளிர்ச்சி , என்றும் கூடிய - எப்பொழுதும் வீற்றிருந்தருளும் . குழகனார் - அழகனார் , இளமையர் . ` குழகராய் இள மடந்தையர்க்கு உருகுவோர் ` ( பாரத . சூதுபோர் . 66 ) என்றலாற் காளையர் என்னும் பொருட்டுமாம் . கூடும் ஆறு - சிவயோக நெறி .

பண் :

பாடல் எண் : 6

வானவர் வணங்கி யேத்தி வைகலு மலர்க டூவத்
தானவர்க் கருள்கள் செய்யுஞ் சங்கரன் செங்க ணேற்றன்
தேனமர் பொழில்கள் சூழத் திகழுநெய்த் தான மேய
கூனிள மதியி னானைக் கூடுமா றறிகி லேனே.

பொழிப்புரை :

தேவர்கள் நாடோறும் வணங்கித்துதித்து மலர்களை அருச்சிக்க , அவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கும் நன்மை செய்பவனாய் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய காளையை உடையவனாய் , வண்டுகள் விரும்பித் தங்குகின்ற சோலைகள் நாற் புறமும் சூழ விளங்கும் நெய்த்தானத்தில் விரும்பி உறைகின்ற , வளைந்த பிறை சூடியபெருமானைக் கூடும் திறத்தை அறியாது உள்ளேனே !

குறிப்புரை :

வானவர் - விண்ணோர் பேரின்ப வீட்டினர் . வைகலும் - நாள்தோறும் . வைகுறு :- விடியற்பொழுதில் வழிபடல் வேண்டு மென்பது குறித்து நின்றது , வழிபாட்டிற்குரிய சிறந்த பொழுது அதுவே யாகும் . சிவாகம விதியிற்காண்க . மலர்கள் தூவி வழிபட்டவர்க்குச் சங்கரன் செய்வன எல்லையுட்படாதன ஆதலின் ` அருள்கள் ` என்று பன்மையிற் கூறலாயிற்று . தான் - சங்கரனைக் குறித்து நின்ற படர்க்கை யொருமைப் பெயர் . அசையுமாம் ` தான் அலாது உலகம் இல்லை ` ( தி .4 ப .40 பா .1) ` தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன் ` ( தி .6 ப .98) ` தங்கோல நறுங்கொன்றைத் தார் அருளாது ஒழிவானோ ` ( தி .4 ப .12 பா .6) என்னும் இடத்தில் ` தான் ` ` தன் ` இரண்டும் எதுகை நோக்கிய திரிபாதல் உணர்க . சங்கரன் - நலன் நல்குவான் . ` செங்கண் ஏற்றன் ` ` செங்கண் மால்விடை ` யினன் . தேன் அமர் - தேன் பொருந்திய ; வண்டுகள் விரும்புகின்ற . கூன் இளமதியம் . வளைந்த பிறை .

பண் :

பாடல் எண் : 7

காலதிர் கழல்க ளார்ப்பக் கனலெரி கையில் வீசி
ஞாலமுங் குழிய நின்று நட்டம தாடு கின்ற
மேலவர் முகடு தோய விரிசடை திசைகள் பாய
மாலொரு பாக மாக மகிழ்ந்தநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

திருமாலைத் தம் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டு மகிழ்ந்த நெய்த்தானப் பெருமானார் காலிலே அசைகின்ற கழல்கள் ஒலியெழுப்ப , ஒளிவீசுகின்ற தீயினைக் கையில் வைத்து வீசிக்கொண்டு தரையில் பள்ளம் தோன்றவும் , விரிந்த சடை வானத்தை அளாவ எட்டுத் திசைகளிலும் பரவவும் கூத்து நிகழ்த்தும் மேம் பட்டவராவார் .

குறிப்புரை :

கால் அது :- அது சுட்டுப் பெயர் அன்று . முதனிலைப் பொருளே தனக்கும் உரியதாக நிற்பது . ஞாலம் - மண்ணுலகம் . ஈண்டு ஆடநின்ற நிலம் குறித்தது . குழிய - குழியடைய , பள்ளமுற . நட்டம் - திருக்கூத்து . இது தமிழ்ப் பெயர் , வடசொற் சிதைவு அன்று . கொட்டம் ( கொள் + து + அம் ) வட்டம் ( வள் + து + அம் ) போல்வது . மேலவர் - விண்ணவர் மால் ஒரு பாகம் :- ` இடமால் தழுவிய பாகம் ` ( தி .4 ப .2 பா .4). ` மாலுங்கொப்பளித்த பாகர் ` ( தி .4 ப .24 பா .7) ` மறிகடல் வண்ணன் பாகா ` ( தி .4 ப .62 பா .8) ` பாகம் மாலுடையர் போலும் ` ( தி .4 ப .66 பா .8). ` திருமாலோர் பாகன் ` ( தி .4 ப .77 பா .5) அரியலாற்றேவி யில்லை ஐயன் ஐயாறனார்க்கே `.

பண் :

பாடல் எண் : 8

பந்தித்த சடையின் மேலே பாய்புன லதனை வைத்து
அந்திப்போ தனலு மாடி யடிகளை யாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயி னுள்ளார்
சிந்திப்பார் சிந்தை யுள்ளார் திருந்துநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

முடிக்கப்பட்ட சடையின்மேலே கங்கையைச் சூடி மாலை நேரத்தில் தீயில் கூத்தாடும் பெருமானார் திருவையாற்றை அடைந்தவராய்த் தம்மைக் கும்பிடுபவராய் வணங்கி வழிநின்று வாழ்த்துபவராகிய அடியவர்களின் நாவில் நின்று , தியானம் செய்பவர் மனத்தில் உறைந்து , சிறந்த நெய்த்தானத்தில் நிலையாகத் தங்கி விட்டார் .

குறிப்புரை :

பந்தித்த - கட்டிய . புனலது :- ` காலது ` ( தி .4 ப .37 பா .7) என்பதற்கு உரைத்ததுணர்க . அந்திப்போது - மாலைவேளை . அனலும் - தீயிலும் . அடிகள் - கடவுள் . வந்திப்பார் - வந்தனை புரிபவர் ( வாயின் உள்ளார் ). வணங்கி நின்று வாழ்த்துவாருடைய வாயின் உள்ளார் . சிந்திப்பாருடைய சிந்தையினுள்ளார் . சிந்தித்தல் நினைப்பு . வாழ்த்துதல் உரையொலி . வந்தித்தல் மெய்த்தொழில் என முப் பொறிக்கும் உரியன உணர்த்தப்பட்டன , மூன்றும் ஒருவழிப் படாதது வழிபாடன்று . ( சிவஞான சித்தியார் சூ . 1 ). ` திருந்து ` என்பது நெய்த் தானத்திற்கு அடை நெய்த்தானனார்க்கு அன்று . திருந்திய இடம் .

பண் :

பாடல் எண் : 9

சோதியாய்ச் சுடரு மானார் சுண்ணவெண் சாந்து பூசி
ஓதிவா யுலக மேத்த வுகந்துதா மருள்கள் செய்வார்
ஆதியா யந்த மானார் யாவரு மிறைஞ்சி யேத்த
நீதியாய் நியம மாகி நின்றநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

ஆதியும் அந்தமும் ஆகியவராய் , எல்லோரும் விரும்பித் துதிக்க , நீதியாகவும் தவம் முதலிய வகுக்கப்பட்ட நெறிகளாகவும் , நிலைபெற்றிருக்கும் திருநெய்த்தானப் பெருமான் ஒளியாகவும் , அவ்வொளியை வெளிப்படுத்தும் சூரியன் முதலிய சுடர்ப் பொருள்களாகவும் ஆயினவராய் , திருநீற்றைச் சந்தனமாகப் பூசி வேதம் ஓதி , நன்மக்கள் தம்மைத் துதித்தலால் தாம் அவர்களுக்கு அருள் செய்பவராவார் .

குறிப்புரை :

சோதி - ஒளி . சுடர் - முச்சுடர் , முச்சுடர்க்கண்ணும் நின்று ஒளிரும் முதற் பொருளே சோதி , அச்சோதிக்கும் இடம் முச்சுடர் . ` அருக்கனாவான் அரனுரு ` ( தி .5. ஈற்றுத் திருப்பதிகம் 8). ` நிலம் நீர் நெருப்புயிர் நீள்விசும்பு . நிலாப் பகலோன் புலனாய மைந்தனோடு எண்வகையாய்ப் புணர்ந்து நின்றான் ` ( தி .8 திருவாசகம் ). என்பனவற்றால் , சுடருளும் புணர்ந்து நின்றவன் முதல்வன் . புணரும் இடம் சுடர் எனல் இனிது விளங்கும் . ` சுண்ணவெண் சாந்து ` ` சுண்ணவெண் சந்தனச்சாந்தும் ` ( தி .4 ப .2 பா .1) ` சுண்ண வெண்பொடி ` ( தி .5 ப .10 பா .9). ` சுண்ணத்தர் சுடு நீறுகந்தாடலர் ` ( தி .5 ப .87 பா .7). உலகம் - உயர்ந்தோர் , உலகம் வாய் ஓதி ஏத்த என்றும் தாம் உகந்து அருள்கள் செய்தார் என்றும் கொள்க . ஓதி - ஓதத்தை யுடையது ; கடல் . வாய் - இடம் ; ஓதிவாயுலகம் - கடலிடைப்பட்ட உலகம் எனலும் ஆம் . ஆதியும் ( முதலும் ) அந்தமும் ( முடிவும் ) ஆனார் . யாவரும் - எச் சமயத்தவரும் . நீதி - நன்னெறி ; நியாயம் ; முறைமை . நியமம் - நிச்சயம் . தவம் முதலிய பத்துமாம் . ( சைவ வினாவிடை 29 ) ` நீதியானை நியம நெறிகளை ஓதியானை ` ( தி .5 ப .94 பா .6) என்றதால் இது விளங்கும் .

பண் :

பாடல் எண் : 10

இலையுடைப் படைகை யேந்து மிலங்கையர் மன்னன் றன்னைத்
தலையுட னடர்த்து மீண்டே தானவற் கருள்கள் செய்து
சிலையுடன் கணையைச் சேர்த்துத் திரிபுர மெரியச் செற்ற
நிலையுடை யடிகள் போலு நின்றநெய்த் தான னாரே.

பொழிப்புரை :

இலைவடிவமாக அமைந்த வேலினைக் கையில் ஏந்திய இராவணனைத் தலை உட்பட உடல் முழுதையும் நசுக்கிப் பின் மீண்டும் அவனுக்குப் பல அருள்களைக் கொடுத்து , வில்லிலே அம்பினை இணைத்து மும்மதில்களையும் அழியுமாறு வெகுண்ட , என்றும் அழியாத நிலையை உடைய பெருமான் நிலைபெற்ற திருநெய்த்தானத் திருப்பதியை உகந்திருப்பவராவார் .

குறிப்புரை :

இலையுடைப்படை :- ` ஒளிறு இலை எஃகு ` - ` விளங்கிய இலையையுடைய வேல் `. ( புறம் . 26 ) ` திருந்திலை நெடுவேல் ` - ` திருந்தின இலையையுடைய நெடியவேல் ` ( புறம் . 180 ) ` நச்சிலைவேல் ` - ` நஞ்சு தோய்த்த அலகையுடைய வேல் ` ( சிந்தாமணி . 2209 ). அவற்கு - அ ( வ் விலங்கையர் தலை ) வனுக்கு . தான் ( அருள்கள் ) செய்து . சிலை - மேருவில் . கணை - மால்கணை . நிலை - அழியாத நிலைமை .
சிற்பி