திருக்கச்சியேகம்பம்


பண் :

பாடல் எண் : 1

நம்பனை நகர மூன்று மெரியுண வெருவ நோக்கும்
அம்பனை யமுதை யாற்றை யணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் டிங்கட் செஞ்சடைக் கடவு டன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச் சிந்தியா வெழுகின் றேனே.

பொழிப்புரை :

நம்மால் விரும்பப்படுபவனாய் , மும்மதில்களும் தீக்கு இரையாகி வெறுவும் தன்னால் நோக்கும் நோக்காகிய அம்பினை உடையவனாய் , அமுதனாய் பேரின்ப பெருக்காறாய் , அழகிய சோலையை உடைய காஞ்சிமாநகரில் ஒற்றை மாமரத்தடியில் உறைபவனாய் , ஒளி வீசும் கிரணங்களை உடைய பிறையைச் சிவந்த சடையில் அணிந்த கடவுளாய்ச் செம்பொன்னும் பவளத்தூணும் போன்றுள்ள சிவபெருமானைத் தியானிப்பதனால் யான் உள்ளக் கிளர்ச்சி உடையேன் ஆகின்றேன் . ( ஆறு - நெறி எனலுமாம் .)

குறிப்புரை :

கம்பனும் அம்பனும் அமுதும் ஆறும் ஏகம்பனும் கடவுளும் பொன்னும் பவளத் தூணும் ஆகிய சிவபிரானைச் சிந்தித்து எழுகின்றேன் . நம்பன் - எல்லாவுயிர்களாலும் விரும்பப்படுவோன் . நகரமூன்றும் - முப்புரங்களும் . வெருவ - அஞ்சி வாய்வெருவ . ` அஞ்சி வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட கம்பன் `. நோக்கும் அம்பன் :- விழித்தெரித்தமை குறித்தது . அம்பு - திருமாலாகிய கணை . அம்புடையவன் அம்பன் . அமுது - இறவாதுகாப்பவன் ` இன்பமரும் அமுதை ` ( தி .6 ப .91 பா .4) ` அமுத வொளிவெளி ` ( தி .5 ப .91 பா .9). ஆறு - நல்லாறு நன்னெறி . ` நன்னெறியாவது நமச்சிவாயவே `. ` நெறியே ; நின்மலனே நெடுமாலயன் போற்றிசெயும் குறியே நீர்மையனே ` ( தி .7 ப .24 பா .9). கச்சியுள் ஏகம்பன் ; கச்சியுள்ளே கம்பன் . வெண்டிங்கட் செஞ்சடை :- முரண்டொடை .

பண் :

பாடல் எண் : 2

ஒருமுழ முள்ள குட்ட மொன்பது துளையு டைத்தாய்
அரைமுழ மதன கல மதனில்வாழ் முதலை யைந்து
பெருமுழை வாய்தல் பற்றிக் கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழு மாடக் கச்சியே கம்ப னீரே.

பொழிப்புரை :

கார்மேகங்கள் தவழும் கச்சிமாநகரின் ஏகம்பம் என்ற திருக்கோயிலில் உறையும் பெருமானே ! ஒரு முழ நீளமும் அரை முழ அகலமும் ஒன்பது துளைகளும் தன்கண் வாழும் முதலைகள் ஐந்தும் உடைய சிறுகுளத்தின் பெரிய குகை போலும் நீர் வரும் வாய்த் தலைப்பை பிடித்துக் கொண்டு கிடந்து அடியேன் அடைவு கேடாகப் பலகாலும் பேசுகின்றேன் .

குறிப்புரை :

குட்டம் - குளம் . ` நெடுநீர்க்குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து `. ( புறம் . 243 ) ஒரு குட்டை . அதில் ஒன்பது தூம்பு . அதன் அகலம் அரைமுழம் ; நீளம் ஒருமுழம் ; அதில் வாழும் முதலையோ ஐந்து . பெரிய முழை - ( குகை ) போலும் வாசலைப் பற்றிக் கிடந்து பிதற்றுகின்றேன் நான் . கரிய மேகம் தவழும் மணிமாடங்களையுடைய திருக்கச்சியேகம்பவாணரே !

பண் :

பாடல் எண் : 3

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினான் மதில்கண் மூன்றுந் தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூல மேந்தி யேகம்ப மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

பொழிப்புரை :

பார்வதி பாகரான இளையராய் , ஒற்றை மழுப் படையை ஏந்தியவராய் , வில்லினால் மும்மதில்களும் தீப்பற்றி எரியுமாறு அவற்றை அழித்த செல்வராய் , இலைவடிவமான சூலத்தைக் கையில் ஏந்தி ஏகம்பத்தை விரும்பி உறையும் பெருமானைத் தம் தலையால் வணங்க வல்ல அடியவர்கள் பெரிய தலைவர்களுக்கும் தலைவராகும் உயர் நிலையினராவர் .

குறிப்புரை :

மலையினார் மகள் - இமாசல குமாரி . மைந்தனார் - வலிமையுடையவர் . ( மணாளர் ). மழுப்படை தாங்கியவர் . சிலை - மேருமாலையாகிய வில் . சிலை - மலை , சிலை என்னும் மரத்தாற் செய்யப்படுதலால் வில்லுக்குச் சிலை என்ற பெயராயிற்று ஈண்டுச் சிலை ( மலை ) யே சிலையாயிற்று . மும்மதில் - முப்புரம் . செல்வர் - மும்மலமும் இல்லாத தூய ஞானச் செல்வமுடையவர் . ` சிலையுடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார் ` ( தி .4 ப .35 பா .10). ` இலையுடைப் படை ` ? ப .37 பா .10. பார்க்க . தலையினால் ..... தலைவர் . ` தலையினால் தொழுது ஓங்குவார் நீங்குவார் தடுமாற்றமே ` ( தி .2 ப .77 பா .2).

பண் :

பாடல் எண் : 4

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ வைத்து
ஏத்துவா ரேத்த நின்ற வேகம்ப மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

பொழிப்புரை :

பொன்போன்று பூத்த கொன்றைமாலையை முறுக்குண்ட சடைக்கண் அணிந்த செல்வராய் , பரிசுத்தமான கங்கையைத் தம் அழகிய முடியிலே விளங்குமாறு வைத்து , தம்மை வழிபடும் அடியார்கள் ஏத்துதற்குப் பொருளாய் நின்ற ஏகம்பத்தை விரும்பி நிலையாக உறையும் பெருமானை வழிபடும் முறையை அறிய இயலாதேனாய் , இப்பொழுது அவனிடம் பற்றுக்கொண்ட யான் வீணாகக் கழிந்த காலத்தை நினைத்து மயங்கினேன் .

குறிப்புரை :

மலர்ந்த பொன் போலும் செந்நிறமுடைய கொன்றை மலர் மாலையைச் சடையிற் சூடிய செல்வர் . தூய்மையும் திருவருட் பெருமையும் பொருந்திய கங்கையாளைத் திருமுடி திகழ்ந்து விளங்க வைத்தவர் . ஏத்தும் அன்பர் ஏத்தும் வண்ணம் நின்ற திரு வேகம்பத்தில் எழுந்தருளியவர் , அவர் திருவடியை வாழ்த்தும் வகை அறிய வல்லேன் அல்லேன் . பற்றுக்கொண்டு மயங்கினேன் . கழிந்த காலத்தைக் கருதி யிரங்கியது , வைத்து நின்ற ஏகம்பர் , ஏத்த நின்ற ஏகம்பர் .

பண் :

பாடல் எண் : 5

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபால மேந்திக் கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோ ரேன மோட்டி யேகம்ப மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

பொழிப்புரை :

மை பூசிய குவளைமலர் போன்ற நீண்ட கண்களை உடைய பார்வதிபாகராய் , கையில் மண்டை ஓட்டைப் பிச்சை பெறும் பாத்திரமாக ஏந்தி வீட்டு முகப்புத்தோறும் பிச்சை பெறுவாராய் , தம்மால் அம்பு எய்யப்படும் பன்றியை விரட்டி , ஏகம்பம் மேவிய பெருமானைக் கைகளால் தொழவல்ல அடியவர்களுக்குக் கொடிய தீவினைகளைப் போக்கிக்கொள்ளுதல் இயலும் .

குறிப்புரை :

மை அணிந்த பூப் போலும் நெடிய கண்களையுடைய மங்கையை ஒரு பங்கில் உடையவர் , கையில் ஒரு கபாலம் ஏந்தி வீட்டுக் கடைதோறும் சென்று பலி கொள்பவர் . அம்பால் எய்து துரத்துவதொரு பன்றியை ஓட்டித் திருக்கச்சியேகம்பத்தில் எழுந்தருளியவர் . அவரைக் கை குவித்துத் தலைமேல் ஏற்றிப் போற்றி வாழ்த்தி நினைந்து தொழவல்லவர்க்குக் களையலாகாத கடிய தீவினைகளைக் களைதல் எளிதாகும் . ஏனம் ஓட்டியதை அருச்சுனனுக்குப் பாசுபதங் கொடுத்த வரலாற்றில் அறிக . ஓட்டிமேவினார் என்றியையினும் , ஓட்டுதலுக்கும் மேவுதலுக்கும் தொடர்பில்லை . ` ஓட்டி ` பெயருமாம் .

பண் :

பாடல் எண் : 6

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடைய னெங்கள்
அருவினை யகல நல்கு மண்ணலை யமரர் போற்றும்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட வுறைய வல்ல
உருவினை யுருகி யாங்கே யுள்ளத்தா லுகக்கின் றேனே.

பொழிப்புரை :

சிவபுண்ணியப் பேற்றை அளிக்கவல்ல கங்கை தங்கிய சடையனாய் , எங்கள் அரிய வினைப்பயன்கள் எம்மை விடுத்து நீங்குமாறு அருள் வழங்கும் தலைவனாய் , தேவர்கள் போற்றும் செல்வமாய் , திருவேகம்பத்தில் அடியவர் தன் புகழைப் பாடத் தங்கியிருத்தலில் வல்லனாய் , உள்ள சிவபெருமான் உருவினை நினைத்து உருகி உளமார மகிழ்கின்றேன் .

குறிப்புரை :

தருவினை - கொடுக்குஞ் செயல் ; வினைத்தொகை மரங்களை எனலும் ஆம் , தரு - மரம் , தரு + இன் + ஐ = தருவினை . கங்கையாறு தன்கண் முழுகுவார் தீவினைகளைக் கெடுத்து , நல்வினைப்பயனைக் கொடுக்கும் வினையுடையது . அது தோன்றிய இடந்தொட்டு முடியும் இடங்காறும் ஆங்காங்கு மரங்களை மருவுதல் உடையது . அருவினை - நீங்குதற்கரிய வினை . அகல - அகன்றொழிய . நல்கும் - அருள் கொடுக்கும் . அண்ணல் - சிவபெருமான் . அமரர் - தேவர் ; மும்மலத்தொடு செய்யும் போருடைய ஞானவீரர் . திரு :- ` திருவே என் செல்வமே தேனே ... அமரரேறே ` ` கருவெந்து வீழக் கடைக்கணிந் தென்னுளம் புகுந்த திரு ` ` செப்பரிய அயனொடு மால் சிந்தித்தும் தெரிவரிய அப்பெரிய திரு ` ` திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகன் ` ` சென்றடையாத திருவுடையான் ` ` திருநெறி ` ` சிவமே பெறுந்திரு எய்திற்றிலேன் ` ` அடியோம் திருவைப் பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ ` என்பனவற்றால் , எல்லாம் வல்ல முழு முதற்பொருளையும் அவனருளையும் அவனையடையும் நெறியையும் அந்நெறியிற் சென்று பெறும் பேரின்பத்தையும் ` திரு ` எனல் விளங்கும் . செப்பிட - சொல்ல , உறைய - வாழ . செப்புவார் உள்ளத்தில் உறையவல்ல வுரு சிவனுரு .

பண் :

பாடல் எண் : 7

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகி யுலகெலா முய்ய வுண்டான்
எண்டிசை யோரு மேத்த நின்றவே கம்பன் றன்னைக்
கண்டுநா னடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.

பொழிப்புரை :

தான் விரும்பிக் கொண்ட வடிவுடையவனாய்த் திருக்கோலக்கா என்ற திருத்தலத்தை உடைய கூத்தனாய் , உலகங்கள் எல்லாம் உயிர் பிழைக்குமாறு விடத்தை உண்டவனாய் எட்டுத் திசையிலுள்ளாரும் போற்றுமாறு நிலைபெற்ற ஏகம்பனைத் தரிசித்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்வதற்கு அடியேன் தலந்தொறும் அலைகின்றேன் .

குறிப்புரை :

கோலம் - வேடம் . ` பல பல வேடம் ஆகும் பரன் ` திருக் கோலக்காவை உறைவிடம் ஆக உடைய திருக்கூத்தன் . எல்லாத் தலங்களிலும் திருக்கோயில் கொண்டிருக்கும் முழு முதல்வன் ஒருவனே . அவனே ஞானானந்த நடனம் புரிபவன் ; ஐந்தொழிற் கூத்தன் . இவ்வுண்மை யறியாதார் , திருமுறையில் திருக்கூத்தன் என்றுள்ள இடந்தொறும் மகேசுரமூர்த்தியாகிய நடராசர் என்பர் . உண்டது நஞ்சம் , அதனை உண்டதன் காரணம் உலகெலாம் உய்தல் வேண்டுமென்று கொண்ட திருவுள்ளம் . திருவேகம்பனைக் கண்டு அடிமை செய்தற் பொருட்டாக அவன் திருவடியே கருதித் தலந்தோறும் திரிகின்றேன் நான் . எண் + திசை ; எட்டுத் திக்கு . இதில் உலகுய்ய நஞ்சுண்டமை உணர்த்திய துணர்க .

பண் :

பாடல் எண் : 8

படமுடை யரவி னோடு பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவ ரஞ்ச வம்ம
இடமுடைக் கச்சி தன்னு ளேகம்ப மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தா னுய்ந்த வாறே.

பொழிப்புரை :

படத்தை உடைய பாம்பினோடு குளிர்ந்த பிறையைச் சூடி , மதம் பெருக்கும் யானைத் தோலைப் போர்த்துப் பார்ப்பவர்கள் அஞ்சுமாறு , செல்வத்தை உடைய காஞ்சிநகரில் ஏகம்பத்தை உறைவிடமாக விரும்பி ஏற்றுக் கொண்ட சிவபெருமானுடைய சிறப்பான ஆடலைக் காண்பதனால் உலகம் தீவினை யிலிருந்து பிழைத்தது . இது வியக்கத்தக்கது .

குறிப்புரை :

பாம்பும் திங்களும் சூடி , யானைத்தோல் போர்த்து , கண்டவர் அஞ்சி நடுங்க , பரந்த இடத்தையுடைய ; பெருமையுடைய , திருக்கச்சியுள் திருவேகம்பத்தில் எழுந்தருளிய சிவபெருமானது திருக் கூத்தாடும் திருவிளையாடலைக் காண உலகம் உய்தி பெற்றது . உய்யும் ஆறு திருக்கூத்துக் காட்சியே . இதில் உலகுய்யக் கூத்தாடல் குறித்த துணர்க . கடம் - மத நீர் , கடம் உடை உரிவை - யானைத்தோல் . நடம் உடை ஆடல் :- ஆடல் பொது , நடம் சிறப்பு உடலாடல் , கண்ணாடல் , கையாடல் , காலாடல் , நடமாடல் எனப் பொதுவினையாதல் அறிக . நடம் , முதலியன குறித்தவற்றிற்கே உரியவாதலும் ஆநந்த நடம் , பஞ்சாக்கர நடம் , பஞ்சகிருத்திய நடம் எனப் பொதுவாதலும் உண்டு .

பண் :

பாடல் எண் : 9

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ள மெள்ளவே நவில நின்று
குன்றியி லடுத்த மேனிக் குவளையங் கண்ட ரெம்மை
இன்றுயில் போது கண்டா ரினியரே கம்ப னாரே.

பொழிப்புரை :

குன்றிமணி போலச் சிவந்த திருமேனியில் கருங்குவளை போல அமைந்த நீலகண்டராய்ப் பொன் நிறக் கொன்றை மாலை பொருந்திய நெடிய குளிர்ந்த மார்பினராய் என் உள்ளத்தில் நன்மை தரும் வகையில் புகுந்து என்மனம் மெதுவாக வணக்கம் சொல்லுமாறு நின்று யான் இனிமையாகத் துயின்றபோது காணப் பெற்றார் . அதனால் ஏகம்பனார் எனக்கு இனியராகின்றார் .

குறிப்புரை :

பொன்திகழ் கொன்றைமாலை (:- ` பூத்த பொற் கொன்றை மாலை ` தி .4 ப .44 பா .4) பொருந்திய நீண்ட குளிர்ந்த மார்பு உடையவர் . திருமார்பிற் கொன்றைமாலை சூடியவர் என்பது ஈண்டு உணரப்படும் . நன்றி - நன்மை ; சிவம் . சிவநெறி . நவில - போற்றி உரைக்கப் பயில . குன்றியில் அடுத்த மேனி :- ` திகழொளிக்குன்றி யேய்க்கும் உடுக்கை ` ( குறுந்தொகை , கடவுள் வாழ்த்து ) என்றது போல் , செம்மேனிக்குக் குன்றிமணி நிறம் ஒப்பாயிற்று . குவளையங் கண்டர் :- ` குவளைக்களத் தம்பலவன் ` ` காவிநின்றுஏர்தருகண்டர் ` ` தென்றில்லை நின்றோன் மிடற்றின் வண்ணக்குவளை மலர்கின்றன ` ( தி .8 திருக் கோவையார் . 33, 41, 162) ` பைங்குவளைக்கார் மலரால் ... எங்கோனும் போன்றிசைந்த பொங்குமடு . ( தி .8 திருவாசகம் 167). இன்துயில் போது - இனிமையூரத் துயில்கின்ற வேளை . துயில்போது :- வினைத்தொகை , அதன்அடை இனிமைப்பண்பு . இன்றுயில் போது :- பண்புத்தொகை . இனியர் ஏகம்பனார் மெள்ளவே நவிலல் பிறர் செவி கேளாவாறு மெல்லொலியுறச் சொல்லுதல் . கொன்றை மாலை நெடுந்தண்மார்பும் , நன்றியிற் புகலும் , குன்றி மேனியும் , குவளைக்கண்டமும் , இன்றுயில் போது கண்டதும் ஏகம்பனார் இனியரென்றதற்கு ஏதுக்கள் .

பண் :

பாடல் எண் : 10

துருத்தியார் பழனத் துள்ளார் தொண்டர்கள் பலரு மேத்த
அருத்தியா லன்பு செய்வா ரவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை யிசைய வேறி யேகம்ப மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்வினை மாயு மன்றே.

பொழிப்புரை :

அடியவர் பலரும் போற்றிப் புகழுமாறு திருத் துருத்தி , திருப்பழனம் என்ற தலங்களில் உறைபவராய் , விருப்பத்தோடு தம்மிடம் அன்பு காட்டுபவர்களுக்கு அருள்கள் செய்து காளையைப் பொருந்துமாறு இவர்ந்து ஏகம்பத்தை விரும்பி உறையும் எம்பெருமானுக்கு , உடம்பை முயற்சியில் ஈடுபடுத்தி அடிமை செய்யும் அடியவர்களுடைய கொடிய தீவினைகள் அழிந்து ஒழியும் .

குறிப்புரை :

துருத்தியும் பழனமும் சிவதலம் , அருத்தி - விருப்பம் . அன்புசெய்வார் :- ` மெய்யன்பர் ` எருத்து - விடை . வருத்தி - உடலை வருந்தச்செய்து , உடலில் உயிரை வருத்தி , அடிமை செய்தலே வினைத் தீர்வுக்கு ஏதுவாகும் . அவ்வடிமையும் ஏகம்பமேவினார்க்கே விரும்பிச் செய்தல் உயிர்களது கடன் .
சிற்பி