திருவலம்புரம்


பண் :

பாடல் எண் : 1

தெண்டிரை தேங்கியோ தஞ் சென்றடி வீழுங் காலைத்
தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும்
வண்டுகண் மதுக்கண் மாந்தும் வலம்புரத் தடிக டம்மைக்
கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தா மிருந்த வாறே.

பொழிப்புரை :

எங்கும் வண்டுகள் தேனை வயிறாரப் பருகும் வலம்புரத்திலுள்ள பெருமான் கடலிலுள்ள தெளிந்த அலைகள் செறிந்து தம் திருவடிகளில் விழுந்து அலசும்போது , தொண்டர்கள் தம்மை அழைத்தவண்ணம் தொழுது அடியின் கண் வணங்கித் தம்மை உள்ளத்திலும் , தம் சிறப்பை உரையிலும் கொண்டு பாடும் வண்ணம் இருந்தாவாறென்னே !

குறிப்புரை :

ஓதம் சென்று அடிவீழுங்காலை , தொண்டு இரைத்துத் தொழுது வணங்கிக் கொண்டு பாட இருந்தவாறு என்னே ! என்க . தெள் + திரை - தெளிந்த அலை . ஓதம் - நீர் . அடி - திருக்கோயிலாண்டவன் திருவடி . கடலலை திருவலம்புரத்திற் குழகர் திருவடியில் வந்து அலசும் போது , எங்கும் தொண்டர்கள் அத் தேவாதி தேவனைத் தொழுது திருவடி வணங்கி , அவனை உள்ளத்திலும் அவர் சீரை உரையிலும் கொண்டு , நல்லிசை பாடிப் போற்றுவார்கள் . அவர்கள் பாடக் குழகர் வீற்றிருந்தருள்கின்றார் . அடிகளது திருவலம்புரம் எங்கும் வண்டுகள் மதுக்களை மாந்தியுறங்கும் வளமுடையது . எங்கும் பலவகை மலர் களிற் பல்வேறு சுவையுடையவாய்க் கிடைக்கும் மதுக்களை மாந்தித் தம்மை மறந்துறங்கும் வண்டுகள் , எங்கும் அடிகளைத் தொழுது பாடி வணங்கிப் பேரின்பக் கள்ளுண்டு சீவபோத மற்றுச் சிவபோதத் திலுறங்கும் தொண்டர்களுக்கு நிகராயின . வலம்புரத்தடிகளாகிய குழகர் தம்மைத் தொண்டர் பாட இருந்தார் . தொண்டு - தொண்டர் . இரைத்து - சீர் பாடி .

பண் :

பாடல் எண் : 2

மடுக்களில் வாளை பாய வண்டின மிரிந்த பொய்கைப்
பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள்
தொடுத்தநன் மாலை யேந்தித் தொண்டர்கள் பரவி யேத்த
வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.

பொழிப்புரை :

மாவடு போன்ற பெரிய கண்களை உடைய பார்வதிபாகர் , மடுக்களிலே வாளை மீன்கள் பாயவும் வண்டினங்கள் அஞ்சி ஓடிய பொய்கைகைளில் பிடியும் களிறும் போல வரால் மீன்கள் இரட்டையாகக் கலந்து கொண்டு அணையவும் வளம் சான்ற திருவலம் புரத்திலே , தொடுக்கப்பட்ட மாலைகளை ஏந்தியவர்களாய் அடியார்கள் முன்நின்று துதித்துப்போற்றும் வண்ணம் இருந்தவாறென்னே !

குறிப்புரை :

வாளை மீன்கள் மடுக்களிற் பாய்ந்தன . பாயவே அம் மடுக்களிலிருந்த வண்டுகள் அஞ்சி ஓடின . ஓடிப் பொய்கையை அடைந்தன . அடையவே , அப் பொய்கையிலிருந்த வரால்கள் , பிடியும் களிறும் போலத் தம்மிலே பிணைந்துகொண்டன . பிணைதல் - இரட்டையாகக் கலந்து கொள்ளல் . பிடி - பெண் யானை . களிறு - ஆண் யானை . மீன்களிலும் களிறு என்னும் வகையொன்றுண்டு . ` முடங்கி னால் ..... மலங்கு , இளவாளை , செங்கயல் , சேல் , வரால் , களிறு அடைந்த தண் கழனி யணியாரூரம்மானே ` ( தி .4 ப .20 பா .2). பயின்றன வரால்கள் என்று பாடம் இருந்ததோ ? பயின்று அணைகின்ற வரால் களையுடைய வலம்புரம் என்று இயைக்க . தொண்டர்கள் தொடுத்த நன்மாலை ஏந்திப் பரவி ஏத்த இருந்தவாறு என்க . ` வடித்தடங்கண்ணி ` என்பது . தலத் தேவியாரது திருப்பெயர் . ` வடுவகிர்க்கண்ணியம்மை ` என்று இன்றும் வழங்குகின்றது .

பண் :

பாடல் எண் : 3

தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி
ஆனிடை யஞ்சுங் கொண்டே யன்பினா லமர வாட்டி
வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிக டம்மை
நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.

பொழிப்புரை :

தேனுள்ள பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து தம் அழகிய திருவடிகளிலே பொருந்துமாறு அவற்றை அர்ப்பணித்துப் பஞ்சகவ்வியத்தால் அடியார்கள் அபிடேகம் செய்ய அந்த அபிடேகத்தை உவந்து ஏற்று வானில் உலவவேண்டிய பிறையைச் சடையில் சூடிய வலம்புரத்துப் பெருமானை அடியேன் சரணமாக அடைந்து துதித்து நல்வினைப் பயனைப் பெற்றவனானேன் .

குறிப்புரை :

திருவலம்புரத்து அடிகளை நான் அடைந்து , மலர்கள் கொண்டு அடிபொருந்தச் சேர்த்து , ஆனஞ்சும் கொண்டு அமர ஆட்டி , ஏத்தப்பெற்று ( முற் பிறவிகளிற் செய்த ) நல்வினைகளின் பயனை ( இப் பிறவியிற் ) பெற்றேன் என்க . தேன் உடை மலர்கள் :- முறுக்கு அவிழ வண்டுகள் உடைத்தமையால் மலர்ந்த பூக்கள் ; தேனையுடைய பூக்கள் . திருந்து அடி :- அநுபவ ஞானம் முதிர முதிரச் சிந்தையிற்றிருந்தும் , திருத்துவது சிவனருள் . திருந்துவது ஆன்மா . சிவனடியில் ஆன் மாக்கள் திருந்துகின்ற உண்மையை அநுபவித்துணர்தல் வேண்டும் . திருத்தத்திற்கு இடம் சிவனடியே அன்றி வேறில்லை . பதி சம்பந்தத்தால் அன்றிப் பாச சம்பந்தத்தாற் பசுக்கள் திருந்துமோ ? அவ்விரண்டு சம்பந்தமும் அன்றி வேறுண்டோ ? அடி பொருந்தச் சேர்த்தல் - வாச்சியப் பொருளிற் சேரப் பாவித்துத் தூவுதல் . ` ஆனிடையஞ்சும் ` ( தி .4 ப .53 பா .6, 7.) அன்பினால் அமர ஆட்டி :- ` தம் அன்பாம் மஞ்சனநீர் தாம் ஆட்டி `; ` இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி `. வானிடை மதியம் :- ` வானூர் மதியம் `, நான் அடைந்து :- நான் கெட்டு என்றலும் பொருந்தும் . தற்போதம் அற்றுச் சொல்லுகின்ற அருளாளர்கள் ` நான் ` எனல் குற்றமாகாது . திருமுறையாசிரியர்கள் ` நான் ` என்ற இடங்களையெல்லாம் நோக்குக . நான் அடிகளை அடைந்து ஏத்தப் பெற்று நல்வினைப் பயன் உற்றேன் என்றதில் , ஏத்தப் பெறல் பயன்உறல் இரண்டும் ஆசிரியர்க்கே உரியன . ஏத்தப் பெறல் ஏத்தல் என்னும் பொருட்டு .

பண் :

பாடல் எண் : 4

முளையெயிற் றிளநல் லேனம் பூண்டுமொய் சடைக டாழ
வளையெயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப்
புளைகயப் போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி
வளைபயி லிளைய ரேத்தும் வலம்புரத் தடிக டாமே.

பொழிப்புரை :

வலம்புரப்பெருமான் இளைய பெரிய பன்றியின் மூங்கில் முளைபோன்ற பற்களை அணிகலனாக மார்பில் பூண்டு , செறிந்த சடைகள் தாழ , வளைந்த பற்களை உடைய பாம்பினை இடைக்குப் பொருந்த இறுக்கிக்கட்டி , துதிக்கையை உடைய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து , கங்கையையும் பிறையையும் சடையிற் சூடி வளையல்களை அணிந்த மகளிர் தோத்திரிக்குமாறு அமைந்துள்ளார் .

குறிப்புரை :

இளைய அழகிய பன்றியின் முளையெயிற்றை அணிந்து , மொய்த்த சடைகள் தாழ வளைந்த பற்களையுடைய இளைய பாம்பினை வலித்து அரையில் பொருந்தக்கட்டி , துளையுடைய கையினதான யானைத் தோலைப் போர்த்துக் கங்கையுந் திங்களுஞ் சூடி , வளைகள் பயின்ற இளையர்கள் தொழுதேத்தும் திருவலம்புரத்து அடிகளானார் ( எங்கும் நிறைந்த சிவபிரான் ). யானைத் தோற் போர்வையைப் புளைகயப் போர்வை என்றார் . புழைக்கைய போர்வை என்றது அவ்வாறு எதுகை நோக்கி நின்றதுபோலும் . ஓர்க . புழை - துளை . ` புழைகை ` எதுகை நோக்கியியல்பாயிற்று . அஃது அடையடுத்த சினையாகு பெயராய் முதலை யுணர்த்தி . அகர விறுதி பெற்று எச்சப்பொருட்டாய்ப் போர்வை என்னும் பெயர்கொண்டது . ` வளைபயிலிளையரேத்தும் ` என்றதாற் பண்டைய மகளிரது சிவ பத்தியும் திருக்கோயிலில் மகளிர் திரளாகச் சென்று வழிபடும் வழக்கமும் புலப்பட்டன . பூண்டு , தாழ வலித்து , இசைய வீக்கிப் போர்த்துச்சூடி வலம் புரத்து அடிகளானார் என்று ஆக்கம் வருவித்து முடிக்க . ` பிறை சூடி ` ` கரந்தும் விளையாடி ` என்புழிப்போல , ` சூடி ` என்றதைப் பெயராகக் கொண்டு அதனொடு முடித்து எழுவாயாக்கி அடிகள் தாம் என்று பயனிலை யாக்கலும் ஏத்தும் என்பதற்கு ஏத்தப் பெறும் எனச் செயற்பாட்டுப் பொருளுரைத்து , பூண்டு முதலிய எச்சங்களைப் பெறும் என்பதனோடு இயைத்தலும் பொருந்தும் .

பண் :

பாடல் எண் : 5

சுருளுறு வரையின் மேலாற் றுலங்கிளம் பளிங்கு சிந்த
இருளுறு கதிர்நு ழைந்த விளங்கதிர்ப் பசலைத் திங்கள்
அருளுறு மடிய ரெல்லா மங்கையின் மலர்க ளேந்த
மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

இரா வேளையில் நெற்பயிர்க்குள் விரவி அதற்கு வளர்ச்சிதரும் சந்திரன் , மலைச்சிகரம் போல முடியப்பெற்ற தமது சுருண்ட சடையிலே நுழைந்து பளிங்கு போன்ற ஒளியை வெளிப்படுத்திக் கொண்டிருக்க , தம் அருளை அடைய விரும்பிய அடியார் எல்லோரும் அழகிய கைகளில் மலர்களை ஏந்தி நிற்க , அவர் பாடுகிற குறிஞ்சி யாழ்த்திறமான மருள் எனும் பண்ணிசை பொருந்திய பாடல்களைத் திருச்செவி சாத்தியவராய் உள்ளார் .

குறிப்புரை :

சுருள் - வளைவு , பளிங்கு - படிகம் , இருள் உறு கதிர் - இருளினையுடைய இரவில் உறுகின்ற நெற்கதிரில் , நுழைந்த - புகுந்த , இளங்கதிர்ப்பசலைத்திங்கள் - இளநிலாவையுடைய பசிய வெண்பிறை , திங்களை அணிந்த அடிகளார் . அருளை விரும்பும் அடியவரெல்லாரும் அகங்கையிற் பூக்களை யேந்தித் தூவிவழிபட மகிழ்ந்தும் , குறிஞ்சியாழ்த்திறமான மருள் என்னும் இன்னிசை பொருந்திய பாடலைப் பாடப்போற்றக் கேட்டும் வீற்றிருந்தார் வலம் புரத்து அடிகளார் . பயிர் வளர்ச்சிக்கு நிலாத் துணையாதலை , ` தூமதி வாக்கிய கிரணந்துளித் தென்னக் கதிர்ச்சாலி காமர்மணித் தரளங்கள் கான்று செறுத்திடராக்கி ` ( காஞ்சிப் . 125) ` செழுஞ்சுவைத் தெள்ளமிழ்த கிரணங்கள் தம்மாற் செறிகருப்பக் கனம் உறுத்து வளரா நிற்கும் ` ( தணிகைப் . 131) ` சகல புவனத்திலும் உயிர்ப்பயிர் தழைப்ப நற்றண்ணளி சுரந்திடுதல் ` ( முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் . அம்புலிப் 171) ` சசியாதிபன் ` என்பவற்றாலறிக . சசியம் - தாநியம் , விளைவு .

பண் :

பாடல் எண் : 6

நினைக்கின்றே னெஞ்சு தன்னா னீண்டபுன் சடையி னானே
அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினா லமைய வாட்டிப்
புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன்
எனக்குநான் செய்வ தென்னே யினிவலம் புரவ னீரே.

பொழிப்புரை :

நீண்ட சிவந்த சடையை உடைய வலம்புரத்துப் பெருமானே ! அபிடேகத்துக்குரிய எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து உம்மை அன்போடு முறையாக அபிடேகித்து நற்கதியைச் சேர வல்லேன் அல்லேனாய்ப் பொய்மையைப் பெருக்கி வாழும் அடியேன் , அச்செயல்களை மனத்தினால் நினைத்துப் பார்க்கின்றேனன்றி மெய்ம்மையைப் பொருந்த வல்லேனல்லேன் . இனி , யான் எனக்குச் செய்து கொள்ளக் கூடியது யாதோ அறியேன் .

குறிப்புரை :

வலம்புரவனீரே , நீண்ட புன்சடையினனே ! உம்மை நெஞ்சு தன்னால் நினைக்கின்றேன் . ( அபிடேகத்திற்குச் சிவாகமத்தில் விதிக்கப்பட்ட பொருள்கள் ) அனைத்தும் ஒருசேரக் கொண்டு வந்து , அத்திருக்கோயிலுள் , மெய்யன்பால் , பொருந்த அபிடேகம் புரிந்து , மெய்ம்மையைச் சேர வல்லேன் அல்லேன் . பொய்மையைப் பெருக்கு கின்றேன் . இனி நான் எனக்குச் செய்வது யாது ? நெஞ்சினினைவும் உடலின் செயலும் உரையின் வாய்மையும் ஒன்றுபட நின்று மெய்மையை யுணர்ந்தும் புணர்ந்தும் பிறவி நீக்கமும் பேரின்பாக்கமும் அடையாமல் வாளா நாள் கழிக்கும் பெற்றியேன் நான் , இனி எனக்கு யான் செய்வது என்னே ! செய்வதொன்றறியமாட்டேன் .

பண் :

பாடல் எண் : 7

செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித்
தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை யடைந்து நின்று
கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம்
மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

செங்கயல்களும் , சேல்களும் தீங்கனியைப் பெற நாடித் தமது நீர்நிலைகளிலிருந்து பாய்ந்து போய் , பெரும் பொய்கையை அடைந்து நின்று கொங்கையழகியரான மகளிர் முழுகும் போதில் அவர் கொங்கைகளைக் கனியென்று கருதிப் பற்றுதலால் வருந்தும் அம்மங்கையரின் மனைமாட்சி நிலவும் மனைகளால் மிக்க நிறையும் வலம்புரத்தார் ( எம் ) அடிகள் ! ( மிக்கு + ஆர் - மிக்கு நிறையும் .)

குறிப்புரை :

செங்கயல் மீன்களும் சேல் மீன்களும் பாய்ந்து , இனியனவாகத் தேம் பழங்களை விரும்பி , தம் நீர் நிலையைத் துறந்து சென்று பெரிய பொய்கையை அடைந்து நின்று , ( கொங்கைகளையுடைய ) மகளிர் நீராடுங்காலையில் , கொழுங்கனிக்கு அழுங்கினாராம் அடிகளார் . மங்கலமனை . மனையில்மிக்கு ஆர்ந்த வலம்புரம் , அழுங்குதல் - இரங்குதல் , பாய்ந்து நாடித் துறந்து போந்து அடைந்து நின்று குடையுங்காலை அடிகளார் அழுங்கினாராம் என்க . நின்று என்னும் செய்தெனெச்சத்தைச் செயவெனெச்சமாகத் திரித்து நிற்ப வெனல் வேண்டும் என்பர் . சான்றோர் செய்யுட்களிற் பயின்று வரும் எல்லாவிடத்தும் அவ்வாறு திரித்தல் வேண்டுமெனின் , பிழை , பாடியதோ ? திரிப்பதோ ? அருகிவருவதேல் திரித்தல் சிறக்கும் . நின்று என்னும் மீன்களின் வினை குடையும் என்னும் கொங்கையர் வினையைத் தழுவிற்றெனின் வரும் பிழை என்னையோ ? ` வினை யெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய ` என்பதன் உரைக்கண் , சேனா வரையர் எழுதியதுணர்க . ` மங்கலமென்ப மனைமாட்சி `. நின்று , அழுங்கினார் எனும் இரண்டும் கொங்கையர் வினையாகக் கொள்ளல் நேர் . வலம்புரத்து அடிகளார் அழுங்கினார் எனும் முடிபு பொருத்தமற்றதாம் .

பண் :

பாடல் எண் : 8

அருகெலாங் குவளை செந்நெல் அகலிலை யாம்ப னெய்தல்
தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாம்
குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி
மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.

பொழிப்புரை :

ஊரின் அருகில் எல்லாம் செந்நெற்பயிர்களும் அப் பயிர்களின் இடையே பூத்த குவளை ஆம்பல் நெய்தல் என்ற பூக்களும் உள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் உள்ளன . மனைக்கொல்லைகளிலெல்லாம் பழங்கள் விழுகின்றன . அவ்வூரில் பறவை இனங்கள் கூடி ஒலித்து இறகுகளை உலர்த்தித் தங்கும் இடங்கள் பல உள்ளன . இத்தகைய வளங்கள் சான்ற வலம்புரத்திலே எம்பெருமான் உகந்தருளி உறைகின்றார் .

குறிப்புரை :

ஊரின் அருகிடமெல்லாம் குவளை மலர்களும் செந்நெற்பயிர்களும் , அப்பயிரிடத்திற் பூத்த இலைகளையுடைய ஆம்பல்களும் நெய்தல்களும் மிக்குள்ளன . தெருக்களிலெல்லாம் தென்னையும் மாமரங்களும் ஓங்கி வளர்ந்துள்ளன . தோட்டங்களிலெல்லாம் பழங்கள் விழும் . ஆங்கே பறவைக் கூட்டங்கள் சேர்ந்து குழுமி ஒலித்து , இறகுகளை உலர்த்தி மருவுதலாகும் இடங்களைக் காட்டும் வளம் பொருந்திய திருவலம் புரத்து அடிகளார் . இதிலும் வினை முடிபு ( தி .2 ப .4 பா .5.) போல இடர்ப்பட்டுக் கொள்ளற்பாலதாயுளது . குழுமல் , குழ்மல் , கும்மல் , கும்பல் , குழுமியொலித்து - கும்மலித்து ( மரூஉ ), ` விளையாடி ` என்பது சொற்பொருளாகாது .

பண் :

பாடல் எண் : 9

கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான்
திருவரை யனைய பூமேற் றிசைமுக னவனுங் காணான்
ஒருவரை யுச்சி யேறி யோங்கினா ரோங்கி வந்து
அருமையி லெளிமை யானா ரவர்வலம் புரவ னாரே.

பொழிப்புரை :

கரிய மலை போன்ற திருமேனியை உடைய கடல் நிறத்தவனாகிய திருமாலும் , திருமகள் தங்குவதற்கு என்று வரையறுக்கப்பட்ட தாமரைப்பூ மேல் உறையும் பிரமனும் காண முடியாதவராய் , ஒப்பற்ற கயிலைமலையின் உச்சியில் மேம்பட்டு உறையும் பெருமான் தம் அருமையை எளிமையாக்கிக் கொண்டு வந்து திருவலம்புரத்திறைவனாக உள்ளார் .

குறிப்புரை :

கருவரை - கரியமலை , அனைய - போன்ற . வரையனைய மேனி என்ற பின் கடல் வண்ணன் என்றது சிறப்புடைத் தாகாது . கருவரையுங்கடலும் போன்ற வண்ணன் ` கார்வண்ணன் `. ` கடல் வண்ணன் ` எனல் வழக்கு . ` பச்சை மாமலைபோல் மேனி ` என்றது மேனியின் பசுமைக் கொப்புரைத்தது . ` கருவரை ` என்றது பேருருவத்திற் கொப்பாயின் மேனி யெனலாகாது . கருமை - பெருமை , மலைமார்பிற்குவமஞ் செய்தல் உண்டு . ` திருவரை அனைய பூ என்றதும் சீரிதன்று . காணான் காணான் என்று தனித்தனி கூறி முடித்துப் பின் , ஒரு மலையுச்சியிலேறி ஓங்கினார் . ஓங்கி வந்து அருமையில் எளிமையானார் என்று சிவபிரானைக் குறித்ததும் பொருந்தாது . பெரியபுராணத்தில் இவ்வலம்புரம் குறிக்கப்படாதது என்னையோ ? இப்பதிகம் பிறர் பாடிச் சேர்த்ததோ ?

பண் :

பாடல் எண் : 10

வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை
ஆள்வலி கருதிச் சென்ற வரக்கனை வரைக்கீ ழன்று
தோளொடு பத்து வாயுந் தொலைந்துட னழுந்த வூன்றி
ஆண்மையும் வலியுந் தீர்ப்பா ரவர்வலம் புரவ னாரே.

பொழிப்புரை :

தன் ஆற்றலைப் பெரிதாக மதித்து கயிலாயத்தைப் பெயர்க்கச் சென்ற இராவணன் தன் தோள்களிருபதும் வாய்கள் ( தலைகள் ) பத்தும் அம்மலைக்கீழ் நசுங்கித் தொலையுமாறு , சிரித்துக் கொண்டே , தம் திருவடிகளால் அழுத்தமாக ஊன்றி அவ்வகையால் அவனது ஊக்கத்தையும் வலிமையையும் போக்கிய அத்தகையர் வலம்புரவனார் ஆவர் .

குறிப்புரை :

வாள் - ஒளி , எயிறு - கோரப்பல் , இலங்க - வெளிர , நக்கு - சிரித்து , ஆள்வலி ` - ` ஆண்மையும் வலியும் ` வரை - அக் கயிலாயம் . கயிலாயந்தன்னைச் சென்ற அரக்கனை வரைக்கீழ் அழுந்த வூன்றித் தீர்ப்பார் வலம் புரவனார் என்று முடித்துக்கொள்க .
சிற்பி