திருவாவடுதுறை


பண் :

பாடல் எண் : 1

மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வி னானே
துஞ்சும்போ தாக வந்து துணையெனக் காகி நின்று
அஞ்சலென் றருள வேண்டும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானே ! வலிமை உடையவனே! மணியே ! மரகத மணிக் குவியலே! அடியேனுடைய உள்ளத்திற் புகுந்து உன்னை நினைக்கும் நிலையை இன்று தந்துள்ளவனே! யான் உயிர் நீக்கும் போது வந்து அடியேனுக்குத் துணையாக நின்று அஞ்சாதே என்று நீ அருள் செய்யவேண்டும் .

குறிப்புரை :

மஞ்சன் - மைந்தன் என்பதன் மரூஉ . போலி எனலும் ஆம் , ஆனாய் என்ற இரண்டும் விளி , மணி - மாணிக்கம் . மரகதத்திரள் - மரகதக்கொத்து ; ஆகுபெயராய் ஒளித் திரளுமாம் . நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே :- நெஞ்சு நினைத்தற்கருவி அதனுள்ளே புகுந்து நிற்றல் நினைப்பித்தற்கு . நினைவைத் தருதல் . அது நினைப்பிப்போன் நிகழ்ச்சி . அந்நிகழ்ச்சியை யுடையோனை நிகழ்வினான் என்றருளினார் . நெஞ்சினைத் தூய்மை செய்து நினையுமா நினைப்பியாதே வஞ்சமே செய்தி ` ( தி .4 ப .23 பா .9) ` துஞ்சும்போதும் துயிலின்றி யேத்துவார் ` ( தி .4 ப .112 பா .9.) க்குத் , ` துஞ்சும்போதும் சுடர் விடுசோதியை நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை ` என்றருளியதுணர்க . அதனை உணர்ந்த அநுபவத்தால் , அந்நிலை , இடையீடுபடாதவாறு . துஞ்சும் போதாக எனக்குத் துணையாகி வந்து நின்று அஞ்சல் என்று அருளவேண்டும் என்று வேண்டினார் . பிறர்க்குத் துணையாகிய வரலாறு பல அறிவேன் . அதனை நான் அனுபவத்தில் அறியக்காட்டு என்பார் ` எனக்கு ` என்றார் .

பண் :

பாடல் எண் : 2

நானுகந் துன்னை நாளும் நணுகுமா கருதி யேயும்
ஊனுகந் தோம்பு நாயே னுள்ளுற வைவர் நின்றார்
தானுகந் தேயு கந்த தகவிலாத் தொண்டனே னான்
ஆனுகந் தேறு வானே ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

காளையை விரும்பி ஏறிஊர்பவனே ! ஆவடு துறைப் பெருமானே ! நான் விரும்பி உன்னை அணுகி வரக் கருதிய போதும் , உடம்பையே விரும்பிப் பாதுகாக்கும் அடியேனுடைய உட்புறத்தில் நிலையாக நிற்கும் ஐம்பொறிகளும் விரும்புவனவற்றையே யானும் விரும்பிச் செயற்பட்டு உன் தொண்டன் என்று கூறும் தகுதி யற்றவனாய் உள்ளேன் .

குறிப்புரை :

உகந்து - விரும்பி , உயர்ந்து , நான் நாளும் உன்னை உகந்து நணுகுமாறு கருதியுங்கூட , நாயேன் ( மல நடைப்பயிற்சி மிகுதியால் ) ஊனுடம்பை உகந்து ஓம்புகின்றேன் . ஓம்பும் நாயேனது உள்ளே உற ஐவர் நின்றார் . அதுவே ஏது . உன்னை உகத்தலின் நீங்கி ஊனை உகத்தற்குப் பிறவிதோறும் ஐவர் உகந்ததையே உகந்து பயின்று வந்து , உன்னை உகந்து நணுகுந்தக வில்லாதேன் நான் . உகந்ததே என்றது ` உகந்தே ` என நின்றது . ` தான் ` என்பது அசை . நின்றார்தாம் எனல் வேண்டுவது எதுகை நோக்கி . நின்றார்தான் எனலாயிற்று எனலுமாம் . ( தி .4 ப .27 பா .6) குறிப்பு நோக்குக . ` தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான ` என்புழித் ` தாம் ` என்றது போல்வது இது . அது ` தாம் `. இது ` தான் `. தான் :- அவர் என்னும் சுட்டுப் பொருட்டு . உகந்ததே உகத்தல் தகவிலாதது . கான்றசோறென அருவருத்தல் செய்யாமையே அது . ` காலாக்கினி புவனமுதல் அநாசிருத புவனம் ஈறாயுள்ள எவ்வகைப் பட்ட புவனமும் இதற்குமுன் அனுபவித்துக் கழித்தமையிற் கான்றசோறெனக் கண்டு அருவருத்துவிட்டு , அறுவகை அத்துவா வுட்பட்ட மூவகைப் பிரபஞ்சமும் காரண ரூபத்திற் சிறிதும் காணப் படாமையாற் பித்திகை வடிவம் காண்பார்க்குக் காணப்படாதாய் அதன்கண் மறைந்த சித்திர வடிவம்போல முழுப்பொய் எனக் கண்டு , அவ்வாறு கண்ட காட்சி சலியாதிருத்தல் வேண்டும் ( சித்தியார் . சூ . 9:- 6 உரை ) அச் சலித்தலுக்கு அடிப்படை ஐவர் குறும்பேயாகி அவர் உகந்ததே உயிர் உகத்தலாகிய தகவன்மை . ஆண் - எருது . உகந்து - உயர்ந்து ; விரும்பி என்றலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

கட்டமே வினைக ளான காத்திவை நோக்கி யாளாய்
ஒட்டவே யொட்டி நாளு முன்னையுள் வைக்க மாட்டேன்
பட்டவான் றலைகை யேந்திப் பலிதிரிந் தூர்க டோறும்
அட்டமா வுருவி னானே யாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

தன் பரிசழிந்த பெரிய மண்டையோட்டைக் கையில் ஏந்திப் பிச்சை எடுத்து ஊர்கள்தோறும் திரிந்தவனாய் உள்ள அட்ட மூர்த்தியாம் ஆவடுதுறைப் பெருமானே! அடியேன் துன்பம் மேவுதற்குக் காரணமான வினைகள் சாராதவாறு தடுத்து , உனக்கு அடியவனாய் , நீ அருட் கண்ணால் நோக்கி அடியேன் உயிரோடு ஒட்டும்படியே , அடியேனும் உன்னோடு ஒட்டி நாளும் உன்னைத் தியானித்தலைச் செய்ய இயலாதேனாய் உள்ளேன் .

குறிப்புரை :

கட்டமே ஆன வினைகள் இவை காத்து நோக்கி ஆளாய் என்க . கட்டம் :- வடசொற்றிரிபு ( தி .4 ப .57 பா .4.) வினைகளான இவை எனலுமாம் . கட்டம் மே - துன்பம் மேவுதற்குக் காரணமான ( வினைகள் ). காத்து - சாராதவாறு தடுத்து . நோக்கி - அருட்கண்ணாற் பார்த்து . ஒட்டவே - உயிரோடு நீ ஒட்டும் படியே . ஒட்டி - நான் உன்னொடு ஒட்டி , ` உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி ` ` ஒட்டியாட் கொண்டு போயொளித்திட்டவுச்சிப் போதன் ` ( தி .7 ப .59 பா .10) நாளும் என்னுள்ளே உன்னை வைக்க மாட்டேன் . பட்டதலை ; வான்தலை . ` வெடி படு தலையர் ` ( தி .4 ப .56 பா .5) குறிப்பு நோக்குக . பிரமகபாலம் . பலிக்காகத் திரிந்து . ஊர்கள் தோறும் திரிந்து . கள்ளீறு தோறு என்ற இரண்டுள் ஒன்று பன்மை குறிக்கப்போதும் . ஆயினும் பின்னது ஒவ்வொரூரையும் குறிக்க நின்றது . அட்டமாவுரு - அட்டமூர்த்தம் . ` அட்டமாமலர்கள் ` ( தி .4 ப .41 பா .2) ` அட்டமாநாகம் ` ( பா .5) என்று பாடம் போல்வது . மாவுரு - பெருவடிவம் . மே :- முதனிலைத்தொழிற்பெயர் .

பண் :

பாடல் எண் : 4

பெருமைநன் றுடைய தில்லை யென்றுநான் பேச மாட்டேன்
ஒருமையா லுன்னை யுள்கி யுகந்துவா னேற மாட்டேன்
கருமையிட் டாய வூனைக் கட்டமே கழிக்கின் றேனான்
அருமையா நஞ்ச முண்ட ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

பெருமைகளை மிகுதியாக உள்ள தில்லைத் திருத்தலத்தைப் பற்றிப் பேசி நல்வினையைத் தேடிக் கொள்ளமாட்டேன் . ஒருமைப்பட்ட உள்ளத்தாலே உன்னை நினைத்து உகந்து பேசி வீட்டுலகை அடையமாட்டேன் . ஆணவச் சார்பால் எய்திய உடம்பைத் துயரத்திலேயே கழிக்கின்றேன் . நுகர்தற்கு அரிய விடத்தை உண்டு அருளிய ஆவடுதுறைப் பெருமானே ! அடியேற்கு அருளுக .

குறிப்புரை :

பெருமை நன்று (- பெரிதும் ) உள்ள தில்லை என்று ( ஒருமுறையேனும் ) உன் திருத்தலம் என்று பேசிச் சிவநல்வினை தேடிக்கொள்ளமாட்டேன் . உடையது இல்லை எனல் சிறவாது . ஒருமை நெஞ்சொருமையுடன் , உன்னை நினைத்து , உயர்ந்து , வீட்டுவகை அடையமாட்டேன் . கருமை - ` காரிட்ட ஆணவக் கருவறை ` ( தாயு மானவர் ) கருமை இட்டு ஆயஊன் - ஆணவச் சார்பால் எய்திய ஊனுடம்பு . கட்டமே - கட்டத்திலே . நான் கழிக்கின்றேன் . உண்ணுதற்கு அருமையாம் நஞ்சத்தை ( எளிதாய் ) உண்ட .

பண் :

பாடல் எண் : 5

துட்டனாய் வினைய தென்னுஞ் சுழித்தலை யகப்பட் டேனைக்
கட்டனா வைவர் வந்து கலக்காமைக் காத்துக் கொள்வாய்
மட்டவிழ் கோதை தன்னை மகிழ்ந்தொரு பாகம் வைத்து
அட்டமா நாக மாட்டும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் மாலையை அணிந்த பார்வதியை மகிழ்வோடு ஒரு பாகமாக்கொண்டு எட்டுப் பெரிய பாம்புகளை ஆட்டுகின்ற ஆவடுதுறைப் பெருமானே ! கொடியவனாய் வினை என்று சுழியில் அகப்பட்ட என்னைப் பாசத்தை உடையேனாக ஐம்பொறிகள் கலக்க முடியாதபடி பாதுகாத்து உன் அடியவனாகக் கொள்வாயாக .

குறிப்புரை :

துட்டன் - கொடியன் . ` வினை ` என்னும் சுழியுள் அகப்பட்ட என்னை ` பிறவிச் சுழி ` ( தி .4 ப .96 பா .3) கட்டனாக உள்ள என்னை ஐவர் வந்து கலக்காதவாறு காத்து . ஆளாக்கிக் கொள்வாய் . கட்டன் - பாசத்தை உடையவன் ( பசு ) ` கட்டனேன் பிறந்தேன் உனக்காளாய் ` ( தி .7 ப .54 பா .2) கட்டு - பொய் . கட்டன் - பொய்யன் எனலும் ஆம் . கட்டனல்லன் எனில் , ஐவர் கலக்கமாட்டார் . மட்டு - தேன் . கோதை - கூந்தல் ; மாலை ; மாது ; மாலையைச் சூடிய கூந்தலையுடைய மாது என முப்பொருட்கும் பொதுவாய் நின்றதொரு பெயர் . ஒரு பாகம் மகிழ்ந்து வைத்து , அட்டநாகம் , மாநாகம் , எட்டுப் பாம்பு ஆட்டும் இறைவன் ` புற்றிலாடர வாட்டும் புனிதனார் ` ( தி .5 ப .87 பா .3) ` அட்டபுயங்கப் பிரான் ` புயங்கம் - பாம்பு . ` கரிய பாம்பும் பிடித்தாடி `.

பண் :

பாடல் எண் : 6

காரழல் கண்ட மேயாய் கடிமதிற் புரங்கண் மூன்றும்
ஓரழ லம்பி னாலே யுகைத்துத்தீ யெரிய மூட்டி
நீரழற் சடையு ளானே நினைப்பவர் வினைக டீர்ப்பாய்
ஆரழ லேந்தி யாடும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

கரிய நெருப்பைப் போன்ற விடத்தை கழுத்தில் இருத்தி , பெரிய மதில்களை உடைய முப்புரங்களையும் ஒரு தீ அம்பைச் செலுத்தித் தீயினால் எரியுமாறு செய்து , கங்கையைத் தீப்போன்ற சடையில் வைத்துத் தன்னை விரும்பும் அடியவர்களுடைய வினைகளைத் தீர்ப்பவனாய் அரிய நெருப்பை உள்ளங்கையில் ஏந்திக் கூத்து நிகழ்த்தும் ஆவடுதுறைப் பெருமானே !

குறிப்புரை :

கார் அழல் - கரிய தீப்போலும் வெய்ய நஞ்சம் . அழல்போலும் நஞ்சு , உவமவாகுபெயர் , கண்டம் - திருக்கழுத்து , மேயாய் - பொருந்தியவனே ; விரும்பி ( யருந்தி ) யவனே , கடி - காவல் , ஓர் அம்பு , ஈரம்புகண்டிலம் ஏகம்பர் தம்கையில் ஓர் அம்பே முப்புரம் உந்தீபற ; ஒன்றும் பெருமிகையுந்தீபற ` ( தி .8 திருவா .) அழல் அம்பு - தீக்கணை ( தி .1 ப .11 பா .6, தி .2 ப .50 பா .1, தி . 6 ப .86 பா .10, தி .7 ப .16 பா .5). உகைத்து - செலுத்தி . நீர் - கங்கையைச்சூடிய , அழற் சடை :- உவமத்தொகை . அழல்போலும் ஒளிர் செஞ்சடை . நினைப்பர் - இடைவிடாது தியாநம் புரிபவர் . ஆர் அழல் - பொறுத்தற்கரிய தீ , பண்புத்தொகை . ஆர்ந்த அழல் என வினைத்தொகையுமாம் . அழலை ஏந்தி ஆடும் :- ` தீத்திரள் அங்கையேந்தி நின்றார் ` ( தி .5 ப .26 பா .2).

பண் :

பாடல் எண் : 7

செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லே னினையுமா நினைய மாட்டேன்
அறிவிலே னயர்த்துப் போனே னாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆவடுதுறைப் பெருமானே ! மனத்திலே அலைதல் இன்றி செறிவு இல்லாதேனாய்ச் சிவன் அடிகளை அறிய மாட்டேனாய்க் குறிக்கோள் இன்றி நற்பண்பின்றிப் பெரியோர்கள் கூறும் வழியிலே உன் புகழைச் சொல்ல மாட்டாதேனாய் நல்வழியில் செல்லும் அறிவில்லேனாய் நினைக்க வேண்டிய வழியிலே நினைக்க மாட்டேனாய் இவ்வாறு உண்மை அறிவு இன்மையால் புல்லறிவினால் மயங்கிப் போயினேன் .

குறிப்புரை :

சிந்தையுள்ளே செறிவிலேன் :- ` நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிகப்பொல்லேன் ` ( தி .7 ப .73 பா .4) சீலம் இன்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றி ` ` செறிவுண்டேன் மனத்தாற் றெளிவுண்டேற்றேற்றத்தால் ` ( தி .7 ப .59 பா .5) யோகம் அந்தக்கரண சம்பந்தம் உடையது . ஞானாவத்தை யெல்லாம் உணர்வின்கண் நிகழ்வன . இருவேறவத்தையும் ஒன்றென்றுணர்ந்து மயங்கியிடர்ப் படுவோர் பலர் . யோகிற்றருவதோர் சமாதிதானும் தாழ்ந்து பின் சனனஞ்சாரும் சித்தியார் ( சூ 4:- 34) என்றதன் உரையில் , ` இந்த யோகாவத்தையைத் தானே மீட்சியில்லாததாகிய ஞானாவத்தை போலும் எனக் கொண்டு ) மயங்குவார்க்கு அங்ஙனம் மயங்காமைப் பொருட்டு இதனை அதனோடு ஒப்பவைத்து ஈண்டுக் கூறினார் . ` சகலத்திற் சுத்தம் ` ( சிவஞா . மா - முனிவர் உரை ). சிவனடி - திருவருள் . குறி - உயிர்க்குச் செல்வழி முடிவாகிய இலக்கு . இது மெய்ந் நெறிக்குறி . பொய்ந்நெறிக்குறிபோல இதுவும் பல்வேறாகும் . ஆயினும் சைவ சித்தாந்தமார்க்க லட்சியமே ஈண்டுக் குறி எனப்பட்டது . ` குறிக் கோளிலாது கெட்டேன் ` ( தி .4 ப .67 பா .9) குணம் ஒன்று - அருளை யடைதற்குரிய பண்புகளுள் ஒன்று . கூறும் ஆ ( று ) - வேத சிவாகமங்களிற் சொல்லும் வண்ணம் . கூற - உன் புகழ் சொல்ல , நெறிபடுமதி - திருவருணெறியிற் பொருந்தும் அறிவு , மதிநுட்பமுமாம் . நினையுமா ( று ) - சிவாகம விதிப்படி தியானம் புரியும் முறைமை . அறி விலேன் - நூலறிவு இல்லேன் . அயர்ந்து - இளைத்து . ` மதிநுட்பம் நூலோடுடையார்க்கு அதி நுட்பம் யாவுள முன் நிற்பவை ` ( குறள் ) என்புழிப் போல , மதிநுட்பத்தை ` நெறிப்படுமதி ` என்றும் நூலை ` அறிவு ` என்றும் குறித்ததாகக் கொள்ளலாம் . ` போனேன் ` :- போதல் ஈண்டு மெய் வினையன்று , அறிவின் நிலைமை .

பண் :

பாடல் எண் : 8

கோலமா மங்கை தன்னைக் கொண்டொரு கோல மாய
சீலமே யறிய மாட்டேன் செய்வினை மூடி நின்று
ஞாலமா மிதனு ளென்னை நைவியா வண்ண நல்காய்
ஆலமா நஞ்ச முண்ட வாவடு துறையு ளானே.

பொழிப்புரை :

ஆலகால விடத்தை உண்ட ஆவடுதுறைப் பெருமானே ! அழகிய பார்வதி பாகனான அழகினை உடைய உன் தன்மையை அறிய மாட்டேனாய் யான் செய்யும் இருவினையும் என்னைப் பிணித்து இவ்வுலகப் பாசத்துள் என்னை வருத்தாத வகையில் அடியேனை விரும்பிப் பாதுகாப்பாயாக .

குறிப்புரை :

கோலம் - அழகு . மாமங்கை - பெரியநாயகி ; ஒப்பிலா முலையம்மை , ஒருகோலம் - ஒப்பற்ற அம்மையப்பர் திருக்கோலம் , சீலம் - தன்மை , ` சீலமோ உலகம் போலத் தெரிப்பரிது `. ( சித்தியார் ), செய்வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் - யான் செய்த இருவினையும் பந்தித்து நின்று பிரபஞ்சமாகிய இப்பாசத்துள் என்னை அழுத்தி வருத்தப் படுத்தாதவாறு காத்தருள்வாய் . ஆலமாம் நஞ்சு - ஆலகாலவிடம் , நஞ்சு பலவற்றுள் ஆலகால மென்பது இஃது என்று பிரித்துணர்த்திய அடைமொழி .

பண் :

பாடல் எண் : 9

நெடியவன் மலரி னானுந் நேர்ந்திரு பாலு நேடக்
கடியதோ ருருவ மாகிக் கனலெரி யாகி நின்ற
வடிவின வண்ண மென்றே யென்றுதாம் பேச லாகார்
அடியனே னெஞ்சி னுள்ளார் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

திருமாலும் பிரமனும் தம்முள் உடன்பட்டு அடியும் முடியும் தேடுமாறு விரைவில் தீத்தம்பமாய் நின்ற தன் வடிவமும் தன் நிறமும் இன்ன என்று தம்மால் பேச இயலாதாராக அவ்விருவரும் இருக்க ஆவடுதுறைப் பெருமான் அடியேன் உள்ளத்துள்ளே நிலையாக வீற்றிருக்கிறான் .

குறிப்புரை :

நெடியவனும் மலரினானும் . நேர்ந்து - உடன்பட்டு , பால் - ( மலரோன் மேலும் மாயோன் கீழும் ஆகச் சென்ற ) பக்கம் . நேட ( தேட ) நீட என்பதன் மரூஉ . கடியதோருருவம் :- ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதியால் எய்தும் கடுமையுடையதோருட் குடைமை கனலும் எரிவடிவம் உருவும் வடிவும் வேறுபட்டன . ` பல் வகை வடிவு ..... பொருட்குணம் ` ( நன்னூல் . 454) ` உருவுட்காகும் ` ( தொல்காப்பியம் , சொல் , உரி . 4) ` ஒப்பும் உருவும் வெறுப்பும் கற்பும் ஏரும் எழிலும் சாயலும் நாணும் மடனும் நோயும் வேட்கையும் நுகர்வும் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள ` என்றார் ( தொல் . பொருளியல் இறுதி ). வண்ணம் வடிவு அளவு சுவை என்னும் பண்பின் வகையுள் ஒன்றாய்க்கட்புலனாவது வடிவு , கட்புலனாகாது நெஞ்சு கொளற்பாலது உருவு எழுத்தின் ஒலி உருவரி வடிவு இரண்டும் பாயிரத்தினுரையில் நச்சினார்க்கினியரால் விளக்கப்பட்டமை உணர்க . வண்ணம் வடிவை இடமாகக்கொண்டு கட்புலனாவது . உருவை நிலைக்களமாகக்கொண்டு நெஞ்சு கொளற்பாலதாம் வண்ணமும் உண்டு . ` இன்னவுருவென்றறிவொணாதான்றான் காண் ` ( தி .6 ப .49 பா .8) ` அவன் இவன் என்று யாவர்க்கும் அறியவொண்ணாச் செம் பொன் காண் ` ( தி .6 ப .85 பா .3) ` இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக் காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10) என்று அருளியவை வடிவு வண்ணங்களைப் பேச லாகாமையுணர்த்தும் . என்றே என்று என்றது ` ஒன்றே என்று ` என்று இருந்ததோ ? பேசலாகாதவராயினும் , அடிமைத் திறமுடையார் நெஞ்சினின்றகலான் என்பார் , அடியனேன் நெஞ்சினுள்ளார் ` என்ற அநுபவத்தை யுணர்த்தினார் . ` பேசலாகார் ` என்பது பேசுதலுக்கு அகப்படாதவர் ; சிந்தையும் மொழியுஞ்செல்லாத நிலைமையர் என்னும் பொருட்டாம் . பேசலாகாது என்ற வழக்கின் பொருளதுமாகும் .

பண் :

பாடல் எண் : 10

மலைக்குநே ராய ரக்கன் சென்றுற மங்கை யஞ்சத்
தலைக்குமேற் கைக ளாலே தாங்கினான் வலியை மாள
வுலப்பிலா விரலா லூன்றி யொறுத்தவற் கருள்கள் செய்து
அலைத்தவான் கங்கை சூடும் ஆவடு துறையு ளானே.

பொழிப்புரை :

கயிலைமலைக்கு நேராக இராவணன் சென்று சேரப் பார்வதி அஞ்சத் தன் தலைக்கு மேலே கைகளாலே அம் மலையைப் பெயர்க்கத் தாங்கிய அவன் வலிமை அழியுமாறு என்றும் அழிவில்லாத தன் கால்விரலால் ஊன்றி அவனைத் தண்டித்து , அலைகளை உடைய சடையில் கங்கையைச் சூடும் ஆவடுதுறைப் பெருமான் பின் அவனுக்கு அருள் செய்தான் .

குறிப்புரை :

மலைக்கு - திருக்கைலையங் குன்றத்துக்கு . சென்றுற - போய் நிற்க . மங்கை - உமாதேவியார் . தலைக்குமேற் கைகளாலே தாங்குதல் :- மலையைக் கைகளால் எடுத்துத் தலைக்குமேலே தூக்கிப் பிடித்துத் தாங்குதல் . தாங்கினானது வலியை , மாளஊன்றி ஒறுத்து , செய்து சூடும் ஆவடு துறையுளான் என்க . உலப்பு இலாவிரல் :- அழிவிலாத திருக்காற்பெருவிரல் . உலப்பிலாவொன்றே உணர்வு சூழ் கடந்ததோருணர்வே `, அலைத்த கங்கை . வான் ( ஆகாச ) கங்கை .
சிற்பி