திருவீழிமிழலை


பண் :

பாடல் எண் : 1

பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர்
சீதத்திற் பொலிந்த திங்கட் கொழுந்தர்நஞ் சழுந்து கண்டர்
கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வி யாளர்
வேதத்தின் பொருளர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

பூதத்தின் படையினராய் , பாம்பாகிய அணிகளை உடையவராய் , பூணூலை அணிந்தவராய் , குளிர்ச்சி , மிகுந்த பிறையைச் சூடியவராய் , விடம் பொருந்திய கழுத்தினராய் , பாடலோடு பொருந்திய ஓசைச் சிறப்பை உடைய வேதம் ஓதுபவராய் , வேள்வியை ஆள்பவராய் வேதத்தின் பொருளராய் வீழிமிழலையில் விகிர்தராம் இயல்புள்ள சிவபெருமான் விளங்குகிறார் .

குறிப்புரை :

பூதப்படையுடையவர் . பாம்பாகிய பூணணிந்தவர் . பூணநூல் - பூணூல் . ` நூலது வேதம் நுண்சிகை ஞானமாம் ` ( தி .10 திருமந்திரம் ) பூணம் + நூல் . இருபெயரொட்டு . பூணனூல் என்றதன் மாற்றம் எனலும் , ` பூண் + அ + நூல் எனலும் ஆம் . ( கொள் + அம் + பூதூர் = கொள்ளம் பூதூர் .) சீதம் - குளிர்ச்சி . ` திங்கட்கொழுந்து .` ` பிறைக்கொழுந்து .` நஞ்சு அழுந்துகண்டர் :- வெளியேயும் வாராது வயிற்றுள்ளும் செல்லாது திருக்கழுத்தில் நின்றது பற்றி நஞ்சு அழுந்து கண்டர் என்று அருளினார் . கீதம் - இசைப்பாட்டு . கீதத்திற் பொலிந்த வோசைக் கேள்வியர் வேள்வியாளர் வேதம் என்றுகொண்டு கேள்வியரும் வேள்வியாளருமாகிய அந்தணரது மறை என்றுரைக்க . பா .10. பார்க்க . கீதத்திற்பொலிந்த ஓசை என்பது பழமறைப் பாட்டொலி , கற்றலின்றிக் கேட்டல் கடனாதலின் மறையைக் கேள்வி என்றே வழங்குவர் . ` சுருதி ` என்றதும் அப்பொருட்டாதல் ` இரு பிறப்பாளர் மூவரானும் இயல்பாக இறுக்கப்படூஉம் கடன் மூன்றனுள் முனிவர்கடன் கேள்வி யானும் தேவர் கடன் வேள்வியானும் தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படா `. ( திருக்குறள் . அதிகாரம் . 7. பரிமேலழகர் ( தலைப்பின் விளக்கமாகிய ) உரைத் தொடக்கம் . ) பதிற்றுப் பத்து பா . 70 - ` தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற வேள்வியிற் கடவுளருத்தினை , கேள்வி உயர்நிலையுலகத்தை யரின்புறுத்தினை , வணங்கியசாயல் வணங்கா வாண்மையிளந் துணைப்புதல்வரின் முதியர்ப்பேணித் தொல்கடன் இறுத்த வெல்போ ரண்ணல் ` என்றதே பரிமேலழகர் உரைக்கு ஆதாரம் . ஓசையையுடைய மறைக்கேள்வி யுடையவர் . வேள்வியை ஆள்பவர் ; அவரது வேதம் ; அவ்வேதத்தின் பொருளாயிருப்பவர் திருவீழிமிழலை விகிர்தனார் . ` விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை ` வேதியா , வேத கீதா ` ( தி .4 ப .62 பா .1.) என்றவாறும் கொள்ளலாம் . விண்ணில் இருந்து மண்ணிலுற்றமையை விகிர்தனார் ` என்று குறித்தருளினார் வாகீசராகிய சுகிர்தனார் .

பண் :

பாடல் எண் : 2

காலையிற் கதிர்செய் மேனி கங்குலிற் கறுத்த கண்டர்
மாலையில் மதியஞ் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும்
ஆலையிற் பாகும் போல வண்ணித்திட் டடியார்க் கென்றும்
வேலையி னமுதர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

காலை ஞாயிற்றின் ஒளியை உடைய திருமேனியராய் , இரவு இருள் போலக் கறுத்த கழுத்தினராய் , மாலையில் தோன்றும் பிறையணிந்த சடை முடியினராய் , தேனும் பாலும் கரும்பின் பாகும் கடலில் தோன்றும் அமுதமும் போல அடியவர்களுக்கு இனிப்பை நல்குபவராய் வீழிமிழலையில் உள்ள விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

காலையிற் கதிர் - காலையில் உதயம் புரியும் செங்கதிரோன்போலக் கதிரைச் செய்கின்ற மேனி சிவபிரானது திருமேனி . அக் கதிர்போலும் மேனியுமாம் , கங்குலின் - இரவு போல . கறுத்த கண்டர் - திருநீலகண்டர் . மாலையின் மதியம் - ` மாசில் வீணையும் மாலைமதியமும் ` ` காலைக்கதிர் செய் மதியம் கண்டேன் ` என்றதும் உண்டு . ( தி .6 ப .77 பா .2) மகுடம் - சடைமுடி அடியார்க்கு மதுவும் பாலும் ஆலைக்கரும்பின் பாகும் பாற்கடலமுதமும் போல என்றும் அண்ணித்திட்டு இருப்பவர் . ` நல்லிட்டமாய்த் திருப்புத்தூரனைச் சிந்தை செயச் செயக் கருப்புச்சாற்றிலும் அண்ணிக்குங்காண்மினே ` ( தி .5 ப .61 பா .5) ` ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் ` ( தி .8 திருவாசகம் .) மது - தேன் . ` ஆலைக்கரும்பின் இன் சாற்றை `. ( தி .4 ப .15 பா .8.) அமுது - ( அமிர்தம் ) - இறவாமைக் காப்பது . வேலை ` ஈண்டுப் பாற் கடலின் மேலது . கண்டமும் மகுடமும் அகத்தும் புறத்தும் இனியர் என்ற குறிப்பு உணர்த்தும் . ` இன் ` மூன்றும் உவமம் .

பண் :

பாடல் எண் : 3

வருந்தின நெருந லின்றாய் வழங்கின நாள ராற்கீழ்
இருந்துநன் பொருள்க ணால்வர்க் கியம்பின ரிருவ ரோடும்
பொருந்தினர் பிரிந்து தம்பாற் பொய்யரா மவர்கட் கென்றும்
விருந்தினர் திருந்து வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

நாளை , நேற்று , இன்று என்னும் முக்காலத்தும் இருப்பவராய் , ஆலமரத்தின் கீழ் அமர்ந்து மேம்பட்ட செய்திகளை முனிவர் நால்வருக்கு இயம்பியவராய் , திருமாலோடும் பிரமனோடும் பொருந்தியவராய் , தம்மை மறந்து தம்மிடம் பொய்யாக நடந்து கொள்பவருக்குத் தம்மை உள்ளவாறு அறிய இயலாத புதியவராய் வீழிமிழலை விகிர்தர் விளங்குகிறார் .

குறிப்புரை :

வருந் தினம் - வருகின்ற நாள் ; நாளை . நெருநல் + து = நெருநற்று . நேற்று மரூஉ . வழங்கினநாள் - நிகழ்ந்த நாள் . நாளையாய் நேற்றாய் இன்றாய் வழங்கிய நாளினர் . ` நெருநலையாய் இன்றாகி நாளையாகி நிமிர்புன்சடையடிகள் நின்றவாறு ` ( தி .6 ப .94 பா .1). ` இன்றுளார் நாளைஇல்லையெனும் பொருளொன்றும் ஓராது உழிதரும் ஊமர் ` ( தி .5 ப .84 பா .9) களுக்கு உணர்வரிது . நாளை - வர இருக்கும் நாள் . இன்று ( இல் + து ) வந்து இல்லா தொழியும் நாள் . நெருநல் ( நெரு + ந் + அல் ) - இறக்கும் பொழுதை நெருங்கி ஒழிதல் உற்ற நாள் . நெறுநற்று , நேற்று - நெருங்கிற்று என்றவாறு . வருந்தினமாயும் நெருநலாயும் இன்றாயும் வழங்கின நாளர் என்றதன் கருத்து :- காலாதீதனாயினும் , ( தி .4 ப .14 பா .2) கால தத்துவமாயிருந்து . ஆன்மாக்களைக் காலகாலராக்குங் காலகாலன் என்றவாறு . ` வானோர் தங்கட்கெல்லாம் காலனாம் காலனைக் காய்ந் தானாகும் ` ( தி .6 ப .15 பா .6). ( சிவஞான பாடியம் . காலதத்துவ விளக்கத்தை நோக்குக ). ஆல் - ` கல்லால்நிழல் `. ` ஆற்கீழ் இருந்து .... இயம்பினர் `:- ` ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச் செய்து ` ( தி .4 ப .36 பா .6). நன் பொருள்கள் - அறமுதற் பொருள்கள் ; நான்மறை , ஆறங்கம் . ` ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறங்கம் வேதம் தெரித்தானைத் திருநாகேச்சுரத்துளானைச் சேராதார் நன்னெறிக்கட் சேராதாரே ` ( தி .6 ப .66 பா .2). நால்வர்க்கு இயம்பினர் - சனகாதியர்க்குபதேசித்தார் . இருவர் - அயன் அரி . ` ஆதிமூர்த்தி பங்கனே பரமயோகீ `. ( தி .4 ப .26 பா .1.) ` இடமால் தழுவிய பாகம் `. தம்பாற் பொய்யராம் அவர்கட்குப் பிரிந்து . மெய்யராம் அவர்கட்குப் பிரியாது என்றும் விருந்தாய் இருப்பவர் . பிரிவிடம் கூறவே சேர்விடம் பெற்றாம் .

பண் :

பாடல் எண் : 4

நிலையிலா வூர்மூன் றொன்ற நெருப்பரி காற்றம் பாகச்
சிலையுநா ணதுவு நாகங் கொண்டவர் தேவர் தங்கள்
தலையினாற் றரித்த வென்புந் தலைமயிர் வடமும் பூண்ட
விலையிலா வேடர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

எங்கும் இயங்கிக் கொண்டிருந்த மும்மதில்களை அக்கினி , திருமால் , வாயு இவர்களை உறுப்பாகக் கொண்ட அம்பு , மலையாகிய வில் , பாம்பாகிய நாண் இவற்றைக் கொண்டு அழித்தவராய்த் தேவர்களின் தலைமாலையும் , தலைமயிராலாகிய பஞ்சவடி என்னும் பூணூலும் அணிந்தவராய் , யாரும் விலை மதித்தற்கில்லாத வேடத்தை உடையவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

நிலையிலாவூர் திரிபுரம் . ( திரிகின்ற ஊர் ). ஊர் மூன்று - முப்புரம் ; திரிபுரம் , ஒன்ற - ஒரு சேர ; பொருந்த . நெருப்பு - தீக்கடவுள் . அரி - திருமால் . காற்று - வாயுதேவன் . இம்மூவரும் அம்பின் உறுப்பு ஆகியவர் . ( தி .6 ப .86 பா .9.) ` கையினார் அம்பு எரிகால் ஈர்க்குக் கோலா ` ( தி .6 ப .86 பா .9) ` அரிவாள் கூர்எரி ` ( தி .2 ப .50 பா .1) ` எரி காற்றீர்க்கரிகோல் வாசுகி நாண் கல்வில் ` ( தி .1 ப .11 பா .6). சிலையும் நாகம் (- மலை ) நாணும் நாகம் ( - பாம்பு ), சிலையும் நாணதுவும் நாகம் ( - மலை ; பாம்பு ). நாகம் இருபொருளதாய் நின்றது . தேவர்களின் தலையினால் தரித்த என்பும் தலைமயிர் வடமும் பூண்ட விலையில்லா வேடத்தர் . ` பஞ்சவடிமார்பினான் ` ( தி .6 ப .90 பா .5 தி .7 ப .53 பா .6) ` நரைவிரவியமயிர் தன்னோடு பஞ்சவ்வடிமார்பன் ` ( தி .7 ப .71 பா .4).

பண் :

பாடல் எண் : 5

மறையிடைப் பொருளர் மொட்டின் மலர்வழி வாசத் தேனர்
கறவிடைப் பாலி னெய்யர் கரும்பினிற் கட்டி யாளர்
பிறையிடைப் பாம்பு கொன்றைப் பிணையல்சேர் சடையு ணீரர்
விறகிடைத் தீயர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

வேதத்தின் விழுமிய பொருளாக உள்ளவராய் , அரும்பு பூக்கும்போது வெளிப்படும் மணமுடைய தேனாகியவராய் , கறக்கும் பசுவின் பாலில் கரந்து எங்கும் பரந்திருக்கும் நெய் போன்றவராய் , கரும்புச்சாற்றின் கட்டி போன்று இனியராய் , பிறை , பாம்பு , கொன்றைமாலை இவற்றைத் தரித்த சடையில் கங்கை நீரை ஏற்றவராய் , விறகிடை மறைந்து பரந்திருக்கும் தீப்போலக் கரந்து எங்கும் பரந்தவராய் வீழிமிழலை விகிர்தனார் விளங்குகிறார் .

குறிப்புரை :

மறையிடைப் பொருளார் . ` வேதத்தின் பொருளர் ` ( பா .1). மொட்டு - அரும்பு . மலர்வழி - பூக்கும் வழி . வினைத்தொகை . மொட்டினது மலரும் வழி என்க . வாசம் - மணம் . தேனர் - தேனாய் இனிப்பவர் . அரும்பினிற் பெரும்போது கொண்டாய் மலர் விரும்பும் ஈசன் ` ( தி .5 ப .93 பா .7) என்புழி அரும்பு போது மலர் மூன்றும் குறள் 1227 இற் போல நின்றதுணர்க . கறவு - கறக்கும் ஆ , ` கற்றா `. பாலின் நெய்யர் . பாலிற்படு நெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதி யான் ` கரும்பினிற்கட்டியாளர் , ` கரும்பினிற் கட்டிபோல்வார் கடவூர் வீரட்டனாரே .` ( தி .4 ப .31 பா .4.) இன் கரும்பின்றன்னுள்ளால் இருந்த தேறற்றெளியானை ` ( தி .6 ப .66 பா .9) ` கரும்பொப்பானைக் கரும்பினிற் கட்டியை ` ( தி .5 ப .3 பா .2) ` கட்டியொக்குங் கரும்பினிடைத் துணி ` ( தி .5 ப .5 பா .6) ` கரும்பினைக் கட்டியைக் கந்தமாமலர்ச் சுரும் பினை ` ( தி .5 ப .93 பா .7) சடையுள் பிறை , பாம்பு , கொன்றைப் பிணையல் , ( கங்கை ) நீர் உடையவர் . விறகிடைத் தீயர் :- ` விறகிற்றீயினன் `.

பண் :

பாடல் எண் : 6

எண்ணகத் தில்லை யல்ல ருளரல்ல ரிமவான் பெற்ற
பெண்ணகத் தரையர் காற்றிற் பெருவலி யிருவ ராகி
மண்ணகத் தைவர் நீரி னால்வர்தீ யதனில் மூவர்
விண்ணகத் தொருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

எண்ணும் எண்ணத்திலே இல்லாதவரும் அல்லராய் , உள்ளவரும் அல்லராய் , பார்வதி பாகராய் , விண்ணில் ஒலிப் பண்பினராய்க் காற்றில் ஒலி ஊறு என்ற இரு பண்பினராய் , தீயிடை ஒலி ஊறு ஒளி என்ற மூன்று பண்பினராய் , நீரிடை ஒலி ஊறு ஒளி சுவை என்ற நாற்பண்பினராய் , மண்ணில் ஒலி ஊறு ஒளி சுவை நாற்றம் என்ற ஐந்து பண்பினராய் வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .

குறிப்புரை :

எண் அகத்து - எண்ணும் உள்ளத்தில் ; எண்ணத்தில் . அகம் பெயரும் உருபுமாம் . இல்லையல்லர் உள்ளர் அல்லர் . இல்லாத வரும் அல்லர் . உள்ளவரும் அல்லர் . ` மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார் ` ` உண்மையுமாயின்மையுமாய்க் கோனாகி ` ( தி .8 திருவா .). புறத்தே காண்பவர்க்கு அகத்தே உள்ளவரல்லர் . அகத்தே நினைவார்க்குப் புறத்தே இல்லாதவரும் அல்லர் எனலுமாம் . இமவான் - பனியுடையான் . பனியுடைய மலை வேறு மலையான் வேறு அல்ல . ` குணவான் , பலவான் ` என்புழிப்போல் வடமொழி மத்தும் வத்தும் உடைமைப் பொருட்டாய் நிற்கும் . பெண் - மலையரையன் மடப் பாவை . பெண்ணகத்தரையர் ( பெண் அகத்து அரையர் ) - ` மாதியலும் பாதியர் ` (1) விண்ணகத்தொருவர் , (2) காற்றிற் பெருவலியிருவர் . (3) தீயதனில் மூவர் . (4) நீரில் நால்வர் . (5) மண்ணகத்தைவர் . ` மண்ணதனிலைந்தை மாநீரினான்கை வயங்கெரியின் மூன்றை மாருதத்திரண்டை விண்ணதனிலொன்றை ` ( தி .6 ப .60 பா .3) ` பாரிடையைந் தாய்ப் பரந்தாய் போற்றி , நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி , தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி , வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி , வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி , ( தி .8 திருவாசகம் . 4:- 136 - 141). சிவஞானமாபாடியம் சூ . 8, அதி . 2, தன்மாத்திரை விளக்கத்தை ஈண்டு நோக்குக .

பண் :

பாடல் எண் : 7

சந்தணி கொங்கை யாளோர் பங்கினார் சாம வேதர்
எந்தையு மெந்தை தந்தை தந்தையு மாய வீசர்
அந்தியோ டுதய மந்த ணாளரா னெய்யால் வேட்கும்
வெந்தழ லுருவர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

சந்தனத்தை அணிந்த தனங்களை உடைய பார்வதிபாகர் , சாமவேதர் , அடியேனுக்குத் தந்தையாராகவும் பாட்டனாராகவும் முப்பாட்டனாராகவும் உள்ளவர் . காலை சந்தியிலும் மாலை அந்தியிலும் அந்தணாளர்கள் நெய்யால் வேள்வி செய்யும் விரும்பத் தக்க தீயின் உருவர் என இவ்வாறு வீழிமிழலை விகிர்தனார் உள்ளார் .

குறிப்புரை :

சந்து - சந்தனம் . பங்கு - இடப்பால் . சாமவேத கானம் பாடுபவர் . எந்தை - என்னப்பன் . எந்தை தந்தை - பாட்டன் . தந்தை தந்தை - பூட்டன் . அவனுக்குத் தந்தை - ஓட்டன் . பாட்டி பூட்டி ஓட்டி . ` ஓட்டிக்கு மேல் உறவில்லை ` என்பது பழமொழி . இது நான்கு நேரிப் பக்கத்தில் வழங்குகின்றது . ஆய ஈசர் - ஆகிய உடையார் . அந்தி - மாலையந்தி . உதயம் - காலைச்சந்தி . காலை மாலை என்றவாறு . அந்தணாளர் - அழகும் தண்மையும் ஆள்பவர் . ` அந்தத்தை அணவு வார் ` என்றது ஈண்டுப் பொருந்தாது . வேட்கும் - வேள்வி செய்யும் . வெந்தழல் - வெய்ய தீ ; விரும்புதற்குரிய தீ . தழலுருவர் - தீவடிவினார் . தீவண்ணர் வேறு . வேள்வித் தீவடிவர் வேறு . சிவாக்கினிரூபமாய் இருந்து வழிபடுவோரை உய்யக்கொள்பவர் . சிவபூசையின் அங்கத்துள் ஒன்று சிவாக்கினி பூசை . ` அக்கினி காரியம் ` எனப் பத்ததிகளிற் கூறப்படுவது உணர்க .

பண் :

பாடல் எண் : 8

நீற்றினை நிறையப் பூசி நித்தலா யிரம்பூக் கொண்டு
ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் ணிறைய விட்ட
ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில்
வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

திருநீற்றை நன்கு அணிந்து நாடோறும் ஆயிரம் தாமரைப் பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்த காலத்தில் ஒரு நாள் ஒரு பூக்குறையவே அப்பூவின் தானத்தில் தன் கண்ணைப் பிடுங்கி அர்ச்சித்த முறுகிய பக்தியை உடைய திருமாலுக்குச் சக்கரத்தைக் கொடுத்து அவன் விண்ணிலிருந்து கொணர்ந்து நிறுவிய கோயிலில் வீற்றிருந்து வீழிமிழலை விகிர்தனார் எல்லோருக்கும் அருள் செய்கிறார் .

குறிப்புரை :

திருவீழிமிழலையுள் , விண்ணிலிருந்து கோயில் வந்ததன் வரலாறு இதிற் குறிக்கப்பட்டுளது . திருமால் சக்கிராயுதம் பெறச்சிவனை வழிபடுங்கால் ஆயிரம் பூக்களுள் ஒன்று குறையவே அது நிறையக்கண்ணைப் பறித்து இட்டார் . இட்ட அவ்வலிமைக்கு ஆழி ( - சக்கிராயுதம் ) நல்கினார் விகிர்தனார் . அத்திருமால் தம் ஆன்மார்த்த மூர்த்தியை விண்ணிலிருந்து கொணர்ந்து மண்ணில் திரு வீழிமிழலையுள் வைத்து எல்லாவுயிர்களும் கண்டு போற்றி உய்யச்செய்தார் . இத்திருமுறையிலும் ` தேசனைத் தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை ` எனவும் , ` குறிக்கொண்டிருந்து செந்தாமரை ஆயிரம் வைகல் வைகல் , நெறிப்பட இண்டைபுனைகின்ற மாலை நிறையழிப்பான் கறைக்கண்ட நீ ஒரு பூக்குறைவித்துக் கண் சூல்விப்பதே , பிறைத்துண்ட வார்சடையாய் பெருங்காஞ்சியெம் பிஞ்ஞகனே ` எனவும் பெரிய காஞ்சியில் நடந்ததாகவும் இவ்வரலாறு குறிக்கப்படுவதுணர்க . திருநீற்றினை நிறையப் பூசலும் , நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி நித்தலும் பூசிக்க ஆயிரக் கணக்கிற் பூக்கொள்ளலும் , ஒன்று குறையினும் நிறைவிக்கும் விடா முயற்சியும் , அதனால் இறப்பச்சம் எய்தாது சிவசிந்தனையில் ஒழியாது நிற்றலும் பிறவும் இவ்வரலாறு குறித்தலறிக .

பண் :

பாடல் எண் : 9

சித்திசெய் பவர்கட் கெல்லாஞ் சேர்விடஞ் சென்று கூடப்
பத்திசெய் பவர்கள் பாவம் பறிப்பவ ரிறப்பி லாளர்
முத்திசெய் பவள மேனி முதிரொளி நீல கண்டர்
வித்தினின் முளையர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

சித்தியை விரும்புவார் தாம்தாம் சேர்விடஞ் சென்றுகூட வைத்தும் பத்தி செய்பவர்களின் பாவத்தை விலக்கியும் பக்குவர்க்கு முத்தி வழங்கியும் அருள்பவர் பவளம்போல் மேனியும் ஒளியின் முதிர்ந்த நீலகண்டரும் வித்தின் முளைபோல்வாருமாய் உள்ள திருவீழிமிழலை விகிர்தனாரே .

குறிப்புரை :

சித்திசெய்பவர்கட்கு எல்லாம் - சித்திகளை விரும்பி அவற்றிற்குரியவற்றைச் செய்யும் எல்லார்க்கும் , அவ்வச் சித்தித் தானங்களைச் சென்று அடையச் செய்பவர் . பத்தி ( தொண்டு ) செய்பவர் எல்லாருடைய பாவங்களையும் பறித்தகற்றுபவர் . மூவாச் சாவாமூர்த்தி . முத்தி ( வீடு ) செய்பவர் . பவளம் போலும் திருமேனியர் . முதிர்ந்த ஒளியுடைய திருநீலகண்டர் . வித்தின் முளையர் :- ` வித்தாம் முளையாகும் வேரேதானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கு ஓர் பாங்கனுமாம் ...... கருகாவூர் எந்தை .` ( தி .6 ப .15 பா .2) சித்தி , பத்தி . முத்தி மூன்றும் அறிவித்தவாறறிக .

பண் :

பாடல் எண் : 10

தருக்கின வரக்கன் றேரூர் சாரதி தடை நிலாது
பொருப்பினை யெடுத்த தோளும் பொன்முடி பத்தும் புண்ணாய்
நெரிப்புண்டங் கலறி மீண்டு நினைந்தடி பரவத் தம்வாள்
விருப்பொடுங் கொடுப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே.

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணன் தன் தேரைச் செலுத்திய சாரதி தடுத்ததனை மனங்கொள்ளாது கயிலைமலையைப் பெயர்க்க முற்பட்ட தோள்களும் அழகிய பத்துத் தலைகளும் புண்ணாகுமாறு சிவபெருமானால் நெரிக்கப்பட்டு , அலறி , மறுபடி அவன் அன்போடு நினைந்து சிவபெருமான் திருவடிகளைத் துதிக்க , அவனுக்கு வீழிமிழலை விகிர்தனராகிய அப்பெருமான் தம்முடைய வாளினை விருப்பத்தோடு வழங்கினார் .

குறிப்புரை :

தருக்கின அரக்கன் - எடுத்தற்கரிய கயிலையை எடுக்க வல்லேன் என்று தலை நிமிர்ந்து செருக்குற்றுப் பேசிய இராவணன் . தேர் ஊர் சாரதி - தேரினை ஊர்ந்து செல்லும் வலவன் . ` வலவன் ஏவா ` வானவூர்தி . தடை - கயிலைக் காவலர் தடுத்த தடையின் வண்ணம் . நிலாது - புகாது நில்லாமல் , பொருப்பு - கயிலைமலை . இருபது தோளும் பத்து முடியும் புண்ணாகி , நெரிப்பு - நெரித்தல் . நினைந்து - குற்றத்தை எண்ணி ; திருவடிகளைத் தியானம் புரிந்து , பரவ - வாழ்த்த , சாம கானம் பாட . விருப்பொடும் வாள் கொடுப்பர் .
சிற்பி