பொது


பண் :

பாடல் எண் : 1

தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியி னன்னீர்
கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி
இண்டைகொண் டேற நோக்கி யீசனை யெம்பி ரானைக்
கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

பொழிப்புரை :

தூய காவிரியின் தீர்த்தத்தைக் கொண்டு மந்திரங்களை ஓதி அபிடேகம் செய்து குங்குமக் குழம்பைச் சார்த்தி , தலையில் மாலையை அணிவித்து , நீலகண்டனாய் எம் தலைவனாய் இருக்கின்ற ஈசனை கண்குளிர நோக்கி மகிழாமல் , காலத்தை வீணாக்கின செயலிலே அடியேன் ஈடுபட்டவாறு வருந்தத்தக்கது .

குறிப்புரை :

மறையோதி , நீர் முதலியன ஆட்டித் , தார் முதலியன சூட்டி , வழிபட்டுக் கண்டு கண்டு கண்குளிரவும் உள்ளங்குளிரவும் பெறாது காலத்தைக் கழித்தமை கருதித் தொண்டனேன் பட்டது என்னே என்று இரங்கினார் . சிவ வழிபாட்டிலே காலங்கழித்தல் இன்றிப் பாவவழிப்போக்கிலே காலங்கழித்துப் பட்டது ஒன்றும் இல்லை என்பார் . ` பட்டது ( அடைந்தது ) என்னே ` என்றார் . நன்னீர் என்றதால் , தூய்மை காவிரிக்கு அடையாகும் . தூய நன்னீர் எனலுமாம் . கண்தனை - கண்ணை . ` உலகவுயிர்க்கெல்லாம் ஒரு கண்ணே ` ( இருபாவிருபஃது 20) ` கண்ணே கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய் காவாய் ` உள்ளத்தின் கண்ணாய கள்வன் ` ( சிவஞானபோதம் சூ . 9). கண்டு இராதே காலத்தைக் கழித்தவாற்றிலே தொண்டனேன் பட்டது என்னே என்க .

பண் :

பாடல் எண் : 2

பின்னிலேன் முன்னிலே னான் பிறப்பறுத் தருள்செய் வானே
என்னிலே னாயி னேனா னிளங்கதிர்ப் பயலைத் திங்கள்
சின்னிலா வெறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே
நின்னலாற் களைக ணாரே நீறுசே ரகலத் தானே.

பொழிப்புரை :

முதலும் முடிவும் இல்லாத அடியேனுடைய பிறவித் துயரைப் போக்கி அருள் செய்பவனே ! இளைய கதிர்களை உடைய பிறை தலையிலே சிறிதளவு ஒளிவீசும் , தேவர்கள் தலைவனாய்ச் சிவபுரத்து இருப்பவனே ! திருநீறணிந்த மார்பினனே ! அடியேனுக்கு என்று ஒரு பொருளும் இல்லாதேன் நான் . எனக்கு உன்னைத் தவிர பற்றுக்கோடு ஆவார் எவர் ?

குறிப்புரை :

பின்னிலேன் - முடிவில்லேன் . முன்னிலேன் . முதலில்லேன் . பதி பசு பாசம் ஆகிய முப்பொருளும் அநாதி நித்தியம் . ஆதலின் , நான் முன்னும் பின்னும் இல்லேன் என்றார் . நான் திருமுன் நின்று போற்றிலேன் , பின் நின்று வழிபட்டிலேன் எனலுமாம் உடலெடுத்தல் முன்னாகும் . அதை விடுத்தல் பின்னாகும் . ஆதலின் நான் பிறப்பும் இறப்பும் இல்லேன் . வினைத்திறத்தால் வருதலும் ஒழிதலும் உடற்கே உண்டு . அப்பிறப்பையும் ( இறப்பையும் ) அறுத்து அருள் செய்பவனே என்றலும் கூடும் . நாயினேன் நான் என் இல்லேன் ? நான் என் இல்லேன் ஆயினேன் . இளங்கதிர் - இளநிலா . பயலைத்திங்கள் - இளம்பிறை . பயல் , பயலை , பசலை , பையல் , பைதல் எல்லாம் இளமைப் பொருளவாதலும் ஆட்சியிலறியப்படும் . சில்நிலா - சிறிது நிலா . சென்னியிலே இளம்பிறை சில்நிலா எரிக்கும் . சிவபுரத்து ஏறு . அமரர் ஏறு , தேவர்கோ ( இந்திரனல்லன் ); விரும்பி வழிபடுவார்க்கிறைவன் எனலுமாம் . அமர்தல் - விரும்புதல் . திருநீறு பொருந்திய திருமார்புடையவனே நின்னை அல்லால் ஆர்களைகண் ( அடியேனுக்கு )? ` ஆர் ` மரூஉ . யாண்டு , யாமை , யானை , யாறு , யாடு , யாப்பு , யாக்கை , யாய் முதலியவை ஆண்டு , ஆமை , ஆனை , ஆறு , ஆடு , ஆப்பு , ஆக்கை , ஆய் முதலியனவாக மருவி வழங்குதலை உணர்க . யாவர் , யார் , ஆர் என்னும் முறையில் வைத்தறிதற்பாலது . யா + அர் = யாவர் . யா + அது = யாவது . இவற்றுள் யாவர் என்பது யார் என்றும் யாது என்பது யாவது என்றும் மருவின என்றார் தொல் காப்பியர் . யாது என்றதோ யாவது என மருவும் ? ( தொகைமரபு 30)

பண் :

பாடல் எண் : 3

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லா முடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.

பொழிப்புரை :

வஞ்சனை உடைய யான் , போலித் தொண்டனாய் , காலத்தைப் பல ஆண்டுகள் வீணாக்கி , பின் மனத்தெளிவு பெற்று உன்னைத் தேடி ஆராய்ந்து கண்டுகொண்டேன் . நினைப்பவர் நினைப்பனவற்றை எல்லாம் அவருடனேயே உள்ளத்தில் இருந்து கொண்டு , நீ அறிகின்றாய் என்பதை அறிந்து நான் வெட்கப்பட்டு உன்னைத் தேடிய என் அறியாமைக்கு என் விலாஎலும்பு ஒடியுமாறு சிரித்தேன் .

குறிப்புரை :

யானும் கள்ளனேன் . எனது தொண்டும் கள்ளத் தொண்டு . இவ்வாறு வினைமுதலும் வினையும் கள்ளத்தன்மை நீங்காமல் நிகழக் காலம் வீணே கழிகின்றது . ஞானத் தெளிவு சிறிதும் இல்லேன் , உள்ளேனாகி நின்று , ( நின்னைத்தேடினேன் . நினைப்பவர் நினைந்தவெல்லாம் நினைப்பவர் நினைப்புடன் இருந்துணர்கின்றாய் என்னும் உண்மையை நாடிக் கண்டேன் .) ` உள்குவார் உள்ளத்தானை உணர்வெனும் பெருமையானை ` ( தி .4 ப .75 பா .6) கண்டு நாணினேன் . நாணி நானும் என் விலாவெலும்பு இற்றொழியும் வண்ணம் சிரித்திட்டேன் . ` வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்களஞ்சுமகத்தே நகும் ` சடமாய பூதங்கள் நகும் எனினும் , அவற்றின் வழியாகச் சித்தாகிய முதலே உயிர்க்குயிராய் நின்றறிந்து சிரிக்கும் என்று கொள்க . இஃது உணர்விலதனை உணர்வுடையது போல வைத்தும் செய்யா மரபினதைச் செய்வது போலத் தொழிற்படுத்தும் கூறுதற்கண் அடங்கும் . ( தொல் பொருளியல் 2.) ` கள்ளரோ டில்லமுடையார் கலந்திடில் வெள்ள வெளியாம் என்றுந்தீபற ` ( திருவுந்தியார் ) உள்ளத்தின் கண்ணாய கள்வன் ( சிவஞானபோதம் சூ . 9. அதி .1 வெ . 2 ). ` ஏகமாய் உள்ளத்தின் கண்ணானான் உள்குவார் உள்கிற்றை உள்ளத்தாற் காணானோ உற்று `. ( ? சூ .9. அதி 11. வெ . 2. )

பண் :

பாடல் எண் : 4

உடம்பெனு மனைய கத்து வுள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி யுயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயா லெரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

பொழிப்புரை :

உடம்பு என்ற வீட்டிலே மனமே அகலாக , பசு ஞானமான உணர்வே நெய்யாக , உயிரே திரியாக , சிவஞானத் தீயினால் விளக்கை ஏற்றி , அந்த ஞான ஒளியிலே இலயித்திருந்து பார்க்கில் கடம்ப மலர் மாலையை விரும்பி அணியும் , முருகனுடைய தந்தையாகிய சிவபெருமானுடைய திருவடிகளைக் காணலாம் .

குறிப்புரை :

உடம்பு எனும் மனையகத்து :- ` மெய்யுணர்த்திய அப்போதமே நம் தஞ்சவுடல் , இந்தவுடல் எடுத்த வீடு தான் அழியும் அளவும் அதில் தங்குவார் போல் வஞ்சமுடன் அமர்தும் ` ( ஞான பூசாவிதி ) முதலியவற்றால் , உடலை வீடுபோலக் கூறுதலுண்மை உணர்க , உடம்பே வீடு . உள்ளமே தகளி ( அகல் ), உணர்வே நெய் . உயிரே திரி . ஞானமே தீ . உடலான வீட்டில் , சிவமானபொருள் இருப்பது , மடமான இருளால் தெரிந்திலது . விளக்கேற்றிப் பார்த்துணர்தல் வேண்டும் . உள்ளமான அகலுள் பசுஞானமான நெய் சேர்த்து , உயிரான திரியிட்டுச் சிவஞானமான தீயால் எரிதலைக் கொள்ள , அச் சிவஞானப்பிரகாசத்திலிருந்து நோக்கினால் , சிவமான பொருளைக்காணலாம் . நோக்கல் - அத்துவித பாவனை . மடம்படும் உணர் ( வு ) பசுஞானம் . மடம் படா உணர்வு சிவஞானம் . உணர் ` முதனிலைத் தொழிலாகு பெயராய் ஞானத்தை உணர்த்திற்று . மடம்படும் உணர்வு அவ்வியாபகம் ; சிவஞானம் ஆகிய பரை பரிபூரண ( வியாபக ) ம் என்பதைக் குறிக்க இடம்படு ஞானம் ` எனப்பட்டது . மடம்படு முணர் - சீவபோதம் . இடம்படு ஞானம் சிவபோதம் எனலுமாம் . ` அவனருளே கண்ணாகக்காணினல்லால் ... காட்டொணாதே ` ` அவனருளாலே அவன்தாள் வணங்கு ` அட்டி :- உதிரம் அட்டி ` ( தி .4 ப .67 பா .3) கடம்பு அமர் காளை - கடம்ப மலர் மாலையை விரும்பும் முருகப் பிரான் . தாதை - தந்தை . கழலடி - திருவடி . காண்டல் :- சிவாநந்தாநுபவத்தின்மேற்று .

பண் :

பாடல் எண் : 5

வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா
வஞ்சப்பெண் ணிருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும்
வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று
வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனே னென்செய் கேனே.

பொழிப்புரை :

வஞ்சனை உடைய பெண்ணாகிய கங்கை தங்கு மிடம் சடைமுடி . அந்தச் சடைமுடியிலே ஒளிபொருந்திய பற்களை உடைய பாம்புகள் உறங்காவாய் உள்ளன . அந்தச் செஞ்சடைச் சூழலிலே பிறை கங்கையில் தோய்ந்தவாறு உள்ளது . அந்தக் கங்கை யினுடைய வாழ்க்கையை ஆள்பவன் சிவபெருமான் . அவனைப் போன்ற வாழ்வை வாழத் தொடங்கி , வஞ்சனை உடைய அடியேன் , வஞ்சனை உடைய பெண்ணின் உறக்கத்தைப் போலப் பொய் வாழ்க்கை வாழ்ந்து யாது செய்ய வல்லேன் ?

குறிப்புரை :

வஞ்சப் பெண் - கங்காதேவி . அவள் இருக்கும் அரங்கையே கோயிலாகக் கொண்டு வாழ்வது பாம்பு . அவ்வாளெ யிற்றரவமும் வான்தவழ் மதியமும் வாழும் இடம் அச்செஞ்சடைச் சூழல் . வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் - செஞ்சடையோன் . வாழ்க்கை ஆளன் - வாழ்க்கையை ஆள்பவன் . அவ் வாழ்க்கை வஞ்சப்பெண் வாழ்க்கை . ( அவ் ) வாழ்வினை வாழலுறுதல் - ( அவ் ) வாழ்வை நடாத்த விழைதல் . வஞ்சப் பெண்ணுறக்கம் - ` கள்ளக் காதலனிடத் தன்புகலந்து வைத்தெழுகும் உள்ளக் காரிகை மடந்தை ` ( திருவிளையாடல் . வாதவூரடிகளுக்குபதேசித்தது . 17). பொய்யுறக்கம் போலும் உறக்கம் . கைப்பிடி நாயகன் தூங்கும்போது அவனை ஏய்த்துத் , தன்மேற்படும் அவன் கையெடுத்து அப்புறந்தள்ளிப் புறம் போக நினைக்குங் கள்ளக் காரிகையாகிய குடிச்செற்றியின் வஞ்சத் துயில் . உள்ளக்கிழவனை விட்டுக் கள்ளக் குழகனைத் தொட்டுக் காதலால் நட்டுவாழும் ஒருத்தி , இரவில் அவன் வரவு நோக்கித் தூங்காது கண்மூடியிருக்கும் பொய்நிலை . ஏழுலகும் பெற்றாலும் இளமை கழியாத எம்பெருமாட்டியைச் செம்பாதியில் உடைய நம்பான் , வம்பாகத் தலைமேலும் , மெய்ப்பாதியாள் அறியாதவாறு துய்ப்பாதியாளான வஞ்சப் பெண்ணை வைத்து உள்ளான் . அதனால் அவன் வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் ஆனான் . செஞ்சடை யாளியிடம் நெஞ்சகம் வைத்து , செம்பாதியாள் கண் மூடுங்காலத்தை நோக்கிக் கொண்டு உறக்கம் சிறிதும் இன்றி இருக்கின்றான் . சிவபிரான் உமையை ஏய்த்துக் கங்கையைக் கலக்க உறங்காதுள்ளான் . அவன் சென்னியில் மன்னிய பாம்பும் திங்களை விழுங்கக் கருதி உறங்காதிருக்கின்றது . அவ்வஞ்சப்பெண் வாழ்க்கையாளன் வாழ்வுபோலும் வாழ்வினை வாழலுற்றார் திருநாவுக்கரசு சுவாமிகள் . அதுவே ` உயிர்த் துணையாந் தோன்றாத் துணைக்கு ஓர்துணையாகித் துவாதசாந்தப் பெருவெளியில் துரியங்கடந்த பரநாத மூலத்தலத்து ` வாழ்வு . அக் குரவர் இருவரும் உற்றிடும் துவாதசாந்தத்து ஒரு பெருவெளிக்கே விழித்துறங்கும் வாழ்வு . இத் திருப்பாடலில் அறிவிப்பன :- (1) வஞ்சப் பெண்ணாகிய அலைமகள் அப் பெண் வாழ்க்கையாளனைத் தழுவ விழைந்து , மலைமகள் காணாவாறு வந்து தழுவத் தக்க தலைமகன் வரவினைநோக்கித் தூங்காது தூங்கியலைகின்றாள் . (2) செஞ்சடை முடியான் செம்பாதியாள் அறியாவாறு தலைமகளைத் ( ஏழன்றொகை யுமாம் ) தழுவத்துயிலாது துயில்கின்றான் . (3) வாள் எயிற்றுப் பாம்பு மதியை விழுங்கக் கருதிக் கண்வளராது வளர்கின்றது . (4) இடையில் அவ்வஞ்சப் பெண்ணை மதியம் தோய்கின்றது . (5) அப்பரும் வேணி யப்பரை அடைய விரும்பி , வஞ்சப் பெண்போல் உறங்காது உறங்கு கின்றார் . இந்நிலை துவாதசாந்தப் பெருவெளியில் விழித்துறங்கும் சிவயோகநிலை . சிவோகம் பாவனை நிலையும் ஆம் . முன்னது யோகம் . பின்னது ஞானம் . ` ஆங்காரம் அற்று உன் அறிவான அன்பருக்கே தூங்காத தூக்கமது தூங்கும் பராபரமே `; ` தூங்கிவிழித் தென்னபலன் `; ` தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்கு கண்டால் அன்றோ பலன் காண்பேன் பைங்கிளியே `; ` தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின் நிறைவில் நீங்காமல் நிற்கும் நிலைபெறவும் காண்பேனோ ?`; ` நீங்கா துயிருக்குயிராகி நின்ற நினை அறிந்தே தூங்காமல் தூங்கின் அல்லாதே எனக்குச் சுகமும் உண்டோ ?`; ` அரைசே பொன்னம்பலத் தாடும் அமுதே என்று உன் அருள் நோக்கி இரைதேர் கொக்கு ஒத்து இரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன் ` ` இடைவிடாதுன்னைச் சிக் கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே `; ` ஒன்றிற் பற்றும் இன்றிச் சொல்லும் பொருளும் இழந்து சுகாநந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பது என்றோ கயிலாயத்தனே `; ` சினந்தனை யற்றுப் பிரியமும் தான் அற்றுச் செய்கையற்று , நினைந்ததும் அற்று , நினையாமையும் அற்று நிர்ச்சிந்தனாய்த் தன்னந்தனியே இருந்து ஆனந்தநித்திரை தங்குகின்ற அனந்தலில் என்று இருப்பேன் அத்தனே கயிலாயத்தனே ?` ` பொற்புறுங் கருத்தே அகமாய் அதிற்பொருந்தக் கற்பின்மங்கையர் என விழி கதவுபோற் கவினச் சொற்பனத்திலும் சோர்வின்றி இருந்த நான் சோர்ந்து நிற்பதற்கு இந்த வினை வந்தவாறு என் கொல் நிமலா ` ` இரைதேர் கொக்கு ` ( திருச்செந்தூரகவல் ) ` ஞான சம்பந்தம் ` மலர் 7, இதழ் 3, (10-2-1948 ) இல் , இத் திருப்பாடலின் விளக்கமாக எழுதிய எம் கட்டுரையைக் காண்க .

பண் :

பாடல் எண் : 6

உள்குவா ருள்ளத் தானை யுணர்வெனும் பெருமை யானை
உள்கினே னானுங் காண்பா னுருகினே னூறி யூறி
எள்கினே னெந்தை பெம்மா னிருதலை மின்னு கின்ற
கொள்ளிமே லெறும்பெ னுள்ள மெங்ஙனங் கூடு மாறே.

பொழிப்புரை :

நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொண்டவனாய்ச் சிவஞானமாகிய பெருமையை உடையவனாய் உள்ள பெருமானை நானும் காண்பதற்கு நினைத்து , உருகி அன்பு ஊறி , உள்ளம் உருகினேன் . எந்தையாகிய பெருமானே ! உன்னை இரண்டு பக்கமும் பற்றி எரிகின்ற கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பு போன்ற என் உள்ளம் எங்ஙனம் அடைய இயலும் ?

குறிப்புரை :

உள்குவார் உள்ளத்தான் ` நினைப்பவர் மனம் கோயிலாக்கொண்டவன் ( தி .5 ப .2 பா .1)` ` நினைக்கும் நெஞ்சின் உள்ளார் `. ` நினைப்பார்கள் மனத்துக்கோர்வித்துமானாய் ` ( தி .6 ப .95 பா .7.) பெருமைக்குள் தலைசிறந்தது உணர்வே . அது பண்பு . அதன் பண்பு அவ் வுணர்வாகி நின்ற பேரின்பம் . துரியம் உணர்வு நிலை . துரியாதீதம் பேரின்ப நிலை . அருள் குணம் , ஆனந்தம் குணி என்றல் சைவ சித்தாந்த மரபு . ` உணர்வின்கண் ஒன்றானான் ` ( தி .6 ப .86 பா .3) என்புழி உணர்வும் அதன்கண் ஒன்றாவதும் என்று வேறாக வைத்துரைத்தல் அறிக . இவ்வுணர்வு பசுஞானம் அன்று . சிவஞானமே . பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பொருளைப் பதிஞானத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடிப்பாதநீழற்கீழ் நீங்காதே நில் ` ( சித்தி யார் ) ` உண்மை நின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னை ` ( தி .6 ப .84 பா .3) பரமசிவன் அத்தலை சிறந்த பெருமையாகிய அருளை யுடையவன் என்பார் , ` உணர்வு எனும் பெருமையான் ` என்றார் . ` பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா `. அவனைக் காண்பான் (- காண ) நினையா என் நெஞ்சை நினைவித்தான் ஆதலால் நானும் உள்கினேன் ஊறிஊறி உருகினேன் . ஊறுவது அன்பு . உருகுவது உள்ளம் . ` உருகுமனத்து அடியவர்கட்கு ஊறுந்தேன் ` ` அமுத னென்றள்ளூறித்தித்திக்கப்பேசுவாய் `. ` உருகுவது உள்ளங்கொண்டு ஓர் உருச்செய்தாங்கு அள்ளூறாக்கை அமைத்தனன் ` ( தி .8 திருவா .). எள்கினேன் - அரியனாகக் கருதாது எளியனென்று கொண்டிட்டேன் `. மழக்கையிலங்கு பொற்கிண்ணம் என்று அலால் அரியை என்று உனைக்கருதுகின்றிலேன் ` ( தி .8 திருவா . 5.92). எந்தைபெம்மான் :- என்னப்பனுக்கும் பெரியமகனை உள்ளத்தானை , பெருமையானை - பெம்மானை உள்ளம் கூடும் ஆறு எவ்வாறு ? இருதலை மின்னுகின்ற கொள்ளிமேல் எறும்பு என் உள்ளம் - இருபாலும் மின்னுகின்ற தீக்கொள்ளியின் நடுப்பட்ட எறும்பு போலும் ( எனது ) உள்ளம் , மின்னுதல் அன்றி எரிதல் கொள்ளிக்கில்லை . ` மேல் ` என்பது ஒரு தலையை நோக்கிக் காலப்பின்னாம் , ஒருதலையை நோக்கி இட முன்னாம் . ஆதலின் , நடு என்னும் பொருட்டெனல் புலனாம் . எறும்பு என் உள்ளம் - எறும்பு என்னும் உள்ளம் . என்ற - என்கின்ற - என்னும் என முக்காலத்திலும் விரியும் . என் - உவமவுருபுமாம் . ` தழல்போல் மேனி ` என்புழிப்போல . என்னுள்ளம் என்பதை ஆறன்றொகையாகக் கொள்ளின் . எறும்பு போன்ற உள்ளம் , எறும்பாகிய உள்ளம் என்றுரைத்துக் கொள்க . ` இருதலைக் கொள்ளியினுள்ளெறும்பு ஒத்து ` ( தி .8 திருவாசகம் 6 - 9).

பண் :

பாடல் எண் : 7

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன்
வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன்
சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொணோய் வடிவொன் றில்லா
ஊத்தையைக் கழிக்கும் வண்ண முணர்வுதா வுலக மூர்த்தீ.

பொழிப்புரை :

பிணத்தைக் கண்ட காக்கைகளைப் போல , அடியேனுடைய தீய வினைகள் அடியேனைச் சூழ்ந்து உன் பெருமையைப் பேச ஒட்டாமல் கலக்க , அடியேன் மயங்குகின்றேன் . உலகத்துக்குத் தலைவனே ! வெறுக்கத்தக்கதாய் , பண்பு அற்றதாய் நாற்றம் கொண்டதாய் , நோய்க்கு இருப்பிடமாய் அழகிய வடிவில்லாத இந்த உடலை அடியோடு போக்கும்வண்ணம் அடியேனுக்குச் சிவ ஞானத்தை அருளுவாயாக .

குறிப்புரை :

காக்கைகள் மொய்த்தல் பிணத்தை . வினைகள் மொய்த்தல் உயிரை . பிணத்தைக் கண்ட காக்கை அதனை விடாது மொய்க்கும் . தன்னைச் செய்த உயிரைக் கண்ட வினையும் அதனை விடாது மொய்க்கும் . மோத்தை ஆடு என்பது பொருந்தாது . மாட்டு வாலினும் ஆட்டுவால் குட்டையாதலின் , அஞ்சாது அதன்மேல் நிற்றல் காக்கைக்கியல்பாயினும் , உயிருள்ள ஆட்டைப்பல காக்கை மொய்த்தலில்லை . உயிரை மொய்க்கும் வினைக்குப் பிணத்தை மொய்க்கும் காக்கை ஒரு புடையொப்பு . வினைப்பன்மைக்குக் காக்கைப் பன்மை ஒப்பாகக் குறிக்கப்பட்டது . உன் வார்த்தை - உனது புகழ் . ` வாக்கு உன் மணி வார்த்தைக்கு ஆக்கி ` ` வார்த்தைகள் பேசி ` ` தித்திக்கப் பேசுவாய் ` ( தி .8 திருவா .) ` பேசாத நாளெல்லாம் பிறவா நாளே `. பேசப் பெரிதும் இனியாய் போற்றி `. பேசவொட்டாதனவாய் மயக்க . ஒட்டாது என்றதன் திரிபும் ஆம் . ` காக்கை கரவா கரைந்துண்ணும் ` ( குறள் ). வினைகளும் அன்ன . தமக்குத் திருவருளிரை தேடிப் பெற்று நீடு வாழாது காக்கைக்கே யிரையாகும் ஆக்கைக்கே இரைதேடி அலமந்து , நாக்கைக்கொண்டும் பூக்கைக் கொண்டும் அரன்நாமம் நவிலாதும் பொன்னடி போற்றாதும் கழிவர் `. மயக்க மயங்குகின்றேன் . சீத்தை - சீத்தலுறுவது ; சீ என்று வெறுத்தற்குரியது . ` பீழை ` யுமாம் . ` சிதம்பு `. செடி - நாற்றம் . ஊத்தை - ஊற்றை . ஊறுதலுடையது . ஊத்தை வாய்ச் சமணர் ` ( தி .6 ப .40 பா .4) ஈங்குத் திருநெய்த்தானத் திருத்தாண்டக முழுதும் நினைக . உடல் உயிர்க்கு உரித்தன்று . உணர்வே உரியது எனவுபதேசித்து , ஒட்டா :- வினைகள் ஒட்டி நின்று சிவகீர்த்தனம் செய்யத் துணைசெய்யாமல் எட்டி நின்று இடர்ப்படுத்தும் என்றபடி . பந்த மார்க்கத்தில் ஒட்டி நின்று துணைசெய்வன . ` போதால் ` என்றும் பாடம் .

பண் :

பாடல் எண் : 8

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே.

பொழிப்புரை :

மேம்பட்டவனே ! சங்கை ஒத்த வெண்மையான மேனியை உடைய செல்வனே ! இந்த உடம்பு மண்ணிற்பொருந்துமாறு நெடிது வீழ்ந்து விருப்பத்தை உன்னிடத்திலேயே வைத்துப் பிறவி என்ற சேற்றினை அடியோடு போக்கி , உன்னையே ஞான பாவனையால் மனத்திற் கொண்டுள்ளேன் . என் உயிர் போகின்ற அன்று நாயைப் போன்று இழிந்த அடியேன் உன்னை , எங்கிருக்கின்றாய் என்று வினவினால் , இங்கிருக்கிறேன் என்று அருள் செய்வாயாக .

குறிப்புரை :

அங்கம் - உடம்பு ; ஊத்தை . மண்ணுக்கு ஆக்கி :- மண்ணிற் பொருந்த நெடிது வீழ்ந்து . புதைக்கப்பட்டோ எரிக்கப் பட்டோ மண்ணொடு மண்ணாய்ப் போமாறு உடலின் நீங்கி எனலுமாம் . விழுந்து தொழும்போது , உடம்பு மண்ணிற் கழிக்கப் பட்டதாயும் உயிர் அவ்வுடம்பின் நீங்கிச் சிவத்திற்கலந்ததாயும் எண்ணுதல் சைவ மரபு . ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்ந்து கழித்து . ` ஊனைக்காவி உழிதர்வர் ஊமரே `. காவி - சுமந்து . போக மாற்றத் தக்கது ஊன் . பாச நீக்கத்தைக் குறித்ததாதலின் , அத் தொழுதலைப் பலிபீடத்து அருகிற் செய்தல் வேண்டுமெனச் சிவாகமங்கள் விதித்துள்ளன . பாசம் அற்ற ஆன்மாவைக் குறிப்பதே அப் பலி பீடத்தை அடுத்துள்ள நந்தி . அது பதியையே நோக்கியிருத்தல் கருதத் தக்கது . விழுந்தது பாசம் . எழுந்தது பசுவாயிருந்த ஆன்மா . கலந்தது சிவத்தில் . நிலைத்தது பேரின்ப நுகர்ச்சியில் . ` ஆயபதிதான் அருட்சிவ லிங்கமாம் ; ஆய பசுவும் அடல்ஏறு என நிற்கும் ; ஆய பலிபீடம் ஆகும் நற்பாசமாம் ; ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே ` ( தி .10 திரு மந்திரம் . 2412). ` பசுத்தன்மை நீக்கி அப் பாசம் அறுத்தாற் பசுக்கள் தலைவனைப் பற்றிவிடாவே ` ( தி .10 திருமந் . 2406) என்னும் உண்மை ` ஆர்வத்தை உனக்கே தந்து ` என்றதால் அறியப்படும் . தலைவனைப் பற்றி விடாமையே ஆர்வத்தின் குறியாகும் . பங்கத்தை - பாசச்சார்பான இழிந்த எண்ணத்தை ; சேற்றை . ` பிறவியளறு `. பிறவிச் சேற்றினை . ` பன்றிபோல் அளற்றிற் பட்டுத்தேறி ` ( தி .4 ப .77 பா .7). ` பிரபஞ்சம் என்னும் சேற்றைக் கழிய வழிவிட்டவா ` ( கந்தரலங்காரம் ). போக - ஒழிய . மாற்றி - ஓரிடத்தின் நீங்கிப் பிறிதோரிடத்திற் சேரத்தள்ளி . ` மடவாரோடும் பொருந்து அணைமேல் வரும் பயனைப் போக மாற்றி ` என்புழிப்போலக் கொள்க . நின்னைப் பாவித்தேன் - என்னை மறந்து நின்னை நினைந்தேன் . ` நான் என ஒன்று இல் என்று தானே எனும் அவரைத் தன் அடி வைத்து இல் என்று தான் ஆம் இறை ` ( சிவ ஞானபோதம் . 63). இதிற் குறித்ததே ` ஊன் செய்யா ஞானம் `. ஏனைச் சமயத்தார் ஞானமெல்லாம் ஊன் செய்யும் ஞானம் . ஈண்டுப் பாவித்தது ஊன் செய்யா ஞானபாவனை . சங்கு ஒத்த மேனிச் செல்வர் :- பவளம்போல் மேனி , பால்வெண்ணீற்றுச் செல்வத்தாற் சங்கு போன்றதாயிற்று . நாயேன் :- படர்க்கைப் பெயர் தன்மையீறுற்றுத் தன்மைப் பெயராயிற்று . அப்பர் தம்மை நாயென்று குறித்தல் அறிந்து செருக்கறுதல் தலைக் கடனாகும் . சாதல் நாள் - சாங்காலம் . ` சாம் அன்று ` ( தி .4 ப .103 பா .3.). ` வீடும் நாள் ` . ` துஞ்சும் போழ்து ` சாம் போதில் , உன்னை நாயேன் எங்கு உற்றாய் என்று வினாவுவேன் . என்ற போது ஆ . என்ற போதா ( என்ற + போது + ஆ ) ஆ - ஆக ; ஆதல் . இங்கு உற்றேன் என் . என் (- என்றுணர்த்து ). ஏவல் . இத்திருப் பாடலைச் சைவர் , சிவபூசாந்தத்தில் விழுந்திறைஞ்சும் பொழுது சொல்லிவருதல் மரபு . ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதர வேண்டிப் பெற்றுணர்ந்து , கழித்துப் பரமனைப் பாவித்து , அவன் இங்குற்றேன் என்றுணர்த்துவதற்குத் தக்கபொழுது இஃது என்றார் .

பண் :

பாடல் எண் : 9

வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென்
னுள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து
கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கிநக்கு
வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

பொழிப்புரை :

விளங்குகின்ற இளம்பிறையைச் சூடிக் கங்கையைச் சடையில் ஏற்ற பெருமான் , ஏதோ என்னை வினவுபவர் போல வந்து என் உள்ளத்துக்குள்ளே புகுந்து நின்றாராக , உறங்கின நான் விழித்தெழுந்து இங்கு புகுந்த நீர் கள்ளரோ என்று வினவ , என் உள்ளத்தில் கலந்திருந்து , தாம் என்னைப் பார்த்துச் சிரித்து கங்கை ஆகிய வெள்ளத்தை உடையோம் என்று நின்றார் .

குறிப்புரை :

விளங்கு பிறை இளம் பிறை . இளம் பிறையனார் - பிறை சூடி , ` சந்திரசேகரர் ` என்றதில் இச்சிறப்பில்லை . வெள்ளநீர்சடையனார் ( கங்காதரர் ), உள்ளமே :- ஏகாரம் ஏழனுருபின் பொருட்டு . கள்ளர் x வெள்ளர் ( கருளர் - கர்ளர் - கள்ளர் . வெருளர் - வெர்ளர் - வெள்ளர் ) ` ஆமையரவோடேன வெண்கொம்பக்குமாலை பூண்டாமோர்கள்ளர் வெள்ளர் போலவுள் வெந்நோய் செய்தார் ` ( தி .1 ப .73 பா .10) ` கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டு ` ( தி .10 திருமந்தி .2900) வினவுவார் போல வந்து உள்ளமே புகுந்து நின்றார்க்கு :- உள்ளம் புகுவதன் முன்னர் , நான் உள்ளே புகலாமோ , என இசைவு பெற வினாவுவார் போல ஒரு குறிப்புத் தோற்றிப் பின்னர் , புகுந்தது எனக்குத் தெரியாதவாறு நான் உறங்கும்போது புகுந்து நின்றது கள்ளம் . நான் விழித்துப் பார்த்து , அவர்க்குப் புடை பெயர்ந்து , கள்ளரோ புக்கீர் என்றேன் . அவரும் என்னொடு கலந்து நோக்கிச் சிரித்து நாம் கள்ளரேம் அல்லேம் . வெள்ளரேம் என்று நின்றார் . உள்ளமே புகுந்து கள்ளராய் நின்றவர் ( தலைமேற்பிறை போல ) வெள்ளரோம் என்று சொல்லி நின்றார் . கள்ளர் உள்ளமே புகுந்து நின்றார் . அவ்வுள்ளம் நம் அப்பரது இல்லம் . இல்லம் உடையாரான அப்பர் தாம் அறியாவாறு தம் உறக்கத்திற் புகுந்த கள்ளரான சிவனாரைப் , புடைபெயர்ந்து விழித்துப்பார்த்து ` புகுந்தீர் கள்ளரோ ` என்றார் . புகுந்த கள்ளரும் இல்லம் உடையாரான அப்பரும் கலந்துகொண்டனர் . கலந்து நோக்கி நக்கு வெள்ளரோம் ( கள்ளர் அல்லோம் ) என்று ( சொல்லி ) நின்றார் . புகுந்து நின்ற கள்ளர் இல்லம் உடையாரால் அறியப்பட்டதும் புறப்பட்டோடற்பாலர் , ஓடாது நின்றார் . வெள்ளரோம் என்று சொல்லியும் நின்றார் . அதுவே கலப்பன்றோ ? நோக்குதலும் நகுதலும் , தம் கள்ளத்தை இல்லம் உடை யார் அறிந்து வினாவியதன் விளைவு . ` உறங்கும் நான் ` என்றதால் விழித்தலும் , ` நின்றார் ` என்றதால் ஓடாமையும் பெறப்பட்டன . ` கள்ளரோடில்லம் உடையார் கலந்திடில் வெள்ள வெளியாம் என்று உந்தீபற , வீடும் எளிதாம் என்று உந்தீபற `. ( திருவுந்தியார் . 23) ` கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம் காப்பிடு கள்ளர் கலந்து நின்றார் உளர் ; காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக் கூப்பிட மீண்டதோர் கூறை கொண்டாரே `. ( தி .10 திருமந் .2900) ` உள்ளத்தின் கண்ணாய கள்வன் ` ( சிவஞானபோதம் . 56) ` உள்ளங்கவர் கள்வன் `.

பண் :

பாடல் எண் : 10

பெருவிர லிறைதா னூன்றப் பிறையெயி றிலங்க வங்காந்
தருவரை யனைய தோளா னரக்கனன் றலறி வீழ்ந்தான்
இருவரு மொருவ னாய வுருவமங் குடைய வள்ளல்
திருவடி சுமந்து கொண்டு காண்கநான் றிரியு மாறே.

பொழிப்புரை :

பார்வதி பாகனாய் உள்ள உருவத்தை யுடைய வள்ளலாகிய சிவபெருமான் , தம் காற் பெருவிரலைச் சிறிது ஊன்றிய அளவில் மலையைப் போன்ற தோள்களை உடைய இராவணன் பிறையைப் போன்ற பற்கள் வெளித்தோன்ற வாயைப் பிளந்து கொண்டு அலறிக் கீழே சாய்ந்தான் . சிறிதும் வலிமையில்லாத அடியேன் அம்மையப்பனாகிய அப்பெருமானுடைய திருவடிகளைத் தலையில் சுமந்து கொண்டு எங்கும் திரிகின்றவாற்றைக் காண்க .

குறிப்புரை :

திருக்காற் பெருவிரலைச் சிறிதேதான் ஊன்றினான் இருவரும் ஒருவன் ஆன உருவம் உடைய வள்ளல் . அச் சிற்றூற்றம் பொறாது எயிற்றுப்பல் கழல வாய் திறந்து அலறி விழுந்தான் மலை போலும் தோளான் ஆன இராவணன் . நான் சுமந்துகொண்டு திரியும் ஆறு காண்க . எதைச்சுமந்து ? பெருவிரல் மட்டுமோ ? அதனோடுகூடி இரண்டாயுள்ள திருவடிகளை . திருவடிகளைமாத்திரமோ ? அவற்றை அடியாகக்கொண்ட திருவுருவத்தை . அத்திருவுருவம் ஒன்றைத் தானோ ? அவ்வுருவில் இருவர் உளர் . அவ்வளவும் என் தலையில் சுமந்து நான் திரிகின்றேன் . அன்று - திருக்கைலையை எடுத்த நாளில் . அங்கு - அம் மலைமேல் . ` கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண்டிறல் அரக்கன் உக்கான் . இருதிற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் திருவடிதரித்து நிற்கத் திண்ணம் நாம் உய்ந்தவாறே ` ( தி .4 ப .71 பா .9) வீழ்ந்தான் காண்க எனலுமாம் . வள்ளலது திருவடி . வள்ளல் திருவடி . திரியுமாற்றைக் காண்க . ` அருவரையனைய தோளான் அரக்கன் ` என்றதால் நான் அத்தகைய வலியேனல்லேன் என்பது தோன்றிற்று . நிற்றலும் ஆற்றாது அவன் வீழ்ந்தான் ; நான் சுமந்து திரியுமாறு காண்க என்றார் .
சிற்பி