திருக்கழுமலம்


பண் :

பாடல் எண் : 1

படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில்
கடையார் கொடிநெடு மாடங்க ளோங்குங் கழுமலமாம்
மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள்
பெடைவாய் மதுவுண்டு பேரா திருக்கும் பெரும்பதியே.

பொழிப்புரை :

படையாக ஒருமழு ஆயுதத்தைக் கையில் ஏந்திய சிவபெருமானுடைய திருத்தலம் யாது என்று வினாவினால் , நகர்ப்புற வாயிலில் கொடிகள் உயர்ந்து விளங்கும் நெடும் மாடங்களைக் கொண்டு விளங்கும் திருக்கழுமலமே அதுவாம் . அப்பதியானது நீர்மடைகளிற் பூம்பாளை விரியுந் தோறும் அவற்றிற் சொரியுந் தேனைப் பெண்வண்டுகள் முன்னதாக உண்ணவிட்டு அவற்றின் கடைவாயிற் சொட்டுந் தேனை ஆண் வண்கள் அருந்திக் கொண்டு பிரியாதிருக்கும் பெரும்பதியுமாம் .

குறிப்புரை :

படை ஆர் மழு - படை ஆர்ந்த மழு. படை - படுத்தல்; கொல்லல். தடுத்தல் தடை. கொடுத்தல் கொடை. விடுத்தல் - விடை என்பன போல்வது இது, மழு ஒன்று பற்றிய கையன் - மழுப்படை ஒன்று பிடித்த கையினன்: கையன்பதி - கையனது நகர். பதி வினவில் - நகரை வினாவினால், வினவில் கழுமலமாம் பெரும்பதியே. அம் மழுக்கையன் பதி. கையன் பதி வினவினால் கழுமலமாம் பெரும் பதியே. கழுமலம் கடையார் கொடிநெடுமாடங்கள் ஓங்கும் பெருமையது. அப்பெரும் பதியில் குருகினம் மடைவாய்ப் பேராதிருக்கும். வண்டினங்கள், பாளை விரிதொறும் பெடைவாய் மதுவுண்டு பேராதிருக்கும். இரைகிடைத்தலின் குருகினம் மடைவாய்ப் பெயராமல் இருக்கும். வண்டினங்கள் பாளை விரிதொறும் பெடைவாய் மதுவைப் பெறுதலின் பெயராமல் இருக்கும். பெடைவண்டின் வாயினின்று ஒழுகும் மதுவை உண்ணுவது காதல் உணர்த்தும். `பெடைவாய் மது` இடக்கருமாம். `பைந்துகின் மகளிர் தேன் சோர் பவளவாய் திகழ நாணிச் சிந்தித்து` ( சிந்தாமணி. 1819) என்பதில் `திகழ்` `இடக்கர்` என்று நச்சினார்க்கினியர் உரைத்ததறிக.
சிற்பி