திருநெய்த்தானம்


பண் :

பாடல் எண் : 1

பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக்
காரடைந் தகடல் வாயுமிழ் நஞ்சமு தாகவுண்டான்
ஊரடைந் திவ்வுல கிற்பலி கொள்வது நாமறியோம்
நீரடைந் தகரை நின்றநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

காவிரியாற்றங்கரையில் அமைந்த நெய்த்தானத்தை உகந்தருளியிருக்கும் பெருமானே! பூமியில் ஆலகால விடத்தால் தாக்கப்பட்ட பல உயிர்களுக்கும் தேவருலகிலுள்ள தேவர்களுக்கும் அருள் செய்து, கரிய கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டருளிய நீ, பல ஊர்களையும் அடைந்து இவ்வுலகில் பிச்சை உணவை ஏற்பதை நாங்கள் அறியோம்.

குறிப்புரை :

பாரிடம் - மண்ணுலகு. சாடிய - அழித்த. பல் உயிர் - அரக்கர் கூட்டம். வான் அமரர் - வானில் உள்ள தேவர். கார் - மேகம். கடல் - பாற்கடல். காரடைந்த கடல்:- இரண்டாவது சீர் விட்டிசைத்துக் கொள்ளற்பாலது. கடல் வாய் உமிழ் நஞ்சு:- கடலில் பாம்பின் வாய் உமிழ்ந்த நஞ்சம். நஞ்சினை அமுதம் உண்பது போலுவந்துண்டு நின்றான். இவ்வுலகில் ஊர் அடைந்து பலிகொள்வதும் நாம் அறியோம். (தி.4 ப.85 பா.4.) நீர் - காவிரியாற்று நீர். அடைந்த கரை - மிகலுற்ற கரையில். நின்ற - நிலைத்த (நெய்த்தானம்). `நீரடைந்தகரை` என்னும் இரண்டனுள் இரண்டாவது சீரின் முதற் குறிலை, இரண்டாவ தடியிற் குறித்ததுபோல விட்டிசைத்துக் கொள்க. இன்றேல், கட்டளைக் கலித்துறையிலக்கணம் அமையாது. எல்லாம் திருவிருத்த மெனினும் கட்டளைக் கலித்துறையே.

பண் :

பாடல் எண் : 2

தேய்ந்திலங் குஞ்சிறு வெண்மதி யாய்நின் றிருச்சடைமேல்
பாய்ந்த கங்கைப் புனல்பன் முகமாகிப் பரந்தொலிப்ப
ஆய்ந்திலங் கும்மழு வேலுடை யாயடி யேற்குரைநீ
ஏந்திள மங்கையு நீயும்நெய்த் தானத் திருந்ததுவே. 

பொழிப்புரை :

தேய்ந்து விளங்கும் பிறைச்சந்திரனை உடையவனே! அழகிய உன் சடையின் மீது இறங்கிப்பாய்ந்த கங்கைநீர் பலமுகங்கொண்டுப் பரவி ஒலிக்கவும், ஆராய்ந்து விளங்கும் மழுப் படையை உடையவனே! அழகு விளங்கும் இளமங்கையான பார்வதியும் நீயும் நெய்த்தானப் பதியில் விரும்பி உறையும் காரணத்தை அடியேனுக்கு உரைப்பாயாக.

குறிப்புரை :

மதியாய், உடையாய், மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்தது நீ அடியேற்கு உரை. தேய்ந்ததும் இலங்குவதும் சிறியதும் வெளியதும் பிறை. அப் பிறைசூடிய பெருமானை மதியாய் என விளித்தார். நின் திருச்சடைமேல் பாய்ந்த கங்கைப் புனல் பலமுகமாகிப் பரந்து ஒலிக்கும். ஆய்ந்து - நுணுகி. இலங்கும் மழுவேல். மழுவேலை யுடையாய். இளமங்கை `ஏந்தெழில்` என்பது போலக்கொண்டு, இளமையை ஏந்து மங்கை என்றுரைக்க. ஏந்து மங்கை - இடப்பாலில் ஏந்தப் பெற்ற மங்கை. இத்தலத்து அம்பிகை திருப்பெயர் `இள மங்கை`, அதனைப் பாலாம்பிகா - (வாலாம்பிகை) என்றனர் வட மொழியாளர்.

பண் :

பாடல் எண் : 3

கொன்றடைந் தாடிக் குமைத்திடுங் கூற்றமொன் னார்மதின்மேல்
சென்றடைந் தாடிப் பொருததுந் தேசமெல் லாமறியும்
குன்றடைந் தாடுங் குளிர்பொழிற் காவிரி யின்கரைமேல்
சென்றடைந் தார்வினை தீர்க்கும்நெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

குடகுமலையிலே தோன்றி எல்லோரும் அடைந்து நீராடுமாறு பெருகியோடும், குளிர்ந்த சோலைகளை இரு மருங்கிலும் கொண்ட, காவிரியின் கரைமேல் உன்னை வந்து அடைந்தவர்களுடைய தீ வினைகளைப் போக்கும் நெய்த்தானப் பெருமானே! நீ சென்று சேர்ந்து போரிட்டுக் கொன்று அழிக்கும் கூற்றுவனாய்ப் பகைவர் மதில்களை அடைந்து செயற்பட்டுப் போரிட்டு அவற்றை அழித்த செயலை உலகமெல்லாம் நன்றாக அறிந்துள்ளது.

குறிப்புரை :

கூற்றம் ஒன்னார் மதில்மேல் சென்று அடைந்து ஆடிப் பொருததும் தேசம் எல்லாம் அறியும் என்க. ஒன்னார் - பகைவர்; ஒன்றார் என்பதன் மரூஉ. திரிபுரத்தசுரர் மதில்மேல் சென்று அடைந்து ஆடிப் பொருது குமைத்துக் கொன்று ஆடியது கூற்றம். அது சிவபிரான் கணை யேவலால் நிகழ்ந்தது. திரிபுர தகனம் எல்லாத் தேசங்களாலும் அறியப்பட்டது. காவிரி குன்று அடைந்து ஆடுவது; குளிர்பொழிலுடையது. அக்கரை மேல் நெய்த்தானம் உளது. அதில் சென்று அடைந்தார் வினையை அங்கிருந்தருளும் முக்கண்ணன் தீர்த்தருள்வான்.

பண் :

பாடல் எண் : 4

கொட்டு முழவர வத்தொடு கோலம் பலவணிந்து
நட்டம் பலபயின் றாடுவர் நாக மரைக்கசைத்துச்
சிட்டர் திரிபுரந் தீயெழச் செற்ற சிலையுடையான்
இட்ட முமையொடு நின்றநெய்த் தானத் திருந்தவனே.

பொழிப்புரை :

ஒலிக்கின்ற முழவின் ஓசையோடு பல வேடங்களைப் புனைந்து பல கூத்துக்களை அடிக்கடி ஆடுபவரும், பாம்பினை இடையில் இறுகக்கட்டியவரும், சிட்டர்க்காக மும்மதில்களும் தீக்கு இரையாகுமாறு அழித்த வில்லை உடையவரும், ஆகிய சிவ பெருமான் நெய்த்தானத்தில் தமக்கு விருப்பமான பார்வதியோடு விரும்பி இருப்பவராவார்.

குறிப்புரை :

கொட்டு முழவு. முழவு கொட்டும் அரவம் (-ஓசை). அரவத்தொடு ஆடுவர். பலகோலம் அணிந்து ஆடுவர். நட்டம் ஆடுவர். பல நட்டம் பயின்று ஆடுவர். அரைக்கு நாகம் அசைத்து ஆடுவர். அரைக்கு - அரையின்கண். நாகம் - பாம்பு. அசைத்து - கட்டி. உடையான் இருந்தவன் ஆடுவர் என்று இயையும். `ஆடுவர்` என்றது ஒருவரைக் கூறும் பன்மையாம் உயர் சொற்கிளவி. சிட்டர்க்காகத் திரிபுரத்தைச் செற்றவன். தீ எழச் செற்றவன். சிலை - மேருவில். சிலை யுடையான் - மேருவில்லினன். செறுதல் - அழித்தல். சிட்டர் - நல்லறிவினர், பொறுமையுடையர். இட்டம்:- விருப்பம். இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே`. உமையொடும் இட்டம் ஆய்நின்ற நெய்த்தானத்து இருந்தவனை என்று ஆக்கம் வருவித்துரைக்க. உமை இட்டமொடு நின்ற என்று உருபு பிரித்துக் கூட்டலுமாம். நெய்த்தானத் திருந்தவனது தொழில் உமையொடு நிற்றல்; நெய்த்தானம் உமை இட்டமொடு நிற்றல்; நெய்த்தானத்திலிருந்தவனது இட்டம் உமையொடு நிற்றல் மூன்றனுள் பொருந்துவது கொள்க.

பண் :

பாடல் எண் : 5

கொய்ம்மலர்க் கொன்றை துழாய்வன்னி மத்தமுங் கூவிளமும்
மெய்ம்மலர் வேய்ந்த விரிசடைக் கற்றைவிண் ணோர்பெருமான்
மைம்மலர் நீல நிறங்கருங் கண்ணியோர்  பான்மகிழ்ந்தான்
நின்மல னாட னிலயநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

கொய்யப்பட்ட கொன்றை மலர், திருத்துழாய், வன்னி, ஊமத்தம்பூ, வில்வம் ஏனைய சிறந்த மலர்கள் இவற்றை அணிந்த விரிந்த சடைத் தொகுதியையுடைய தேவர் தலைவனாய், கருமை பரவிய நீல நிறத்தை உடையவளாய்க் கருங்கண்களை உடைய பார்வதி பாகனாய் உள்ள களங்கம் அற்ற தூயோனாகிய சிவபெருமான், தன் ஆடல்களுக்கு அரங்கமாக அமைந்த நெய்த்தானத்தில் இருப்பவனாவான்.

குறிப்புரை :

ஆடல் நிலயம் ஆகிய நெய்த்தானம். நெய்த்தானத்து இருந்தவன் பெருமான்; மகிழ்ந்தான் என இயைக்க. கொய்த கொன்றை மலரும் துழாயும் வன்னியும் மத்தமும் கூவிளமும் வேய்ந்த சடை. மெய்ம்மலர்:- எட்டுப் பூவுள் ஒன்றாய சத்திய புட்பம். மெய்யாகிய மலர்வேய்ந்த சடை. மெய் - அறிவு; ஞானபுட்பமும் ஆம். முற்கூறியன வற்றையே மெய்மலர் என்றதாகக் கொள்ளலுமாம். விரிசடை - வினைத்தொகை. சடைக்கற்றையையுடைய பெருமான். விண்ணோர்க்கெல்லாம் பெருமகன். மைமலர்கண் - மைமலர்ந்த விழி. நீலம் - கருங் குவளை. நிறம் - ஒளி. கருங்கண். கண்ணி - கண்ணன். (உமாதேவி). ஓர் பால் - இடப்பாகம். மகிழ்ந்தான் - வைத்துக் கண்டு மகிழ்ந்தவன். `காணமகிழ்தல்` (திருவள்ளுவர்). மை நீலமலர் நிறம்போலுங் கருங்கண் எனலுமாம். `மைஞ்ஞின்ற வொண்கண்` (தி.4 ப.80 பா.5). நின்மலன் - மலரகிதன்; அமலன்; இது நிமலன் எனத் திரிந்து வழங்கும். நிர் + மலம் = நிர்மலம்; நின்மலம். நிமலம். ஆடல் - திருக்கூத்து. நிலயம் - உறையுள். `கொன்றைமாலையும் கூவிள மத்தமும் சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்`.

பண் :

பாடல் எண் : 6

பூந்தார் நறுங்கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கணிந்து
கூர்ந்தார் விடையினை யேறிப்பல் பூதப் படைநடுவே
போந்தார் புறவிசை பாடவு மாடவுங் கேட்டருளிச்
சேர்ந்தா ருமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

நெய்த்தானத்தில் இருக்கும் சிவபெருமான் பூக்களை வரிசையாகத் தொடுத்த கொன்றை மாலையை வளைத்துச் சடைக்கண் அணிந்து, விரைவு மிக்குப் பொருந்திய காளையினை ஏறி ஊர்ந்து பூதப்படைகள் பலவற்றின் நடுவே செல்பவராய்ப் புறத்தே அடியார்கள் பாடும் பாடல்களைக் கேட்டு ஆடல்களைக் கண்டு பார்வதி யோடும் இணைந்து உறைகின்றார்.

குறிப்புரை :

நறுங்கொன்றைப் பூந்தார் மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து, கூர்ந்தார். விடையினை ஏறிப் பூதப்படை நடுவே போந்தார். பாடவும் ஆடவும் கேட்டருளிச் சேர்ந்தார் என்க. கூர்ந்து ஆர் விடை - விரைவுமிக்குப் பொருந்திய காளை; ஒன்றற்குப் பத்தாகப் பிறவி கூர்ந்த மால் ஆகிய விடை என விடைக்கு அடையாக்கியுரைத்தலுமாம். பல் பூதப்படை நடுவே விடையினை ஏறிப் போந்தார். சிவ பிரானுக்குப் பூதங்களும் உமாதேவியார்க்குக் காளிகளும் உரியர். பூத கணங்கள் பல்வகைப்படும். காளிக் கூட்டமும் அவ்வாறு பல்வகைத்து. அசுரர் யாகத்தில் இன்புற்ற பூதக்கூட்டமும் காளிக்கூட்டமும் சிவசம்பந்தம் உடையவற்றின் வேறாகும். புறவிசை பாடல் - புறத்தே சூழ்ந்து நின்று சாமகானம் முதலிய இசை பாடுதல். போந்தார் பாடவும் ஆடவும் சேர்ந்தார் (நெய்த்தானத்திருந்தவன்) கேட்டருளியதாகக் கொள்ளலும் கூடும். உமையவளோடும் இருந்தவன் கூர்ந்தார்; போந்தார்; சேர்ந்தார் என்க.

பண் :

பாடல் எண் : 7

பற்றின பாம்பன் படுத்த புலியுரித் தோலுடையன்
முற்றின மூன்று மதில்களை மூட்டி யெரித்தறுத்தான்
சுற்றிய பூதப் படையினன் சூல மழுவொருமான்
செற்றுநந் தீவினை தீர்க்குநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

பாம்பினைப் பற்றியவனாய், புலித்தோலை உடையாக உடுத்தவனாய், எல்லா வலிமைகளும் நிறைந்த மூன்று மதில்களையும் தீ மூட்டி அழித்தவனாய்ப் பூதப்படையால் சூழப்பட்டவனாய்ச் சூலம், மழு, மான் எனும் இவற்றை ஏந்தியவனாய் நம் தீவினைகளை அழித்து ஒழிப்பவனாய்ச் சிவபெருமான் நெய்த்தான நகரில் உறைகின்றான்.

குறிப்புரை :

பற்றின பாம்பன் - பாம்பைப் பற்றியவன். `சர்ப்பா பரணன்`; `நாகாபரணன்`. படுத்த புலி - கொன்ற புலி. படுக்கப்பட்ட புலி எனச் செயப் பாட்டுப் பொருளில் நின்ற பெயரெச்சம். படுத்தல் வினைக்குப் புலி செயப்படு பொருள். சிவபிரான் வினைமுதல். உரித் தோல் - உரித்தலை யுற்றதோல். உரியாகிய தோல். தோல் உடை - தோலாகிய உடை. உடையன் - உடையினன். தோலுடையன் - தோலையுடையவன். முற்றின - முற்றுதல் செய்த; வாணாள் முற்றிய. மூன்றுமதில் - `மும்மதில்` - (திரிபுரம்) `மூவெயில்`, மூட்டி எரித்தறுத் தான் - எரி மூட்டி`; யறுத்தான். மூட்டி - மூள்வித்து, அறுத்தல் - அவை பறத்தற்குரிய உறுப்பை அறுத்தலுமாம். சுற்றிய - சூழ்ந்த. சூலம், மழு, மான் மூன்றும் ஏந்தியவன் என்று கூறக் கருதியவராயின், அவற்றை உடையவன் என்பதற்கேற்ற சொற்பெய்திருப்பார். இராமையால், சூலம் மழுவொருவான் என்று இருந்ததோ என எண்ணக் கிடக்கின்றது. சூலத்தையும் மழுவையும் ஒருவான் என்ற பொருள் பயப்பது. உள்ளவாறே கொள்ளின் நான்காவதடியிற் பெறப்படும் பெயர்ப் பொருளொடு கூட்டி, சூலத்தையும் மழுவையும் மானையும் உடைய சிவன் என்க. நம் தீவினை செற்றுத் தீர்க்கும். செற்று - அழித்து; கொன்று. தீர்க்கும் - தீரச்செய்யும்.

பண் :

பாடல் எண் : 8

விரித்த சடையினன் விண்ணவர் கோன்விட முண்டகண்டன்
உரித்த கரியுரி மூடியொன் னார்மதின் மூன்றுடனே
எரித்த சிலையின னீடழி யாதென்னை யாண்டுகொண்ட
தரித்த வுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

விரித்த சடையினனாய், தேவர்கள் தலைவனாய், விடத்தை உண்டு அடக்கிய கழுத்தினனாய், தான் உரித்த யானைத் தோலைப் போர்த்தவனாய், பகைவரின் மதில்கள் மூன்றனையும் எரித்த வில்லினனாய், தன் பெருமைக்குக் குறைவு வாராத வகையில் அடியேனை அடிமையாகக் கொண்டவனாய் உள்ளவன், தன் உடம்பில் பாதியாகக் கொண்ட பார்வதியோடு நெய்த்தானத்தில் உறைகின்ற பெருமானாவான்.

குறிப்புரை :

விரித்த சடையினன் - சடையை விரித்து ஆடுகின்றவன். விண்ணவர்கோன் `தலையாய தேவாதி தேவர்க்கென்றும் சேயான்`. விடம் - நஞ்சு. `திருநீலகண்டன்`. உரித்த உரி. கரியுரி. கரி - கரத்தையுடையது; யானை. மூடி - போர்த்து. ஒன்னார் - பகைவர்; ஒன்றார் என்பதன் மரூஉ. மதில் மூன்று: எரித்த சிலையினன் - சிலையால் எரித்தவன். `படுத்த புலி` (தி.8 ப.58 பா.1) போல்வதன்று இது. இவ்வெச்சம் வினைமுதல் கொண்டது. சிலை எரித்ததன்று, சிலையில் வைத்து, எய்யப்பட்ட தீக்கணையே எரித்தது. சிலை கணைக்கு, இடவாகு பெயர். ஈடு - பெருமை. கொண்ட என்னும் எச்சம் உமையவள்` என்ற பெயர்கொள்ளும். `இருந்தவன்` என்பதையும் கொள்ளும். தரித்த உமையவள்:- எல்லாவுலகங்களையும் தாங்கிய அம்பிகை. `சகதம்பா` `உலகநாயகி`. தரித்தல் - பொறுத்தல். நெய்த்தானத்து உமையவளோடும் இருந்தவன்.

பண் :

பாடல் எண் : 9

தூங்கான் றுளங்கான் துழாய்கொன்றை துன்னிய செஞ்சடைமேல்
வாங்கா மதியமும் வாளர வுங்கங்கை  தான்புனைந்தான்
தேங்கார் திரிபுரந் தீயெழ வெய்து தியக்கறுத்து
நீங்கா னுமையவ ளோடுநெய்த் தானத் திருந்தவனே.

பொழிப்புரை :

தாமதம் செய்யாமல் விரைவு உடையவனாய், திருத்துழாயும் கொன்றையும் பொருந்திய சிவந்த சடையின்மீது கைக்கொண்ட பாம்பு பிறை எனும் இவற்றைக் கங்கையோடு அணிந்தவனாய், பகைவருடைய முப்புரங்களையும் தீக்கு இரையாகுமாறு அம்பு செலுத்தி அசுரர்களால் மற்றவருக்கு ஏற்பட்ட சோர் வினைப் போக்கி என்றும் நீங்காதிருக்கும் பெருமான் பார்வதியோடு நெய்த்தானத்திருந்தவனே யாவன்.

குறிப்புரை :

தூங்கான் துளங்கான் - ஆடான் அசையான். தூங்கான் - நீட்டியான்; விரைவுடையான்; தாமதம் செய்யான். (குறள். 383, 672) துளங்கான் - சலியான் எனலும் ஆம் `சலியா நடம்` `என்றும் இவர் ஆடப் பதஞ்சலியார்` (சிதம்பர மும்மணிக்கோவை. 21) `துளங்காது தூக்கம் கடிந்து செயல்` (குறள். 668) என்புழி, `அசைதலின்றி நீட்டித்தலை யொழிந்து செய்க`, எனப் பரிமேலழகர் உரைத்ததும் தூக்கம் துளக்கம் இரண்டும் ஆண்டுள்ளதும் உணர்க. `துளக்கு அற்ற காட்சியவர்`. (குறள். 699) - நிலைபெற்ற அறிவினையுடையார்` என்னும் பகுதியும் ஈண்டு உணரத்தக்கது. `வட்டவாய்க்கமலத் தண்ணல் மணிமுடி துளங்க ஓச்சிக்குட்டிய குமரப்புத்தேள்` (தணிகைப் புராணம்). துழாய் - துளசி. துன்னிய - நெருங்கிய. வாங்காமதியம் - நீளாப்பிறை; வளராப் பிறை. வாளரவுக்கு நடுங்கிப் பின்வாங்காததுமாம். சடைமேல் மதியும் அரவும் கங்கையும் புனைந்தான். தேங்கார் - `தியங்கார்` என்பதன் மரூஉ. சோரார்; மயங்கார். பகைவர் தீ எழ எய்து தியக்கு - அசுரரால் தேவர்க்கு உற்ற சோர்வு; மயக்கம். அறுத்து - போக்கி. உமையவளோடு நீங்கான்.

பண் :

பாடல் எண் : 10

ஊட்டிநின் றான்பொரு வானில மும்மதி றீயம்பினால்
மாட்டிநின் றானன்றி னார்வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டிநின் றான்கத மாக்கங்கை பாயவொர் வார்சடையை
நீட்டிநின் றான்றிரு நின்றநெய்த் தானத் திருந்தவனே. 

பொழிப்புரை :

செல்வம் நிலைபெற்ற நெய்த்தானப் பெருமான் வானில் நிலவிப் போரிட்ட மும்மதில்களையும் தீயாகிய அம்பினால் எரித்துப் பகைவர்கள் வெந்து போகும்படி தீயினால் அழித்து அக் காட்சியைத் தேவர்கள் காணச் செய்து விரைந்து வானினின்றும் இறங்கிய சினத்தை உடைய பெரிய கங்கை பாய்வதற்கு நீண்ட சடைக் கற்றைகளுள் ஒன்றனைக் காட்டி நின்ற பெருமான் திருநெய்த்தானத் திருந்தவனே யாவான்.

குறிப்புரை :

பொருவானில் அம்மும்மதில் தீ ஊட்டி நின்றான். முப்புரப் போர் வானில் நிகழ்ந்தது. நிலம் எனப்பிரிப்பின், பொருவான் - போர்செய்தற்பொருட்டு; பொருபவன். நிலம் - மண்ணுலகில் என்க. அம்பினால் அன்றினார் வெந்து வீழவும் மாட்டி நின்றான் - கணையால், பகைவர் எரிந்து கீழ்விழவும் மாள்வித்து நின்றான். தீயை அம்பினால் ஊட்டி எனவும், தீயை மாட்டி எனவும் கூறலும் ஆம். வீழவும் காட்டி நின்றான் வானவர்க்கு. கதம் - விரைவு. கங்கை பாயச் சடையை நீட்டி நின்றான். பாய்ந்த கங்கையின் பெருக்கத்தால், சுருக்கிய சடையை விரித்து நீட்டலாயிற்று. திரு நின்ற நெய்த்தானம் - திருமகள் நிலையாயிருக்கும் நெய்த்தானம்.
சிற்பி