திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன்
முந்திப் பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்திருண்டு
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்புசுற்றி
அந்திப் பிறையணிந் தாடுமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

பாம்பினைத் திருமேனியில் சுற்றி அணிந்து மாலையில் தோன்றும் வளர்பிறைப் பக்கத்துப் பிறைச் சந்திரனை அணிந்து கூத்து நிகழ்த்தும் ஐயாறனுடைய திருவடிகள் நம் உள்ளத்தால் உள்ளவாறு சிந்திப்பதற்கு அரியனவாய் , அவன் அருளாலே தியானிக்கும் மெய்ஞ்ஞானியருக்கு மேம்பட்டுச் சிறந்த தேன்போன்ற இனிமையை முன்னர்க்கொடுத்து , அவர்கள் உயிரைப் பிணித்து நின்ற பழவினைகளைப் போக்கி அவர்களுக்கு முத்திப் பேற்றினை வழங்குவனவாகும் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் அரியன ; பொழிவன ; கொடுப்பன ; தீர்ப்பன . சிந்திப்பவர்க்குச் சிந்திப்பரியன . அவர்க்குச் சிந்திப்ப அரியன எனலுமாம் . சிந்திப்பவர்க்குச் சிந்திப்ப அரியன ஆயினும் ,` அருவினையென்பவுளவோ கருவியாற் காலம் அறிந்து செயின் ` ( குறள் . 483) ` பெருமையுடையவர் ஆற்றுவர் ஆற்றின் அருமையுடைய செயல் ` ( குறள் . 975) என்று கருதிச் சிந்திப்பவர்க்கு முந்தி ( வந்து ) செந்தேன் சிறந்து பொழிவன . அத்தேன் ` கருதுவார் இதயத்துக் கமலத்தூறுந்தேன் `. அது பேரின்பப் பேறு ; சிவப்பேறு , முத்தி கொடுப்பன - வீடுதருவன . இது பாச நீக்கம் மொய்த்தும் , இருண்டும் பந்தித்தும் நின்ற பழவினை ( சஞ்சிதங் ) களைத் தீர்ப்பன . மொய்த் திருண்டது ஆணவம் ; பந்தித்து நின்றது மாயை எனக்கொண்டு பழவினையொடு கூட்டி மும்மலமும் தீர்ப்பன எனலுமாம் . பாம்பு சுற்றியதும் அந்திப் பிறையணிந்ததும் ஆடுதலும் ஐயாறன் செயல் . முன்னவை திருவடியின் இயல்பு .

பண் :

பாடல் எண் : 2

இழித்தன வேழேழ் பிறப்பு மறுத்தன வென்மனத்தே
பொழித்தன போரெழிற் கூற்றை யுதைத்தன போற்றவர்க்காய்க்
கிழித்தன தக்கன் கிளரொளி வேள்வியைக் கீழமுன்சென்
றழித்தன வாறங்க மானவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

வேதங்களின் ஆறு அங்கங்களின் வடிவான ஐயாறன் அடித்தலங்கள் - ஒரு பிறப்பின் வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழுபிறப்புக்கள் மக்கள் , தேவர் , நரகர் , விலங்கு , ஊர்வன , நீர்வாழ்வன , தாவரம் என்ற ஏழுவகைப் பிறப்பினுள் எப்பிறப்பாயினும் அறுவறுக்கத்தக்க அப்பிறவிப் பிணியைப் போக்குவனவாய் , அடியேன் உள்ளத்தே இன்பத்தைப் பொழிவனவாய் , போரிடுவதில் வல்ல கூற்றுவனை உதைத்தனவாய் , தக்கனுடைய மேம்பட்ட வேள்வியை அழித்தனவாய் , தம்மை வழிபடும் அடியவர்களுக்குக் கீழான பிறவிகளை முற்பட்டு முயன்று அழித்தனவாய் உள்ளன .

குறிப்புரை :

ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலம் இழித்தன ஏழேழ் பிறப்பும் அறுத்தன ; என் மனத்தே பொழித்தன போர் எழிற் கூற்றை உதைத்தன ; போற்றவர்க்காய்த் தக்கன் வேள்வியைக் கிழித்தன ! கீழ முன் சென்று அழித்தன . இழித்தன - அறுவறுத்தன . இழிவு படுத்தின . தாழ்த்தியன . இழித்தனவாகிய பிறப்பு . ஏழேழ் பிறப்பு - ஏழேழாக மறித்தும் மறித்தும் எய்தும் இருபத்தொரு பிறவி . ` எழுபிறப்பும் தீயவை தீண்டா ` ( குறள் . 62) என்றதற்குப் பரிமேலழகர் உரைத்தவாறுணர்க . ` எழுமை யெழுபிறப்பும் உள்ளுவர் ` ( குறள் . 107) எழு பிறப்பும் எங்கள் நம்பி ( தி .7 ப .63 பா .1) ` இச்சையறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய் ` ( தி .7 ப .41 பா .2) ` மூவேழ் சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ( தி .8 திருவாசகம் ) ` எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ்படிகால் எமை ஆண்ட பெம்மான் ` ` ஈமப்புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே ` ( தி .7 ப .52 பா .9) ` ஏழாட்காலும் பழிப்பிலோம் ` ` எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி வந்து வழி வழியாட் செய்கின்றோம் ` ( பெரியாழ்வார் திருமொழி . 3. 6) ` எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடுற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம் ( திருப்பாவை 29) ` இருபத்தொரு ஜந்மங்கள் ` ( திருப்பாவை வியாக்கியாநம் ).

பண் :

பாடல் எண் : 3

மணிநிற மொப்பன பொன்னிற மன்னின மின்னியல்வாய்
கணிநிற மன்ன கயிலைப் பொருப்பன காதல்செய்யத்
துணிவன சீலத்த ராகித் தொடர்ந்து விடாததொண்டர்க்
கணியன சேயன தேவர்க்கை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் மாணிக்தத்தைப் போலவும் பொன்னைப் போலவும் மின்னலைப் போலவும் அடியவர்கள் விரும்புகின்ற நிறத்தோடும் ஒளியோடும் விளங்குவனவாய் , கயிலைமலையில் உள்ளனவாய் , அன்பு செய்யத் தக்கனவாய் , நல்லொழுக்கத்துடன் இறைபணியைத் தொடர்ந்து செய்யும் அடியவர்களுக்கு அணியனவாய்த் தேவர்களுக்குத் தொலைவில் உள்ளனவாய் இருக்கின்றன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் மணி நிறத்தைப் போல்வன ; பொன்னிறத்தைப் பொருந்தின . மின்னும் இயல்வாய்ந்த கணி நிறம் போன்றன . கயிலைமலையை உடையன . காதல் செய்யத் தெளிவன . ( துணிவு பிறத்தற்குரியன ) சீலத்தினையுடையவராகித் தொடர்ந்து ( காலை நண்பகல் மாலை நள்ளிரவு எப்பொழுதும் ) விடாது தொழும் தொண்டர்க்கு அணியவாயிருப்பன . தேவர்க்குச் சேயவாயிருப்பன . கணி நிறம் - வேங்கைப்பூவின் நிறம் . அன்ன கயிலை என்னற்க . அன்னவை அடித்தலமே அன்றி வேறில்லை .

பண் :

பாடல் எண் : 4

இருடரு துன்பப் படல மறைப்பமெய்ஞ் ஞானமென்னும்
பொருடரு கண்ணிழந் துண்பொரு ணாடிப் புகலிழந்த
குருடருந் தம்மைப் பரவக் கொடுநர கக்குழிநின்
றருடரு கைகொடுத் தேற்றுமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் இருளைத் தரும் துன்பத்திரை மறைக்க மெய்ஞ்ஞானம் என்னும் பார்வையை இழந்த , நுகர்தற்குரிய பொருள்களைத் தேடிப் பற்றுக்கோட்டினை இழந்த குருடர்களும் தம்மைப் போற்றுமாறு கொடிய நரகமாகிய குழியில் இருந்து அவர்களை அருளாகிய கைகளைக் கொடுத்து வெளியேற்றி முத்தி நிலத்தின் கரைக்கண் சேர்ப்பன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் , மறைப்ப இழந்து நாடி இழந்த குருடரும் பரவக் கொடுத்து ஏற்றும் என்க . மெய்ஞ்ஞானக் கண்ணை மறைக்கும் படலம் இருள் தருகின்ற துன்பம் . மெய்ஞ்ஞானம் என்னும் பொருளைத் தருகின்ற கண் மெய்ஞ்ஞானக் கண் . ` பொருள் தருகண் ` என்றதால் மெய்ஞ்ஞானமாகிய கண் எனல் ஈண்டுப் பொருந்தாது ; மெய்ஞ்ஞானம் என்றது நோக்கி ` இருள் ` என்பதற்கு அறியாமை ( அஞ்ஞானம் ) எனப் பொருளுரைக்க . அறியாமையே துன்பத்திற்கேது . உண்ணுதற்குத் தக்க பொருள் உண்பொருள் . ` உண்பொருள் ` செயப்படுபொருளில் நின்ற வினைத்தொகை . பொருளை நாடிப் புகலை இழந்த குருடர் . குருடரும் வாழ்த்தக் குழியினின்றும் கரை யேற்றும் . அருளைத் தருகின்ற கையைக் கொடுத்துக் கரையில் குருடரையும் ஏற்றும் , நரக்குழியினின்றும் ஏற்றும் . ஏனைக் குருடர்க்கு மறைப்பது கண்ணிற்கு வரும் படலம் என்னும் நோய் . உண்பொருளை நாடித் தமக்குப் புகலாயிருக்கும் பரசிவனை இழந்த குருடர்க்கு மறைப்பது அப்படலம் அன்று ; இது வேறு என்பார் ` இருள்தரு துன்பப் படலம் ` என்றார் .

பண் :

பாடல் எண் : 5

எழுவா யிறுவா யிலாதன வெங்கட் பிணிதவிர்த்து
வழுவா மருத்துவ மாவன மாநர கக்குழிவாய்
விழுவா ரவர்தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்கவன்போ
டழுவார்க் கமுதங்கள் காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் - தமக்குத் தோற்றமும் முடிவும் இல்லனவாய் நம்முடைய நோய்களைப் போக்கத்தவறாத மருந்தின் தன்மையவாய் நரகக்குழியில் தம் வினைப்பயனால் விழும் உயிர்களை வினை நுகர்ச்சிக்காக விழச்செய்து பின் கருணையினால் கரையேற்றுவனவாய் , மேம்பட்ட அன்பினால் உள்ளம் உருகி அழுபவர்களுக்கு அமுதங்களாக உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் எழுவாயும் இறுவாயும் இல்லாதன ; வெங்கண் பிணி தவிர்த்து வழுவாத மருத்துவம் ஆவன . மாநரகக் குழிக்கண் விழுவாரை விழுப்பன . விழுந்தவரையும் விழுமுன் கழுவாய் செய்து கொண்டவரையும் அந்நரகினின்று மீட்பன ; மிக்க அன்போடு அழுமவர்க்கு அமுதங்கள் ( ஆதலைக் ) காண்க . எழுவாய் - முதல் ; ஆதி . இறுவாய் - முடிவு ; அந்தம் . எழுவாய் இறுவாய் இல்லாமை - ஆதியும் அந்தமும் இன்மை ; முதலும் முடிவும் இல்லாமை . ` ஆதியும் அந்தமும் ஆனஐயாறனடித்தலம் ` ( பா .17) என்புழி , ஆன என்னும் எச்சம் ` ஐயாறன் ` ` அடித்தலம் ` என்னும் இரண்டிற்கும் உரித்து . ` போற்றியருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி யருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் `. ( தி .8 திருவாசகம் 173 ) வெங்கண் - கொடுமை , வெங்கட்பிணி - கொடும்பிணி . எங்கள் பிணி அழுவார்க்கு அமுதங்கள் ; ` ஒழுகு மாடத்துள் ஒன்பது வாயில்களும் கழுகரிப்பதன் முன்னம் கழலடி தொழுது கைகளால் தூமலர் தூவி நின்று அழுமவர்க்கு அன்பன் ஆனைக்கா அண்ணலே ` ( தி .5 ப .31 பா .7) ` மழுவலான் திருநாம மகிழ்ந்துரைத்து அழவலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் மாற்பேறு தொழவலார் தமக்கு இல்லை துயரமே `. ( தி .5 ப .59 பா .7) ` அழுமவர்க்கு அன்பர் ` ( தி ,4 ப .56 பா .4).

பண் :

பாடல் எண் : 6

துன்பக் கடலிடைத் தோணித் தொழில்பூண்ட தொண்டர் தம்மை
இன்பக் கரைமுகந் தேற்றுந் திறத்தன மாற்றயலே
பொன்பட் டொழுகப் பொருந்தொளி செய்யுமப் பொய் பொருந்தா
அன்பர்க் கணியன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அடியார்களைத் துன்பக் கடலைக் கடத்த உதவும் தோணியின் செயலைச் செய்வனவாய் இன்பமாகிய கரையிலே கொண்டு சேர்ப்பனவாய் மாற்று அறிய முடியாத வலியற்ற பொன்போல ஒளிவீசுவனவாய்ப் பொய்ப் பொருள்களிடத்துப் பற்றற்ற மெய்யடியார்களுக்கு அணியனவாய் உள்ளன .

குறிப்புரை :

துன்பம் கடல் போலும் பெரியது . அக்கடலில் தோணிபோலும் அலையும் தொழில் . உற்றவர் தொண்டர் . ` தொழில் ` ( தி .4 ப .110 பா .7). அத்தோணியைக் கடற்கரையில் ஏற்றுவன போலும் அத் தொண்டரை இன்பக்கரையில் ஏற்றும் அடித்தலம் . அடித்தலத்தின் ஒளியை நோக்கின் , பொன்னொளி மிகக் குறைந்தது என்க . பொன்மாற்று அயலே பட்டு ஒழுக - பொன்னின் மாற்று அயலே பட்டு ஒழுகி ஓட . பொருந்தொளி - வினைத்தொகை . பொருந்தும் ஒளி . ஒளியைச் செய்யும் . அப்பொய் - அப்பொன் ( மண் , பெண் ) போலும் பொய்ப் பொருள்களை . பொருந்தா அன்பர் - மெய்ப்பொருளென்று பற்றாத சிவநேசர் . அன்பர்க்கு அணியன - அன்பர் ( சிவநேசர் ) க்கு அணியன ; அணிமையிலுள்ளன . ` இடையறா அன்பராமவர்க்கு அன்பர் ஆரூரரே ` ( தி .5 ப .7 பா .4) ` அளவுபடாதது ஓர் அன்பு ` ( தி .4 ப .3 பா .11) ` அன்பலாற் பொருளும் இல்லை ` ( தி .4 ப .40 பா .6) ` வேட்கையாற் பரவுந் தொண்டர் அடிமையை அளப்பர் போலும் ` ( தி .4 ப .56 பா .5) ` அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை ` ( தி .5 ப .21 பா .6) ` நித்த மணாளனை ...... அம்மானை அன்பில் அணைத்து வைத்தேன் ` ( தி .4 ப .15.7). ` கங்கை வார்சடைக் கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே ` ( தி .6 ப .95 பா .10)

பண் :

பாடல் எண் : 7

களித்துக் கலந்ததொர் காதற் கசிவொடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுதுமுன் னின்றவிப் பத்தரைக் கோதில்செந்தேன்
தெளித்துச் சுவையமு தூட்டி யமரர்கள் சூழிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வ மாக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அடியார்குழாத்தோடு மகிழ்ந்து அன்பால் ஏற்பட்ட உள்ள நெகிழ்ச்சியோடு காவிரியில் நீராடித் தொழுது தம் முன் நின்ற அடியார்களை மேம்பட்ட செந்தேனைத் தெளியச் செய்து அத்தேனை அமுதோடு உண்பித்துத் தேவர்கள் சூழ்ந்து வழிபடும் பெரிய செல்வத்தை அவர்களுக்கு வழங்கி எப்பொழுதும் செல்வன்கழல் ஏத்தும் செல்வத்தை இடையறாது நுகரும் வாய்ப்பினை நல்குவன .

குறிப்புரை :

அடித்தலம் பெருஞ்செல்வம் ஆக்கும் . அளித்து ஆக்கும் . சூழ் இருப்ப அளித்து ஆக்கும் . சூழிருப்பவர் அமரர் . அமரர்களது சூழ் எனலும் அமரர்கள் சூழ இருப்ப எனலும் ஆம் . அமரர்கள் தேன் தெளித்து அமுது ஊட்டிச்சூழ் இருப்ப . செந்தேன் . கோது இல் தேன் . கோது - குற்றம் ; வண்டெச்சில் , புளிப்பு , ஈ விழுதல் முதலியன குற்றம் . பத்தரைத் தெளித்து ., இப்பத்தர் , நின்ற பத்தர் . முன் நின்ற இப் பத்தர் :- நாயனார் சென்றிருந்த காலத்தில் இறைவன் திருமுன் நின்ற இப் பத்தர் . தொழுது நின்ற பத்தர் . குளித்துத் தொழுது . காவிரியிற் குளித்து . ` வாய் ` ஏழனுருபு . கசிவொடு தொழுது . காதற் கசிவு . கலந்ததொரு காதல் . களித்துக் கலந்ததொரு காதற் கசிவு களித்தல் உள்ளத்தது . கலத்தல் உடலது . காதற் கசிவு உணர்வினது . ` தேன் ` திருவருள் என்று கொண்டு உரைத்தலுமாம் . ` திருவையாறமர்ந்ததேன் ` என்றதுணர்க . தி .4 ப .39 பார்க்க . ` காதல் செய்யகிற்பார் தமக்குக் கிளரொளி வானகம் தான் கொடுக்கும் ` ( தி .4 ப .92 பா .13). பெருஞ்செல்வம் :- பேரின்பம் . அதுவே , ` நிலையுடைய பெருஞ் செல்வம் ` ` நீடுலகிற் பெறலாம் `. அழியும் உலகிற் பெறலாஞ்செல்வம் எல்லாம் நிலையில்லாதன . ` சென்றடையாததிரு ` ` சென்றடையாச் செல்வன் ` ` ஏரி நிறைந்தனைய செல்வன் ` ` செல்வன் கழலேத்துஞ் செல்வம் ` ` செல்வாய செல்வம் `

பண் :

பாடல் எண் : 8

திருத்திக் கருத்தினைச் செவ்வே நிறுத்திச் செறுத்துடலை
வருத்திக் கடிமலர் வாளெடுத் தோச்சி மருங்குசென்று
விருத்திக் குழக்கவல் லோர்கட்கு விண்பட் டிகையிடுமால்
அருத்தித் தருந்தவ ரேத்துமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

விரும்பிச் சிறந்த தவத்தினை உடையவர்கள் துதிக்கும் ஐயாறனுடைய திருவடிகள் உள்ளத்தைப் பிற பொருட்கண் செல்லாமல் திருத்தம் பெறச் செய்து அதனைச் சிவபெருமான் திருவடிகளிலேயே பதித்து , தொடர்ந்து , அதனை அடக்கி உடலை யோகத்தால் வருத்தி , நறுமணம் கமழும் ஒளி பொருந்திய மலர்களை எடுத்து உயர்த்தித் திருவடிகளில் தூவி எம்பெருமான் பக்கல் அடைந்து உடல் விருத்தி உயிர் விருத்தி ஆகிய இரண்டற்கும் முயலும் ஆற்றல் உடையவர்களுக்கு வீட்டுலகில் இடம் பெறுவதற்குப் பட்டிகையில் பெயர்ப்பதிவு செய்துவிடும் .

குறிப்புரை :

அடித்தலம் இடும் என்க . அருத்தித்து - அருத்தி என்னும் பெயரடியிற் பிறந்த வினையெச்சம் . அருத்தி - விருப்பம் . அருத்தித்தல் - வேண்டுதல் . ` உன்னை அருத்தித்து வந்தோம் ` ` அர்த்திக்கையாலே பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் ` ( திருப்பாவை 25. வியாக்கியானம் . ) அருந்தவர் - செய்தற்கு அரிய தவத்தைச் செய்யும் சிவஞானியர் . தவம் ` இறப்பு இல்தவம் ; சரியை கிரியை யோகம் - சரியையாளர் முதலோரும் தவத்தோரே ஆயினும் , அருந்தவர் என்றதால் . சிவஞானத்தவரே ஈண்டுக் கொள்ளற் பாலர் . ஏத்துதல் :- அத்துவிதமாய் நின்று வணங்குதல் . கருத்தினைத் திருத்திச் செவ்வே நிறுத்திச் செறித்து உடலை வருத்தி வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண்பட்டிகை இடும் . கருத்தினைத் திருத்துதல் :- ` சிந்தனை திருத்தும் திருமீயச்சூர் எந்தமையுடையாரிளங் கோயிலே ` ( தி .5 ப .11 பா .2) ` சீரார் அருளால் சிந்தனையைத் திருத்தி ஆண்ட சிவலோகா பேரானந்தம் பேராமை வைக்க வேண்டும் பெருமானே ` ( தி .8 திருவாசகம் ); கருத்து மற்றவற்றையே கருதிவரும் . கருதும் போதெல்லாம் தடுத்துத் திருத்திச் சிவத்தையே கருதப் பழக்குதல் . செவ்வே நிறுத்தல் - நெஞ்சத்தைச் சிவபெருமான் திருவடிக்கே பதித்தல் . ` நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் `. ` அணி அணாமலையுளானே நீதியா னின்னை அல்லால் நினையுமா நினைவிலேனே ` ( தி .4 ப .63 பா .1). செறுத்து - அடக்கி . கருத்தை அடக்குதல் :- அது சென்ற இடத்தாற் செலவிடாதீதொரீஇ நன்றின் பால் உய்ப்பது ஆகிய அறிவின் செயல் . செறிவு - அடக்கம் . ` செறிவறிந்து சீர்மை பயக்கும் ` ( குறள் . 123). உடலை வருத்தம் - உடம்பை யோகத்தால் வருந்தப் பண்ணல் . ` மெய்வருத்தக்கூலி ` - ` உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி `. ( குறள் . 619. பரிமேலழகருரை ). கடிமலர்வாள் - மணமுடைய பூவாகிய வாளை , எடுத்து ஓச்சி - எடுத்து உயர்த்தித் ( திருவடியில் ) தூவி . மருங்கு சென்று - சாமீப்பியம் அடைந்து . சாலோக சாமீப சாரூப சாயுச்சிய முத்திகளுள் ஒன்று . கிரியாயோகப் பயன் ஆகிய பதமுத்தி சாமிப்பியமும் சாரூபமும் . ஞானப்பயனாகிய சாயுச்சியமே பரமுத்தி . கருத்தைத் திருத்திச் செவ்வே நிறுத்தி உடலை வருத்தி மருங்கு செல்லல் கிரியாயோக மிரண்டற்கும் உரித்தே . யோகத்திற்குச் சிறப்பாகும் . விருத்தி :- உடல் விருத்தியும் உயிர் விருத்தியும் . ` விருத்தி நான் உமை வேண்டத் துருத்தி புக்கங்கிருந்தீர் ( தி .7 ப .46 பா .2) உடல் விருத்தி தாரீரே யாகில் திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் `. ( தி .7 ப .46 பா .9.) மேவிய காதல் தொண்டு விரவு மெய்விருத்தி பெற்றார் , ஆவியின் விருத்தியான அந்தணர் புலியூர் மன்றில் காவியங் கண்டர் கூத்துக் கண்டு கும்பிடுவது என்று வாவிசூழ் தில்லை மூதூர் வழிக்கொள்வான் வணங்கிப் போந்தார் ` ( தி .12 பெரிய புராணம் ஏயர்கோன் . 110) என்று சேக்கிழார் சுவாமிகள் இரண்டு விருத்தியையும் கூறியதுணர்க . ` குற்றேவல் ` - ` அந்தரங்கவிருத்தி ` உடைவாளும் அடுக்குரு வும் எடுத்தல் ; கலசப் பானை பிடித்தல் ; படிக்கம் வைத்தல் ; ` உமிழும் பொன் வட்டில் எடுத்தல் ; திருவடிகள் விளக்குதல் ; ஒலியன்பணி மாறுதல் ; சாமரம் இரட்டுதல் ; அடைக்காய் திருத்தல் ; அடிவருடுதல் ; முலைகளிடர் தீர அணைத்தல் இவை தொடக்கமானவை கோவிந்தற்குப் பண்ணுங் குற்றேவலாகிறது `. ( ஆறாயிரப்படி வியாக்யானம் ) என்பவற்றை நோக்கிக் குற்றேவலுக்கு உழக்க வல்லோர்கள் எனலும் யோகவிருத்தி எனலும் அமையும் . ` குற்றேவல் ` என்கிறதிலே இரண்டு வகையறிந்து சொல்லுங்கோள் , இற்றைப் பொழுதை உங்களோடே போக்குகிறோம் அங்ஙனே யாகிலென்றான் ; ( எற்றைக் கும் ஏழேழு பிறவிக்கும் ) இற்றையளவில் போகாதுகாண் - இப்பிறவி யளவில் போகாதுகாண் . ( எற்றைக்கும் ஏழேழுபிறவிக்கும் ) அகால கால்யமான நலமந்தமில்லதோர் நாட்டிலே யிருக்கவுமாம் ; ஆஸ்ரிதஸ ஜாதீயனாய்கொண்டு நில வரம்பில் பலபிறப்பாங் ஸம் ஸார மண்டலத்திலே அநேகாவதாரம் பண்ணவுமாம் ( ? ) செல்வம் , இலாபம் என்ற பொருளும் அதற்கு உண்டு . பட்டிகை :- ஏடு , தெப்பம் , யோகப்பட்டம் எனப் பலபொருளுடையது விண்பட்டிகையிடுதல் :- வல்லோர்கள் விண்புகத் தெப்பமிடுதல் . விண்ணோர்க்கு ஏடு எழுதியிடுதல் . ` பொற் சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும் புரிந்தருள வேண்டும் ` ( தி .7 ப .46 பா .10) என்றருளிய நம்பியாரூரர் திருவுள்ளத்தின்படி பூங் கச்சுமாம் .

பண் :

பாடல் எண் : 9

பாடும் பறண்டையு மாந்தையு மார்ப்பப் பரந்துபல்பேய்
கூடி முழவக் குவிகவிழ் கொட்டக் குறுநரிகள்
நீடுங் குழல்செய்ய வைய நெளிய நிணப்பிணக்காட்
டாடுந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் , ஒலிக்கும் பறண்டை மொந்தை என்ற இசைக்கருவிகள் ஆரவாரம் செய்யப் பலபேய்களும் நாற்புறமும் பரவி முழவு முதலியவற்றின் குவிந்து கவிழ்ந்த மார்ச்சனை இடத்தில் ஒலியை எழுப்ப , குறுநரிகள் வேய்ங்குழல் போல ஒலிக்கப் பூமி அதிர்ச்சி தாங்காமல் நெளிய , கொழுப்பு உருகும் பிணங்களை உடைய சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துவனவாம் .

குறிப்புரை :

பறண்டை :- பகண்டை எனப்படும் சில்லையோ ? வேறோ ? ` பகன்றில் ` ( தி .4 ப .3 பா .6) என்பதுபோல விளங்காத தொன்று இது . ` பாடும் பறண்டை ` என்றதாற் பாடுவது என்று தெரிகின்றது . ஆந்தை முதலியவற்றொடு கூறப்பட்டதால் உயரியதன்று . பறண்டையும் ஆந்தையும் ஆர்ப்பப் பரந்து , கூடி , கொட்ட , செய்ய , நெளிய , ஆடும் திருவடி . ஆர்த்தல் - ஒலிசெய்தல் பல்பேய்பரந்து கூடி முழவத்தின் குவிந்து கவிழ்ந்த மண் ( மார்ச்சனை ) இடத்தில் கொட்ட , குறிய நரிகள் குழலொலி செய்ய , வையம் (- பூமி ) நெளிய , நிணங்களை உடைய பிணங்களைக் கொண்ட காட்டில் ஆடும் திருவடிகள் . அடித்தலம் திருவடி காண்க .

பண் :

பாடல் எண் : 10

நின்போ லமரர்க ணீண்முடி சாய்த்து நிமிர்த்துகுத்த
பைம்போ துழக்கிப் பவளந் தழைப்பன பாங்கறியா
என்போ லிகள்பறித் திட்ட விலையு முகையுமெல்லாம்
அம்போ தெனக்கொள்ளு மையனை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஆகமப்படி செய்யும் முறைகளை அறியாத அடியேனைப் போன்றவர்கள் பறித்துச் சமர்ப்பித்த இலைகளையும் மொட்டுக்களையும் எல்லாம் அழகிய பூக்களாக ஏற்கும் ஐயாறன் உடைய திருவடிகள் தேவர்கள் நீண்ட முடிகளைச் சாய்த்து வணங்கிச் சமர்ப்பித்த புதிய பூக்களைத் துகைத்து எம்பெருமானைப் போலப் பவள நிறத்தால் சிறந்து விளங்குவன .

குறிப்புரை :

ஐயாறன் ` என்னும் படர்க்கையும் ` நின் ` என்னும் முன்னிலையும் மயங்கலாமோ என்னலாம் . தி .4 ப .13 பா .1-8 பார்க்க . ஐயாறனையாகிய நின் அடித்தலம் நின்போல் பவளம் தழைப்பன . ` பவளம் போல் மேனி ( யிற்பால் வெண்ணீறுடை ) யன் நீ நின் அடித்தலமும் பவளம் தழைப்பன . அமரர்கள் - தேவர்கள் . ` அமரரால் அமரப்படுவான் ` ( சுந்தரர் ) என்புழிப்படும் பொருளும் கொள்ளலாம் . அன்பர் என்றதாம் . திருமுடியைச் சாய்த்து நிமிர்த்தியன திருவடி ( அடித்தலம் ). உகுத்தனவும் அவையே . உக்கன பைம்போது . அவை உழக்கிப் பவளநிறம் தழைக்கலாயின சிவபாதமலரில் . பாங்கு - சைவப்பாங்கு ; ஆகமப்படி செய்யும் முறைகள் சைவத்திறமும் ஆம் . அறியா - அறியாத , அறிந்து எனலுமாம் . அறிந்து இட்ட என்க . அறியா என் போலிகள் . இட்ட இலையும் முகையும் . பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் . அம்போது (- அழகிய போதுகள் ); மலர்கள் , என என்றுளங்கொண்டு கொள்ளும் - ஏற்று . வேண்டுவ நல்கும் .

பண் :

பாடல் எண் : 11

மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி
நிலையா யிருப்பன நின்றோர் மதிப்பன நீணிலத்துப்
புலையாடு புன்மை தவிர்ப்பன பொன்னுல கம்மளிக்கும்
அலையார் புனற்பொன்னி சூழ்ந்தவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

தேவருலகத்தை வழங்கும் , அலையோடு கூடிய நீரை உடைய காவிரி தென்புறத்தில் சூழ்ந்துள்ள ஐயாறன் அடித்தலங்கள் பார்வதியின் மனத்தனவாய் , தேவர்களின் முடிகள் விளங்குவதனால் நிலையாகத் தம்மிடம் பொருந்தியிருப்பனவாய் , வழிபட்டு நிற்பவரால் மதிக்கப்படுவனவாய் , இவ்வுலகின் கீழ்மையில் ஈடுபடும் புல்லிய பிறவியைப் போக்குவன ஆகும் .

குறிப்புரை :

அடித்தலம் மனத்தன , மதிப்பன , தவிர்ப்பன . மலை - இமயமலை மலையார் - இமாசலராசனார் . மடந்தை - பார்வதி . மனத்தன - திருவுள்ளத்திலிருப்பன . வானோர் - தேவர் . மகுடம் - முடி . மன்னி - பொருந்தி . வானோர் மகுடத்தை மன்னி நிலையாயிருப்பன அடித்தலம் . அடித்தலத்தை இடையறாது வணங்கும் வானோர் முடியில் , அவை நிலையாயிருக்கின்றன . நின்றோர் - நிட்டையாளர் . மதிப்பன - உணர்வன . நீள்நிலம் - நீண்ட மண் உலகினது . புலை ஆடு புன்மை - புலாலுடல் எடுக்கும் புன் பிறவியை . ` புன்மை ` ஆகு பெயர் . தவிர்ப்பன - ஒழிப்பன , பொன்னுலகம் - துறக்கம் ; விண் ; வானுலகத்தின்பத்தை . அளிக்கும் - இரங்கி அருள் செய்யும் . அலை ஆர் புனல் பொன்னி - அலைமிக்க நீரையுடைய காவிரி . பொன்னி சூழ்ந்த ஐயாறு . ஐயாறனடித்தலம் அளிக்கும் என்றும் , அளிக்கும் புனல் என்றும் , அளிக்கும் ஐயாறன் என்றும் இயைக்கலாம் .

பண் :

பாடல் எண் : 12

பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன போற்றியென்பார்
புலம்பும் பொழுதும் புணர்துணை யாவன பொன்னனையாள்
சிலம்புஞ் செறிபா டகமுஞ் செழுங்கிண் கிணித்திரளும்
அலம்புந் திருவடி காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் அப்பொழுது அலர்ந்த பொற்றாமரைமலர்கள் போல்வனவாய் , தம்மை வழிபடுபவர் தனித்து வருந்தும்போதும் வருத்தத்தைப் போக்கும் துணையாவனவாய் , பொன் போன்ற ஒளியையுடைய பார்வதியின் சிலம்பும் பாடகமும் கிண்கிணியும் தம்மிடையே ஒலிப்பனவாகும் .

குறிப்புரை :

அடித்தலம் புதுமலர் போல்வன , துணையாவன ; திருவடி , பொலம் - பொன் , புண்டரீகம் - வெண்டாமரை . ஈண்டுத் தாமரை என்னும் பொருட்டாய் நின்றது . கோகநதம் - செந்தாமரை . புண்டரிகம் வெண்டாமரை என்பது வடமொழி வழக்கு - ஞானம் புகலுடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் ` ( சம்பந்தர் ) புதுமலர் - நாண்மலர் . நாண்மலர் என்றது ஈண்டு அப்பொழுது அலர்ந்த மலரை , ` இராமன் திருமுகச்செவ்வி ஒப்பதே முன்பு பின்பு . அவ்வாசகம் உரைக்கக் கேட்ட அப்பொழுது , அலர்ந்த செந்தாமரையினை வென்றது .` ( கம்பராமாயணம் ) இங்கு முன்பும் பின்பும் தாமரையை ஒப்பது , வாசகம் கேட்ட அப்பொழுது மாத்திரம் அம்மலரை வென்றது இராமன் திருமுகம் என்ற வாய்மையை உணர்க . முன்பு , பின்பு அப்பொழுது என்ற முக்காலத்தையும் , ` சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை யொத்திருக்கும் முகம் ` அதனை வென்ற பொழுதைக் கூறும் அரியதோரிடத்தையும் உணராத பிறர் , ` கேட்ட அப்பொழுது ` என்னாது , அப்பொழுது அலர்ந்த செந்தாமரை என்றனர் . போற்றி என்பார் - துதி செய்து கதி என்றடைந்தோர் . புலம்பும் - தனித்து வருந்தும் காலத்திலும் . புணர் துணை - பொருந்து துணை . பொன்னனையாள் - அறம் வளர்த்த அன்னை , ` சிலம்பு `. ` பாடகம் `, ` கிண்கிணி ` காலணிகள் . அலம்பும் - ஒலிக்கும் .

பண் :

பாடல் எண் : 13

உற்றா ரிலாதார்க் குறுதுணை யாவன வோதிநன்னூல்
கற்றார் பரவப் பெருமை யுடையன காதல்செய்ய
கிற்பார் தமக்குக் கிளரொளி வானகந் தான்கொடுக்கும்
அற்றார்க் கரும்பொருள் காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தமக்கு உதவுவார் இல்லாது தனித்து வருந்துபவர்களுக்கு மேம்பட்ட துணையாவனவாய் , சிவாகமங்களை ஒதி அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறிந்த சான்றோர்கள் முன்நின்று துதிக்கும் பெருமை உடையனவாய் , தம்மை விரும்பும் ஆற்றல் உடையவர்களுக்கு மேம்பட்ட ஞானஒளி வடிவமான வீட்டுலகை அளிப்பனவாய் ஏனைய பொருள்பற்று அற்றாருக்குக் கிட்டுதற்குச் சிறந்த பொருளாய் உள்ளனவாம் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் உறுதுணை ஆவன ; பெருமையுடையன் ; கொடுக்கும் ; அரும்பொருள் காண்க . உற்றார் :- உற்றார் , பெற்றார் கிளைஞர் கேளிர் , சுற்றத்தார் முதலிய பலருள் ஒருவகையர் , கிளைத்தவர் . கேட்பவர் , சுற்றுபவர் , உற்றவர் ., பெற்றவர் எல்லாரும் ஒரு திறத்தராகார் . மகன் மகள் பேரன் பேத்தி எனக் கிளைத்தல் , நலம் பொலம் கேட்டல் . சுற்றியிருத்தல் . ` எண்பெருஞ்சுற்றம் ` பொருளிருக்கும் அளவும் உறுதல் ; கொடுத்தல் கொள்ளல் செய்துறுதல் , மக்களைப் பெறுதல் முதலிய எல்லாம் பல தொழிலாலும் தன்மையாலும் வேறுபடுதலறிக . ` கேளும் கிளையும் கெட்டோர்க்கில்லை ` ( வெற்றிவேற்கை ) ` உற்றார்க்குரியர் பொற்றொடி மகளிர் ` ` சுற்றமும் துணையும் ` ` உற்றார் பெற்றார் ` என்னும் வழக்கும் உணர்க . உற்றாரிலாதார் - அகதி . உறுதுணை - மிக்கதுணை . நன்னூல் ஓதிக் கற்றார் - சிவாகமங்களை ஓதிக் கற்றறிந்தவர் . பரவ - வழிபட வாழ்த்த பெருமை - வியாபகம் . காதல் செய்யகிற்பார் - கருதுதலைச் செய்ய வல்லவர் . கருதல் - காதல் ; மரூஉ . சிறுபாணாற்றுப்படையிற் (213) காண்க . செய்யகிற்பார் தமக்கு - செய்யவல்லார்க்கு . கிளர் ஒளி வான் அகம் - துறக்கம் . சிவலோகமுமாம் . அற்றார் :- ` பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார் அற்றார் மற்றாதலரிது ` ( திருக்குறள் ).

பண் :

பாடல் எண் : 14

வானைக் கடந்தண்டத் தப்பான் மதிப்பன மந்திரிப்பார்
ஊனைக் கழித்துய்யக் கொண்டருள் செய்வன வுத்தமர்க்கு
ஞானச் சுடராய் நடுவே யுதிப்பன நங்கையஞ்ச
ஆனை யுரித்தன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தேவருலகையும் தாண்டி அதற்கு அப்பாலும் மதிக்கப்படுவனவாய் , மந்திரங்களால் வழிபடு கின்றவர்களுடைய பிறவித்துயரைப் போக்கி உய்தி பெற அவர்களை அடிமையாகக் கொண்டு பேரின்பம் நல்குவனவாய் , மேம்பட்ட சான்றோர்களுக்கு ஞானஒளியாய் அவர்கள் உள்ளத்தே தோன்றுவனவாய் , பார்வதி அஞ்சுமாறு பெருமான் யானையைத் தோல் உரித்த காலை அந்த யானையின் உடலை அழுத்திப் பிடித்துக் கொள்ள உதவியனவாய் உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் மதிப்பன ; செய்வன ; உதிப்பன ; உரித்தன காண்க . வானை - உம்பருலகை . கடந்து அப்பால் மதிப்பன - தாண்டி அப்புறத்தே உணரப்படுவன . இது திருவடியின் வியாபகம் உணர்த்துவது , ஊனைக் கிழித்தல் பிறவி நீக்கம் , உய்யக் கொள்ளல் - உயிர்கள் உய்திபெற ஆட்கொள்ளுதல் . அருள் செய்தல் - பேரின்பம் நல்குதல் . ஊனைக் கழித்தலைத் துன்ப நீக்கமாகவும் உய்யக் கொண்டருள் செய்தலை இன்ப ஆக்கமாகவும் உணர்க . பாசவீடு சிவப்பேறு இரண்டும் இணைந்ததே வீடுபேறு . வீடுபேறு - விடுதலும் பெறுதலும் ; உம்மைத்தொகை . வீட்டைப் பெறுதல் என வேற்றுமைத் தொகையாதலும் சிலவிடத்துப் பொருந்தும் . உத்தமர் - சத்திநிபாதத்துத்தமர் . ( ஞானச்சுடர் - உணர்வொளி ; )` சிவஞானதீபம் ` சிவஞானசோதி `. நடுவே உதிப்பன - உள்ளத்தே தோன்றுவன . ` கண்டொல்லை காணு நெறிகண்ணுயிர் நாப்பணிலை யுண்டில்லை யல்லதொளி ` ( திருவருட்பயன் ) என்புழிப்படும் பொருளுமாம் . இடர்கெடுத்து என்னை ஆண்டுகொண்டு என்னுள் இருட்பிழம்பற எறிந்தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்கும் தூய நற்சோதியுட் சோதி ( தி .9 திருவிசைப்பா ) நங்கை - உமாதேவி . யானை உரித்தது - ஆணவம் அகற்றியது . அச்சம் :- அறியாமைப் பெருக்கை யகற்றுங்கால் அறிவில் உண்டாகும் அச்சமும் வெருவலும் குறித்தது .

பண் :

பாடல் எண் : 15

மாதிர மானில மாவன வானவர் மாமுகட்டின்
மீதன மென்கழல் வெங்கச்சு வீக்கின வெந்நமனார்
தூதரை யோடத் துரப்பன துன்பறத் தொண்டுபட்டார்க்
காதர மாவன காண்கவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் வானுலகும் மண் உலகும் ஆவனவாய்த் தேவர்களின் உச்சியின் மீது பொருந்துவன வாய் , மென்மையான கழலும் விரும்பத்தக்க கச்சும் கட்டப்பட்டனவாய் , கொடிய தருமராசரின் தூதர்களை ஒடச் செய்வனவாய் , உலகத் துன்பங்கள் தீரத்தொண்டராய் அடிமைப் பணி செய்பவருக்குத் தாங்கும் பொருளாய் உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஆவன ; மீதன ; வீக்கின ; துரப்பன ; ஆவன காண்க . மாதிரம் : வான் , திசை , மலை முதலிய பல பொருளுள் யாதும் பொருந்தும் எனினும் , மால் நிலம் என்றதற்கேற்ப வானுலகம் என்பது சிறக்கும் . விண்ணும் மண்ணும் ஆவன என்க . வானவர் - தேவர் . மாமுகட்டின் மீதன - பெரிய உச்சி மேலன . ` வானோர் மகுடம் மன்னி நிலையாயிருப்பன ` ( தி .4 ப .91 பா .11). மென்கழல் வெங்கச்சு வீக்கின :- ` கச்சினன் கழலினன் ` ( தி .11 திருமுருகாற்றுப்படை ) வீக்கிய கழலின் மென்மையும் கச்சின் வன்மையும் குறித்தலால் , ஈண்டு வெம்மை வன்மைப் பொருட்டாம் . ` வெண்மைவேண்டல் ` எனலாம் . வீக்குதல் - கட்டுதல் . வெந் நமனார் - வெய்ய சமனார் . சமன் (- நடு ) ஞமன் , நமன் என மருவிற்று . ` நடுவன் ` என்பதும் அறிக . ` தெரிகோல் ஞமன் ` ( புறம் ) என்றதன் உரை காண்க . நமனார் தூதர் - எமதூதர் ; காலதூதர் . ஓடத் துரப்பன - ஓடும்படித் துரத்துவன . துரத்தல் - ஓடுவித்தல் , ` ஓட்டுதல் ` ஈண்டுப் பொருந்தாது . துன்பு பிறவித்துன்பம் முதலியன . அற - ஒழிய . தொண்டு பட்டார்க்கு - தொண்டு பூண்டவர்க்கு . ஆதரம் - அன்பு . ` அன்பே சிவம் ` ( தி .10 திருமந்திரம் ).

பண் :

பாடல் எண் : 16

பேணித் தொழுமவர் பொன்னுல காளப் பிறங்கருளால்
ஏணிப் படிநெறி யிட்டுக் கொடுத்திமை யோர்முடிமேல்
மாணிக்க மொத்து மரகதம் போன்று வயிரமன்னி
ஆணிக் கனகமு மொக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் , விரும்பித் தொழும் அடியவர்கள் மேம்பட்ட வீட்டுலகத்தை ஆளுமாறு மிக்க அருளினாலே ஏணிப்படி போன்று ஏறிச் செல்லக் கூடிய வழியை அமைத்துக் கொடுத்து , தேவர்கள் முடிக்கு அணியத்தக்க மாணிக்கம் , மரகதம் , வைரம் , தூய பொன் இவற்றை ஒத்து இருப்பனவாம் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஆள , இட்டுக் கொடுத்து , ஒத்து போன்று மன்னி ஒக்கும் என்க . பொன்னுலகாளப் பெறுமவர் அடித்தலத்தைப் பேணித் தொழுமவர் . அவர்க்கு அவ்வுலகைக் கொடுப்பன அடித்தலம் ஏணிப்படியை நெறியில் இட்டுக் கொடுப்பதே முறை . அருள் . பிறங்கும் அருள் . பிறக்கம் - விளக்கம் ஒளிசெய்தல் , உயர்ச்சி . அருளால் கொடுத்து . இமையோர் முடிமேல் இருக்கும் ஐயாறன் அடித்தலம் மாணிக்கத்தை ஒத்தன . மரகத்தைப் போன்றன . வயிரத்தை மன்னின . ஆணிப்பொன்னை ஒத்தன . ` ஆணிப் பொன் ` ( கம்பரா . ) மாணிக்கம் , மரகதம் , வயிரம் , ஆணிப் பொன் எல்லாம் அடித்தலத்துக்கு உவமமே அன்றி ஒப்பாவன அல்ல . உவமமும் ஒப்பும் ஒன்றாகா . ` ஒப்புடையனல்லன் ஓர் உவமன் இல்லி ` என்றருளிய இச் சுவாமிகள் கருத்தை நோக்குக . இரண்டும் ஒன்றன் மேல் , கூறியது கூறலாகும் , ` நெஞ்சொத்து நிற்றல் ` எண்ணிறைந்த நெய்யொத்து நின்றானை நீலமிடற்றானை என் கையொத்து வேர் கூப்புக ` என்னும் இடத்தில் ` ஒப்பு ` சென்றுணரலாம் . ` குருவிபோலக் கூப்பிட்டான் ` ` புலிபோலப் பாய்ந்தான் ` ` மதிமுகம் ` என்புழி உவமம் விளங்கும் .

பண் :

பாடல் எண் : 17

ஓதிய ஞானமும் ஞானப் பொருளு மொலிசிறந்த
வேதியர் வேதமும் வேள்வியு மாவன விண்ணுமண்ணும்
சோதியுஞ் செஞ்சுடர் ஞாயிறு மொப்பன தூமதியோ
டாதியு மந்தமு மானவை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஆதியும் , அந்தமும் ஆகிய ஐயாறன் அடித் தலங்கள் வேதஆகமங்களை ஓதியதனால் பெற்ற அபர ஞானமும் , ஞானப் பொருளாகிய பரஞானமும் , ஒலியால் மேம்பட்ட அந்தணர்கள் ஓதும் வேதமும் , வேதத்தை ஒட்டிச் செய்யப்படும் வேள்வியும் தேவருலகமும் இந்நிலவுலகமும் அக்கினியும் சிவந்த ஒளியை உடைய சூரியனும் தூயமதியும் ஒப்பனவாய ஒளிப்பொருளுமாக உள்ளன .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் ஞானமும் ஞானப்பொருளும் வேதமும் வேள்வியும் ஆவன ; விண்ணும் மண்ணும் சோதியும் தூமதியோடு ஞாயிறும் ஒப்பன . ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் . ஓதிய ஞானம் - வேதாகமங்களை ஒதியதாற் பெற்ற மெய்யுணர்வு ; அபரஞானம் . ஞானப் பொருள் - பரஞானம் . ` வேத சாத்திர மிருதி புராண கலைஞானம் விரும்பசபை வைகரியாதித்திறங்கள் மேலாம் நாதமுடிவானவெல்லாம் பாச ஞானம் ` என்றது வேறு . ` ஓதிய ஞானம் ` என்னும் ஈது வேறு . ` நால்வகை வாக்கின் பகுதியவாகிய வேதம் முதலிய சொற்பிரபஞ்சமும் நிலமுதல் நாதம் ஈறாகிய பொருட் பிரபஞ்சமும் என்னும் இவைபற்றி நிகழும் ஏகதேச ஞானம் அனைத்தும் பாசஞானம் . ( சிவஞானசித்தியார் . 293) ` உயர் ஞானம் இரண்டாம் மாறா மலம் அகல அகலாது மன்னு போதத் திருவருள் ஒன்று . ஒன்று அதனைத் தெளியவோதும் சிவாகமம் என்று உலகு அறியச் செப்பும் நூலே ` ( சிவப்பிரகாசம் . 10) என்ற இரண்டும் முறையே ஞானப் பொருளும் ஞானமும் ஆக இதிற் குறிக்கப் பெற்றன . இவை சிவஞானப் பகுதி . ஒலி சிறந்த வேதியர் :- வேதியர் வேதம் ஒலிப்பதிற் சிறத்தலைக் குறித்தது . சிறவாதார் பலர் . ஒலி சிறந்த வேதம் எனலுமாம் . வேதோச்சாரணகிரமம் உணர்ந்தோர் உணர்வார் . விண்ணிலும் மண்ணிலும் ஞாயிறு , மதி அக்கினி ஆகிய சோதிகளிலும் ஐயாறனடித்தலம் ஒத்து விளங்குகின்றன . ` பார்க்குமிடமெங்கும் ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணானந்தம் ` என்றதுணர்க . ` போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாஞ் செந்தளிர்கள் `. ( தி .8 திருவாசகம் . 887. பார்க்க .)

பண் :

பாடல் எண் : 18

சுணங்கு முகத்துத் துணைமுலைப் பாவை சுரும்பொடுவண்
டணங்குங் குழலி யணியார் வளைக்கரங் கூப்பிநின்று
வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும்வண் காந்தளொண்போ
தணங்கு மரவிந்த மொக்குமை யாற னடித்தலமே.

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் தேமல் படர்ந்த முன்பகுதியை உடைய இணையான தனங்களை உடைய பாவை போன்ற பார்வதி சுரும்பும் வண்டும் அழகுசெய்யும் கூந்தலை உடையவளாய் வளையல்களை அணிந்த கைகளைக் குவித்து நின்று வணங்கும் போதும் தடவிக்கொடுக்கும் போதும் காந்தட்பூவால் அழகுசெய்யப்பட்ட தாமரைப் பூக்களை ஒத்திருக்கின்றன . காந்தட்பூ - பார்வதிகைகள் , தாமரை - பெருமான் திருவடிகள் .

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம் பாவை குழலி வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் காந்தட்போது அணங்கும் ; அரவிந்தம் ஒக்கும் . சுணங்கு - தேமல் . முகம் - முலைமுகம் . துணைமுலை - இணைநகில் . பாவை - பொய்மை போல்வாள் ; உவம வாகுபெயர் . பாவையாகிய குழலி . சுரும்பும் வண்டும் அணங்கும் குழல் . அழகு செய்யும் கூந்தல் . இரண்டினமும் மொய்த்துச் சுமையாக்கிவருத்தும் எனலுமாம் . அணங்குதல் - அழகு செய்தல் , வருத்துதல் , குழலி - குழலாள் . அணி - அலங்காரம் ; அழகு . ஆர் - பொருந்திய நிறைந்த , கரங்கூப்பி , கை குவிபு என்பதன் மரூஉவே கூப்பு என்பது . ` குவிபிட்டான் ` கூப்பிட்டான் என்று மருவியதும் அறிக . கைகுவிதலும் வாய்குவிதலும் பற்றியுண்டான சொல் குவிபு - கூவ்பு - கூப்பு என்னும் முறையில் மருவிற்று . கூப்பு என்றதன் அடியாகக் கூப்பி என்னும் வினையெச்சம் தோன்றிற்று . வணங்கும்பொழுது காந்தட்போது வருந்தும் , வருடும்பொழுதும் அரவிந்தத்தை ஒக்கும் . செங்காந்தட் பூப்போல் ஒளிச்செய்து அழகுறுத்தும் எனலுமாம் . என்றும் அரவிந்தம் (- தாமரையை ) ஒக்கும் அடித்தலம் அவ்விரு பொழுதிலும் காந்தட் போது போலணங்கு (- அழகு ) செய்யும் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 19

சுழலார் துயர்வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்துன்னும்
நிழலா வனவென்றும் நீங்காப் பிறவி  நிலைகெடுத்துக்
கழலா வினைகள் கழற்றுவ கால வனங்கடந்த
அழலா ரொளியன காண்கவை யாற னடித்தலமே. 

பொழிப்புரை :

ஐயாறன் அடித்தலங்கள் கலக்குகின்ற துயராகிய வெப்பம், தாக்கும் போது கைத்தொண்டு செய்யும் அடியவர்களுக்குப் பொருந்தும் நிழலானவையாய், ஒரு பொழுதும் நீங்காத பிறவி எடுக்கும் செயலைப் போக்கி, விடுத்து நீங்காத வினைகளை அப்புறப் படுத்துவனவாய்க் காலம் என்னும் காட்டினை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியை உடையன.

குறிப்புரை :

ஐயாறன் அடித்தலம், வெயில் சுட்டிடும்போது நிழல் ஆவன; பிறவிகெடுத்து வினைகள் கழற்றுவ; வனங்கடந்த அழலொளியன - காண்க. சுழல் - கலக்கம்; சுற்று; சோர்வு. ஆர் துயர் - நிறைந்த துயரம். துயர் வெயில் - துயராகிய வெயில். வெயில் சுடும் போது நிழலாயிருந்து தணிப்பன. அடித் தொண்டர்:- `அடித்தொண்டர்` `முடித்தொண்டர்` (தி.4 ப.102 பா.4) திருவடித் தொண்டு பூண்ட மெய்யன்பர். துன்னும் நிழல் - பொருந்தும் நிழல்; செறிந்த நிழல். தொண்டர் துன்னும் நிழல்; தொண்டர்க்குத் துன்னும் நிழல். என்றும் நீங்காப் பிறவி நிலை:- எக்காலத்தும் நீங்காது நிற்கும் பிறப்பினது நிலையை. நிலைகெடுத்து - நிலைகுலைத்து . நீணிலத்துப் புலையாடு புன்மை தவிர்ப்பன`. (தி.4 ப.92 பா.11) கழலாவினைகள் கழற்றுவ - கழன்றொழியாத வினைகளைக் கழன்றொழியச் செய்வன. காலவனம் கடந்த அழல் ஆர் ஒளியன:- காலம் என்னும் காட்டை எரித்து வென்ற தீயின் நிறைந்த ஒளியுடையன; காலாதீதப் பொருள். `என்றைக்கும் உள்ளது` (தாயுமானவர்) `அழலாரொளியன` அரியும் அயனும் அடிமுடி தேடியதை உணர்த்திய குறிப்பு. இதனாலும் அடுத்த திருவிருத்தத்தாலும் இவ்விருபதும் இருவேறு பதிகமாகக் கொள்ளலாகாதன எனல் விளங்கும். தருமை ஆதீனத்தின் இசைவு பெற்று மதுரை ஞானசம்பந்தப் பிள்ளை வெளியிட்ட அடங்கன்முறைப் பதிப்பிலும் இருவேறு பதிகமாக இல்லை. சிவக்கவிமணி சி.கே.சு. முதலியார் பி. ஏ., அவர்கள் முதலியோர், நல்லூர்ப்பெருமணத்தில் ஞானசம்பந்தர் திருவீதியுலாவில் வெயில் மிக்கு வருந்தியபோது, தேவார ஐயா அவர்கள் இதனை உருகிப்பாட ஐந்து கணத்துள் நிறைய மழை பெய்தது. சில ஆண்டு கழித்துத் திருப்புக் கொளியூரவி நாசியிலும் இவ்வாறு நிகழ்ந்தது. (தருமை ஆதீனப் பதிப்பு தி.12 அப்பர் புராணம் பக்கம் 641 பார்க்க.)

பண் :

பாடல் எண் : 20

வலியான் றலைபத்தும் வாய்விட்டலற வரையடர்த்து
மெலியா வலியுடைக் கூற்றை யுதைத்துவிண் ணோர்கண்முன்னே
பலிசேர் படுகடைப் பார்த்துப்பன் னாளும் பலரிகழ
அலியா நிலைநிற்கு மையனை யாற னடித்தலமே. 

பொழிப்புரை :

நம் தலைவனாகிய ஐயாறனுடைய திருவடிகள் வலிமையை உடைய இராவணனின் தலைகள் பத்தும் வாய்விட்டு அலறுமாறு மலையால் அவனை அழுத்தி, குறையாத வலிமையை உடைய கூற்றுவனை உதைத்து, தேவர்கள் காண அவர்கள் முன்னே பிச்சை வழங்கும் வீட்டுவாயில்களை நோக்கிப் பல நாளும் பலரும் இகழுமாறு ஆண்மை நிலைக்கு ஏலாத அலியாம் நிலைக்கு உரிய செயல்களைச் செய்யும் இயல்பின.

குறிப்புரை :

வலியான் - இராவணன்; வலியுடையவன். பத்துத் தலையும் வாய்விட்டு அலற அடர்த்து நிற்கும். கயிலை வரையால் அடர்த்து நிற்கும். கூற்றை உதைத்து நிற்கும். விண்ணோர்கள் முன்னே அலியா நிலை நிற்கும். பலிசேர் படுகடைப் பார்த்து நிற்கும். பன்னாளும் நிற்கும். பலர் இகழ நிற்கும். மெலியா வலிமை கூற்றுடையது. அத்தகு கூற்றும் மெலிய உதைத்தன அடித்தலம். கடைதொறும் சென்று பலியை நோக்கி நிற்றல் இகழ்ச்சியாக்கும். விண்ணோரெதிரில் பலிக்காகக் கடைதொறும் நிற்றல் ஆண்மை நிலை ஆகாது. அலியாம் நிலையே என்றார். ஒருநாள் அன்று, பலநாளும் பலர் இகழ நிற்கும்.
சிற்பி