திருவையாறு


பண் :

பாடல் எண் : 1

அந்திவட் டத்திங்கட் கண்ணிய னையா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.

பொழிப்புரை :

வட்டமாகச் சடைக்கற்றையிலே தன் ஒளியைச் சிதறி வண்டுகள் ஒலிக்குமாறு சிறிது மலர்ந்த நந்தியாவட்டப் பூக்களோடு கொன்றைப் பூக்களும் கலக்குமாறு அணிந்த , நம்மால் விரும்பப்பெறும் பெருமானாய் , மாலையிலே வட்ட வடிவோடு ஒளி வீசும் சந்திரனைப் பிறையாகக் கொண்டு முடிமாலையாக அணிந்து திருவையாற்றை விரும்பி உறைந்து அடியேனுடைய அறிவாகிய வட்டத்திடையே புகுந்து நிலையாக இருக்கும் பெருமானுடைய இருப்பினை அடியேன் பொய்ச்செயல் என்று கூறுவேனோ ?

குறிப்புரை :

அந்திவட்டம் திங்கள் கண்ணியன் - மாலையந்தியில் வட்டமாகத் திகழும் மாதர்ப் பிறையைக் கண்ணியாக அணிந்த கருணையன் . ஐயாறு அமர்ந்து வந்து - திருவையாறு திருக்கோயிலில் விரும்பி யெழுந்தருளிவந்து , என் புந்தி வட்டத்து இடை புக்கு நின்றான் - அடியேனது அகச்சூழலிடையிற் புகுந்து நிலைத்தவன் . நின்றானையும் பொய் என்பனோ ? என்னேன் , பொய் எனல் - அவன் புக்கிலன் வந்திலன் நின்றிலன் . அப்படி ஒருவன் யாண்டும் இலன் என்பன முதலிய இன்மை ( நாத்திகம் ) பேசுதல் . வட்டச் சடைக்கற்றை சிந்தி அலம்பச் சிறிது அலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றையும் வளாவிய நம்பன் . வட்டமாகச் சிந்தி எனலுமாம் . நந்திவட்டம் - நந்தியாவர்த்தம் பூ ; ` அந்தி வட்டத் திளங் கண்ணியன் ஆறமர் செஞ் சடையான் ` என முதலடியிற் சிறிது வேறுபடுதலன்றிப் பிறிது யாதும் வேறு படாமை ( தி .4 ப .113 பா .5 இற் ) காண்க . தி .4 ப .67 பா .2; ப .77 பா 6 இரண்டும் போல் இவையும் அமைந்துள ( தி .4 ப .84 பா .8, தி :- 5 ப .1 பா .9, ப .93 பா .2, தி .6 ப .5 பா .9.) ` கொன்றை வளாவிய நம்பனையே ` :- வேரிவளாய விரைமலர்க் கொன்றை ` ` சேரி வளாய என் சிந்தை ` ` வாரிவளாய வருபுனல் 2, ` ஏரி வளாவிக் கிடந்தது `. ( தி .4 ப .113 பா .9).

பண் :

பாடல் எண் : 2

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய்நின்றகால்
ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே.

பொழிப்புரை :

பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி , கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி , சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள் , பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள் , அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள் , எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள் , பொன் போன்ற திருவடிகள் , அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்து சென்று ஆராயுமாறு பேராற்ற லுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன .

குறிப்புரை :

ஐயாற்றன - ஐயாற்றனுடையன ; வினைக்குறிப்பு முற்று . ஐயாற்றனகால் எனல் பன்மையுருபேற்ற ஆறன் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராதலும் கால் ஐயாற்றன எனல் வினைக் குறிப்பு முற்றுப் பயனிலை கொண்ட எழுவாய்த் தொடராதலும் அறிக . அரி மால் தேர வல்லன் என்னும் ( மதுரை ஞானசம்பந்தப் பிள்ளையின் பதிப்பிலுள்ள ) பாடம் பொருந்தும் . அரி மான் தேர் வலவன் என்பது பற்பல பழைய பதிப்பிலே உள்ள பாடம் . அரிமால் - அரியாகிய திருமால் . தேர - அடி தேடித் தெரிந்துகொள்ள . அல்லன் - காண்டற்கு எளியன் அல்லன் ஆன சிவபிரான் . வல்லன் எனில் அவன் காட்சிக்கு எட்டா திருக்கவல்லவனான சிவபிரான் என்றுரைக்க . அரி - பிரமன் எனக் கொண்டு அயனும் மாலும் எனலுமாம் . ` பரிமான் தேர் ` ` வல் வினை ` என்றும் பாடபேதம் உண்டு . பாடகம் - காலணியினொன்று . ` பாடகச் செம்பதும மலர்ப்பாவையர் பல்லாண்டிசைப்ப ` ( கம்பரா . பால . திருவவதார . 62) கழல் :- வீரர் வெற்றிக் குறியாக வலக் காலில் அணியும் மணிச் சிறப்பு . பரிதிக் கதிர் - கதிரோனொளி . உக்க - சிந்திய . அந்தி - மாலையந்தி . பரிதிக் கதிர் உக்க அந்தி :- மாலைப் பொழுது ; இரவு . அந்தி நாடகம் - இராக் கூத்து . நங்கை முன் - உடையவளாகிய நம் தாய்க்கு முன்னர் , ஏனம் - பன்றி . காடகக் கால் - காட்டில் ( நடந்த ) கால் . ஏனத்தின் பின் காடகம் நடந்த கால் எனலுமாம் . கணம் - பதினெண்கணமும் . கைதொழும் கால் . எம் கண்ணாய் நின்ற கால் . ஆடகம் - பொன் . உவமை . தி .4 ப .20 பா .4 பார்க்க .
சிற்பி