திருவாரூர்


பண் :

பாடல் எண் : 1

வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித்
தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர் தொண்டீர்
ஆம்பலம் பூம்பொய்கை யாரூ ரமர்ந்தா னடிநிழற்கீழ்ச்
சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! வேம்பு போன்ற கசப்பான சொற்களையே பேசி, இவ்வூன் உடம்பைப் பாதுகாத்து, வினைகளை மிகுதியாகத் தேடிக்கொண்டு வயிற்றை உணவால் நிரப்பிச் சுற்றத்தவர்களே நமக்கு நிலையான துணைவர்கள் என்றிருக்கின்றீர்களே! ஆம்பற் பூக்கள் நிறைந்த பொய்கைகளை உடைய ஆரூரை உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருவடிகளின் கீழே சாம்பலைப் பூசி வஞ்சனையின்றித் தொண்டுகளைச் செய்து கடைத்தேறுங்கள்.

குறிப்புரை :

வேம்பு:- உவமையாகுபெயர். வேம்பு போற்கசக்கும் பேச்சு. உலகியல் பற்றிய பேச்செல்லாம் முன் பேசிப்பேசி வெறுப்பைத் தருவனவேயாதலின், அவை வேம்பையொத்தன. வேம்பு கைப்பது போலக் கைப்பன. விடக்கு - ஊன்; `வேற்று விகார விடக்குடம்பு` (தி.8 திருவாசகம். 1:- 84) க்கு ஆகுபெயர். ஓம்புதல் - ஊண்புதல் என்பதன் மரூஉ. ஊணால் ஊனைப் பெருக்கல் ஊண்புதல். உண்ணுதல் ஊண் புதல் இரண்டும் இன்றும் வழக்கில் உள்ளன. அது `வீண்பு - வீம்பு.` `பாண்பு - பாம்பு` `காண்பு - காம்பு` எனல் போல மருவி வழங்கு கின்றது. வினை:- தொல்வினை, பழவினை (சஞ்சிதகருமம்); உள் வினை, நிகழ்வினை (பிராரப்தகர்மம்) ; மேல்வினை, வருவினை (ஆகாமியகருமம்) என்பவற்றுள், நிகழ்வினையது நுகர்ச்சியின் எய்திப் பெருகும் வருவினையைக் குறித்தது. சஞ்சிதத்தைப் பெருக்குமாறில்லை. ஆகாமியமே சஞ்சிதமாக மாறுகின்றது. நல்வினை - தீவினையாகிய ஆகாமியம் அறமும் மறமும் ஆகிய சஞ்சிதமாகமாறி இன்பமும் துன்பமும் ஆகிய பிராரப்தமாகும். ஒன்பது தூம்புடைய உடலில், தூர்த்துத்தூர்த்துவரினும் தூராக்குழியான வயிற்றைத் தூம்பு என்றார். `தூராக்குழி` சோற்றுத் துருத்தி` `தொலைவிலாச் சோற்றுத் துன்பக்குழி` `பருத்திப் பொதியினைப் போலே வயிறு பருக்கத் தங்கள் துருத்திக் கறுசுவை போடுகின்றார்` `சோறிடுந்தோற்பை` `சோறும் கறியும் நிரம்பிய பாண்டத்தை` (பட்டினத்துப்பிள்ளையார் பாடல்). சுற்றம் - சுற்றியிருப்பவர். `காலாடுபோழ்திற் கழி கிளைஞர் வானத்து மேலாடு மீனிற் பலராவர் - ஏலா இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ங்குன்ற நாட தொடர்புடையேம் என்பார் சிலர்.` (நாலடியார். 113). இருத்திர் - இருப்பீர். தொண்டீர் - தொண்டு புரிதலுடையீர். தொண்டீர் தொண்டு பட்டுய்மின்கள். ஆம்பல். அம்போது = ஆம்பற்பூ. அம்சாரியை. அழகெனல் ஒல்லாது. `புளியம் பழம்` என்பதிலும் அழகெனலாமோ? `பொய்கை` `வாவி` `கயம்` முதலியன வெவ்வேறாதலைப் `பெருங் கதை` முதலிய நூல்களிற் காண்க. `வண்டிமிர் பொய்கையும் வாவியும் கயமும் கேணியும் கிணறும் நீணிலைப் படுவும்` (பெருங். 3. மகத 3:- 5,6) ஆரூர்ப் பொய்கை கமலாலயம் முதலியன. அடிநிழற் கீழ்த் தொண்டுபட்டுய்ம்மின்கள். சாம்பல்:- நீறுபட்டதன்மேலும் நீறு படாதததும் அழியாததும் ஆகும் திருவெண் பொடி. `பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரைநாளால் அது வண்ணம்` (தி.4 ப.21 பா.8). வேம்பினைப் பேசுதலும், விடக்கினை ஓம்புதலும் வினைகளைப் பெருக்குதலும் தூம்பினைத் தூர்த்தலும், சுற்றம் துணை என்று இருத்தலும் நீங்கிச் சிவகீர்த்தனம். திருவருட்செல்வம், இறைபணி நிலை. திருவடித்துணை ஓங்க இருத்தல்.

பண் :

பாடல் எண் : 2

ஆராய்ந் தடித்தொண்ட ராணிப்பொ னாரூ ரகத்தடக்கிப்
பாரூர் பரிப்பத்தம் பங்குனி யுத்திரம் பாற்படுத்தான்
நாரூர் நறுமலர் நாத னடித்தொண்டன் நம்பிநந்தி
நீராற் றிருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே. 

பொழிப்புரை :

அடியார்களின் அன்புமிக்க நறிய உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் சிவபெருமானுடைய திருவடித் தொண்டனும் தொண்டர்களுக்குள் உரையாணிப் பொன்போல் மிகச் சிறந்தவனுமாகிய நம்பிநந்தி, தமிழகத்து வேற்றூர்களில் உள்ளவர் எல்லாம் திருவாரூருக்கு வந்து சேரப் பங்குனி உத்திர விழாவினை ஆராய்ந்து முறைப்படி நடத்தினனாய், நீரை வார்த்துத் திருவிளக்குக்களை எரிய விட்ட செய்தியை நீண்ட தமிழ் உலகம் முழுதும் அறியும்.

குறிப்புரை :

நார் ஊர் நறுமலர் நாதன் - தமது அன்பு மிக்க நறிய (உள்ளத்) தாமரைமேல் விளங்கும் சிவபிரான். நாதனடி - சிவனடி. அடித்தொண்டன் ஆகிய நம்பிநந்தி. `நம்பிநந்தி` என்றுள்ளதை நோக்கி, அது `நமிநந்தி` என மருவியதறிக. நம்பிநந்தி பங்குனி யுத்திரம் பாற்படுத்தான் எனின், ஈற்றடியொடு இனிதியையாது. அடித் தொண்டர் ஆணிப் பொன்னும், பங்குனி யுத்திரம் பாற்படுத்தானும் நாதனடித் தொண்டனும் ஆகிய நம்பி நந்தி, நீரால் திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் என்று கொள்க. பாரூர் பரிப்ப ஆராய்ந்து அடக்கி, ஆரூர் அகத்துப் பாரூர் அடக்கி. தம் பங்குனி யுத்திரம். பார் ஊர் - பாரில் உள்ள பல்லூர்கள். பரிப்ப - தாங்க. ஊர் பலவற்றினின்று திருவிழாக் காணப் புகுதரும் அன்பர் கூட்டத்தை ஆரூரகம் தாங்கி நிற்க. ஆரூரகத்துப் பாரூரெல்லாம் அடங்கவும் பாரூர்களை ஆருர் பரிக்கவும் செய்தருளினார் நம்பிநந்தியடிகள் நாயனார். ஆராய்ந்து அடக்கிப் பரிப்பப் பாற்படுத்தான். ஆராய்ந்து பாற்படுத்தான் எனலுமாம். இது பங்குனியுத்திரம். மார்கழித் திருவாதிரை முன் (தி.4 ப.21 பா.1-10) கூறப்பட்டது. அடித் தொண்டர் x முடித்தொண்டர். `பொடிக் கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித் தொண்டன் நந்தியென்பான் உளன் ஆரூரமுதினுக்கே` (தி.4 ப.102 பா.4) என்ற தால், அடித்தொண்டன் என்றதன் காரணம் கூறப்பட்டது. `அடி மன்னர் x முடிமன்னர்` `முடிமன்னராகி மூவுலகமதாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்` (தி.10 திருமந்திரம். 1601) ஆணிப் பொன் - `ஆணிக் கனகம்` (தி.4 ப.92 பா.16). அடித்தொண்டர் ஆணிப் பொன் - நம்பிநந்தியடிகள் நாயனார். ஆணிப்பொன் - உரையாணிப்பொன். அடித்தொண்டர்க்கு உரையாணிப்பொன். (மாற்றறிய உரைத்துக் காட்டவுள்ள சிறந்த பொன்) ஆவார். `நீறுபுனைவாரடியார்க்கு நெடு நாள் நியதியாகவே, வேறு வேறு வேண்டுவன எல்லாம் செய்து மேவுதலால், ஏறு சிறப்பின் மணிப்புற்றில் இருந்தார் தொண்டர்க்காணி எனும் பேறு திருநாவுக்கரசர் விளம்பப் பெற்ற பெருமையினார்.` (தி.12 பெரிய. திருநாவுக்கரசு புராணம். 31) பங்குனியுத்திரத் திருவிழாவில் ஆரூரில் வந்துள்ள பாரூர் மக்களை அவரவர்க்குத் தக்க பால் ( - இடம்) படச் செய்ததும் நீரால் திருவிளக்கிட்டதும் இதில் ஏத்தப்பட்டன. `நாதரருளால் திருவிளக்கு நீரால் எரித்தார் நாடறிய.` இதன் மூன்றாவதடியில் `நாரூர்` என்று உள்ளவாறு உணராது, பாற்படுத்தான் ஆரூர் எனப் பிரித்தது பிழையாகும். முதலடியில் `ஆரூர்` என்றதும் னகர நகரப் புணர்ச்சியும் மோனையும் நோக்கிப் பிரிப்பது நன்று. மலர் போலும் அடியுமாம்:- `செய்யார் கமலமலர் நாவலூர் மன்னன்` (தி.7 ப.13 பா.11) `அல்லியந் தாமரைத்தார் ஆரூரன்` (தி.7 ப.22 பா.10) `எரியாய தாமரைமே லியங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே` (தி.6 ப.16 பா.7) `மலர்மிசையேகினான்` (குறள்). மலர் தொடுத்தற்குரிய நாரும் ஆம். இது பங்குனியுத்திரத் திருவிழாத் தொடக்கம் போலும். ஆரூரிற் பாரூரெல்லாம் அடங்கச் செய்த திறம் வியந்தது. `அக் கணங்கள் ஆர அழல் வலங்கொண்ட கையான் ( நம்பி நந்தியடிகள்) அருட்கதிர் எறிக்கும் ஆரூர்` (தி.4 ப.53 பா.1). `அடித்தொண்டன் நந்தியென்பான்` (தி.4 ப.102 பா.4.) `நந்தி` (தி.4 ப.102 பா.6) `நந்தி பணிகொண்டு அருளும் நம்பன்`. (தி.6 ப.34 பா.4)

பண் :

பாடல் எண் : 3

பூம்படி மக்கலம் பொற்படி மக்கல மென்றிவற்றால்
ஆம்படி மக்கல மாகிலு மாரூ ரினிதமர்ந்தார்
தாம்படி மக்கலம் வேண்டுவ ரேற்றமிழ் மாலைகளால்
நாம்படி மக்கலஞ் செய்து தொழுதும் மடநெஞ்சமே. 

பொழிப்புரை :

மடநெஞ்சமே! எம்பெருமானுடைய திருமேனிக்கு உரிய ஆபரணங்களைப் பொன்னால் செய்து அணிவிப்பர். அஃது இயலாவிடின் பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்தல் என்ற உலகியற்படி அத்திருமேனியைப் பொன் அணிகளால் அழகுறுத்துவது போலப் பூவாலும் அழகு செய்வர். திருவாரூரில் இனிது அமர்ந்த பெருமானார் தம் திருமேனிக்கு அணிகலன்கள் வேண்டுவராயின் நாம் தமிழ்ப் பாமாலைகளால் அவருக்கு அணிகலன்கள் செய்து அணிவித்து அவரை வணங்குவோம்.

குறிப்புரை :

படிமம் - பிரதிமா என்னும் வடசொல்லின் திரிபு. பிரதியைப் படி எனல் பயின்ற வழக்கு. பிரதிமா - பிரதிமை, படிமை, படிமம் எனத் திரிந்தது. உபமா,. உவமை, உவமம் என்பது போல்வது. கலம் - பூண். படிமக்கலம் - பிரதிமைக்குப் பூட்டும் பூண். அது பூவாலும் பொன்னாலும் செய்யப்படும். `பொன்னாலாகாது விட்டாலும் பூவாலும் ஆகாதோ` என்பது இயலாதார் கடவுட்குச் செய்யும் பணிபற்றிய வழக்கு, பூம்படிமக்கலம் என்றும் பொற்படிமக்கலம் என்றும் படிமக்கலம் ஆம் என்று இவற்றால் படிமக்கலம் ஆம். இவற்றால் ஆம் - பூவாலும் பொன்னாலும் ஆம். ஆகிலும் - ஆனாலும். ஆரூர் இனிது அமர்ந்தார் - திருவாரூர்த் திருக்கோயிலை யினிது விரும்பிப் புற்றிடங் கொண்ட முதல்வர். படிமக்கலம் வேண்டுவரேல் - பிரதிமாபரணம் விரும்புவாரென்னில்; நெஞ்சமே; நாம்; தமிழ் மாலைகளால் படிமக்கலம் செய்து தொழுதும். நெஞ்சமே, படிமக்கலம் பூம்படிமக்கலம் பொற்படிமக்கலம் என்று இவற்றால் ஆம். ஆகிலும், ஆரூரினிதமர்ந்தார்தாம், வேண்டுவாரெனில், நாம் தமிழ் மாலைகளால் படிமக்கலம் செய்து தொழுதும் எனச் சொல்வகை செய்துகொள்க. `தொழுதும் மடநெஞ்சமே` என்பது `தொழுதுமட நெஞ்சமே` என்று முன் மொழியீற்று மகரவொற்றுக் கெட்டு நிற்கும். அதையுணராமல், யகரவொற்றுடன் பதித்துவிட்டனர் சிலர். படிமக் கலம் என்பது முகம் பார்க்கும் கண்ணாடி பெரியோரிடம் சமர்ப்பிக்கும் உபகரணம் என்னும் பொருளது (தமிழ்லெக்ஸிகன்). படிமம் - பிரதிமை. `படிமம் போன்றிருப்ப நோக்கி` (சீவக. 2642) `திருட்டாந்தம் நன்றியலுலகுக்கெல்லாம் படிமமா` (திருவாலவா. 47: 3.) வடிவம். `பவளத்தின் பருவரை போற்படிமத்தான் காண்`. விரதம்:- `பல்படிம மாதவர்கள் கூடி` (தேவாரம்). தூய்மை:- `படிமப்பாதம் வைத்த வப்பரிசும்` (தி.8 திருவாசகம். 2: 76). என்பவற்றுள் ஈண்டுப் பொருந்துவதுளதேற்பொருத்திக்கொள்க.

பண் :

பாடல் எண் : 4

துடிக்கின்ற பாம்பரை யார்த்துத் துளங்கா மதியணிந்து
முடித்தொண்ட ராகிமுனிவர் பணிசெய்வ தேயுமன்றிப்
பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்ட னந்தியென் பானுள னாரூ  ரமுதினுக்கே. 

பொழிப்புரை :

துள்ளுகின்ற பாம்பினை இடுப்பில் இறுகச் சுற்றி நிலை கலங்காத பிறையைச்சூடி, மேம்பட்ட தொண்டர்களாகி முனிவர்கள் திருத்தொண்டுகளைச் செய்வதோடன்றி, திருநீற்றைப்பூசி வந்து சேரும் அடியவர்களுடைய திருவடிகளைத் தன் தலைமேல் கொள்ளும் அழகினோடு கீழான தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பி நந்தியும் ஆரூரில் அமுதம் போன்றுள்ள பெருமானுக்குச் சிறப்பான தொண்டுகளைச் செய்யும் அடியவனாக உள்ளான்.

குறிப்புரை :

`அருமணித்தடம் பூண்முலையரம்பையரொடு அருளிப்பாடியர் உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார் விரிசடை விரதிகள் அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினிற் பொலியுந் திருவாரூர்` (தி.4 ப.20 பா.3) என்று முன்னர் அறிவிக்கப் பெற்றுள்ள நவகணத்துள், `வேயொத்த தோளியர்` (௸ ப.19 பா.3) ஆகிய `அரம்பையர்` (௸ ப.20.பா.3) அல்லாத ஏனைய கூட்டத்தினரை எண்கணமும் பின் படர ஏறேற்றமா ஏறிச் செல்லும் அந்தணனை நான் கண்டது ஆரூரே (௸ ப.19.பா.4) என்றருளினார். அக்கணங்களுள் உருத்திர பல்கணத்தரை இங்கு, `முனிவர்` என்று குறித்தார். `அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான்` என்று திருவள்ளுவர் (திருக்குறள்) முனிவரைக் கூறியதுணர்க. அம் முனிவர் பலதிறத்தர். அவருள் ஒருதிறத்தார் சிவரூபம் பெற்றுடையவராய் உருத்திர பல்கணத்தார் ஆவர். அவரையே `துடிக்கின்ற பாம்பு அரை(யில்) ஆர்த்துத் துளங்கா மதி (யைத் தலைமேல்) அணிந்து, (அதனால்) முடித்தொண்டர் ஆகி` (னார்) என்று குறித்தார். அவர் ஆரூரமுதினுக்குப் பணிசெய்வர். அவர் பணிசெய்வதேயும் அன்றி நம்பிநந்தியடிகள் பணிசெய்தலும் அமுதினுக்கு உளது என்பது இதனால் உணர்த்தப்பட்டது. முடித்தொண்டர் - மதியை முடிமேல் அணிந்து தொண்டு செய்யுமவர். அடித்தொண்டர் - அடியார் திருவடியைப் பொறுத்த பொற்புடைய தொண்டர். திருவெண் பொடிக் கொண்டு பூசிப் புகும் தொண்டர்களுடைய திருப்பாதங்களை முடிமேற் சூடிப் பொறுத்த பொலிவால் அடித்தொண்டன் என்றது காரணப் பெயர் ஆகும். நந்தி என்பான் - நந்தி என்று சிறப்பித்துக் கூறப்பெறுவார். ஆரூரமுதினுக்கு முனிவர் முடித் தொண்டராகிப் பணிசெய்வதேயும் அன்றி அடித்தொண்டன் நந்தியென்பானுமுளன் என்று உம்மை கூட்டியுரைக்க. `முனிவர்` `முடித்தொண்டர்` என்ற பன்மையும் `அடித் தொண்டன்` என்று `நம்பிநந்தியடிகள்` ஆகிய ஒருவரையே குறித்த ஒருமையும் அறிக.

பண் :

பாடல் எண் : 5

கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கொர் கோடலியால்
இரும்பு பிடித்தவ ரின்புறப் பட்டா ரிவர்கணிற்க
அரும்பவிழ் தண்பொழில் சூழணி யாரூ ரமர்ந்தபெம்மான்
விரும்பு மனத்தினை யாதென்று நானுன்னை வேண்டுவதே. 

பொழிப்புரை :

அரும்புகள் மலரும் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் விரும்பி உறையும் பெருமானே! கரும்பினை வில்லாக ஏந்திய மன்மதன் உன்னால் கோபிக்கப்பட்டுச் சாம்பலானான். கோடலியாகிய இரும்பைப் பிடித்துத் தன் தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமன் உன்னால் சண்டீசன் என்ற பதவியளிக்கப்பட்டு மகிழ்விக்கப்பட்டான். நீ மனத்தின்கண் கரும்பை விரும்புகின்றாயா இரும்பை விரும்புகின்றாயா? நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று அடியேன் உன்பால் வேண்டுவேன்?

குறிப்புரை :

கரும்பு - கரும்பு வில். பிடித்தவர் - கருவேள் ; மன்மதனார். காயப்பட்டார் - நெற்றிக்கண் தீயால் காய்தலையுற்றார். பிடித்தவர் சண்டேசுவர நாயனார். `கோடலியால்` என்றதால் அரி வாட்டாயரைக் குறித்ததன்று. இன்பு:- `தொண்டர்தமக்கு அதிபனாக்கி அனைத்தும் நாம் உண்டகலமும் உடுப்பனவும் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதம் தந்தோம் என்று அங்கு அவர் பொற்றடமுடிக்குத், துண்டமதிசேர் சடைக் கொன்றைமாலை வாங்கிச் சூட்டினார்` (தி.12 பெரிய. சண்டேசுவர. புராணம். 56) என்றதிற் குறித்த இன்பம்; `சிவமயமாய்ப் பொங்கியெழுந்த திருவருளின் மூழ்கி .... ஒளியில் தோன்றிய` இன்பம். `நம்பொருட்டால் ஈன்றதாதை விழஎறிந் தாய் அடுத்ததாதை இனி உனக்கு நாம்` (தி.12 பெரிய. சண்டேசுவர புரா. 55, 54). `எம் பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால், விருப்பற்றவர் செய் அறமும் மற மாக்குவிப்பாய்` (காஞ்சிப். தழுவக். 77). `மால்தான் எண்ணி வேள்மதனை ஏவ எறிவிழித்து` (சிவஞான சித்தியார் 53.) `அரனடிக் கன்பர்செய்யும் பாவமும் அறமதாகும், பரனடிக் கன்பிலாதார் புண்ணியம் பாவமாகும், வரமுடைத் தக்கன் செய்த மாவேள்வி தீமையாகி, நரரினிற் பாலன்செய்த பாதகம் நன்மை யாய்த்தே` (சிவஞான சித்தியார். 119)\\\\\\\"ஈசற்கு நல்லோன் எறி சிலையோ நன்னுதால் ஒண்கருப்பு வில்லோன் மலரோ விருப்பு\\\\\\\" (நன்னெறி. 2) \\\\\\\"ஏற்றுங் கணையைமல ரென்று கருதா மதனைத் துணையை விடுத்தெரித்த தோன்றல்\\\\\\\" (திருவெங்கையுலா 12, 13) இவர்கள் மன்மதனும் சண்டேசுவர நாயனாரும். பெம்மான் என்றது அண்மைவிளி. விரும்பும் மனத்தாய். மனத்து விருப்புமாம். யாது என்று - கரும்பு இரும்புகளுள் நீ விரும்பும் பொருள் எப்பொருள் என்று (அறிந்து) நான் உன்னை யாது என்று வேண்டுவது? `யாதொன்று` `வேண்டுவனே` என்றும் பாடம் உண்டு.

பண் :

பாடல் எண் : 6

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ
டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவ ரெய்தியு மூனமில்லா
அடிகளு மாரூ ரகத்தின ராயினு மந்தவளப்
பொடிகொண் டணிவார்க் கிருளொக்கும் நந்தி புறப்படிலே. 

பொழிப்புரை :

கொடிகளும், மேற்கட்டிகளும், பறை, கவரி, சங்கு, கைவிளக்கு என்பனவும் கொண்டு குறைவற்ற செல்வர் பலர் திருவாரூரை வழிபடுதலுக்கு வந்து சேருவர். ஒரு குறைவும் இல்லாத திருமூலத்தானப் பெருமானாரும் திருவாரூரில் அமர்ந்திருப்பர். எனினும் அழகிய வெண்ணீற்றை அணியும் அடியவர்களுக்கு, நம்பி நந்தியடிகள் ஆரூரகத்தில் இல்லாமல், ஊருக்கு வெளியே செல்வாராயின் திருவாரூரில் ஒளியே இல்லை போலத் தோன்றும்.

குறிப்புரை :

குடி - குடிகளும், கொள்கின்ற விதானமும், கவரியும் பறையும் சங்கும் கைவிளக்கும் இவற்றொடு அழிவில்லாத பெருஞ்செல்வமும் அடைவோர் (செல்வத்தில் சிறந்த மக்கள்) பலர் திருவாரூரில் வந்திருப்பர். வந்திருந்தாலும் ஊனம் இல்லா ஒருவனாகிய திருமூலட்டானனும் (தியாகராசனும்) திருவாரூரகத்தே வீற்றிருப்பினும் நம்பிநந்தியடிகள் நாயனார் ஆரூரகத்தே இராமல் அதன் புறத்தே படில் திருவெண்ணீறு பூசும் அடியார்க்கு அங்கு ஒளி இராது. இருளை நிகர்க்கும். விதானம் - மேற்கட்டி. கவரி - வெண் சாமரம். பறை - பஞ்சமுக வாத்தியம் முதலியன. சங்கம் - சங்கநாதம். கைவிளக்கு:- திருக்கோயில்களிலும் திருமடங்களிலும் பார்த்து இதன் அமைப்பை அறிக. இடிதல் - அழிதல். இடிவு இல் - அழிவு இல்லாத. எய்துவர் எய்தியும் - பெறுவோர் அடைந்தும். ஊனம் இல்லா அடிகள்:- \\\\\\\\\\\\\\\"வேலை நஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா ஒருவன் \\\\\\\\\\\\\\\" (தி.4 ப.112. பா.8) ஆகிய கடவுள். ஆரூர் அகத்தினர் ஆயினும் - திருவாரூரிலே இருப்பவர் ஆயினும். நந்தி புறப்படில் - நம்பி நந்தியடிகள் நாயனார் திருவாரூரின் அகத்திராமல் புறத்தே செல்வாராயின், அம் தவளப் பொடி கொண்டு - திருவெண்ணீற்றுப் பொடியைக் கைக்கொண்டும் (அன்பு கொண்டும்) அணிவார்க்கு - அழகுறப் பூசும் அடியார்க்கு `பொடிக்கொண்டு பூசிப் புகும் தொண்டர்` (தி.4 ப.102 பா.4). இருள் ஒக்கும் - திருவிளக்கிடாமையால் இருண்ட இடத்தை நிகர்க்கும். `ஆவிதனிலஞ் சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தியடிகள்`. (தி.1 ப.62 பா.6).

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில்
குங்குலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி யிருபதுதோள்
அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடவஞ்ஞான்
றங்குலி வைத்தா னடித்தா மரையென்னை யாண்டனவே. 

பொழிப்புரை :

தொண்டர்களே! விடியற்காலையில் தூப மூட்டி யில் உள்ள கனல் எரியில் குங்கிலியத்தை இட்டுக் குங்கிலியப் புகைக் கூட்டினை எம் பெருமானுக்குக் காட்டிச் சங்குகளை ஊதுங்கள். தன் இருபது தோள்களையும் கயிலையில் அதனைப் பெயர்ப்பதற்குச் செயற்படுத்தின இராவணனுடைய இரத்தம் ஓடுமாறு தன் கால்விரல் ஒன்றனை அழுத்தி நெரித்தவனுடைய திருவடித் தாமரைகளே அடியேனை அடிமைகொண்டன. அவை நுமக்கும் அருள் செய்யும்.

குறிப்புரை :

தொண்டீர் என்று வருவித்து ஒலிப்பித்திடுமின் என முடிக்க. முன் தொண்டிர் உய்மின்கள் என்றதறிக. சிறுகாலை - விடியற்காலை. தடவழல்:- கனலெரி. குங்கிலியப் புகைக் கூட்டு என்பது ஒரு தொகைநிலைத் தொடர். அது காட்டி என்னும் வினைக்குச் செயப்படுபொருள் காட்டி ஒலிப்பித்திடுமின். ஒலிப்பித்தல் என்னும் வினைக்குச் செயப்படுபொருள் சங்கு. இரண்டும் நிகழ்த்தும் வேலை சிறுகாலை. இவ்வாறு ஏவுதலுக்கு ஏது, தம்மையாண்ட திருவடித் தாமரை தொண்டரையும் ஆட்கொள்ளவேண்டும் என்னும் அப்பரது கருணை நோக்கம். இருபது தோள் அங்குலம் - தோள்களில் அழகிய கயிலையை; இருபது தோள்களாகிய அழகிய கூட்டம் எனலுமாம். உலம் - திருக்கயிலையை; திரண்ட கல்லைப் போல. உலம் வைத்தவன் - திரண்ட கல்லைப்போலும் வலிய தோள்களை வைக்கப்பெற்றவன். தோள்களுக்கு உலம் உவமையாகும். செங்குருதிப்புனல் - சிவந்த ரத்தநீர். ஞான்று - நாளன்று. அங்குலி - விரல். ஈண்டுத் திருக்காற் பெருவிரலைக் குறித்தது. வைத்தான் - சிவபெருமான்; வினையா லணையும் பெயர். வைத்தானடி:- ஆறனுருபு தொக்கது. அடித்தாமரை - உருவகம். `தூபம் விதியினால் இடவல்லார்` (தி.4 ப.31 பா.1).
சிற்பி