பொது


பண் :

பாடல் எண் : 1

சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங்  கங்கையென்னும்
காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேல்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும்  பசுபதியே.

பொழிப்புரை :

பெரிய கங்கை என்னும் மூங்கில் போன்ற பருத்த தோள்களை உடைய பெண்ணின் ஒளி வீசுகின்ற அணிகலன்களை அணிந்த அழகிய முலைமீது பாம்புகள் தவழும் சடையை உடையவனே! எம்மை அடிமை கொள்ளும் ஆன்ம நாயகனே! சாம்பலைப் பூசிக் கொண்டு, உறங்கும்போது வெறும் தரையிலேயே கிடந்து உறங்கி உன் திருவடிகளை முன் நின்று துதித்து அங்கலாய்க்கும் அடியவர்கள்திறத்து அருள் செய்வாயாக.

குறிப்புரை :

இத்திருப்பதிகத்தில் அடியார்க்காக ஆண்டவனை வேண்டுதலை உணர்க. `சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டு நின்தாள் பரவி ஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய்`:- என்பது முன்னும் (தி.4 ப.99. பா.8) உளது. `சாம்பர்` என்றது ஆண்டு. `சாம்பல்` என்றது ஈண்டு. அதனால், ஆங்கெழுதிய குறிப்பே ஈங்கும் அமையும். கங்கை என்னும் பணைத்தோளி. இருமை - பெருமை. அழியாமை, வற்றாமை, தன்கண் முழுகினோர் பிறவி நீக்குதல் முதலியன. காம்பு - மூங்கில். மூங்கிலை ஒப்பாகா யென்று அகற்றி வருத்தும் தோள், பணை - பருமை. காம்பு அலைக்குந் தோள். பணைத்தோள். கங்கை என்னும் தோளி. கதிர்ப்பூண் - `விளங்கிழை`, வனம் - அழகு. கங்கையின் கொங்கைமேல், சடையிலுள்ள பாம்பு அலையும். பாம்பினைச் சடை அலைக்கும். தோளியே தன் அலையால் தன் கொங்கைமேல் பாம்பை அலைக்கும் எனலுமாம். எம்மை ஆளும் பசுபதியே என்று முடியும் இத்திருப்பதிகம் பாடிப் பரவசப்படுத்தும். துயிலினிமையை வேண்டாது துஞ்சும்போதுந்துயிலின்றி யேத்துவாராய அடியார் தரையிற்கிடத்தலையே கொள்வர். துயிலற் பொருட்டுப் பிற கொள்ளார். பசுபதியே இரங்கு. மேல்வருவனவற்றிலும் இவ்வாறே கொள்க.

பண் :

பாடல் எண் : 2

உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த வுத்தமர்கள்
இடும்பைப் படாம லிரங்குகண் டாயிரு ளோடச் செந்தீ
அடும்பொத் தனைய வழன்மழு வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

இருள் ஓடுமாறு, அடுப்பம்பூவை ஒத்த நிறத்தினதாய்ச் செந்தீயை வெளிப்படுத்திக் கோபிக்கும் மழுப் படையை ஏந்தியவனே! நெருப்பைக் கக்கும் படமெடுத்தாடும் பாம்பை இடுப்பில் இறுகக் கட்டியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! பிறவிப் பிணியைப் போக்கி உன் திருவடிகளையே தம் தலைக்கண்வைத்த மேம்பட்டவர்களாகிய அடியவர்கள் துன்புறாத வகையில் அவர்களுக்கு இரங்கி அருளுவாயாக.

குறிப்புரை :

உடம்பைத் தொலைவித்து உன்பாதம் தலைவைத்த உத்தமர்கள்:- (தி.4 ப.112 பா.6.) உடம்பைத் தொலைவித்தலாவது பிறவியில்லாது செய்வித்துக் கொள்வது. (தி.8 திருவாசகம் 1:- 84 - 5. பா. 68; 87; 143; 145; 402; 493; 419; 437). இது பாச வீடு. பாதம் தலை வைத்தலாவது சிவப்பேறு. இவ்விரண்டும் இயைந்ததே வீடுபேறு. இப்பேறு உற்றோரினும் மேலானவர் யாருமிலர். அதனால் `உத்தமர்கள்` என்றார். சீவன் முத்தராயின், அவர்களது உடல் திருக்கோயிலும், அவர்கள் சிவமும் ஆதலின், உடம்பைத் தொலைவித்தமை அவர்களது அநுபவத்திற் புலனாகும். ஏனையோர் உணர்தல் அரிது. `ஓங்குடலம் திருக்கோயில் ... ... சிவன் சீவன்` `நடமாடக் கோயில்` `பராவு சிவர்` என்பவற்றின் பொருளறிவார் இதை அறிவார். இடும்பை - துன்பம். `இடும்பைக்கு இடும்பை படுப்பர்` (மூதுரை). அழல்மழு - தீ மழுப்படை. அதனொளியால் இருளோடும். `ஒத்து அனைய` என்று ஆளுதல் பலவிடத்தும் காணப்படும். அடும்பு, அடம்பு எனலும் உண்டு. (தி.12 பெரி. ஏயர்கோ. 100) `அடும்பு இவர் அணி எக்கர்` (கலித்தொகை. 132). செந்தீயழலும் மழு. `தீப்போலும் அடும்பு. அடும்புபோலும் அழல் மழு` எனல் குற்றம். அழலே உமிழும் படம். படம் பொத்தும் அரவு (-பாம்பு). அரவு - பாம்பாகிய கச்சு, அரவக்கச்சு, அரையாய் - இடையினனே. `பையரா வரையிலார்த்து` (தி.4 ப.58 பா.5). `பைவாயரவரையம்பலத்தெம்பரன்` (தி.8 திருக்கோவையார் 169).

பண் :

பாடல் எண் : 3

தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுட ரைங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

முன்னொருகாலத்தில் தேனை உடைய குளிர்ந்த பூக்களாகிய ஒளிவீசும் ஐந்து அம்புகளை உடைய மன்மதனை வெந்து விழுமாறு நெருப்பினை வெளிப்படுத்திய கண்ணுடையவனாய் எம்மை ஆளும் பசுபதியே! வறுமைத் துன்பம் நீங்காத அடியவர்களுக்கு ஏற்படும் தடுமாற்றமாகிய பெரிய அலைகளை உடைய கடலிலிருந்து அவர்களைக் கரையேற்றுவாயாக.

குறிப்புரை :

தரித்திரம் - வறுமை (வழக்கு). தவிரா - தங்காத. வேற்றிடத்தில் சென்று தங்காது நிலைபெற; நீங்காத என்றபடி. தடுமாற்றம். தட்டு மாறுதல்; சென்ற நெறியில் குறுக்கே தட்டுமானால், அதனின் மாறுதல் என்றும் உண்டு. அது நிலம் பொழுது கருத்து அறிவு முதலிய எவற்றினும் நிகழும். `எவர்கொல் பண்ணவர்கள் எவர் கொல் மண்ணவர்கள் எதுகொல் பொன்னுலகெனத் தட்டுமாறவும்` (மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ். 12) மூரித்திரைப் பௌவம் - பேரலைக்கடல். தடுமாற்றத்தைக் கடலென்றுருவகஞ் செய்தார். பௌவத்தை நீக்கு என்று வேண்டினார். அடியார்க்கு நீக்கு என்று ஆசிரியர் வேண்டும் இக் கொள்கை பொதுவாக மக்களுக்கும் சிறப்பாகப் பாவலர்கட்கும் தொன்றுதொட்டுளது. நூல்களில் வாழ்த்துப் பாடுதலும் இதனாலேதான். முன்னை நாள்:- சிவபிரான் யோகம் புரிந்திருந்த காலம். ஒருகால்:- பிரமவிட்டுணு முதலோர் ஏவியபோது. `கண்ணுதல் யோகிருப்பக் காமன் நின்றிட வேட்கைக்கு விண்ணுறு தேவராதி மெலிந்தமை ஓரார் எண்ணிவேள் மதனை ஏவ எரிவிழித்து இமவான் பெற்ற பெண்ணினைப் புணர்ந்துயிர்க்குப் பேரின்பம் அளித்ததோரார்` (சிவஞானசித்தியார்) வேரி - தேன். தண்பூ - குளிர் மலர். பூங்கணை - மலரம்பு. சுடர்க்கணை - ஒளிரம்பு. ஐங்கணை - ஐந்தம்பு. கணைவேள் - அம்புடைய மன்மதன். வேள் - விரும்பப் பெறுமவன். இவன் கருவேள். முருகன் செவ்வேள். வெந்து விழப் பார்த்தகண். செந்தீப் பாரித்தகண். பாரித்தல் - பரப்புதல்; வெளிப்படுத்தல். `தம்பதி என்று உரை பாரித்தான்` (கோயிற் புராணம், திருவிழாச். 2), கண் - நெற்றிக்கண். உடையாய் - உடையானே; சுவாமியே எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 4

ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்ற மகல்விகண் டாயண்ட  மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மலைபோன்ற யானை பிளிறுமாறு அதன் உடலைப் பிளந்து மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி அஞ்சுமாறு அதன் தோலை உரித்துப் போர்த்த பசுபதியே! வேறு எவரையும் பற்றுக்கோடாகக் கருதாமல் உன் திருவடிகளையே வழிபடும் அடியவர்களுடைய நீங்குதல் அரிய வினைத் தொகுதிகளைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

ஒருவரை - உன்னை அல்லாமல் வேறு ஒரு தெய்வத்தை. `உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்` (திருவாரூர்த் திருத்தாண்டகம்) `உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லாது எங்கள் உத்தமனே` (தி.8 திருவாசகம் 6). `நின்மலா ஒர் நின்னலால் தேசனே ஓர் தேவர் உண்மை சிந்தியாது சிந்தையே` (தி.8 திருவாசகம். 82) தஞ்சம் - அடைக்கலம். தண் + து + அம் = தஞ்சம். வல் + து + அம் - வஞ்சம், தஞ்சம் என்று மற்றொருவரை எண்ணாது உன் பாதமே கதி என்று வழிபடுகின்றவர். இறைஞ்சுகின்றார்:- வினையாலணையும் பெயர். இறைஞ்சுகின்றாரது வினைச்சுற்றம். அருவினை - நீங்கலரிய வினை. சுற்றம் - சூழல்; கூட்டம். வினைச்சுற்றம் - வினைத் தொகையை. அகல்வி - அகலச்செய். `என்னை வாழைப் பழத்தின் மனம் கனிவித்து எதிர்வது எப்போது பயில்விக் கயிலைப் பரம்பரனே` (தி.8 திருவாசகம். 138) `அண்டமே அணவும் பெருவரை` என்றது மலையுயர்ச்சியும் பருமையும் குறித்து. வரைக்குன்றம் - வரைகளையுடைய மலை. குன்றம்:- உவமையாகு பெயராய், யானையைக் குறித்தது. `வருங்குன்றம் ஒன்றுரித்தோன்` (தி.8 திருக்கோவையார்). பிளிறுதல்; பிளிறப்பிளத்தல். வேய் - மூங்கிலின் கணுவிரண்டன் இடைநின்ற அமை. `அமைத்தோள்`. `வேய்த் தோளி:- வேயுறு தோளி`. பிளந்து தோல் உரித்தாய். பரு அரை = பரிய அரை. `பராரை` என மரங்களினடியைக் கூறுதல்போல யானையின் பருத்த அடியைக் கூறினார். பருத்தவரை எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 5

இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன் பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண் டாயண்ட  மெண்டிசையும்
சுடர்த்திங்கள் சூடிச் சுழல்கங்கை யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.

பொழிப்புரை :

அண்டங்களிலும் எட்டுத் திசைகளிலும் ஒளி வீசுகின்ற சந்திரனைச் சூடிச் சுழலுகின்ற கங்கையோடு வண்டுகள் நெருங்கிப் பூக்களில் பரவுதலைக் கொண்ட செஞ்சடைப் பசுபதியே! இடையூறு ஏதும் இல்லாமல் தொடர்ச்சியாக உன் திருவடிகளை வழிபடுகின்ற அடியவர்களை வருத்தும் பிறவிப் பிணியைப் போக்குவாயாக.

குறிப்புரை :

இடுக்கு - இடைஞ்சல், முட்டுப்பாடு, இடுங்குதலுமாம். கண் இடுங்குதற்குற்ற வினைகள் தீமை விளைக்கும். அத்தீமையைக் கண்மேலேற்றி இடுங்குகண் (இடுக்கண்) என்பர். ஒன்றும் - சிறிதும். எஞ்சாமை - குறையாமல். `இறைஞ்சுகின்றார்`:- (தி. 4 ப.110 பா.4) அடர்க்கின்ற - வருத்துகின்ற. நோயை விலக்கு. அண்டம் பலவற்றிலும் எட்டுத் திசையிலும் சுடர் (ஒளிர்) தலையுடைய பிறைத்திங்களை அணிந்து, சுழலைக் கொண்ட கங்கையாற்றொடும் வண்டுகள் நெருங்கிப் படர்ச்சியைக் கொண்ட செஞ்சடை வானவனே, எம்மை ஆளும் பசுபதியே, இறைஞ்சுகின்றார்க்கு நோயை விலக்கு, சுரும்பு துன்றிப் படர்தல்; படர்தலைக் கொண்ட சடை எனலுமாம். `படர்சடைக் கொன்றை` (தி.4 ப.107 பா.7.) `படர் பொற்சடை` (தி.4 ப.104 பா.6)

பண் :

பாடல் எண் : 6

அடலைக் கடல்கழி வானின் னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றைதிங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா  மணிகிடந்து
படரச் சுடர்மகு டாவெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

நறிய கொன்றை, பிறை, சாம்பல், பாம்பு, தலையில் சூடும் மணி இவை பரவி ஒளி வீசும் சடைமுடியை உடைய பசுபதியே! துயர்க்கடல் நீங்குவதற்காக நின் திருவடிகளையே பற்றுக்கோடாக அடைந்த அடியவர்கள் வருத்தமுறாத வகையில் அவர்கள் துயரங்களைப் போக்குவாயாக.

குறிப்புரை :

அடலைக் கடல் - `துக்கசாகரம்`. `துயர்க்கடல்` `துன்பக்கடல்` (தி.4 ப.92 பா.6.) கழிவான் - நீங்க. நின் அடியினையே அடைந்தார்:- `ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன்`. (1) `தன்னை அடைந்தார்` (4) `நின்னையே அறியும் அறிவறியேன்` (திருவாசகம்). நடலைப் படாமை:- (தி.4 ப.104 பா.6) பார்க்க. படாமை - படாதவாறு. விலக்கு. பசுபதியே நடலைப்படாமை விலக்கு. நின்னையே அடைந்த தொண்டர் படாமை விலக்கு. நறுங்கொன்றையும் திங்களும் சுடலைப் பொடிச் சுண்ணமும் மாசுணமும் சூளாமணியும் கிடந்து படரச் சுடர்கின்ற மகுடனே. `சுடலைப் பொடி பூசி` (தி.1 ப.1 பா.1). `பொடிச்சுண்ணம்` தமிழ்ச் சொல்லும் வடசொல்லும் ஆம். `சுண்ண வெண்சந்தனச் சாந்து` (தி.4 ப.2 பா.1). மாசுணம் - பாம்பு. மாசு உண்டல் ஆகிய காரணத்தாற் பெற்ற பெயர். தரையிற் புரண்டு மாசுண்டு நகரமாட்டாது கிடக்கும் பெரும் பாம்பு `மாசுணம்` எனப்படும். `மண்டெரிதான் வாய் மடுப்பினும் மாசுணம் கண்டுயில்- வபேரா பெருமூச்செறிந்து` (நீதிநெறி விளக்கம். 34). சூளாமணி - நாகரத்நம். `திங்கள்` என முன்னர்க் கூறப்பட்டதால், `சுடர்த் திங்கட் சூளாமணி` எனல் ஒவ்வாது. `மேல் இலங்கு சூழிட்டிருக்கும்நற் சூளாமணியும் சுடலை நீறும்` (தி.4 ப.111 பா.6). `மேல் இலங்கு சோதித்திருக்கும் நற் சூளாமணியும் சுடலை நீறும்` (தி.4 ப.111 பா.10)

பண் :

பாடல் எண் : 7

துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு  மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.

பொழிப்புரை :

மும்மதில்கள் உடையனவாய்த் தாம் தங்கும் இடங்களை அழித்தல் தொழிலைப் புரிந்து வானத்திலே உலவும், மந்திரத்தால் செல்லும் தேர்போலப் பறக்கும் ஆற்றலுடைய மூன்று கோட்டைகளையும் எரித்து அழித்த பசுபதியே! உலகில் பற்றறுத்து நிற்றலாகிய தொழிலையே விரும்பிச் செய்து உன்னுடைய வண்டுகள் சூழ்ந்த திருவடிகளையே தொழும் அடியவர்களுடைய மறத்தலாகிய செயலைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

துறவித் தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவித்தொழிலது மாற்று - துறத்தலாகிய தொழிலையே விரும்பிச் செய்து (பற்றற நின்று) நின் வண்டு சுற்றும் மலரடிகளையே வழிபடும் அடியாரது மறத்தற்றொழிலை மாற்றியருள்வாய். மதில் மூன்றுடைய புரம். மந்திரத் தேர்ப் பறவைப்புரம். அந்தரத்தே செல்லும் தேர். மந்திரத்தேர். அறவைத் தொழில் புரிந்து செல்லுந் தேர். அறவைத் தொழில் - பின்னர்த் தன்னைத் துணையிலியாக்குந் தீய தொழில். புரிந்து - செய்து. அந்தரத்தே - வானத்திலே. மந்திரம் - இரகசியம். மந்திரத்தால் செல்லும் தேர். பறவை - பறத்தல். பறவைப்புரம் - பறத்தலையுடைய முப்புரம். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்.
துறவி, மறவி, அறவை, பறவை என்றிரண்டீற்றுத் தொழிலாகு பெயர் பயிலுதலும் அறிக. துறவி மறவி பிறவி இறவி என்றும் துறவு மறவு பிறவு இறவு என்றும் ஈற்றால் வேற்று வடிவுறுதல் காண்க. `பெருந்தகை பிறவினொடிறவுமானான்` (தி.1 ப.110 பா.1).

பண் :

பாடல் எண் : 8

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * *

பொழிப்புரை :

* * * * * *

குறிப்புரை :

* * * * * *

பண் :

பாடல் எண் : 10

சித்தத் துருகிச் சிவனெம்பி ரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின் றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்க னிருபது தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை யாளும் பசுபதியே. 

பொழிப்புரை :

செருக்குற்ற இராவணனுடைய இருபது தோள்களையும் பத்துத் தலைகளையும், அவனுக்கு உன் திறத்துப் பக்தி ஏற்படுமாறு நசுக்கியவனே! எம்மை அடிமை கொள்ளும் பசுபதியே! மனம் உருகிச் சிவனே எம் தலைவன் என்று மனத்திலே உறுதியான எண்ணம் மிகவே அதனையே எப்பொழுதும் அடைவுகேடாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியவர்களுடைய பிறவிப் பிணியைப் போக்கி அருளுவாயாக.

குறிப்புரை :

சித்தத்து - சிந்தையில் உருகி - பிறவற்றையெண்ணுந் திறமெல்லாம் மறந்துருகி. சிவன் எம்பிரான் என்று; சிவபெருமான் எம்பரமன் என்று சிந்தனையுள்ளே பித்துப் பெருகப் பிதற்றுகின்றார். `பித்துப் பத்தர் இனத்தாய்ப் பரனுணர்வினால் உணரும் மெய்த்தவரை மேவா வினை` (சிவஞானபோதம் சூ. 12. வெ. 2) பித்துப் பெருகப் பிதற்றுதல்:- பித்தர்க்குப் பத்துக்கொண்டு பித்தரருட்பித்தே பெருகி வளர, முன்னை வினையினாலே மூர்த்தியை மறவாது நினைந்து பிதற்றுதல். (தி.4 ப.79 பா.4.) `பிண்டத்தைக் கழிக்க வேண்டிற் பிரானையே பிதற்றுமின்கள்` (தி.4 ப.42 பா.10). `பேர்த்தினிப் பிறவாவண்ணம் பிதற்றுமின்` (தி.4 ப.41 பா.6) `மறுமையைக் கழிக்க வேண்டில், பெற்றதோரு பாயந் தன்னாற் பிரானையே பிதற்றுமின்கள்` (தி.4 ப.41 பா.10). பிணி - பிறவிப் பிணியும், பிறந்திருந்தெய்தும் பிணிகளும். இறவிப் பிணியும், மும்மலப் பிணியும் முதலிய எல்லாம். தீர்த்தருளாய் - போக்கி நின் திருவடி நீழலைத் தந்தருள்வாய். மத்தத்து மயக்கம்.
சிற்பி