திருஅன்னியூர்


பண் :

பாடல் எண் : 1

பாற லைத்த படுவெண் தலையினன்
நீற லைத்தசெம் மேனியன் நேரிழை
கூற லைத்தமெய் கோளர வாட்டிய
ஆற லைத்த சடையன்னி யூரனே.

பொழிப்புரை :

பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டை ஓட்டைக் கையிற் கொண்டவனும் , திருநீறு பூசிய சிவந்த மேனியனும் , உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும் , அரவு ஆட்டி ஆறலைக் குஞ்சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே .

குறிப்புரை :

அன்னியூரன் இயல்புரைக்கின்றது இத் திருப்பதிகம் . பாறு - பருந்து . படுவெண்டலை - தசை அழிந்த வெள்ளிய தலை . நீறு அலைத்த - திருநீறுவிரவிய . நேரிழை - பார்வதி . கூறு - இடப்பாகம் . அலைத்த - கலந்த . மெய் - உடம்பில் . கோள் அரவு - கொள்ளும்தன்மை வாய்ந்த வாயையுடைய பாம்பு . நஞ்சாகிய குற்றம் உடைய பாம்பு எனினுமாம் . ஆட்டிய - ஆடுதலைச் செய்யும்படி அணிந்த . ஆறு - கங்கை . அலைத்த - பரந்துவிரிந்த .

பண் :

பாடல் எண் : 2

பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய்
இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர்
கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன்
அண்டத் தப்புறத் தானன்னி யூரனே.

பொழிப்புரை :

பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும் , இண்டையணிந்த சடையனும் , இருளார்கண்டனும் , யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும் , அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே .

குறிப்புரை :

பண்டு ஒத்த மொழி எனப்பிரித்துப் பண்ணின் இசை தங்கிய இனிய மொழி எனப் பொருள் காண்க . இருள் - கருமை . உரி - தோல் . அண்டத்தப்புறத்தான் ; உலகவர் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் . ` ஏழண்டத்தப்பாலான் ` ( தி .6. ப .8. பா .5) பாகமாய்க் கொண்ட இண்டைச் செஞ்சடையன் எனக் கூட்டி உரைக்க .

பண் :

பாடல் எண் : 3

பரவி நாளும் பணிந்தவர் தம்வினை
துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம்
குரவம் நாறுங் குழலுமை கூறராய்
அரவ மாட்டுவர் போலன்னி யூரரே.

பொழிப்புரை :

நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல் வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும் , தம்மிடப்பாகத்தில் குரவு நறு மணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும் , அரவம் ஆட்டுபவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

பரவி - இறைவன் புகழை விரித்தோதி . நாளும் - நாள் தோறும் . பணிந்தவர்தம் - வணங்கியவர்களுடைய . துரவையாக - இல்லையாக . துடைப்பவர் - போக்குபவர் . குரவம் - குரவமலர் . குழல் - கூந்தல் . கூறராய் - ஒருகூற்றிற் கொண்டவராய் .

பண் :

பாடல் எண் : 4

வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கணி
நாதர் நீதியி னாலடி யார்தமக்
காதி யாகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

வேதங்களை இசையோடு ஓதுவோரும் , விண்ணோர்க்கும் உயர்ந்தவரும் , ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும் , நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

சோதி - ஒளி . துன்று - நெருங்கிய . அல்லது படர்ந்த . அடியார்தமக்கு ஆதி - அடியவர்களால் தம் உணர்வின் முதல் எனக் கருதப்படுவோன் ; ` போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே ` ( தி .8 திருவாசகம் - திருப்பள்ளி எழுச்சி - 1) என்றாற்போல .

பண் :

பாடல் எண் : 5

எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம்
இன்ப ராகி யிருந்தவெம் மீசனார்
துன்ப வல்வினை போகத் தொழுமவர்க்
கன்ப ராகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும் , எம் தலைவரும் , துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

எம்பிரான் - எங்கள் தலைவன் . எம் ஈசன் - எம்மை ஆள்வோன் . துன்பவல்வினை - துன்பத்திற்குக் காரணமாகிய வலிய வினை . தொழுமவர்க்கு அன்பர் - செருக்கு நீங்கா உள்ளத்தால் தன்னை அளக்கலுறுவார்க்குச் சேயனாய் , அன்பால் தொழுவார்க்கே அணுக்கனாய் நிற்பன் முதல்வன் .

பண் :

பாடல் எண் : 6

வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர்
கந்த மாமலர் சூடுங் கருத்தினர்
சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர்
அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே.

பொழிப்புரை :

வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்த வரும் , நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும் , சிவந்த தீயின் வண்ணம் உடையவரும் , அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே , காண்பீராக .

குறிப்புரை :

வெந்தநீறு - திருநீறு . ` தமது அந்தமில் ஒளி அல்லா ஒளி யெலாம் வந்து வெந்து அற வெந்தநீறு - மற்று அப்பொடி ` நன்மேனி - அநாதிமுத்த சித்துஉரு . நறுமலர் சூட்டி வழிபடுவேம் என்னும் கருத்தினர் தம் அடிமனத்திற் பொருந்திநின்று மங்கலக் குணங்களையும் பேரின்பத்தையும் தோற்றுவிப்பவன் என்க . சிவனார் - மங்களத்தைச் செய்பவர் . இன்பவடிவினர் . செய்ய தீவண்ணர் - தீப்போன்ற செய்ய நிறத்தர் . அந்தணாளர் - உயிர்களின் நன்மையின் பொருட்டு அறம் உரைத்து , அதன் வடிவாகவும் பயனாகவும் நிற்றலின் அந்தணாளர் எனப்பட்டார் ; ` அறவாழி அந்தணன் ` என்பது திருக்குறள் (8) ஆழி - கடல் ).

பண் :

பாடல் எண் : 7

ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல்
வானை வானவர் தாங்கள் வணங்கவே
தேனை யார்குழ லாளையொர் பாகமா
ஆனை யீருரி யாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு , உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

ஊனை , தேனை - என்பவற்று ஐ சாரியை , ஈர் உரி - ஈர்ந்தஉரி , குருதிதோய்ந்து குளிர்ந்த உரி எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 8

காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி
மேலை வானவர் வந்து விரும்பிய
சோலை சூழ்புறங் காடரங் காகவே
ஆலின் கீழறத் தாரன்னி யூரரே.

பொழிப்புரை :

நெற்றிக்கண் உடையவரும் , காலையே போய்ப் பலி ஏற்பவரும் , வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டவரும் , ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே .

குறிப்புரை :

காலை - தக்கபொழுது ; காலைநேரத்தே எனினும் அமையும் . பிச்சை கொள்வார் செல்லும் காலை நேரத்தே கடைத்தலை சென்றவர் என்று இகழும் புகழுரை இது . தேர்வர் - ஆராய்ந்து பெறுவர் ( பக்குவ ஆன்மாக்களைப் பருவத்திற்சென்று ஆள்வர் என்றபடி ). நெற்றிக்கண்ணார் என்று மொழிமாறுக . மேலை வானவர் - மேலவராகிய தேவர்கள் . புறங்காடு - ஊர்ப்புறத்தே அமைந்த இடுகாடு . பலரையும் புறங்காணும் காடு எனினுமாம் . அரங்கு - ஆடுமிடம் . சோலைசூழ் அன்னியூர் எனவும் , வானவர் வந்து விரும்பிய , புறங்காடு அரங்காகக் கொண்ட அன்னியூரர் எனவும் இயைக்க .

பண் :

பாடல் எண் : 9

எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த்
திரியு மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்
கரிய ராகிநின் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

தீவண்ண மேனியரும் , எலும்பணிந்து இன்புறு வாரும் , திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும் , மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னி யூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

எரிகொள்மேனி - நெருப்பினது சிவந்த நிறத்தைக் கொண்ட திருமேனி . மூவெயில் - மூன்று கோட்டைகள் . செற்றவர் - அழித்தவர் .

பண் :

பாடல் எண் : 10

வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும்
அஞ்சு மஞ்சுமோ ராறுநான் கும்மிறப்
பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை
அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே.

பொழிப்புரை :

வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச , ` ஆயிழையே ! அஞ்சல் ! அஞ்சல் !` என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே .

குறிப்புரை :

வஞ்சரக்கன் - வஞ்ச அரக்கன் என்பதன் தொகுத்தல். வஞ்சத்தன்மையுடைய இராவணன். கரம் - கைகள். அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் (5+5+6+4=20) இருபது. இருபது தோள்களும். இற - நொறுங்க. பஞ்சின் மெல் விரலாலடர்த்து - இராவணனது ஆணவத்தை மட்டிலுமழித்து அவனை நிக்ரகத்தால் அநுக்கிரகம் செய்வான் வேண்டி அடர்த்தவராதலின் பஞ்சினும் மெல்லிய விரலால் அடர்த்தார் என்றார். வலிய ஊன்றினால் அவன் அழிந்திருப்பான் என்பது கருத்து. ஆயிழை அஞ்சல் அஞ்சல் - இராவணன் கைலையங் கிரியைப் பெயர்த்த காலையில் அம்மலை துளக்கம் எய்தியது. அதனால் உமையம்மை அஞ்சிப் பெருமானைத் தழுவினாள். அவ்வச்சக் குறிப்பை உணர்ந்த இறைவன், `ஆயிழையே, அஞ்சாதே! அஞ்சாதே!` என்று கூறினான் என்பது கருத்து. ஆயிழை - ஆராய்ந்து கொண்ட அணிகலன்கள் அணிந்தவள்.
சிற்பி