திருமறைக்காடு


பண் :

பாடல் எண் : 1

ஓத மால்கடல் பாவி யுலகெலாம்
மாத ரார்வலங் கொண்மறைக் காடரைக்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே. 

பொழிப்புரை :

அலைகளை உடைய பெருங்கடல் பரவிய சிறப்பினதும், உலகெலாம் உள்ள நற்குணம் வாய்ந்த பெண்கள் வலங்கொள்ளும் மாண்பினதுமாகிய மறைக்காட்டில் உறையும் பெருமானை விரும்பி, எல்லோராலும் தியானிக்கப்படும் அவர் திருவடிகளை வாழ்த்த நம் பாவங்கள் கெடும்.

குறிப்புரை :

\\\"மறைக்காடரோ\\\" என்பதும் பாடம். ஓதம் - வெள்ளப் பெருக்கு. பெருகியும் குறைந்தும் வரும் இயல்பு கடலுக்குரியது. பெருக்கத்தை ஓதம் என்பர். மால் கடல் -பெரிய கடல். பாவி - பாவிய என்னும் பெயரெச்சத்து அகரம் தொக்கது. பாவிய - சூழ்ந்த. உலகெலாம் -திசை எல்லாம். (திருமறைக்காட்டைச் சூழக்கடல் உள்ளது என்பது கருத்து.) மறைக்காடரை என்பது பாடமாயின், மறைக் காடரை ஏத்த, உலகெலாம் காதல்செய்து கருதப்படும் அவர் பாதம் ஏத்த- எனத் தனித்தனி இயைத்துப் பொருள் கொள்க. இதில் \\\"உலகு\\\" என்பது உயர்ந்தோரை. \\\"மற்றனைத்தையும் விட்டுச் சிவனொருவனே தியானிக்கத்தக்கவன்\\\" என்று அதர்வசிகை கூறலின், (மறை உணர்ந் தோரால்) காதல் செய்து கருதப்படுமவர் என்றார்.பறைதல் -கெடுதல் அல்லது நீங்குதல்.

பண் :

பாடல் எண் : 2

பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்கந் தானுடை மாமறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி யார்தம்மை
நோக்கிக் காண்பது நும்பணி செய்யிலே. 

பொழிப்புரை :

ஊர்க்குப் புறத்தே உள்ள நீரிலெல்லாம் தாழை பூப்பதும், ஆக்கம் பெருகியதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! யார்க்கும் காண்டற்கரியீர்! உம் பணி செய்யிலன்றோ அடியார்களைத் தேவரீர் திருவருள் செய்தற்குத் திருவருள் நோக்கம் புரிந்தருள்வது! (பணிந்து பணிசெய்வார்க்கன்றி முதல்வன் அருள் கைகூடாது என்பது கருத்து)

குறிப்புரை :

புறணி - உப்பங்கழிக்கரை. புறணியருகெலாம் பூக்கும் தாழையையுடைய மறைக்காடு என்க. ஆக்கம் - செல்வம். மா - சிறந்த. ஆர்க்கும் காண்பரியீராகிய நீர் நும் பணிசெய்யிலே, அவ்வடியார் தம்மை நோக்கிக் காண்பது செய்வீர் என்றியைத்துப் பொருள் காண்க. நோக்கிக் காண்பது - கருணையோடு பார்த்து அருள்செய்வது.

பண் :

பாடல் எண் : 3

புன்னை ஞாழல் புறணி யருகெலாம்
மன்னி னார்வலங் கொள்மறைக் காடரோ
அன்ன மெல்நடை யாளையொர் பாகமாச்
சின்ன வேட முகப்பது செல்வமே.

பொழிப்புரை :

ஊர்க்குப் புறத்தே உள்ள நீரின் அருகெல்லாம் புன்னையும் ஞாழலும் பொருந்தியதும், மன்னுதலுற்ற நல்லடியார் வலங்கொள்வதுமாகிய மறைக்காட்டுறையும் பெருமானே! அன்ன மென்னடையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக்கொண்டு நீர் உகப்பதாகிய செல்வம் சின்னமாகிய உமது வேடமே.

குறிப்புரை :

புன்னை-புன்னைமரங்கள். ஞாழல்-சுரபுன்னை. புறணி யருகெலாம் புன்னை ஞாழல் இவற்றையுடைய மறைக்காடு என்க. மன்னினார் - புகழால் நிலை பெற்றவர். வலங்கொள் - வலம் செய்யும். அன்னமெல் நடையாள்-அன்னம் போன்ற மெல்லிய நடையினை யுடையவளாகிய பார்வதி. சின்னவேடம் - அடையாளமாகிய திரு வேடம்; அவை திருநீறு அக்கமணி முதலியவை. (நீர்) உகப்பது (ஆகிய) செல்வம் சின்னமாகிய வேடமே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. சிவசின்னங்களே மேலான செல்வம்; அவற்றையே இறைவர் உகப்பது என்றபடி.

பண் :

பாடல் எண் : 4

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே. 

பொழிப்புரை :

எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்டவடிவாகிய புன்சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நட்டம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமோ?

குறிப்புரை :

அட்டமாமலர் - சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறிய எட்டு மலர். `எட்டுக் கொலாமவர் சூடும் இனமலர்` (தி. 4. ப. 18. பா.8.) என்றார் முன்னும். புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வர்த்தம், நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டும் புலரிக்காலத்துக்கு உரியவை. அடும்பு-அடப்பமலர். வட்டப் புன்சடை - வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை. கொல்லாமை, அருள், பொறியடக்கல், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்.

பண் :

பாடல் எண் : 5

நெய்த லாம்பல் நிறைவயல் சூழ்தரும்
மெய்யி னார்வலங் கொண்மறைக் காடரோ
தையல் பாகங்கொண் டீர்கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்புடன் வைப்பதே. 

பொழிப்புரை :

நெய்தலும் ஆம்பலும் நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்துள்ளதும், மெய்யன்பினார் வலம் கொள்வதும் ஆகிய மறைக்காட்டுறையும் பெருமானே! பெண்ணொருபாகம் கொண்ட தேவரீர், கவர்த்த புன்சடையில் வருத்தமுற்ற பிறையை அதனை விழுங்கக் காத்திருக்கும் பாம்புடன் ஒருங்கு வைத்தருளியது என்னையோ? (நலிவாரும் மெலிவாரும் உணர்வொன்றா நயத்தலினால் முதல்வனைச் சாரும் போது நலிவும் மெலிவும் இல்லையாகும் என்பது கருத்து).

குறிப்புரை :

நெய்தலும் ஆம்பலும் நிறையும் வயல் என்க. இதனால் வயல்களின் சேற்றுவளங் கூறப்பட்டது. மெய்யினார் - மெய்ப் பொருளைத் தலைப்பட்டு உணர்ந்தோராய `செம்பொருள் கண்டார்`. கவர் புன்சடை - கிளைத்த மெல்லிய சடை. பைதல் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 6

துஞ்சும் போதுந் துயிலின்றி யேத்துவார்
வஞ்சின் றிவலங் கொண்மறைக் காடரோ
பஞ்சின் மெல்லடிப் பாவை பலிகொணர்ந்
தஞ்சி நிற்பது மைந்தலை நாகமே.

பொழிப்புரை :

உறங்கும்போதும் உறங்காது உள் உணர்வோர் வஞ்சனையின்றி வலஞ்செய்யும் மறைக்காட்டுறையும் பெருமானே! பஞ்சனைய மெல்லடி உடைய இப்பாவை பலி கொணர்ந்து தேவரீர் பாத்திரத்தில் இடாது அஞ்சி நிற்பதற்குக் காரணம் தேவரீர் அணிந்துள்ள ஐந்தலை நாகமே, அதனை ஏன் அணிந்தீர்?

குறிப்புரை :

துஞ்சும்போதும் - உறங்கும்போதும். துயிலின்றி - அறிவு ஓய்தல் இன்றி. உறக்கத்திலும் இறைவனை நினைந்தே இருத்தலின் துயிலின்றி என்றார். வஞ்சம் இன்றி என்பது வஞ்சின்றி எனத் தொக்கது. பஞ்சின் மெல்லடிப்பாவை - முனிபன்னியருள் ஒருத்தி. பலிகொணர்ந்து - பிச்சைகொண்டு. அஞ்சிநிற்பதும் - பயந்து நிற்பதும். ஐந்தலைநாகமே - ஐந்தலை நாகத்திற்கே. ஐந்தலைநாகம் - முதல்வன் திருமேனியில் உள்ள ஐந்தலை நாகம் என்பது குண்டலினி எனப்படும் சுத்தமாயை; அதன் காரியமாகிய சிவம், சத்தி, சாதாக் கியம், ஈசுவரம், சுத்தவித்தை என்னும் ஐந்து தத்துவங்களும் ஐந்தலை எனப்பட்டன. முதல்வன் இருவகை மாயைக்கும் ஆதாரமாகவும் தலைவனாகவும் உளன் என்பது வேதாகமங்களுட் கூறப்படும் உண்மை. அதனை `மாயையைப் பிரகிருதி (முதற்காரணம்) என அறிக, மாயையை உடையவன் மகேசுவரன் என்றறிக`. என்னும் சுவேதா சுவதர உபநிடத உரையால் அறியலாம்.

பண் :

பாடல் எண் : 7

திருவி னார்செல்வ மல்கு விழாவணி
மருவி னார்வலங் கொண்மறைக் காடரோ
உருவி னாளுமை மங்கையொர் பாகமாய்
மருவி னாய்கங்கை யைச்சென்னி தன்னிலே. 

பொழிப்புரை :

அருள் திருவுடையாரின் செல்வம் நிறைந்து விளங்கித் தோன்றும் விழாக்களால் அழகு பெற்றதும், நெஞ்சு நும்பால் மருவினார் வலம் செய்வதும் ஆகிய மறைக் காட்டுறையும் பெருமானே! நல்ல அழகிய உருவமுடைய உமை மங்கையை ஒரு பாகமாக மருவியதோடு, கங்கையைச் சடையிற் சூடியுள்ளது என்னையோ?

குறிப்புரை :

செல்வம்மல்கு திருவினார்-செல்வங்கள் நிறைந்த திருவினை உடையவர் எனினும் அமையும். உமை முதல்வனது திரு வருளாகிய சிற்சத்தி; கங்கை இயற்கை எனப்படும் உலக முதற் பொருளின் சட ஆற்றலுக்கு ஓர் அடையாளம். முதல்வன் தன் சிற்சத்தியோடு பிரியாதுநின்று அதனைக் காரணமாகக் கொண்டு எவையும் செய்யவல்லன் என்பதும், இயற்கையாற்றல் அவன் ஒரு கூற்றில் அவன் விருப்பின்படி அடங்கியும் விரிந்தும் நிற்கும் என்பதும் இவ் வுண்மையாம். பெரிய நல்லடையாளத்தால் உணரத்தக்கவை என்பது கருத்து.

பண் :

பாடல் எண் : 8

சங்கு வந்தலைக் குந்தடங் கானல்வாய்
வங்க மார்வலங் கொண்மறைக் காடரோ
கங்கை செஞ்சடை வைப்பது மன்றியே
அங்கை யில்லன லேந்த லழகிதே. 

பொழிப்புரை :

சங்குகளை அலைகள் கரையிலே கொண்டு வந்து உலவவிடும் கடற்கரைச் சோலையிடத்துக் கப்பல்கள் வந்து வலங் கொள்வனபோன்று வரிசைகொள்ளும் மறைக்காட்டுறையும் பெருமானே! தேவரீர் கங்கையைச் செஞ்சடையில் வைப்பதும் அன்றி, அகங்கையில் அனலையும் ஏந்தல் அழகியதேயோ?

குறிப்புரை :

சங்கு வந்தலைக்கும் - ஊர்ந்து வரும் சங்குகளால் அலைக்கப்படும். தடங்கானல் -பெரிய கடற்கரைச் சோலை. வாய்- இடத்து. வங்கம் - கப்பல். இயற்கையின் மாறுபட்ட ஆற்றல்களைத் தன் பேராற்றலுள் அகப்படக்கொண்டு இணைத்து வேண்டியவாறு தொழிற் படுத்துவன் என்பதுகருத்து. உமையம்மைக்குத் தெரியாதபடி கங்கையை மறைத்துவைத்ததே தவறு; மேலும் இல்லை என்று உறுதி உரைப்பார்போலக் கையில் அனல் ஏந்தல் அழகாகுமா? என்பது நயம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

குறைக்காட் டான்விட்ட தேர்குத்த மாமலை
இறைக்காட் டியெடுத் தான்தலை யீரைந்தும்
மறைக்காட் டான்இறை யூன்றலும் வாய்விட்டான்
இறைக்காட் டாயெம் பிரானுனை யேத்தவே. 

பொழிப்புரை :

தன்பாலுள்ள குறையைக் காட்டாதவனாகிய இராவணன் ஏறிவந்த தேர் வழிச்செல்லுதலைத் தடுத்த திருக்கயிலாய மலையைச் சிறுபோது தன்வலிகாட்டி எடுக்கலுற, அவன் பத்துத் தலைகளும், மறைக்காட்டுப் பெருமானே! நீ சிறிது திருவிரல் ஊன்றுதலும், வாய்விட்டரற்றினன். எம்பெருமானே! நீ அடியேன் உனை ஏத்துதலால் எனக்கு இறப்பைக் காட்ட மாட்டாய்; இறவாத இன்ப அன்பே காட்டுவாய் என்றபடி.

குறிப்புரை :

குறைக்காட்டான் - குறைக்கு ஆள்தான் எனப்பிரித்து, குற்றங்களுக்கு ஆளாயிருப்பவன் இராவணன் எனினும் அமையும். விட்ட - செலுத்திய. குத்த - முட்ட. மாமலை - பெருமைக்குரிய திருக் கயிலைமலை. இறைக்காட்டி எடுத்தான் - சிறிது நேரம் தன் தலைமையின் பெருமையை நந்திதேவர்க்கறிவித்துத் தூக்கினவன். இறை - சிறிது. வாய்விட்டான் - அலறினான். இறைக்காட்டாய் - இறப்பைக் காட்டமாட்டாய்; இறை - இறப்பு. இறைவனை ஏத்துவார்க்கு இறப்பொடு பிறப்பில்லை என்றபடி.
சிற்பி