திருவிடைமருதூர்


பண் :

பாடல் எண் : 1

பறையி னோசையும் பாடலி னோசையும்
மறையி னோசையும் வைகு மயலெலாம்
இறைவ னெங்கள் பிரானிடை மருதினில்
உறையு மீசனை யுள்குமெ னுள்ளமே.

பொழிப்புரை :

பறை , பாடல் , மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும் , இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .

குறிப்புரை :

பறை - தோற்கருவி வாச்சியங்கள் . பாடலின் ஓசை - இசைப்பாடல்கள் பாடுவார் எழுப்பும் ஓசை . மறையின் ஓசை - வேத முழக்கம் . எங்கும் - அயலெலாம் - ஊர்ப்பரப்பு முழுதும் . வைகும் - தங்கும் ; இது இடைமருதிற்குரிய அடை . உள்கும் - நினைக்கும் .

பண் :

பாடல் எண் : 2

மனத்துள் மாயனை மாசறு சோதியை
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை
எனக்குத் தாயையெம் மானிடை மருதனை
நினைத்திட் டூறி நிறைந்ததெ னுள்ளமே.

பொழிப்புரை :

மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும் , குற்றமற்ற ஒளிவடிவானவனும் , மிக்க இளமதியைச் சூடியவனும் , எனக்குத் தாயானவனும் , எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது .

குறிப்புரை :

மனத்துள் - மனத்திற்குள் . மாயன் - வெளிப்படையாக இன்றி மறைந்து வீற்றிருக்கும் மாயத்தன்மையை உடையவன் . புனிறு - மிக்க இளமை . பிள்ளை வெள்ளைமதி - குழவித் திங்களாகிய வெண்மை பொருந்திய மதி . எம்மான் - தலைவன் . நினைத்தலால் அன்பு ஊறி உள்ளத்தின்கண்ணே நிறைந்து நிற்கின்றது என்க .

பண் :

பாடல் எண் : 3

வண்ட ணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்ட ணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்டி சைக்கு மிடைமரு தாவென
விண்டு போயறும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

வண்டணைந்த வன்னியும் , மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை , எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்றுகூற , நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும் .

குறிப்புரை :

மற்றொரு பாடல் ( தி .5 ப .14. பா .5) இப்பாடலை ஒத்திருப்பதை ஓர்க . மத்தம் - ஊமத்தம்பூ . மத்தம் கூத்தனார் என்ற சொல் வேறுபாடுகள் மட்டுமே கொண்டு இப்பாடல் இரண்டு பதிகங்களில் வருகின்றது .

பண் :

பாடல் எண் : 4

துணையி லாமையில் தூங்கிருட் பேய்களோ
டணைய லாவ தெமக்கரி தேயெனா
இணையி லாவிடை மாமரு தில்லெழு
பணையி லாகமஞ் சொல்லுந்தன் பாங்கிக்கே.

பொழிப்புரை :

ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின் , தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர் .

குறிப்புரை :

முதல்வன் என்னும் எழுவாய் வருவித்துரைக்க . துணையிலாமையில் - ஊழிக்காலத்து வேறொருவர் தமக்குத் துணையாக இல்லையாதலால் . தூங்கிருள் - கழியாது தாழ்க்கும் இருளில் . பேய்களோடு அணையலாவது - பேய்களோடு கூடியணைந்து நடமாடிக் காலங்கழித்தல் . அரிதே எனா - எமக்கு அரிய தானதே என்று . இணையிலா - ஒப்பில்லாத . இடைமாமருதில் எழு - இடைமருதில்தோன்றியுள்ள . பணையில் - மருத மரத்தடியில் ( பணை - மருதநிலம் , அஃது அந்நிலத்துக்குரிய மரத்துக்கு ஆயிற்று ) தன் பாங்கிக்கு - தன் பாகத்தே உள்ள பெருமாட்டிக்கு ; அல்லது தனக்கு மனைவியாம் பாங்கு உடையாளுக்கு . ஆகமப் பொருள்களைச் சொல்லும் - ஓதிக் கொண்டிருக்கிறான் . இப் பாடல் நகைச்சுவை யமைந்தது . இடைமருதில் பெருமான் எழுந்தருளியுள்ளதற்கு ஒரு வினோதமான காரணம் கூறியவாறு . (1) இடைமருது - ஊழிக்காலத்து அழியாதது , (2) ஊழியில் இறைவனும் அம்மையும் பேய்களும் அன்றிப் பிறர் இரார் , (3) ஆகமம் அம்மைக்கே முதற்கண் உரைக்கப் படுவது என்பன விளங்குதல் காண்க .

பண் :

பாடல் எண் : 5

மண்ணை யுண்டமால் காணான் மலரடி
விண்ணை விண்டயன் காணான் வியன்முடி
மொண்ணை மாமரு தாவென்றென் மொய்குழல்
பண்ணை யாயமுந் தானும் பயிலுமே.

பொழிப்புரை :

மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான் , என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும் , மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள் . பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி .

குறிப்புரை :

விண்ணை விண்டு - வானூடு அன்னமாய்ப் பறந்து சென்று . மொண்ணை - முரண்டலை உடையை என்பது போலும் . மொய்குழல் - செறிந்த கூந்தலினை உடைய என்மகள் . பண்ணையாயம் - விளையாடும் தோழியர் . பயிலும் - சொல்லிக் கொண்டிருக்கும் . இப்பாடல் அகத்துறைப் பொருளமைந்தது . செவிலி கூற்று .

பண் :

பாடல் எண் : 6

மங்கை காணக் கொடார்மண மாலையை
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை
நங்கை மீரிடை மருதரிந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தா ரிதழியே.

பொழிப்புரை :

பெண்களே , இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் ( கொன்றை மலரின் நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார் .) ஆயின் , அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின் , பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள் ; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது . இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது . மற்று எங்கிருந்து இப் பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது ?

குறிப்புரை :

இறைவன் மார்பில் தார் ஆவதும் கார்க்கொன்றை , முடிக்கண் கண்ணியாவதும் கொன்றை - இவ்விரண்டிடத்தன்றி வேறு எங்குப் பெற்றுக் கொடுத்தது என்க . இதழி - கொன்றை , பசலை . தலைவி இடைமருதீசர்மேல்கொண்ட காதலால் உடல் பசந்தாள் . பொன்னிறப் பசலை உடம்பெல்லாம் பூத்தது . அதை ஏளனம் செய்யும் தோழியர் அப் பொன்னிறப்பசலையை இறைவரளித்த கொன்றை மாலையாகக் கற்பித்து , பார்வதி கங்கைக்குத் தெரியாமல் இறைவர் எங்கு வாங்கித் தந்தார் இக்கொன்றையை என்று தலைவியை நகையாடுகின்றனர் .
சிற்பி