திருவன்னியூர்


பண் :

பாடல் எண் : 1

காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட மாடும் பரமனார்
வாட மானிறங் கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில் சூழ்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

மணம் கமழ்கின்ற மாடங்களும், மாமதில்களும் சூழ்கின்ற வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர். சுடுகாட்டினை அரங்காகக்கொண்டு, நள்ளிரவில் பூதகணங்கள் பாடப் பெருநடம் ஆடும் பரமர்; மான்போன்ற இப்பெண் வாட, இவளது பொன்னிறத்தைத் தாம் கொண்டு பசலை நிறம் தந்த இயல்புடையவர்.

குறிப்புரை :

காடு அரங்காகக்கொண்டு என மாறுக. இடுகாட்டை நடமாடும் அரங்கமாகக் கொண்டு என்பது பொருள். கங்குல்வாய் - இரவுப்பொழுதில். கணம் - பூதகணங்கள். பாட - பாட்டிசைக்க. மாநடம் - சிறந்த நடனத்தை. வாடமானிறங்கொள்வர் - மான் போன்றவளாகிய தலைமகள் வாட அவளது நிறத்தைக் கொள்பவர். பசலை பூத்தலால் நிறம் மாறிற்று என்க. மணங்கமழ் - அகிற்புகை முதலியவற்றால் மணங்கமழ்கின்ற. கங்குல் என்றது சர்வசங்கார காலத்தை; அப்பொழுது ஆடும் நடனம் சூக்கும பஞ்சகிருத்திய நடனம் எனப்படும்.

பண் :

பாடல் எண் : 2

செங்கண் நாகம் அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின் றாரெரி யாடுவர்
கங்கை வார்சடை மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத் தார்வன்னி யூரரே.

பொழிப்புரை :

உமையம்மையாரை ஒரு பாகமாக வைத்த வன்னியூரில் வீற்றிருக்கும் இறைவர், அரையின்கண் சிவந்த கண்ணையுடைய நாகத்தைக் கட்டியவர்; தீத்தொகுதியை அழகிய கரத்தில் ஏந்தி ஆடுபவர்; நீண்ட சடைமேலிடத்தில் கங்கையைக் கொண்டவர்.

குறிப்புரை :

செங்கண் நாகம் - சிவந்த கண்ணை உடைய பாம்பு. அரையது - இடுப்பின் கண்ணது. ஏந்தி நின்றாராய் எரியாடுபவர் என்க. வார்சடை மேலிடம் கங்கை கொண்டவர் என்க.

பண் :

பாடல் எண் : 3

ஞானங் காட்டுவர் நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர் தம்மடைந் தார்க்கெலாம்
தானங் காட்டித்தன் தாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர் போல்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர், தம்மையடைந்த அன்பர்கட்கெல்லாம், ஞானமும், அதனை அடைதற்குரிய நல்ல நெறியும், அடைதற்குரிய இடமும் காட்டுவர்; தன் திருவடியில் அடைந்தவர்கட்குத் தானங்காட்டுவதோடமையாது வானங்காட்டி ஆளவும் வைப்பார்.

குறிப்புரை :

ஞானம் - கலைஞானம். நன்னெறி - அநுபவ ஞானம். தம்மை அடைந்தார்க்கெல்லாம் - தம்மைச் சேர்ந்தவர் எல்லோர்க்கும். தானங்காட்டுவர் - சரியை, கிரியை, யோக நெறியினர்க்கு; சாலோக, சாமீப, சாரூபங்களாகிய தானத்தை (இடத்தை) வழங்குபவர்.
வானங் காட்டுவர் - ஞானநெறி நின்றார்க்கு சாயுச்யமாகிய வீட்டு நெறிக்கு வழி செய்வார். போல் என்பது அசை. தாளடைதல் - நிஷ்டைகூடுதல், பரமுத்தி நிலையாகிய சிவ சாயுச்யத்தைக் கொடுப்பார். பரமுத்தியினும் முதல்வன் உபகாரம் உண்மையின் காட்டுவர் என்றார். சரியை, யோகங்களும் ஞானம் எனப்படும் என்பதை \\\\\\\"விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் ... ... அரும்பு மலர் காய் கனிகள் அன்றோ பராபரமே\\\\\\\" என்னும் தாயுமானவர் திருவாக்கால் உணர்க.

பண் :

பாடல் எண் : 4

இம்மை அம்மை யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை வார்கள்தம் வல்வினை
வம்மின் றீர்ப்பர்கண் டீர்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

உலகினுள்ளீரே! வன்னியூர்த்தலத்து இறைவர் தம்மை மெய்ம்மையாக நினைவார்களுடைய வலிய வினையைத் தீர்க்கும் இயல்பினர்; இப்பிறப்பு, அப்பிறப்பு என்ற இரண்டின் உண்மைத் தன்மை அறியாது விளம்பும் சிலரைச் சாராது வந்து வழிபடுவீராக.

குறிப்புரை :

இம்மை - இப்பிறப்பு. அம்மை - மறுபிறப்பும், வீடுபேறும். இவ்விரண்டையும் உண்மை என்றறியாது உலோகாய தரும், ஏகான்ம வாதிகளும் பேசுவர். \\\\\\\"மறு பிறப்பில்லெனும் மடவோரும் சேரார் நின்னிழல்\\\\\\\" (பரிபாடல்) அறியாது - தெரியாது. மெய்ம்மையால் - உண்மையோடு. வம்மின் - வாருங்கள். தீர்ப்பர் - வினைதீர்த்து வீடுபேறளிப்பர்.

பண் :

பாடல் எண் : 5

பிறைகொள் வாள்நுதற் பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர் நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர் வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி யார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வேதங்களை வாய்மொழியாக உடைய வன்னியூர்த்தலத்து இறைவர், பிறையின் பேரழகு கொண்ட ஒளி நுதலையும் வளைபெய் கரங்களையும் உடைய பெண்களது கற்பினைக் கவர்பவர்; திருநீறணிந்த திருமேனியர்; திருநீல கண்டத்தர், ஒளிவீசும் வெள்ளிய மழுவினை உடையவர் ஆவர்.

குறிப்புரை :

பிறைகொள் வாணுதல் - பிறையின் வடிவத்தைக் கொண்ட ஒளி பொருந்திய நெற்றி. பெய்வளைத் தோளியர் - வளையல் அணிந்த கைகளை உடைய பெண்கள். நிறை - காப்பன காத்து, கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கம்; கற்பு என்பது.
வெண் மழுவாளினர் - வெண்மையான மழுவாகிய வாளை உடையவர். மறைகொள் வாய்மொழியார் - மந்திரங்களைத் தன்னகத்தே கொண்ட வாயை உடையவர். வாய்மொழி - வேதம்.

பண் :

பாடல் எண் : 6

திளைக்கும் வண்டொடு தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர் தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற் கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை யார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர் வண்டும், தேனும் திளைத்துப் பொருந்தும் கொன்றையர்; துளையுடைய அயிராவணம் என்ற வேழத்தினை உடையவர்; புலித்தோலினர்; ஒளி வீசும் மதியில் தோன்றும் நிலாக்கதிரைக்கண்டு நாகமானது கொள்ளுவதற்கு நாவினை வளைக்கின்ற நீண்ட சடையினர் ஆவர்.

குறிப்புரை :

திளைக்கும் - உண்டு மகிழும். தேன்படு - தேன் பொருந்திய. துளைக்கை வேழத்தர் தோலர் - துளையோடு கூடிய கையையுடைய யானையின் தோலை அணிந்தவர். சுடர்மதி முளைக்கும் - ஒளி பொருந்திய மதியிலிருந்து உண்டாகும். மூரல் கதிர் கண்டு - நகையொளிபோன்ற நிலாக்கிரணங்களைக் கண்டு. நாவளைக்கும் - அச்சந்திரனை உண்ணுதற்கு நாகம் நாவை வளைத்தற்கிடமாயுள்ள.

பண் :

பாடல் எண் : 7

குணங்கொள் தோளெட்டு மூர்த்தி யிணையடி
இணங்கு வார்கட் கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர் கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத் தார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர் எட்டுத் தோள்களையும் எட்டுக்குணங்களையும் உடைய மூர்த்தி; தன் இணையடிகளை இணங்கி வழிபடுவார்கட்கு இனியராகியவர்; மலர்கள் கொண்டு வணங்குவார் மனத்தின் கண்ணவர்.

குறிப்புரை :

குணங்கொள் - எண்குணங்களைக் கொண்ட குணமும் தோளும் எட்டாகக் கொள்கின்ற எட்டு மூர்த்தி. எட்டு என்பதைத் தனித்தனியே கூட்டுக. எட்டுத் தோள் மூர்த்தி - எட்டுத் தோள்களை உடைய பெருமான். எட்டு மூர்த்தி - அட்ட மூர்த்தங்களை உடையவன். இணையடி - இரண்டு திருவடிகள். இணங்குவார்கட்கு - சேர்பவர்கட்கு. வணங்கி - பணிவுள்ளமுடையவராகி. வைகலும் - நாடோறும். வணங்குவாரது மனத்தார் - மனத்தின்கண்ணே எழுந்தருளுபவர்.

பண் :

பாடல் எண் : 8

இயலு மாலொடு நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாமன்ன மேயுமந் தாமரை
வயலெ லாங்கயல் பாய்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

அயற்பக்கமெலாம் அன்னங்கள் மேய்கின்ற, அழகிய தாமரைகளை உடைய வயல்களிலெல்லாம் கயல்மீன்கள் பாய்கின்ற, வன்னியூர்த்தலத்து இறைவர், இயலுகின்ற திருமாலோடு நான்முகன் தவம் செய்து முயன்றும் காண்டல் அரியராய் நின்ற மூர்த்தியாவர்.

குறிப்புரை :

இயலும் - தாமே முதற்பொருள் என்று முரணி நிற்கும். செய்தவம் முயலில் - தவம் செய்து முயலுதற்கண். அம் தாமரை அயலெலாம் அன்னம் மேயும் - அழகிய தாமரை பூத்துள்ள இடங்களின் வயலிலெல்லாம் அன்னங்கள் மேய்ந்து கொண்டிருக்கும். இயல்பு உடைய கயல் பாய்தற்கிடமான வயல்களை உடைய வன்னியூர் என்க.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

நலங்கொள் பாகனை நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத் தானது மிக்கிட
இலங்கை மன்ன னிருபது தோளினை
மலங்க வூன்றிவைத் தார்வன்னி யூரரே. 

பொழிப்புரை :

வன்னியூர்த்தலத்து இறைவர், நன்மை கொண்ட பாகராகிய தம்மை முனிந்திடாது திருக்கயிலையைக் கரங்களைக் கொண்டு கோர்த்தெடுத்தபோது அவ்விலங்கை மன்னனின் இருபது தோள்களை மலங்கும் படியாகத் திருவிரலை ஊன்றியவர் ஆவர்.

குறிப்புரை :

நலங்கொள் - தனக்கு நன்மையே எண்ணுதலைக் கொண்ட. பாகனை - இறைவன் மலை என்று கூறிய தேர்ப்பாகனை. நன்று - நன்கு; மிக. முனிந்திடா - சினந்து. விலங்கல் - கயிலைமலை. கோத்து எடுத்தான் - கைகளை உள்ளே நுழைத்துத் தூக்கியவன். அது மிக்கிட - அக்கயிலைமலை சுமையால் மிக. மலங்க - கலங்க. ஊன்றி வைத்தார் - ஊன்றினார்.
சிற்பி