திருவானைக்கா


பண் :

பாடல் எண் : 1

கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
தேனைக் காவியுண் ணார்சில தெண்ணர்கள்
ஆனைக் காவிலம் மானை யணைகிலார்
ஊனைக் காவி யுழிதர்வ ரூமரே.

பொழிப்புரை :

தெளிவற்றசிலர் , உலகிற்கெல்லாம் அரசனாகிய சிவபெருமானைச் சுமத்தலாற் குளிர்ந்த மனத்தை உடையராய் அச் சிவானந்தத்தேனை உண்ணாதவராயுள்ளனர் ; சில ஊமர்கள் ஆனைக்காவில் எழுந்தருளியுள்ள தலைவனை அணையாதவர்களாய்த் தம் தசைபொதிந்த உடலை வீணேசுமந்து திரிவர் !

குறிப்புரை :

கோனை - எல்லா உலகிற்கும் தலைவனாகிய பெருமானை . காவி - காப்பாற்றி . குளிர்ந்தமனத்தராய் - மனங் குளிர்ந்தவராய் . தேனை - அப்பெருமானது திருவருளமுதாகிய தேனை . காவி - விரும்பிக் காத்து . உண்ணார் - உண்ணாதவராயினார் . தெண்ணர்கள் - தெளிந்த அறிவில்லாதவர்கள் . ஆனைக்காவில் எம் அண்ணலை - திருவானைக்கா என்னும் தலத்தில் எழுந்தருளிய எங்கள் தலைவனை . அணைகிலார் - சென்று தரிசிக்காதவராய் . ஊனை - இவ்வுடலையே . காவி - ஓம்பி . உழிதர்வர் - திரிவர் . ஊமர் - ஊமையர் . வாய்பெற்ற பயனை வாழ்த்திப் பெறாதவராதலால் வாயிருந்தும் ஊமையர் என்றார் .

பண் :

பாடல் எண் : 2

திருகு சிந்தையைத் தீர்த்துச்செம் மைசெய்து
பருகி யூறலைப் பற்றிப் பதமறிந்
துருகி நைபவர்க் கூனமொன் றின்றியே
அருகு நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

மாறுபடும் மனத்தினை மாறுபாடு நீக்கிச் செம்மைப்படுத்திப் பருகுதற்குரிய தேன் போல் இனிக்கும் பெருமானைப்பற்றிச் செவ்வியறிந்து உருகி நைபவர்க்கு வரக்கடவனவாகிய குற்றங்கள் இல்லாததோடு , அவர்கள் அருகு நின்று ஆனைக்காவின் அண்ணலும் அருள்புரிவன் .

குறிப்புரை :

திருகு - மாறுபட்ட . தீர்த்து - மாறுபாடொழித்து . செம்மை செய்து - தூய்மை செய்து . ஊறல் - உள்ளத்துள்ளே ஊறும் தேன் போன்ற சிவாநந்தானுபவம் . ` கருதுவார் இதயத்துக் கமலத் தூறும் தேனவன்காண் ` ( தி .6. ப . 87. பா .1) பற்றிப்பதமறிந்து பருகி - அன்பால் பணிந்து அப்பெருமானின் திருவருளமுதைச் செவ்வியறிந்து உண்டு . உருகிநைபவர் - மனமுருகி திருவருட் பேற்றிற்கு இளைப்பவர் . ஊனம் - குறை . அருகு - அண்மையில் . நின்றிடும் - எழுந்தருளுவான் .

பண் :

பாடல் எண் : 3

துன்ப மின்றித் துயரின்றி யென்றுநீர்
இன்பம் வேண்டி லிராப்பக லேத்துமின்
என்பொன் ஈச னிறைவனென் றுள்குவார்க்
கன்ப னாயிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

என் பொன்போல்வான் என்றும் , ஈசன் என்றும் , இறைவன் என்றும் உள்ளத்தே உள்குவார்கட்கு ஆனைக்காவின் அண்ணல் அன்பனாய் அருள்புரிவான் ஆதலால் , துன்பமும் துயரமும் இன்றி என்றும் குன்றாத இன்பத்தை நீர் விரும்புவீரேயாயின் , இரவு பகல் எப்போதும் வழிபடுவீராக .

குறிப்புரை :

துன்பம் - உடலால் நுகரப்படும் துன்பம் . துயர் - மனத்தால் நுகரப்படும் துன்பம் . என்றும் - எப்போதும் . நீர் - நீங்கள் . இன்பம் வேண்டில் - இன்பத்தோடிருக்க விரும்பினால் . இராப்பகல் - இரவும் பகலும் . ஏத்துமின் - தோத்திரியுங்கள் . என்பொன் - எனக்குப் பொன்னாயிருப்பவன் . ஈசன் - தலைவன் . உள்குவார்க்கு - நினைக்கும் அடியார்களுக்கு .

பண் :

பாடல் எண் : 4

நாவால்நன்று நறுமலர்ச் சேவடி
ஓவா தேத்தி யுளத்தடைத் தார்வினை
காவா யென்றுதங் கைதொழு வார்க்கெலாம்
ஆவா என்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

நறுமணம் வீசுகின்ற சிவந்த தன் இணையடிகளை நாவினால் பெரிதும் இடைவிடாது ஏத்தி உள்ளத்தே அடைத்தவர்களுக்கும் , ` வினைத் துன்பங்களினின்று எம்மைக் காப்பாயாக ` என்று கைதொழுவார்களுக்கும் , ஆனைக்காவின் அண்ணல் ஆவா என்று அபயம் கொடுத்தருளும் இயல்பினன் ஆவன் .

குறிப்புரை :

நாவால் - நாக்கினால் . நறுமலர்ச் சேவடியை நன்று ஓவாது ஏத்தி என்க . நன்று - நல்லவண்ணம் . ஓவாது - இடைவிடாது . உளத்து அடைத்தார் - மனத்தின்கண்ணே இருத்தியவர் . வினை காவாய் - வினைபோக்கிக் காப்பாற்றுவாய் . தங்கை தொழுவார்க்கெலாம் - தம்கையால் வணங்குவார் எல்லார்க்கும் . ஆ , இரக்கச் சொல் ; இரங்குவான் என்றபடி . அருகே வந்துய்க என்றுமாம் .

பண் :

பாடல் எண் : 5

வஞ்ச மின்றி வணங்குமின் வைகலும்
வெஞ்சொ லின்றி விலகுமின் வீடுற
நைஞ்சு நைஞ்சுநின் றுள்குளிர் வார்க்கெலாம்
அஞ்ச லென்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஆனைக்காவின் அண்ணலை வஞ்சமின்றி நாள் தோறும் வழிபடுவீர்களாக ; வெவ்விய சொற்களினின்றும் விலகுவீர்களாக ; வீட்டின்பம் பெறும் பொருட்டு நைந்து நைந்து நின்று உள்ளம் குளிர்வார்க்கெல்லாம் ` அஞ்சேல் ` என்று அருள்பவன் அப் பெருமானேயாவன் .

குறிப்புரை :

வஞ்சமின்றி - மனத்தில் வஞ்சனையில்லாமல் . வைகலும் - நாடோறும் . வெஞ்சொல் இன்றி - கொடுஞ்சொற் பேசுதலின்றி . விலகுமின் - வஞ்சனை வெஞ்சொல் இவற்றை விட்டொழியுங்கள் . வீடற என்பதுபாடமாயின் - கெடுதல் நீங்க எனவுங் கொள்க . வீடுற - வீட்டுநெறியை அடைய . நைஞ்சு நைஞ்சு - உருகி உருகி . நைந்து என்பது நைஞ்சு எனத் திரிந்தது ; போலி . உள் - உள்ளம் .

பண் :

பாடல் எண் : 6

நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

உலகியலையே மெய்யென்று கருதும் பொய்யாகிய நாத்திகம் பேசாமல் , படைகள் போல் வருகின்ற ஐந்து பெரும் பூதங்களால் வரும் தடைகள் ஒன்றும் இன்றித் தன்னை யடைந்த அன்பர் களுக்கெல்லாம் அடையும் பொருளாக நிற்பவன் ஆனைக் காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

நடையை - உலக நடையை . மெய்யென்று - நிலையானது என்று எண்ணி . நாத்திகம் - கடவுளும் மறுபிறப்பும் இருவினையும் முதலியவற்றை இல்லை என்றுகூறும் உலோகாயதம் . கடவுளும் உயிரும் வீடுபேறும் பொய்யென்று கூறும் கொள்கை . படைகள்போல் - நாற்பெரும்படைகளைப் போல் . வரும் - கொல்ல வரும் . பஞ்சமா பூதங்கள் - ஐந்து பெரிய மண் , நீர் , அனல் , கால் , வளி , என்ற பூதங்கள் . தன்னடைந்தார்க்குத் தடையொன்றும் இல்லாது அடைதற்கு எளிதாய் நிற்பான் என்க .

பண் :

பாடல் எண் : 7

ஒழுகு மாடத்து ளொன்பது வாய்தலுங்
கழுக ரிப்பதன் முன்னங் கழலடி
தொழுது கைகளால் தூமலர் தூவிநின்
றழும வர்க்கன்ப னானைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஒன்பது வாயில்களும் ஒழுகுகின்ற மாடமாகிய உடம்பினைக் கழுகுகள் அரிக்கும் இறுதிக்காலம் வருதற்கு முன்பே தன் இணையடிகளைக் கைகளால் தொழுது தூய மலர்களால் தூவி நின்று அழுகின்ற அன்பர்கட்கு அன்பனாய் நின்று அருள்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

ஒழுகும் மாடம் - எங்கும் ஓட்டைகளையுடைய வீடு . ` மலஞ்சோரும் ஒன்பது வாயில் ` ( தி .8 திருவா .) ஒன்பது வாய்தலும் - ஒன்பது வாயில்களையும் , செவி , மூக்கு , கண் , வாய் , மலக்குறி , நீர்க்குறி ஆகியன . இறக்குமுன் என்பதாம் . வாய்தல் - வாயில் ; வழி . உடம்பு ஒன்பது ஓட்டைகளை உடையது ஆதலின் அவ்வழியை வாயிலென்றார் . கழுகரிப்பதன்முன் - அவ்வுடலாகிய வீடு இறந்து அழிந்து கழுகு அரித்துத் தின்னும் முன்னே . கழலடி - கழலணிந்த திருவடிகளை . அழுமவர்க்கு - அழுபவர்களுக்கு .

பண் :

பாடல் எண் : 8

உருளும் போதறி வொண்ணா வுலகத்தீர்
தெருளுஞ் சிக்கெனத் தீவினை சேராதே
இருள றுத்துநின் றீசனென் பார்க்கெலாம்
அருள்கொ டுத்திடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

உலகவாழ்வினை உதறி இறக்கும் போது இது என்று அறிய இயலாத உலகத்தவர்களே ! தெளிவடைவீர்களாக ; தீவினையைச் சேராமல் விரைந்து , இருள் அறுத்து நின்று ` ஈசனே ` என்று உரைப்பவர்க்கெல்லாம் அருள்கொடுப்பவன் ஆனைக்காவின் அண்ணலே ஆவன் .

குறிப்புரை :

உருளும் போது - அழியும் காலம் . அறிவொண்ணா - அறிந்து கொள்ள முடியாது . தெருளும் - தெளிவடையுங்கள் . சிக்கென - பற்றுக்கோடாக . இருள் - அறியாமையாகிய பந்த பாச மயக்கம் .

பண் :

பாடல் எண் : 9

நேச மாகி நினைமட நெஞ்சமே
நாச மாய குலநலஞ் சுற்றங்கள்
பாச மற்றுப் பராபர வானந்த
ஆசை யுற்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

அறியாமை உடைய நெஞ்சமே ! உன்னைக் கெடுக்கும் இயல்புடையனவாகிய குலம் , நலம் , சுற்றம் , பாசம் முதலியவை அற்று மிக உயர்ந்த ஆனந்த ஆசை உற்று , ஆனைக் காவின் அண்ணலை நேசமாகி நினைந்து உய்வாயாக .

குறிப்புரை :

நேசமாகி - அன்புமயமாகி . மடநெஞ்சமே - இதுவரை அறியாதிருந்த மனமே . நினை - நினைப்பாயாக . நாசமாய - அழிவனவாகிய . குலநலம் - குலத்தின் உயர்வு . பராபர ஆனந்தம் - மிக மேலான இன்பம் . உற்றிடும் - உறுவிக்கும் ,

பண் :

பாடல் எண் : 10

ஓத மாகடல் சூழிலங் கைக்கிறை
கீதங் கின்னரம் பாடக் கெழுவினான்
பாதம் வாங்கிப் பரிந்தருள் செய்தங்கோர்
ஆதி யாயிடும் ஆனைக்கா வண்ணலே.

பொழிப்புரை :

ஆனைக்காவின் அண்ணல் , அலைகடல் சூழ்ந்த இலங்கைக்கிறைவனாகிய இராவணன் கீதத்தைக் கின்னரம் போல் மிகப் பொருந்திப்பாடத் தன் திருப்பாதத்துத் திருவிரல் ஒன்றினால் முன்னம் ஊன்றியவர் பின்னவற்குப் பரிந்து அருள் செய்து ஆதி ஆயினர் .

குறிப்புரை :

ஓதம் - கடல் நீர்ப்பெருக்கு . கின்னரம் - வாச்சிய விசேடம் . கின்னரத்தால் கீதம்பாட என்க . கெழுவினான் - தனக்குப் பகைவன் என்ற எண்ணத்தை விட்டு , அவனோடு அன்பால் பொருந்தினான் . பாதம் வாங்கி - அழுத்திய காலைத் தூக்கி . பரிந்து - இரங்கி . ஆதியாயிடும் - தலைவனாயிருக்கும் .
சிற்பி