திருக்கடவூர்மயானம்


பண் :

பாடல் எண் : 1

குழைகொள் காதினர் கோவண ஆடையர்
உழையர் தாங்கட வூரின் மயானத்தார்
பழைய தம்மடி யார்செய்த பாவமும்
பிழையுந் தீர்ப்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் சங்கவெண்குழையணிந்த காதினர் ; கோவண ஆடையினர் ; அன்பு செய்யும் அடியார்கட்கு மிக்க அண்மையில் உள்ளவர் ; தம் பழைய அடியார்கள் செய்த பாவமும் பிழையும் தீர்ப்பவர் .

குறிப்புரை :

குழைகொள் காதினர் - குழையணிந்த காதினை உடையவர் . உழையர் - மானைக் கையின்கண் உடையவர் ; பக்கத்திருப்பவர் எனலுமாம் . பழையதம் அடியார் - வாழையடி வாழையாய்த் தொண்டுரிமை பூண்ட அடியவர் . பிழை - குற்றம் . பெருமானடிகள் - இறைவன் ; இத்தலத்து இறைவர் திருப்பெயராகவும் கூறுவர் .

பண் :

பாடல் எண் : 2

உன்னி வானவ ரோதிய சிந்தையில்
கன்னல் தேன்கடவூரின் மயானத்தார்
தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம்
பின்னை யென்னார் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , தம்மை உன்னித்தேவர்கள் ஓதும் போது அவர்சிந்தையில்கன்னல் போன்றும் தேன் போன்றும் இனிப்பவர் ; தம்மை நோக்கித் தொழுது எழும் அடியவர்கட்கெல்லாம் ` பிறகு அருள்செய்வோம் ` என்னாது அப்போதே அருளும் பெருங்கருணை உடையவர் .

குறிப்புரை :

உன்னி - சிந்தித்து . ஓதிய - புகழ்ந்த கடவூர் மயானத்தார் என்க . அல்லது உன்னி ஓதிய வானவர் சிந்தையில் என மாற்றிப் பொருள் கூறுக . கன்னல் - கரும்பு . பின்னை - பிறகு என்னாது ; உடனே அருள் வழங்குபவர் என்க . அன்றி வானவர் உன்னி ஓதிய மயானத்தார் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 3

சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவூர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , சூலம் ஏந்தியிருப்பவர் ; புலித்தோலை உடுத்திருப்பவர் ; ஆலம் உண்டு அமுதைப் பிறர்க்குத் தேக்கி அளிப்பவர் . காலனுக்கும் காலர் ; மாலையணிந்த மார்பினர் .

குறிப்புரை :

உடை ஆடை - இருபெயரொட்டு . ஆலம் - நஞ்சு . அமுதே மிக - அந்நஞ்சே அமுதமாக . தேக்குவர் - நிறைவிப்பர் . அன்றித்தாம் நஞ்சுண்டு அமரர்க்கு அமுதம் பெருகத் தருபவர் என்க . காலகாலர் - காலனுக்குக் காலனார் .

பண் :

பாடல் எண் : 4

இறைவ னாரிமை யோர்தொழு பைங்கழல்
மறவ னார்கட வூரின் மயானத்தார்
அறவ னாரடி யாரடி யார்தங்கள்
பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , தேவர்கள் தொழுகின்ற பைங்கழலை உடைய இறைவர் ; வீரம் உடையவர் ; அறமே வடிவானவர் ; அடியார்களின் பிறவி நோயைத் தீர்ப்பவர் .

குறிப்புரை :

பைங்கழல் - பைம்பொன் கழல் . மறவனார் - வலியர் . அறவனார் - அறவடிவினர் . இவற்றிற்கு மறக்கருணை செய்பவர் , அறக்கருணை செய்பவர் எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 5

கத்து காளி கதந்தணி வித்தவர்
மத்தர் தாங்கட வூரின் மயானத்தார்
ஒத்தொவ் வாதன செய்துழல் வாரொரு
பித்தர் காணும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் கத்துகின்ற காளியின் சினத்தைத் தணிவித்தவர் ; மதம் பொருந்தியவர் ( ஊமத்தமலரைச் சூடியவர் ) ஒத்தும் ஒவ்வாதும் செய்யும் செயல் பலவற்றைச் செய்து உழல்கின்ற பித்தர்போல்வர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

கத்து - ஆரவாரம் செய்த . கதம் - கோபம் . தணிவித்தவர் - நீக்கியவர் ; நடனத்தால் வென்றவர் . மத்தர் - உன்மத்தர் , அல்லது ஊமத்தை அணிந்தவர் . ஒத்தொவ்வாதன செய்யும் - உலகியலோடு பொருத்தமுள்ளனவாகவும் , பொருத்தமில்லாதனவாகவும் செய்யும் . பித்தர் - ஒருநெறிப்பட்ட செயல் இல்லாதவர் .

பண் :

பாடல் எண் : 6

எரிகொள் மேனி யிளம்பிறை வைத்தவர்
கரியர் தாங்கட வூரின் மயானத்தார்
அரிய ரண்டத்து ளோரயன் மாலுக்கும்
பெரியர் காணும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , சிவந்த தழல் வண்ணம் கொண்ட திருமேனியும் , இளம்பிறை வைத்த சடையும் உடையவர் ; அயிராவணம் என்ற ஆனையை உடையவர் ; அயன் , திருமால் முதலிய தேவர்கள் யாவருக்கும் காண்டற்கு அரியர் ; பெரியர் ; காண்பீர்களாக .

குறிப்புரை :

எரிகொள்மேனி - நெருப்பின் நிறங்கொண்ட சிவந்த மேனி . கரியர் - எல்லா உயிர்களுக்கும் சான்றாக நிற்பவர் , அகோர முகத்தினர் எனலுமாம் . அண்டத்துளோர் - வானுலகில் உள்ளவர் .

பண் :

பாடல் எண் : 7

அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை
கணங்கள் சேர்கட வூரின் மயானத்தார்
வணங்கு வாரிடர் தீர்ப்பர் மயக்குறும்
பிணங்கொள் காடர் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , உமை ஒருபாகம் உடையவர் ; ஆரணங்களாகிய நான்மறைகளின் தொகுதிகள் தொழுது சேரும் தகைமை உடையவர் ; தம்மை வணங்குவார்களது துன்பங்களைத் தீர்ப்பவர் ; மயக்கம் மிகுவிக்கும் பிணங்களைக் கொண்ட சுடுகாடே பெரும்பதியாக் கொண்டவர் .

குறிப்புரை :

அணங்கு - பார்வதி . ஆரண நான்மறை - ( இருபெயரொட்டு ) வேதங்களாகிய நான்மறை . கணங்கள் - அடியவர் கூட்டம் , மயக்குறும் - அறிவாற்றல் ஒடுங்கிய . பிணங்கொள்காடு - இடுகாடு . எல்லா உலகங்களும் அழிந்து உயிர்கள் மயங்கித் தம்முள் ஒடுங்கும் இடம் பிணங்கொள் காடு எனப்பட்டது .

பண் :

பாடல் எண் : 8

அரவு கையின ராதி புராணனார்
மரவு சேர்கட வூரின் மயானத்தார்
பரவு வாரிடர் தீர்ப்பர் பணிகொள்வர்
பிரமன் மாற்கும் பெருமா னடிகளே.

பொழிப்புரை :

கடவூர் மயானத்தாராகிய பெருமான் அடிகள் , அரவம் உடைய கையினர் ; ஆதியிற்றோன்றிய பழமையானவர் ; தம்மைப் பரவும் அடியார்களது இடர்களைத் தீர்ப்பவர் ; அவர்களைப் பணியும் கொள்பவர் ; பிரமன் , மாலுக்கும் பெரிய இயல்புடையவராவர் .

குறிப்புரை :

அரவு கையினார் - பாம்பைக் கங்கணமாக அணிந்த திருக்கைகளை உடையவர் . ஆதிபுராணனார் - எல்லாவற்றிற்கும் முதல்வராயும் , பழமையானவராயும் உள்ளவர் . மரவு - மராமரம் . பெருமான் - தலைவன் . * * * * * * * * * 9, 10 9, 10. * * * * * * * * * * * * *
சிற்பி