திருக்கழிப்பாலை


பண் :

பாடல் எண் : 1

வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்
எண்ணி நாமங்க ளேத்தி நிறைந்திலள்
கண்ணு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
அண்ண லேயறி வானிவள் தன்மையே. 

பொழிப்புரை :

கழிப்பாலை இறைவனின் நிறம் வடிவம் முதலியவற்றைச்சென்று நேரே கண்டிலள். அவன் திருநாமங்களை எண்ணினாளில்லை. காணாமலே காதல்கொண்டு பிதற்றும் இவள் தன்மையைப் பொழில் சூழ்ந்த கழிப்பாலை இறைவனே அறிவான்.

குறிப்புரை :

வண்ணம் - நிறம். வடிவு - உருவம். சென்று - கழிப் பாலைக்குச் சென்று. கண்டிலள் - நேரே காணவில்லை. காணாமலே காதல் கொண்டாள். எண்ணி - மனத்தில் கழிப்பாலை இறைவனையே நினைத்து. நாமங்கள் ஏத்தி - அவன் திருப்பெயர்களைப் பலகாலும் சொல்லித் தோத்திரித்து. நிறைந்திலள் - மனவமைதி கொள்ளாதவளா யிருந்தாள். அல்லது எண்ணுதலிலும் சொல்லுதலிலுமே மனவமைதி கொள்ளாதவளாயினாள். அவனைக் கூடுதற்கு விழைகிறாள் என்பது குறிப்பு.
கண் - இடம். உலாம் - பொருந்திய. கழிப்பாலைப் பெருமான்மேல் காதல் கொண்டு வருந்தும் ஒருத்தியை ஆற்றுவிக்கக் கருதும் செவிலி கூற்று.

பண் :

பாடல் எண் : 2

மருந்து வானவ ருய்யநஞ் சுண்டுகந்
திருந்த வன்கழிப் பாலையு ளெம்பிரான்
திருந்து சேவடி சிந்தையுள் வைத்திவள்
பரிந்து ரைக்கிலு மென்சொற் பழிக்குமே.

பொழிப்புரை :

தேவர்கள் அமிர்தத்தை உண்டு உய்யத் தான் நஞ்சினை உண்டு உகந்து இருப்பவனும் வலிய கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம்பெருமானுமாகிய இறைவனின் சேவடிகளைச் சிந்தையுள் வைத்து யான் பரிந்து உரைத்தாலும், இவள் என் சொல்லைப் பழிக்கின்றாள்.

குறிப்புரை :

மருந்து வானவர் - அமுதத்தை விரும்பிய தேவர். உய்ய உகந்து - பிழைக்கும்படி விரும்பி. நஞ்சு உண்டு அதனால் தீங்கின்றி மகிழ்ந்திருந்தவன் என்க. திருந்துசேவடி - திருத்தமுற்றுச் சிவந்திருக்கும் திருவடி. பரிந்துரைக்கிலும் - அவளது நிலைநோக்கி வருந்தி அதைத் தீர்க்கும்வழி கூறினும். என் சொல் - என் அறிவுரைகளை. பழிக்கும் - பழித்துக் கூறுவாள். \\\\\\\"மாதியன்று நீதிதான்சொல நீயெனக்கு ஆர் எனும்\\\\\\\" (தி.5 ப.45. பா.1) என்னும் பாடற் கருத்தோடு ஒப்பிடுக.

பண் :

பாடல் எண் : 3

மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள்
குழலின் நேர்மொழி கூறிய கேண்மினோ
அழக னேகழிப் பாலையெம் மண்ணலே
இகழ்வ தோவெனை யேன்றுகொ ளென்னுமே.

பொழிப்புரை :

குழல் இசை போன்ற மொழியினை உடைய இவள், மழலைச்சொல்லே கிளக்கும் இயல்பினள்; தெரியுமாறு சொற்களைப்பேசா இயல்பினளாய்க் கூறிய மொழிகளைக் கேட்பீர்களாக; \\\\\\\"அழகனே! கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் தலைவனே! என்னை இகழ்வதோ? ஏற்றுக்கொள்\\\\\\\" என்கின்றாள்.

குறிப்புரை :

மழலைதான்வர - பேசுங்கால் மழலை மொழியே வெளிவர. சொல் - செவ்விய சொற்களை. தெரிகின்றிலள் - பேசுதற்கு அறியாதவளாயுள்ளாள்; மிக இளையள் என்றது. குழலின் நேர்மொழி - வேய்ங்குழலை ஒத்து இன்பம்தரும் மொழியினை உடையாள்; அன்மொழித்தொகை. கூறிய - கூறிய சொற்களை. கேண்மினோ - கேளுங்கள். ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்வீராக. என்னும் - என்று சொல்லும். அவள் கூறியன பின்னிரண்டு வரிகள்.

பண் :

பாடல் எண் : 4

செய்ய மேனிவெண் ணீறணி வான்றனை
மைய லாகி மிதக்கில ளாரையும்
கைகொள் வெண்மழு வன்கழிப் பாலையெம்
ஐய னேயறி வானிவள் தன்மையே. 

பொழிப்புரை :

சிவந்த மேனியும், அதில் வெண்ணீறு அணியும் கோலமும் உடைய சிவபெருமானின்மேல் மையல் உடையவளாகி, இவள் ஆரையும் மதிக்கிலள்; கையிற் பிடித்த வெண்மழுவினனும், கழிப்பாலையில் உறைவானும் ஆகிய இறைவனே இவள் தன்மையை அறிவான்.

குறிப்புரை :

மையலாகி - மயக்கங்கொண்டவளாகி. ஆரையும் மதிக்கிலள் என்க. தாயார் சொல்லையும் ஏற்றுக்கொள்ளாதவள் என்பதாம். ஐயன் - அழகியன்.

பண் :

பாடல் எண் : 5

கருத்த னைக்கழிப் பாலையுள் மேவிய
ஒருத்த னைஉமை யாளொரு பங்கனை
அருத்தி யாற்சென்று கண்டிட வேண்டுமென்
றொருத்தி யாருள மூசல தாடுமே. 

பொழிப்புரை :

ஒருத்தியின் உள்ளம், கருத்தின்கண் இருப்பவனும், கழிப்பாலையுள் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவனும், உமையாளை ஒருபங்கில் உடையவனும் ஆகிய பெருமானை விருப்பத்தாற்சென்று கண்டிடவேண்டும் என்று ஊசலாடுகிறது.

குறிப்புரை :

கருத்தனை - தலைவனை. அருத்தி - மிக்கவிருப்பம். ஒருத்தி - ஒரு பெண். ஆர் உள்ளம் - நிறைந்த உள்ளம். ஊசலாடும் - அலையும்; மனம் தலைவனைக்காண முன்னே இழுக்கவும் பிறர் காணில் நகைப்பர் என்னும் நாணம் பின்னே இழுக்கவும் தடுமாறுதல்.

பண் :

பாடல் எண் : 6

கங்கை யைச்சடை வைத்து மலைமகள்
நங்கை யையுட னேவைத்த நாதனார்
திங்கள் சூடித் திருக்கழிப் பாலையான்
இங்கு வந்திடு மென்றிறு மாக்குமே. 

பொழிப்புரை :

இப்பெண், சடையிற் கங்கையை வைத்து மலை மகளாகிய நங்கையைத் தன்னொரு பங்கில் வைத்த இறைவனாகிய திருக்கழிப்பாலைப் பெருமான் இளம்பிறை சூடி இங்குத் திருவுலாப் போதற்கு எழுந்தருள்வான் என்று இறுமாப்பு அடைகின்றாள்.

குறிப்புரை :

மலைமகள் நங்கை - பார்வதி. இங்குவந்திடும் - என்னைத்தேடி இங்கே ஆசையோடு வருவான் என்று சொல்லிப் பெருமையடைவாள். இருவரையும் கொண்டவர் என்னையும் கொள்வர் என்பது குறிப்பு.

பண் :

பாடல் எண் : 7

ஐய னேயழ கேயன லேந்திய
கைய னேகறை சேர்தரு கண்டனே
மையு லாம்பொழில் சூழ்கழிப் பாலையெம்
ஐய னேவிதி யேயரு ளென்னுமே. 

பொழிப்புரை :

இவள், \\\\\\\"தலைவனே! அழகனே! தழலை ஏந்திய கரத்தவனே! திருநீலகண்டனே! மேகங்கள் உலாவுகின்ற பொழில் சூழ்ந்த கழிப்பாலையில் வீற்றிருக்கும் எம் அழகியவனே! நன்மை தீமைகளை விதிப்பவனே! அருள்வாயாக!\\\\\\\" என்று கூறுகின்றாள்.

குறிப்புரை :

மையுலாம் - அடர்ந்து செறிந்திருத்தலால் கருமை உலாவும். ஐயனே அருள் விதியே என மாற்றுக. விதியே - இது முறையேயாகும். அழகே அனலேந்திய - அழகிதாக அனலை ஏந்திய எனலுமாம்.

பண் :

பாடல் எண் : 8

பத்தர் கட்கமு தாய பரத்தினை
முத்த னைமுடி வொன்றிலா மூர்த்தியை
அத்த னையணி யார்கழிப் பாலையெம்
சித்த னைச்சென்று சேருமா செப்புமே. 

பொழிப்புரை :

இவள், அன்பர்கட்கு அமுதாயுள்ள மேலானவனை, முத்தியை அளிப்பவனை, முடிவு ஒன்று இல்லாத மூர்த்தியை, தலைவனை, அழகு நிரம்பிய கழிப்பாலையில் வீற்றிருப்பவனாகிய என் சித்தத்தவனைச் சென்று சேருமாறு ஒரு நெறி எனக்குச் செப்புவீர்களாக!\\\\\\\\\\\\\\\" என்கின்றாள்.

குறிப்புரை :

அமுதாய - அமுதம் போன்றவனாகிய. பரத்தினை - மேலானவனை. செப்பும் - சொல்வீராக. சித்தன் - எல்லாம் செய்ய வல்லவன்; சின்மயன் என்றுமாம்.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

பொன்செய் மாமுடி வாளரக் கன்தலை
அஞ்சு நான்குமொன் றும்மிறுத் தானவன்
என்செ யான்கழிப் பாலையு ளெம்பிரான்
துஞ்சும் போதும் துணையென லாகுமே. 

பொழிப்புரை :

பொன்னாற் செய்யப்பட்ட முடியணிந்தவனும், வாளுடையவனுமாகிய இராவணன் தலைகள் பத்தும் இறுத்தவன்! கழிப்பாலையுள் எம் தலைவன் என்ன செய்யாதவன்? ஆதலின் அப்பெருமானே தூங்கும்போதும் நமக்குத் துணை எனற்குப் பொருந்தியவன் ஆவன்.

குறிப்புரை :

பொன்செய் மாமுடி - பொன்னால் செய்த பெரிய கிரீடம். என்செயான் - என்ன செய்ய வல்லவன் அல்லன். துஞ்சும்போதும் - இறக்கும்போதும்; உறங்கும்போதும் எனலுமாம். துணை எனல் - துணை என்று சொல்லுதல். ஆகும் - பொருந்தும். அவத்தைகள் பத்தில் சாக்காடு என்னும் நிலையை அடைந்த இடத்தும் என்றபடி.
சிற்பி