திருநல்லம்


பண் :

பாடல் எண் : 1

கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்
இல்லத் தார்செய்ய லாவதெ னேழைகாள்
நல்லத் தான்நமை யாளுடை யான்கழல்
சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது ? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும் , நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல் , உம் துயர்கள் தீரும் .

குறிப்புரை :

தான் , அசை . நமனார் தமர் - எமதூதர் . கொல்ல வந்தக்கால் - உயிர்கொள்ள வந்த இடத்து . இல்லத்தார் - மனைவி மக்கள் முதலாயினார் . ஏழைகாள் - அறிவில் மெல்லியரே ; சொல்ல வல்லிரேல் என்க .

பண் :

பாடல் எண் : 2

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே.

பொழிப்புரை :

பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன் ; கேட்பீராக ; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை .

குறிப்புரை :

பொக்கம் - பொய் ; உலகியலைப் பற்றியன . தீர்வகை - தீரும்வழி . தகர்த்த - அழித்த . நண்ணுதல் - அடைதல் . நக்கன் - நிர்வாண கோலத்தினன் .

பண் :

பாடல் எண் : 3

பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டி லரன்நெறி யாவது
நணுக நாதன் நகர்திரு நல்லமே.

பொழிப்புரை :

பாவம் செய்தவர்களே ! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால் , அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால் , நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

பிணிகொள் - கட்டுதல் பொருந்திய அல்லது மனத்தைப் பிணித்தல் கொண்ட . வார்குழல் - நீண்ட கூந்தல் . காதலால் - ஆசையால் . பணிகள் - செயல்கள் . அணுக - நெருங்க . வேண்டின் - விரும்பினால் . அரன்நெறி - அரன் நெறியாவதை ; அணுக வேண்டில் என்க . நணுக - சென்றடையுங்கள் . தலைவனாகிய பெருமான் எழுந்தருளியுள்ள நல்லம் நணுகும் என முடிக்க .

பண் :

பாடல் எண் : 4

தமக்கு நல்லது தம்முயிர் போயினால்
இமைக்கும் போது மிராதிக் குரம்பைதான்
உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி
நமக்கு நல்லது நல்ல மடைவதே.

பொழிப்புரை :

தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது ; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது ; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும் .

குறிப்புரை :

தமக்கும் நல்லதாகிய ( இனிதாகிய ) உயிர்தாம் - மக்களை . இமைக்கும்போது - கண்ணிமைக்கும் நேரத்திற்குள் . இராது - நில்லாதாய் அழியும் . குரம்பை - உயிரின் வீடாகிய உடம்பு . உமைக்கு - பார்வதிக்கு . நல்லன் - நல்லவன் . பதி நல்லமடைவது நமக்கு நல்லது .

பண் :

பாடல் எண் : 5

உரை தளர்ந்துட லார்நடுங் காமுனம்
நரைவி டையுடை யானிடம் நல்லமே
பரவு மின்பணி மின்பணி வாரொடே
விரவு மின்விர வாரை விடுமினே.

பொழிப்புரை :

வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே , நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக ; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக ; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக .

குறிப்புரை :

உரை தளர்ந்து - பேச்சுக்குழறி . உடலார் , ஆர் விகுதி இழிவு குறித்தது . நடுங்காமுனம் - நடுக்கமடையுமுன்னே ; முதுமை யடையுமுன்பே என்க . நரைவிடை - வெள்ளிய எருது . புகழுமின் - புகழ் பாடித் தோத்திரியுங்கள் . பணிமின் - வணங்குங்கள் . பணிவாரொடே விரவுமின் - அடியார் இணக்கம் கொள்ளுங்கள் . விரவாரை - அடியரல்லாதாரை . விடுமின் - சேராது நீங்குங்கள் .

பண் :

பாடல் எண் : 6

அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும்
வல்ல வாறு சிவாய நமவென்று
நல்லம் மேவிய நாத னடிதொழ
வெல்ல வந்த வினைப்பகை வீடுமே.

பொழிப்புரை :

ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும் , திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ` சிவாயநம ` என்று தொழுதால் வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும் .

குறிப்புரை :

அல்லலாக - துன்பம் உண்டாக . வல்லவாறு - இயன்ற அளவு . வீடும் - அழியும் .

பண் :

பாடல் எண் : 7

மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும்
பேத மாகிப் பிரிவதன் முன்னமே
நாதன் மேவிய நல்லம் நகர்தொழப்
போது மின்னெழு மின்புக லாகுமே.

பொழிப்புரை :

மனைவியரும் , மக்களும் , சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே ; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக ; எழுவீர்களாக ; அப்பெருமானே புகலாவான் .

குறிப்புரை :

மாதரார் - மனைவியர் . பேதமாகி - வேறுபட்டவராய் . பிரிவதன் முன்னம் - நீங்குவதன் முன்பாக ; இறக்குமுன் என்றபடி . எழுமின் போதுமின் என்க - புறப்படுங்கள் செல்லுங்கள் என்பது பொருள் . புகலாகும் - அதுவே உயிர்க்கு அடைக்கலமாகும் இடமாகும் .

பண் :

பாடல் எண் : 8

வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர்
செம்மை யாய சிவகதி சேரலாம்
சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ
நம்மை யாளுடை யானிடம் நல்லமே.

பொழிப்புரை :

வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி , நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக ; தொழுதால் . வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம் .

குறிப்புரை :

வெம்மையான - கொடியதான . வினைக்கடல் - இருவினைப்பரப்பு . ` செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையுமன்றே ` ( தி .4. ப .76. பா .2) என்றார் முன்னும் .

பண் :

பாடல் எண் : 9

கால மான கழிவதன் முன்னமே
ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின்
மாலும் மாமல ரானொடு மாமறை
நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் , பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம் . ஆதலால் , பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே , இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக .

குறிப்புரை :

காலமான - நமது வாழ்நாட்காலமாயினவை . கழிவதன் முன்னம் - முடிவதற்கு முன்பே . ஏலுமாறு - பொருந்துமாறு . மாமறை நாலும் வல்லவர் - வேதங்கள் நான்கிலும் வல்லவராய அந்தணர் . கோன் - தலைவன் ; பிரமவிட்டுணுக்களுக்கும் அந்தணர்களுக்கும் தலைவன் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மல்லை மல்கிய தோளரக் கன்வலி
ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி
நல்ல நல்ல மெனும்பெயர் நாவினால்
சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே.

பொழிப்புரை :

வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால் சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர் .

குறிப்புரை :

மல்லை மல்கிய - வலிமை நிரம்பப் பெற்ற . ஒல்லையில் - விரைவில் . பதி - தலத்தினுடைய ; நல்லம் நல்லம் என்று சொல்பவர் தூய வீடுபேற்றை அடைவர் .
சிற்பி