திருத்தோணிபுரம்


பண் :

பாடல் எண் : 1

மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனும்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.

பொழிப்புரை :

சிவபெருமான்மேற் காதல் மிகுந்து , ` மனைக் கண் இரு ` என்று நான் கூறியபோது , ` எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை ?` என்று சொல்வதோடு , ` ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன் ` என்றும் கூறுகின்றனள் என் மகள் .

குறிப்புரை :

மாது இயன்று - பெண்மைக்குரிய இயல்பைமேற் கொண்டு எனலுமாம் . மனைக்கு இரு - வீட்டின்கண் இரு . என்றக் கால் - என்று சொல்லிய இடத்து . நீதிதான்சொல ( தான் அசை ) நீ யெனக்கு ஆர் - இனி நீ எனக்கு நீதி சொல்ல . என்ன உறவுடையாய் . எனும் - என்று சொல்வாள் . சோதிஆர்தரு - ஒளி பொருந்திய . தோணிபுரவர்க்கு - திருத்தோணிபுரத் திறைவர்க்கு . தாதி - பணி செய்பவள் . என்னும் - என்று சொல்வாள் . என் தையல் - என் பெண் . செவிலி கூற்று . அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்துத் தோணிபுரத் திறைவர்மேல் காதல் கொண்டாளொருத்தியின் நிலையை விரித்தது .

பண் :

பாடல் எண் : 2

நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட
மிக்க தையலை வெள்வளை கொள்வது
தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத்
தக்க தன்று தமது பெருமைக்கே.

பொழிப்புரை :

நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து ` பலி இடுக ` என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று .

குறிப்புரை :

நக்கம் - நிர்வாணமாய் . பலியிடு - பிச்சையிடு . இட்ட மிக்க - அன்புகொண்ட . இட்ட - பிச்சையிட்ட . மிக்க - மிக்க காமம் என்றலுமாம் . வெள்வளை - வெள்ளிய சங்கவளை . நீர் தொக்க வயல் - நீர் நிறைந்த வயல் . தக்கதன்று - தகுதியன்று ; தமது பெருமைக்குத் தக்கதன்று . பிச்சை கொடு என்று கேட்டு வளையலைக் கவர்ந்து செல்வது இறைவர்தம் பெருமைக்கு ஏற்றதன்று என்க .

பண் :

பாடல் எண் : 3

கெண்டை போல்நய னத்திம வான்மகள்
வண்டு வார்குழ லாளுட னாகவே
துண்ட வான்பிறைத் தோணி புரவரைக்
கண்டு காமுறுகின்றனள் கன்னியே.

பொழிப்புரை :

கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள் .

குறிப்புரை :

கெண்டை - சேல்கெண்டை என்னும் மீன் . நயனத்து - கண்களை உடைய . இமவான் மகள் - பார்வதி . வண்டுவார் குழல் - வண்டுகள் மொய்க்கும் மலர் நிறைந்த நீண்ட குழல் . உடனாக - சமேதராக . துண்டவான் பிறை - சிறிதாகிய வெள்ளிய பிறை . தோணி புரவரை - பார்வதியொடு கண்டும் என உம்மைவிரித்துப் பொருள் கொள்க .

பண் :

பாடல் எண் : 4

பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை
மேல ளாவது கண்டனள் விண்ணுறச்
சோலை யார்தரு தோணி புரவர்க்குச்
சால நல்லளா கின்றனள் தையலே.

பொழிப்புரை :

பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும் , விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப் பெண் .

குறிப்புரை :

பாலையாழ்மொழியாளவள் - பாலையாழ் என்னும் யாழிற் பிறக்கும் இசையை ஒத்த மொழியினை உடையாளாகிய கங்கை . தாழ் - தொங்கும் . சடைமேலளாவது - சடையின்மேல் உறைந் திருத்தலை . கண்டனள் கண்டும் என வருவிக்க . விண்ணுற - ஆகாயத்தை அடையுமாறு உயர்ந்த . சோலை ஆர்தரு - சோலைகள் பொருந்திய . சால நல்லள் - மிகவும் இனியள் , தையல் - பெண் ; பார்வதியோடன்றிச் சடையில் மற்றொருத்தியை மறைத்து வைத்திருப்பதைப் பார்த்தும் அவனைக் காதலிக்கின்றாளே ஈதென்ன வியப்பு எனச் செவிலி இரங்கிக் கூறுவது .

பண் :

பாடல் எண் : 5

பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப்
பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது
சுண்ண மாடிய தோணிபு ரத்துறை
அண்ண லாருக்குச் சால அழகிதே.

பொழிப்புரை :

சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ ?

குறிப்புரை :

பண்ணின் நேர்மொழியாள் - இசையினை ஒத்த மொழியையுடையவளாய் . பலியிட்ட - பிச்சையிட்ட , மால்கொடு - காதல் மயக்கம் கொள்ளச்செய்து . பெய்வளை - கையில் பெய்து வைத்த வளையல்களை . கொள்வது - கவர்வது . சுண்ணம் - திருநீறு . ஆடிய - பூசிய . சால அழகிது - மிகமிக அழகாயிருக்கிறது ! என்று புகழ்வது போல இகழ்தல் . திருநீறு பூசித் துறவுக்கோலம் கொண்டவர் இவ்வாறு செய்வது அழகன்று என்றபடி .

பண் :

பாடல் எண் : 6

முல்லை வெண்நகை மொய்குழ லாயுனக்
கல்ல னாவ தறிந்திலை நீகனித்
தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே
நல்லை யாயிடு கின்றனை நங்கையே.

பொழிப்புரை :

முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் , வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே ! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை ; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை .

குறிப்புரை :

மொய்குழலாய் - செறிந்தகூந்தலை உடையவளே ! அல்லனாவது - உன்னை ஏற்றுக்கொள்ளாது அயலானாயிருப்பதை . அறிந்திலை - அறியவில்லை . கனித்தொல்லையார் பொழில் - கனிகளோடு கூடிய சோலை ; தொல்லைத் தோணிபுரம் என்க . நல்லையாயிடுகின்றனை - நல்லவளாய் அவன்மேல் அன்புகொண்டு ஒழுகு கின்றாய் .

பண் :

பாடல் எண் : 7

ஒன்று தானறி யாருல கத்தவர்
நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர்
துன்று வார்பொழில் தோணி புரவர்தம்
கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே.

பொழிப்புரை :

தலைவிக்குற்ற நோயின் காரணம் வேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார் ; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள் ; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும் .

குறிப்புரை :

உலகத்தவர் - உலகில் உள்ள மக்கள் . ஒன்று தான் அறியார் - நிகழ்ந்ததொன்றையும் அறியமாட்டார்கள் . நின்று சொல்லி - காதல்மயக்கம் கொண்ட அப்பெண்ணிடம் சென்று நின்று அறிவுரை சொல்லி . நிகழ்ந்த நினைப்பிலர் - அவளுக்கு எதனால் இது நிகழ்ந்தது என்ற நினைப்பிலராயினர் . அவர் சூட்டச் சூடிக் கொண்டு அவர்க்கு மனைவியாகும் காமக் குறிப்பால் அங்ஙனம் ஒழுகுகின்றாள் என் மகள் . இஃது அறியாதவராய் அறிவுரை சொல்லி நிற்கின்றனரே அவர் ஒன்றுமறியாதவர் போலும் எனச் செவிலி உலகவரை நோக்கி இரங்கியது .

பண் :

பாடல் எண் : 8

உறவு பேய்க்கண முண்பது வெண்தலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே.

பொழிப்புரை :

உறவு பேய்க்கூட்டங்கள் ; உண்பதோ வெண் தலையில் ; வாழ்வதோ சுடுகாட்டில் ; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி ; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள் ?

குறிப்புரை :

உறவு பேய்க்கணம் - தமக்கு உறவுடையவான பேய்க் கூட்டங்கள் . உண்பது வெண்தலை - உண்ணும் பாத்திரம் வெள்ளிய மண்டையோடு . உறைவது ஈமம் - தங்குமிடம் இடுகாடு . இவை மட்டுமல்ல . அவர் முன்பே மணமானவர் என்பதை அறிவிப்பது . உடலிலோர் பெண்கொடி என்பது . பெண்கொடி - பார்வதி . துறைகளார் - கடல்துறைகள் பொருந்திய . இவள் எதைப் பெருமையாக அவனிடம் கண்டு அவன்மேல் காதல்கொள்கிறாள் என இரங்கிக் கூறினாள் செவிலி .

பண் :

பாடல் எண் : 9

மாக யானை மருப்பேர் முலையினர்
போக யானு மவள்புக்க தேபுகத்
தோகை சேர்தரு தோணி புரவர்க்கே
ஆக யானு மவர்க்கினி யாளதே.

பொழிப்புரை :

மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன் .

குறிப்புரை :

மாகம் - மேகம் ; மேகம்போன்ற கரிய யானை என இயைக்க . மருப்பேர்முலை - தந்தங்களை ஒத்த தனங்கள் . போக - பல பெண்களும் காதலித்துப் பின்செல்ல . யானும் - தோழியாகிய யானும் . அவள் - தலைவி . புக்கதேபுக - செல்லும் வழியிலேயே செல்லுதலால் . யானும் - அவர்க்கு இனி ஆளதே ஆக . நானும் அப்பெருமானழகில் ஈடுபட்டதால் அடிமையேன் ஆயினேன் என்க .

பண் :

பாடல் எண் : 10

இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி
கட்டம் பேசிய காரரக் கன்றனைத்
துட்ட டக்கியதோணி புரத்துறை
அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே.

பொழிப்புரை :

என் பெண்கொடியாகிய மகள் , தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள் .

குறிப்புரை :

இட்டமாயின - தனக்கு விருப்பமானவற்றையே . கட்டம் - வீண் வார்த்தைகளாகிய செருக்குமொழி . காரரக்கன் - கரிய நிறம் பொருந்திய அரக்கன் . துட்டடக்கிய - துட்டத்தை அடக்கிய . அட்டமூர்த்திக்கு - எட்டு வடிவமாய் இருக்கின்றவனுக்கு . அன்பதுவாகி - அன்புடையவளாகி .
சிற்பி