திருப்புகலூர்


பண் :

பாடல் எண் : 1

துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.

பொழிப்புரை :

கோவண ஆடையையும் , வெண்ணீற்றுப் பொடி யணிந்த மேனியையும் , பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே ! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர் ?

குறிப்புரை :

துன்னம் - தைக்கப்பட்டதாகிய கோவணம் . சுண்ண வெண்ணீறு - திருவெண்ணீற்றுப்பொடி . பொன்நக்கு அன்ன சடை - பொன்னொளி விளங்கும் சடை . மின்நக்கு அன்ன - மின்னல் விளங் கினாற் போன்ற ஒளியை உடைய . என்னுக்கோ - எதற்கோ . உடன் வைத்திருப்பது - பகையாயினவற்றை ஒன்றாய் வைத்திருப்பது .

பண் :

பாடல் எண் : 2

இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே.

பொழிப்புரை :

இப்பெண் , நெட்டுயிர்க்கும் பாம்பையும் , அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும் , நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள் .

குறிப்புரை :

இரைக்கும் - சீறும் அல்லது பெருமூச்சு விடும் . எறிதரு - அப்பாம்பினால் பகைக்கப்படும் , நுண்ணிய - மெல்லிய . புரைப் பிலாத - குற்றமில்லாத . உரைக்குமா சொல்லி - உரைக்கும் இலக்கணம் எப்படியோ அப்படியே சொல்லி ; பிறரை உரைக்கும்படி சொல்லி எனலும் ஆம் , ஒள்வளை சோரும் - ஒள்ளிய வளையல்களைக் கழல விடுவாள் .

பண் :

பாடல் எண் : 3

ஊச லாம்அர வல்குலென் சோர்குழல்
ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர்
ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று
பூசல் நாமிடு தும்புக லூரர்க்கே.

பொழிப்புரை :

அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர் . ஆதலால் , ` ஓ , மகளே ! சொல்வாயாக ! முறையோ ` என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக .

குறிப்புரை :

ஊசலாம் - மனம் இங்குமங்கும் ஊஞ்சல்போல அலையலாகும்படி அல்லது ஊஞ்சல்போல இங்குமங்கும் எங்கும் அசைந்தாடும் பாம்பு ; அல்லது சோர்குழல் ஊசலாம் என்க . அரவல்குல் - பாம்பின் படம்புரையும் அல்குல் . சோர்குழல் - அவிழ்ந்து விழும் கூந்தலினை உடைய என் மகள் . ஏசலாம்பழி - ஊரார் ஏசுதலாகின்ற பழியை . தந்து எழிலைக் கவர்ந்தார் . ஓ சொலாய் - ( மகளே நிகழ்ந்தது யாது ?) முறையோ சொல்வாயாக . புகலூர் இறைவர்க்கு முறையோ என்று பூசல் நாமிடுதும் - புகலூர் இறைவரிடத்துச் சென்று பெருமானே நீ செய்தது நீதியோ என்று ஆரவாரச் சண்டையிடுவோம் . இது செவிலி அல்லது தோழி கூற்று .

பண் :

பாடல் எண் : 4

மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத்
தன்னை நேரொப் பிலாத தலைவனைப்
புன்னைக் கானற் பொழிற்புக லூரனை
என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே.

பொழிப்புரை :

மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும் , தன்னை நிகர்க்குமொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன் .

குறிப்புரை :

மின்னின் - மின்னலினை . நேர் - ஒத்த ; இடையாளாகிய உமை என்க . பங்கன் - பக்கத்தே உடையவன் . தன்னை நேர் ஒப்பிலாத தலைவனை - தன்னை வேறு யாரும் ஒவ்வாத தலைமை யுடையோனை . ` மற்றாரும் தன்னொப் பாரில்லாதானை `. புன்னைக் கானல் - புன்னைமரச்சோலை . என்னுளாக - என் மனத்துள்ளாக .

பண் :

பாடல் எண் : 5

விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.

பொழிப்புரை :

விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை , நாமங்கள் கூறியும் , திருவைந்தெழுத்தால் தியானித்தும் , கண்ணினாற் கழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிருக்கும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம் .

குறிப்புரை :

விண்ணினார்மதி - வானத்திலே பொருந்திய மதி . நாமங்கள் எண்ணி - அவனது திருப்பெயர்களை எண்ணி . எழுத்தஞ்சும் ஓதி - திருவைந்தெழுத்துக்களை ஓதி . கண்ணினால் - கண்களினால் . கழல் - திருவடி . காண்பிடம் - பெருமானைக் காணுமிடம் . எது எனில் - எதுஎன்றால் . புண்ணியனாய பெருமான் எழுந்தருளியுள்ள புகலூரும் என் மனமுமே ஆகும் . புறக்கண்களால் புகலூரிலும் , அகக்கண்களால் நெஞ்சிலும் காணலாம் . சாதனம் நாமங்களை ஓதி எழுத்தஞ்சும் எண்ணுதல் .

பண் :

பாடல் எண் : 6

அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு
பண்டு நான்மறை யோதிய பாடலன்
தொண்ட ராகித் தொழுது மதிப்பவர்
புண்ட ரீகத்து ளார்புக லூரரே.

பொழிப்புரை :

புகலூர்த் தலத்து இறைவர் , தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர் ; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர் ; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர் .

குறிப்புரை :

அண்டவாணர் - தேவர் . பாடலன் - பெருமை யுடையவன் . அல்லது பாடலைப் பாடுபவன் என்க . மதிப்பவர் - தியானிப்பவர் . புண்டரீகம் - நெஞ்சக்கமலம் .

பண் :

பாடல் எண் : 7

தத்து வந்தலை கண்டறி வாரிலைத்
தத்து வந்தலை கண்டவர் கண்டிலர்
தத்து வந்தலை நின்றவர்க் கல்லது
தத்து வனலன் தண்புக லூரனே.

பொழிப்புரை :

தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர் ; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர் ; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான் .

குறிப்புரை :

தத்துவம் தலைக்கண்டு அறிவாரிலை - முப்பத்தாறு தத்துவங்களையும் உள்ளவாறு ஆராய்ந்து அதனை அறிபவர்கள் இல்லை . தத்துவந் தலை கண்டவர் - தத்துவங்களை ஆராய்ந்தவர் . கண்டிலர் - தத்துவாதீதனாகிய இறைவனை அறியாதுபோயினர் . தத்துவம் தலைநின்றவர்க்கல்லது - தத்துவங்களை ஆராய்ந்து அவற்றைக் கடந்து நிற்பவர்க்கல்லாமல் . தத்துவனலன் - அவன் மெய்ப்பொருளல்லன் . தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பெருமானைக் காணுபவர் இல்லை . அப்படி ஆராய்ச்சியில் ஈடுபட்டார் பலர் தத்துவ அளவிலே நின்று தத்துவாதீதனாயிருக்கும் பெருமானை அறியாதவராயினர் . தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்க்கல்லது அவன் உண்மையான வனல்லன் என்க . முன்னைய மூன்றும் முப்பத்தாறு தத்துவங்களைக் குறிக்கும் . நான்காவது வரியில் தத்துவம் - மெய்ப்பொருள் .

பண் :

பாடல் எண் : 8

பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.

பொழிப்புரை :

புகலூர்த்தலத்து இறைவர் , பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர் ; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர் .

குறிப்புரை :

பெருங்கை - நீண்டு புரளும் துதிக்கை . பிளிறி - அலறி . கருங்கையானை - கரிய கையையுடைய யானை . பெருங்கை யானை கருங்கையானை எனத் தனித்தனி கூட்டுக . களிற்றியானை - இருபெயரொட்டு . உரி - தோல் . வரும் - நம்மை அடரவரும் , கை யானை - கையினையுடைய யானை ; அல்லது நம்மைத் துன்புறுத்தும் மேற் கோளை யுடையதாய் வரும் யானைகள் ; அவை ஐம்பொறிகள் . மத களிறு அஞ்சு - ஐம்பொறிகள் . பொருங்கையான் - போரிட்டழிக்கும் கையை உடையவன் . கை - மேற்கோள் எனினுமாம் . இதற்கு ஆனை - ஆனை போன்றவன் என்க .

பண் :

பாடல் எண் : 9

பொன்னொத் தனிறத் தானும் பொருகடல்
தன்னொத் தநிறத் தானு மறிகிலாப்
புன்னைத் தாது பொழிற்புக லூரரை
என்னத் தாவென என்னிடர் தீருமே.

பொழிப்புரை :

பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும் , அலைவீசும் கடலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப் படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை ` என் தந்தையே !` என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும் .

குறிப்புரை :

பொன்னொத்த நிறத்தான் - பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமன் . பொரு - அலைகளால் சண்டையிடும் . கடல் தன்னொத்த நிறத்தான் - கடல்வண்ணனாகிய திருமால் . அறிகிலா - அறிய முடியாத புகலூர் என்க . புன்னைத்தாது பொழில் . புன்னை மலரின் மகரந்தம் செறிந்த சோலை ; புன்னைமலர்ச்சோலை . என்னத்தா என - என் தந்தையே என்று கூற . தீரும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 10

மத்த னாய்மதி யாது மலைதனை
எத்தி னான்திரள் தோண்முடி பத்திற
ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும்
பொத்தி னான்புக லூரைத் தொழுமினே.

பொழிப்புரை :

மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும் , முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும் , தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் ஏத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக .

குறிப்புரை :

மத்தனாய் - உன்மத்தனாய் . எத்தினான் - எற்றினான் என்பதன் திரிபு . தூக்கி அகற்ற எண்ணியவன் . இற - நெரிய . விரலால் ஒத்தினான் - கால்விரலை ஊன்றினான் . ஒற்றினான் ஒத்தினான் என்றாயது . ஒருங்கு ஏத்தலும் - பின்னர் இறுமாப்பொழிந்து ஒருசேர வணங்குதலும் . பொத்தினான் - காப்பாற்றினான் .
சிற்பி