திருவெண்காடு


பண் :

பாடல் எண் : 1

பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

அறியாமையை உடைய நெஞ்சமே ! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற , நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி , கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும் , சென்னியின்கண் பெண் , பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .

குறிப்புரை :

பண்காட்டிப் பாடிய - இசையைத் தோற்றுவித்துப் புகழ்ப் பாடலைப் பாடுகின்றவர்களாகிய . ( பாடி - படித்தல் ). கொண்டு சிவவேடமணிந்த தன் அடியவர்கட்கு எனவும் ; படி - பூமி என்று கொண்டு நிலஉலகில் உள்ள அடியவர்களுக்காக எனவும் கூறலாம் . கண் - உண்மையறியும் அறிவுக் கண் . கண்ணில் நின்ற மணி - அறிவுக்கறிவு . பெண் - பார்வதி . காட்டி - இடப்பாகத்தில் கொண்டு என்னும் பொருளது . உய் - உய்வாயாக .

பண் :

பாடல் எண் : 2

கொள்ளி வெந்தழல் வீசிநின் றாடுவார்
ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார்
வெள்ளி யன்கரி யன்பசு வேறிய
தெள்ளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும் , உமை பங்கரும் , வெள்ளிய திருவெண்ணீற்றினரும் , அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும் , விடையேறிய தெளிவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .

குறிப்புரை :

கொள்ளி வெந்தழல் - கொள்ளிக் கட்டையில் பற்றிய வெவ்விய நெருப்பு . வீசி - சுழற்றி ஆடுவார் ; அனலேந்தியாடுவார் என்பதாம் . ஒளி பொருந்திய கணம் - பூதகணங்கள் . வெள்ளியன் - திருநீற்றுப்பூச்சால் வெண்மை நிறமுடையவன் . கரியன் - அகோர முகத்தை உடையவன் . பசு - இங்கு எருது . தெள்ளியன் - தெளிந்த அறிவினன் .

பண் :

பாடல் எண் : 3

ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே
வானோக் கும்வழி யாவது நின்மினோ
தானோக் குந்தன் னடியவர் நாவினில்
தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக ! உலகீர் ! உடல் நோக்கிய சிற்றின்பங்களைவிரும்பி உழலாது , வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக .

குறிப்புரை :

ஊனோக்கும் இன்பம் - உடலைக் கருதிய இன்பங்கள் . வேண்டி - விரும்பி . உழலாதே - வருந்தாதே . வானோக்கும் வழி - பேரின்பவீட்டைக் கருதும்வழி ; வழியாவதில் நின்மின் என்க . தானோக்கும் - தன்னால் நோக்கப்படுகின்ற என்றாயது . தேன் நோக்கும் - தேனாயுள்ள பெருமானால் விரும்பப்படுகின்ற .

பண் :

பாடல் எண் : 4

பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! பருத்த வெள்ளிய தந்தங்களையும் , பசுங்கண்களையும் , மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும் , பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக .

குறிப்புரை :

பரு - பருத்த . வேழத்தின் உருவங்காட்டி நின்றான் - ( யானைத் தோலைப் போர்த்து ) யானையின் உருவந்தோன்ற நின்றவன் . பெருவெண்காடு - சங்காரகாலச் சுடலை . வெள்ளிய சாம்பற்காடாக இருத்தலின் பெருவெண்காடு என்றார் .

பண் :

பாடல் எண் : 5

பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்
உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்
கற்ற வன்கய வர்புர மோரம்பால்
செற்ற வன்திரு வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! உயிர்களாற் பற்றத்தக்கவனும் , கங்கை , பாம்பு , பிறையுடன் உற்றவனும் சடையினனும் , உயர்ஞானங்கள் கற்றவனும் , கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக .

குறிப்புரை :

பற்றவன் - எப்பொருட்கும் சார்பாயிருப்பவன் . கயவர் - அசுரர் . உயர் ஞானங்கள் கற்றவன் - கலைஞானங்களை இயல்பாயுணர்ந்தவன் .

பண் :

பாடல் எண் : 6

கூடி னானுமை யாளொரு பாகமாய்
வேட னாய்விச யற்கருள் செய்தவன்
சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண்
காட னாரடி யேயடை நெஞ்சமே.

பொழிப்புரை :

நெஞ்சமே ! உமையாளை ஒருபாகமாய்க் கூடிய வரும் , விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும் , உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக .

குறிப்புரை :

உமையாளொரு பாகமாய்க் கூடினான் என்க . விசயன் - அருச்சுனன் . சேடனார் - பெருமையுடையவர் . சிந்தை மேய வெண் காடனார் - சிந்தையின்கண் எழுந்தருளிய வெண்காடனார் .

பண் :

பாடல் எண் : 7

தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன்
புரித்த புன்சடை யான்கய வர்புரம்
எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம்
விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! கங்கை , பாம்பு , மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும் , முறுக்குண்ட புன்சடையுடையவனும் , கீழவர் புரங்களை எரித்தவனும் , நான்கு மறைகளையும் , ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

கங்கை , பாம்பு இவற்றை மதியுடன் தரித்தவன் என்க . புரிந்த - கட்டிய அல்லது முறுக்கிய . புன்சடை - மெல்லிய சடை .

பண் :

பாடல் எண் : 8

பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பட்டமும் , இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் ` உயர்ந்தவனே ! ஆதியே !` என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும் , ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

பட்டம் - நெற்றியிலணியும் அணிகலன் . இண்டை - கண்ணி . சிட்டன் - மேலானவன் . ஆதி - தலைவன் . சிந்தை செய்ய - மனத்தால் தியானிக்க .

பண் :

பாடல் எண் : 9

ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செயும்
கான வேடன்றன் வெண்கா டடைநெஞ்சே.

பொழிப்புரை :

நெஞ்சே ! பன்றி வேடம் கொண்ட திருமாலும் , பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும் , அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக .

குறிப்புரை :

ஏன வேடத்தினான் - பன்றியாய் அவதரித்த திருமால் ; தான் அவ்வேடம் எனப் பிரிக்க . தான் - இறைவன் . அவ்வேடம் - அனலாகிய உருவம் . தாழ்ந்து - உருவமாறி . ஞானவேடன் - ஞானமே வடிவமாயிருப்பவன் . கான வேடன் - காட்டு வேடன் .

பண் :

பாடல் எண் : 10

பாலை யாடுவர் பன்மறை யோதுவர்
சேலை யாடிய கண்ணுமை பங்கனார்
வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு
மாலை யாவது மாண்டவ ரங்கமே.

பொழிப்புரை :

பாலைநிலத்தில் ஆடுபவரும் , பல மறைகளை ஓதுபவரும் , சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும் , கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இறந்தவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது .

குறிப்புரை :

பாலை ஆடுவார் - பால் அபிடேகம் கொள்பவர் . சேலையாடியகண் - மீனைப்போன்ற கண்கள் . வேலை - கடல் . ஆர் - பொருந்திய . மாலையாவது - மாலையாகப் பயன்படுவது . மாண்டவர் அங்கம் - இறந்தவர் எலும்புகளே .

பண் :

பாடல் எண் : 11

இராவ ணஞ்செய மாமதி பற்றவை
இராவ ணம்முடை யான்றனை யுள்குமின்
இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த
இராவ ணன்திரு வெண்கா டடைமினே.

பொழிப்புரை :

அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின் . இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக .

குறிப்புரை :

மாமதிபற்று இராவணம் செய - அறிவைப் பற்று இல்லாதபடி செய்தற்பொருட்டு . உள்குமின் எனக் கூட்டுக . ஐராவணம் என்பது ஐயிராவணம் என வந்தது . நான்காம் அடியில் இராவணன் என்பது கரிய நிறமுடையவன் ; அகோர முகத்தினர் எனப் பொருள் தரும் . உமையை ஒருபாகத்துடைமைபற்றி இவ்வாறு கூறினார் .
சிற்பி