திருக்கோளிலி


பண் :

பாடல் எண் : 1

மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்
தொக்க கையினன் செய்யதோர் சோதியன்
கொக்க மர்பொழில் சூழ்தரு கோளிலி
நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

பொழிப்புரை :

மையணிந்த கண்களையுடைய உமையை ஒருபங்கில் உடையவனும் , மானும் மழுவும் பொருந்திய கைகளை உடையவனும் , செவ்விதாகிய ஒப்பற்ற ஒளி வடிவினனும் , மாமரங்கள் பொருந்திய பொழில் சூழ்ந்த திருக்கோளிலியில் உறையும் திகம்பரனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் நாசமாம் .

குறிப்புரை :

மைக்கொள் கண் - கருமை நிறத்தைக்கொண்ட கண்கள் . மையுண்ட கண் எனினும் பொருந்தும் . மான் , மழு இவை பொருந்திய கையையுடையன் என்க . செய்யதோர் சோதியன் - சிவந்த பேரொளியாகிய வடிவினன் . கொக்கு அமர் - கொக்குக்கள் தங்கிய மாமரம் எனினும் அமையும் . நக்கன் - நிருவாண கோலத்தை உடையவன் . நாசம் - நாசம் ஆம் ; அழியும் .

பண் :

பாடல் எண் : 2

முத்தி னைமுத லாகிய மூர்த்தியை
வித்தி னைவிளை வாய விகிர்தனைக்
கொத்த லர்பொழில் சூழ்தரு கோளிலி
அத்த னைத்தொழ நீங்கும்நம் அல்லலே.

பொழிப்புரை :

முத்தினைப் போல்வானும் , உலக முதலாக உள்ள திருவுரு உடையோனும் , வித்தும் விளைவும் ஆகிய மேலானவனும் , பூங்கொத்துக்களை உடைய பொழில்கள் சூழ்ந்த கோளிலியில் உறையும் அத்தனும் ஆகிய பெருமானைத் தொழ நம் அல்லல்கள் நீங்கும் .

குறிப்புரை :

முத்தினை - முத்துப்போன்றவனை . முதலாகிய - முதற் பொருளாகிய . வித்தினை - உலகிற்கு மூலகாரணனாய் இருப்பவனை . விளைவாய விகிர்தனை - உலகில் எல்லாமாய் விரிந்து விளைந்து நிற்பவனை . விகிர்தன் - ஒன்றோடொன்று ஒவ்வாத போக , யோக , கோர வடிவங்களை உடையவன் . அல்லல் - துன்பம் . முன் பாட்டில் வினையாகிய காரணம் அழியும் என்றார் . இங்கு அதன் காரியமாகிய துன்பம் கெடும் என்கிறார் .

பண் :

பாடல் எண் : 3

வெண்டி ரைப்பர வைவிட முண்டதோர்
கண்ட னைக்கலந் தார்தமக் கன்பனைக்
கொண்ட லம்பொழிற் கோளிலி மேவிய
அண்ட னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

வெள்ளிய அலைகளை உடைய கடல் விடம் உண்ட ஒப்பற்ற திருநீலகண்டனும் , நெஞ்சு கலந்து தொழுமவர்க்கு அன்பே வடிவாய் அருள்புரிபவனும் , மேகங்கள் பொருந்துகின்ற அழகிய சோலைகளை உடைய கோளிலியில் விரும்பி உறையும் தேவனுமாகிய பெருமானைத் தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

வெண்டிரைப்பரவை - வெள்ளிய அலைகளோடு கூடிய கடல் . கண்டனை - கழுத்தை உடையவனை . கலந்தார் தமக்கு - அன்பால் தம்மோடு மனமொத்தவர்க்கு (` கலந்த அன்பாகி ` தி .8 திருவாசகம் ). கொண்டலம் பொழில் - மேகங்கள் சூழ்ந்த பொழில் . அண்டனை - எல்லா உலகமுமாயவனை .

பண் :

பாடல் எண் : 4

பலவும் வல்வினை பாறும் பரிசினால்
உலவுங் கங்கையுந் திங்களு மொண்சடை
குலவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
நிலவி னான்றனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

வலிய வினைகள் பலவும் கெடும் தன்மையினால் , கங்கையும் மதியும் உலவும் ஒள்ளிய சடை பொருந்தியவனும் , குளிரும் பொழில்களை உடைய கோளிலியில் நிலவியவனுமாகிய பெருமானை நாடோறும் நினைந்து தொழுவீராக ! ` தொழுவார்க்கன்றி வினை நீங்கா ` என்பது கருத்து .

குறிப்புரை :

வல்வினை பலவும் என மாறுக . பாறும் - அழியும் . பரிசினால் - தன்மையினால் . உலவும் - பரவும் . குலவினான் - விளங்க அணிந்தவன் . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 5

அல்ல லாயின தீரு மழகிய
முல்லை வெண்முறு வல்லுமை யஞ்சவே
கொல்லை யானை யுரித்தவன் கோளிலிச்
செல்வன் சேவடி சென்று தொழுமினே.

பொழிப்புரை :

அழகிய முல்லையைப் போன்ற வெள்ளிய முறுவலை உடைய உமாதேவியார் அஞ்சுமாறு குறிஞ்சியில் வாழும் யானையை உரித்தவனும் , கோளிலியில் உறையும் திருவருட் செல்வனுமாகிய பெருமான் சேவடிகளைச் சென்று தொழுவீர்களாக ; உம் அல்லலாயின அனைத்தும் தீரும் . ` அல்லல் நீங்கும் என்பதற்குக் கயாசுரனை அழித்துத் தேவர்களைக் காத்தமை சான்று ` என்றபடி .

குறிப்புரை :

அல்லல் - துன்பம் . முல்லை வெண்முறுவல் - முல்லை போலும் வெள்ளிய பற்கள் . கொல்லை - தினைப்புனம் . குறிஞ்சிக் கருப்பொருள் என்றபடி . இஃது இன அடை . யானை - கயாசுரன் . வீடுமே , ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 6

ஆவின் பால்கண் டளவி லருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.

பொழிப்புரை :

பசுவின் பாலை முன் உண்டமையால் , மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப்பால் வேண்டலும் , ` செல்க ` என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில் களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும் . ` பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ` குறித்தபடி .

குறிப்புரை :

ஆவின்பால் கண்டு - காமதேனுவின் பாலை முன் உண்டு அறிந்தமையால் , அளவில் அருந்தவப் பாலன் - அளவற்ற அரிய தவத்தை உடைய குழந்தை உபமன்யு . வேண்டலும் - விரும்பி அழுதலும் . செல்லென்று - உபமன்யுவை நோக்கிச் செல்வாயாக என்று . கூவினான் - அழைத்து ஏவல் செய்தான் . வீடும் - அழியும் . உபமன்யு தாய்மாமன் வசிட்டனிடத்து வளர்ந்தபோது உண்டது காமதேநுவின்பால் , தந்தை வியாக்கிர பாதரிடம் வந்தபோது அது கிடைக்காமையால் அது வேண்டி அழுதார் . ` பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான் ` ( தி .9 திருப்பல்லாண்டு -9).

பண் :

பாடல் எண் : 7

சீர்த்த நன்மனை யாளுஞ் சிறுவரும்
ஆர்த்த சுற்றமும் பற்றிலை யாதலால்
கூத்த னாருறை யுந்திருக் கோளிலி
ஏத்தி நீர்தொழு மின்னிடர் தீருமே.

பொழிப்புரை :

பெருமைமிக்க நல்ல மனைவியும் , பெற்ற பிள்ளைகளும் , பொருந்திய சுற்றத்தாரும் நிலைத்த சார்பு ஆதல் இல்லையாதலால் ஆடும் பெருமான் உறையும் திருக்கோளிலியை ஏத்தி , நீர் தொழுவீராக ; நும் இடர்கள் தீரும் . ` இறைவனே இருமைக்கும் நீங்காத்துணை ` என்றபடி .

குறிப்புரை :

சீர்த்த - சிறப்பின் மிக்க . ஆர்த்த - நம்மோடு ஒன்றாய்ப் பிணித்த . ஆரவாரம் செய்யும் எனினும் அமையும் . பற்றிலை - பற்றுக்கோடாதல் இல்லை . இடர் - துன்பம் . மனைவி , மக்கள் , சுற்றம் என்போர் உயிர்த்துணையாகார் . உயிர்க்கும் உடலுக்கும் நிலைத்த துணைவன் சிவபிரானே என்றபடி . தீருமே - ஏகாரம் தேற்றம் .

பண் :

பாடல் எண் : 8

மால தாகி மயங்கும் மனிதர்காள்
காலம் வந்து கடைமுடி யாமுனம்
கோல வார்பொழிற் கோளிலி மேவிய
நீல கண்டனை நின்று நினைமினே.

பொழிப்புரை :

மயக்கத்தை உடையவராகி மயங்கும் மனிதர்களே ! உமக்குரிய காலம் வந்து இறுதியுறுவதற்கு முன்னம் , அழகுடைய நீண்ட பொழில்களை உடைய கோளிலியில் விரும்பி உறைகின்ற நீல கண்டனை ஒன்றி நின்று நினைப்பீராக ! ` யாக்கை நிலையாமையைக் கருதிப் பேரருளாளனை நினைந்து உய்க !` என்றபடி .

குறிப்புரை :

மாலதாகி - உலகப் பொருள்களில் மயக்கத்தைப் பொருந்தினவராகி . காலம் வந்து கடைமுடியாமுனம் - இறத்தற்கு உரிய காலம் வந்து இறுதியாக உம் வாழ்வை முடித்தற்கு முன் . கோலம் - அழகிய . வார் - நீண்ட .

பண் :

பாடல் எண் : 9

கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது
தேடி நீர்திரி யாதே சிவகதி
கூட லாந்திருக் கோளிலி யீசனைப்
பாடு மின்னிர வோடு பகலுமே.

பொழிப்புரை :

கேடுகள் சூழ்ந்து மூடிக்கிடந்து துயர் என்னும் நாகநாட்டினைத் தேடி , நீர் திரியாது , திருக்கோளிலி ஈசனை இரவும் பகலும் பாடுவீர்களாக ; பாடுவீர்களாயின் சிவகதியே கூடலாம் .

குறிப்புரை :

கேடுமூடி - துன்பமே மிகுதியாய்ப் பரவி . கிடந்துண்ணும் - செய்வதொன்றின்றித் துன்பமே நுகரும் . உலகீர் , நாடே தேடித் திரிகின்றீர் ; அது செய்யாது இறைவனை இரவும் பகலும் பாடுமின் . சிவகதி - ( சிவஞானமாகிய நெறி ) சேரலாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 10

மடுத்து மாமலை யேந்தலுற் றான்றனை
அடர்த்துப் பின்னு மிரங்கி யவற்கருள்
கொடுத்த வன்னுறை கோளிலி யேதொழ
விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே.

பொழிப்புரை :

செருக்கை உட்கொண்டு திருக்கயிலாயப் பெருமலையை எடுக்கலுற்றானாகிய இராவணனை நெருக்கிப் பின்னும் இரக்கமுற்று அவனுக்கு அருள்கொடுத்த பெருமான் உறைகின்ற கோளிலியே தொழப் பழைய பிறவிகளிற் செய்த வினைத் துன்பங்கள் விடுத்து நீங்கும் . ` பிழைத்தாரையும் பின்னர் இரங்கி வந்தடையில் முதல்வன் காத்தருள்வான் ` என்பது குறிப்பு .

குறிப்புரை :

மடுத்து - தான் என்னும் செருக்கை உட்கொண்டு. மா - சிறப்பிற்குரிய. மேலைவினைகள் - பழவினைகள். விடுத்து - நம்மை விட்டு; வினைகள் நீங்கிடும் என்க. மடுத்து - என்பதற்குரிய செயப்படு பொருள் அவாய் நிலையான் வந்தது.
சிற்பி