திருமாற்பேறு


பண் :

பாடல் எண் : 1

பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்
வருமாற் றின்மலர் கொண்டு வழிபடும்
கருமாற் கின்னருள் செய்தவன் காண்தகு
திருமாற் பேறு தொழவினை தேயுமே.

பொழிப்புரை :

போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி , மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும் .

குறிப்புரை :

பொரும் ஆற்றின் - போர்செய்தற்குரிய முறையால் . படை - சக்கரமாகிய ஆயுதம் . ஆற்றில் வரும்பூம்புனல் மலர் - பொலிவுடைத்தாய் வரும் ஆற்றுத் தண்ணீரும் , மலரும் . உம்மைத் தொகை . கருமாற்கு - கருநிறம் பொருந்திய திருமாலுக்கு . திருமால் வழிபட்ட தலமாதலை நினைப்பித்தது . காண்தகு - காண்டற்கு இனிதாகிய .

பண் :

பாடல் எண் : 2

ஆலத் தார்நிழ லில்லற நால்வர்க்குக்
கோலத் தாலுரை செய்தவன் குற்றமில்
மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு
ஏலத் தான்தொழு வார்க்கிட ரில்லையே.

பொழிப்புரை :

கல் ஆலமரத்தின் பொருந்திய நிழலில் நால்வர்க்கு அறம் அழகுபட உரைத்தவனும் , குற்றமற்ற திருமாலுக்கு நிறைந்த பேரருள் செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருமாற்பேற்றைப் பொருந்தத் தாம் தொழுவார்க்கு இடர்கள் இல்லை .

குறிப்புரை :

ஆலத்து - கல்லாலமரத்து . ஆர் - பொருந்திய . கோலத்தால் - அழகிய தமது தோற்றத்தால் . வாக்கினால் சொல்லாது வீற்றிருந்த நிலையும் காட்டிய ஞானமுத்திரையுமாகிய கோலத்தால் என்க . உரை செய்தவன் - சொல்லாமற் சொன்னவன் . ஆர் அருள் - அரிய திருவருள் . ஏல - ஏற்புடைத்தாக .

பண் :

பாடல் எண் : 3

துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி
அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த
மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும் , ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி , அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம் .

குறிப்புரை :

துணிவண்ணம் - பகைவரைத் துணிக்கின்ற தன்மை . சுடராழி - ஒளியையுடைய சக்கரம் . கொள்வான் - கொள்வதற்காக . எண்ணி - நினைத்து . அணி - அழகிய . வண்ணத்து - செந்நிறத்து , அலர் - தாமரை மலர் . மணி வண்ணனுக்கு - நீலமணி போன்ற கரிய நிறத்தையுடைய திருமாலுக்கு . பணிவண்ணத்தவர்க்கு - பணியும் தன்மையையுடையவர்க்கு .

பண் :

பாடல் எண் : 4

தீதவை செய்து தீவினை வீழாதே
காதல் செய்து கருத்தினில் நின்றநன்
மாத வர்பயில் மாற்பேறு கைதொழப்
போது மின்வினை யாயின போகுமே.

பொழிப்புரை :

தீயவற்றையே செய்து தீவினையில் பின்னும் வீழாது , கருத்தினில் நிலைபெறுமாற்றை உடைய காதல் புரிந்தோராகிய நல்ல மாதவர் பயில்கின்ற மாற்பேற்றைக் கைதொழப் போது வீராக ; உம் வினையாயின போகும் .

குறிப்புரை :

தீதவை செய்து - தீமையாயினவற்றைச் செய்து . தீவினை வீழாதே - தீவினையின்கண் சாராது . போதுமின் எனக் கூட்டுக . காதல் - அன்பு . கருத்தினில் நின்ற - கருத்தோடு நின்ற . பயில் - வாழ்கின்ற . போதுமின் - வாருங்கள் .

பண் :

பாடல் எண் : 5

வார்கொள் மென்முலை மங்கையொர் பங்கினன்
வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை
வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு
வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.

பொழிப்புரை :

கச்சினைக்கொண்ட மென்முலை உடைய உமையொரு பங்கினன் உறைவதும் , இழுத்துக் கட்டப் பெற்ற நல்ல முரசுகளும் , நான்மறைகளும் அழகுற ஒலிக்கப்பெறுவதும் , நெடிய பசும் பொழில்களை உடையதுமாகிய திருமாற்பேற்றைக்கைதொழும் அடியார்கள் பொன்னுலகத்தில் நிலைபெற வீற்றிருப்பர் .

குறிப்புரை :

வார்கொள் - கச்சணிந்த . வார்கொள்நன்முரசம் - வாரால் இழுத்துக் கட்டப்பட்ட முரசம் . அறை - வண்டுகள் ஒலிக்கும் . வார்கொள் - நீண்ட பொழில் . மன்னுவர் - நிலைபெறுவர் .

பண் :

பாடல் எண் : 6

பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை
உண்டு சொல்லுவன் கேண்மி னொளிகிளர்
வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு
கண்டு கைதொழத் தீருங் கவலையே.

பொழிப்புரை :

பழையவல்வினைகளது பற்று அறுக்கும் வகை ஒன்று உண்டு ; அதனைச் சொல்லுவேன் கேட்பீராக ; ஒளிகிளர்கின்றதும் , வண்டுகள் சேரும் பொழில்கள் சூழ்ந்ததுமாகிய திருமாற் பேறு கண்டு கைதொழக் கவலைகள் தீரும் .

குறிப்புரை :

பண்டை வல்வினை - பழைய வலிமையான வினை - சஞ்சிதம் . பற்றறுத்தல் - முற்றிலும் நீக்குதல் . ஒளிகிளர் - ஒளி விளங்கும் .

பண் :

பாடல் எண் : 7

மழுவ லான்திரு நாமம் மகிழ்ந்துரைத்
தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும்
வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு
தொழவ லார்தமக் கில்லை துயரமே.

பொழிப்புரை :

மழுவினை ஏந்திய வெற்றி உடையானது திரு நாமத்தை மகிழ்ந்துரைத்து அழவல்ல அடியார்களுக்கு அன்பு செய்து இன்பமொடும் வழுவில்லாத அருள் செய்தவன் உறையும் திருமாற் பேறு தொழவல்ல அடியார்களுக்குத் துயரங்கள் இல்லை .

குறிப்புரை :

மழுவலான் - மழுவாயுதத்தை வலக்கரத்தே ஏந்தியவன் . திருநாமம் - திருவைந்தெழுத்து . வழுவில் - குற்றமில்லாத . அன்பு செய்து அழவலார்களுக்கு , இன்பொடும் வழுவிலா அருள் செய்தவன் என்க .

பண் :

பாடல் எண் : 8

முன்ன வன்னுல குக்கு முழுமணிப்
பொன்ன வன்திகழ் முத்தொடு போகமாம்
மன்ன வன்திரு மாற்பேறு கைதொழும்
அன்ன வரெமை யாளுடை யார்களே.

பொழிப்புரை :

உலகினுக்கு முன்னேதோன்றியவனும் , முழு மணியும் , பொன்னும் , விளங்கும் முத்தும் , போகங்களும் ஆக விளங்கும் . மன்னவனும் ஆகிய திருமாற்பேற்றில் உறையும் இறைவனைக் கைதொழும் அத்தன்மையவர் எம்மை ஆளுடையார்கள் .

குறிப்புரை :

உலகுக்கு முன்னவன் என்க . முழுமணிப் பொன்னவன் - முழுமணி போன்றவன் . பொன் போன்றவன் என்க . போகமாம் மன்னவன் - போகத்தைச் செய்பவனாகியும் போகப் பொருளாகியும் நிற்கும் தலைவன் .

பண் :

பாடல் எண் : 9

வேட னாய்விச யன்னொடும் எய்துவெம்
காடு நீடுகந் தாடிய கண்ணுதல்
மாட நீடுய ருந்திரு மாற்பேறு
பாடு வார்பெறு வார்பர லோகமே.

பொழிப்புரை :

அருச்சுனனோடும் வேடனாய் வந்து அம்பு எய்து , வெவ்விய சுடுகாட்டை நீண்டு உகந்து ஆடிய கண்ணுதற் பெருமான் உறைவதும் , மாடங்கள் நீண்டு உயருஞ் சிறப்புடையதுமாகிய திருமாற்பேறு பாடுவார்கள் பரலோகம் அடையப் பெறுவார்கள் .

குறிப்புரை :

விசயன் - அருச்சுனன் . வெம்காடு - இடுகாடு . நீடு உகந்து - பெரிதும் விரும்பி . பரலோகம் - மேலான உலகம் .

பண் :

பாடல் எண் : 10

கருத்த னாய்க்கயி லாய மலைதனைத்
தருக்கி னாலெடுத் தானைத் தகரவே
வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு
அருத்தி யால்தொழு வார்க்கில்லை யல்லலே.

பொழிப்புரை :

கயிலாயமலையை எடுக்கும் கருத்து உடையவனாய்ச் செருக்கினோடு எடுக்கலுற்ற இராவணனைச் சிதையும் வண்ணம் வருத்திப் பின் நிறைந்த அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றை விருப்பத்தினோடு தொழுவார்க்கு அல்லல் இல்லை .

குறிப்புரை :

கருத்தனாய் - தானே தலைவன் என்ற எண்ணமுடையவனாய் . தருக்கினால் - ஆணவத்தால் . தகர - அழிய . ஆர் அருள் - அரிய திருவருள் . அருத்தியால் - ஆசையால் . ஆணவம் உடையாரை இறைவன் ஆட்கொள்ளும் மறக்கருணையை நினைப்பித்தது .
சிற்பி