திருமாற்பேறு


பண் :

பாடல் எண் : 1

ஏது மொன்று மறிவில ராயினும்
ஓதி யஞ்செழுத் தும்முணர் வார்கட்குப்
பேத மின்றி யவரவ ருள்ளத்தே
மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

திருமாற்பேற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவர் ஏதொன்றும் அறியாதவர்கள் ஆனாலும், திருவஞ்செழுத்தை ஓதி உணர்வார்கட்கு வேற்றுமையின்றி அவரவர் உள்ளத்தே தாமும் அம்பிகையுமாய் மகிழ்ந்து வீற்றிருப்பர்.

குறிப்புரை :

ஏதும் ஒன்றும் - பிறிதொன்றும். ஓதி - அன்போடு ஓதி. உணர்வார்கட்கு - திருவைந்தெழுத்தின் உண்மைப் பொருளை அறிபவர்கட்கு. பேதமின்றி - வேறுபாடின்றி. அவரவர் உள்ளத்தே - அவரவரின் மனத்தே. மகிழ்வர் - வீற்றிருந்து அருள்செய்வர்.

பண் :

பாடல் எண் : 2

அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள்
நிச்ச லுந்நினை யாய்வினை போயறக்
கச்ச மாவிட முண்டகண் டாவென
வைச்ச மாநிதி யாவர்மாற் பேறரே.

பொழிப்புரை :

நெஞ்சே! அரன் திருநாமங்களை வினைகள் விட்டு நீங்குவதற்காக, நித்தமும் நினைவாயாக; உனக்கு அச்சமில்லை. திருமாற்பேற்று இறைவர், கைப்புள்ள ஆலகால விடத்தை உண்டதிரு நீலகண்டர் என்று அன்பொடுகூற, சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன்படுவர்.

குறிப்புரை :

நிச்சலும் - நாடோறும். நித்தல் என்பதன் மரூஉ. நினையாய் - நினைப்பாயாக. கச்ச - கைத்த என்பதன் மரூஉ. எல்லோர்க்கும் கசந்த. மா - கரிய. என - என்று சொல்ல. வைச்சமாநிதி - சேமித்து வைத்த மாநிதிபோலப் பயன் தருவர்.

பண் :

பாடல் எண் : 3

சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங் குலமுங்கொண் டென்செய்வீர்
பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல்
மாத்தி ரைக்கு ளருளுமாற் பேறரே. 

பொழிப்புரை :

சாத்திரங்கள் பலவற்றைப் பேசும் தீயவர்களே! கோத்திரம், குலம் முதலியவற்றைக் கொண்டு என்ன செய்வீர்! பணிதற்குரிய பொருள் சிவபரம்பொருளே என்று கொண்டு பணிவீராயின், திருமாற்பேற்று இறைவர் ஒருமாத்திரைப் பொழுதுக்குள் அருளுவர்.

குறிப்புரை :

சிவபெருமானிடத்து அன்பும் நினைப்பும் இல்லா தொழியின் யாவும் பயன்தரா என்ற கருத்து விளக்கப்படுகிறது. சாத்திரம் - சமய இலக்கண வரம்பு. சழக்கர் - அறிவற்றோர்; பொய்யர். கோத்திரம் - சிறந்தார் ஒருவரின் பரம்பரையைச் சுட்டியுரைப்பது. குலம் - சாதி. பாத்திரம் - வணங்கப்படுதற் குரியவர். பணிதிரேல் - பணிவீரேயானால். மாத்திரைக்குள் - கணப்பொழுதிற்குள்.சாத்திரம் கோத்திரம் குலம் முதலாயின வற்றையே கருதி உண்மைப் பொருளை உணரும் பயனை அறியாதொழுகினாரை வெறுத்தது. இதுகொண்டு இவற்றை வெறுப்பதாகக் கூறல் தவறு. தம்மை மறந்த நிலையில் தாமே அவை நீங்கும், தூங்கினவன் கைப்பொருள்போல என்பதாம்.

பண் :

பாடல் எண் : 4

இருந்து சொல்லுவன் கேண்மின்க ளேழைகாள்
அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினால்
பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர்
மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே. 

பொழிப்புரை :

அறிவில்லாதவர்களே! சிந்தித்திருந்து சொல்லுவேன்; கேட்பீர்களாக! அரிய தவத்தினாலாய பயனைத்தரும் திருவஞ்செழுத்தை ஓதினால் திருமாற்பேற்று இறைவர் உம்மைப் பொருந்தியுள்ள நோய்களாகிய பிணிகள் போகும்படி துரத்துவதாகும் ஒப்பற்ற மருந்தும் ஆவர்.

குறிப்புரை :

இருந்து - அமைந்திருந்து. ஏழைகாள் - அறிவற்ற வர்களே. அருந்தவந்தரும் - பெறுதற்கரிய தவத்தினாலாம் பயனைத் தரும். பொருந்து - உடலிற் பொருந்திய. நோய் - துன்பம். பிணி - நோய். துரப்பதோர் - நீக்குவதொரு. மன்னும் - நிலைபெற்ற.

பண் :

பாடல் எண் : 5

சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர்
ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினால்
கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர்
மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

உலகில் உள்ளவர்களே! எல்லோரும் அறியச் சொல்லுவேன் கேட்பீர்களாக; இடபத்தின் மேல் வருவாராகிய திருமாற்பேற்று இறைவர் திருவடிகளை ஏத்தினால், உம்மைக் கொள்ளவரும் கூற்றுவனை நீக்கி, குறைகளை அறுத்து, ஆள்கின்ற மாற்றில்லாத செம்பொன்னை ஒப்பர்.

குறிப்புரை :

சாற்றிச் சொல்லுவன் - பலருமறியக் கூறுவன். தரணியீர் - உலகத்தவர்களே. மாற்றிலா - உரைத்து மாற்றுக் காணுதற்கரிய, மிக உயர்ந்த.

பண் :

பாடல் எண் : 6

ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே. 

பொழிப்புரை :

வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடு காட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லவராவர்.

குறிப்புரை :

ஈட்டும் - சேர்க்கும். மாநிதி - மிக்க செல்வம். சால - மிக. வீட்டும் - நம்மை அழிக்கும். காட்டில் - இடுகாட்டில். கா - காப்பாற்றுவாயாக. எனில் - என்றழைத்தால். வாட்டம் - இயம வாதனையாம் துன்பம்.

பண் :

பாடல் எண் : 7

ஐய னேயர னேயென் றரற்றினால்
உய்ய லாமுல கத்தவர் பேணுவர்
செய்ய பாத மிரண்டும் நினையவே
வையம் ஆளவும் வைப்பர்மாற் பேறரே. 

பொழிப்புரை :

தலைவனே! சிவபெருமானே! என்று வாய்விட்டு அரற்றினால் உய்தி அடையலாம்; அதுவன்றியும் உலகத்திலுள்ளவர் பேணி மதிப்புச்செய்வர்; அப்பெருமானின் இரண்டு சிவந்த திருப் பாதங்களை நினைத்தால் திருமாற்பேற்று இறைவர் உலகத்தை ஆளவும் வைப்பர்.

குறிப்புரை :

அரற்றினால் - பல்காலும் சொன்னால். செய்ய பாதம் - சிவந்த திருவடிகள். வையம் - உலகம்.

பண் :

பாடல் எண் : 8

******************

பொழிப்புரை :

******************

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 9

******************

பொழிப்புரை :

******************

குறிப்புரை :

******************

பண் :

பாடல் எண் : 10

உந்திச் சென்று மலையை யெடுத்தவன்
சந்து தோளொடு தாளிற வூன்றினான்
மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென
அந்த மில்லதோ ரின்பம் அணுகுமே. 

பொழிப்புரை :

செருக்கு தன்னை உந்தித்தள்ளுதலால் சென்று திருக் கயிலாயத்தை எடுத்தவனாகிய இராவணனது சந்தனம் பூசிய தோளும் தாள்களும் இறுமாறு திருவிரலால் ஊன்றிய பெருமானுக்குரியதும், பெண்குரங்குகள் பாயும் பொழில் சூழ்வதுமாகிய திருமாற்பேறு என்று கூறினால் முடிவில்லாத ஒப்பற்ற இன்பம் அணுகும்.

குறிப்புரை :

உந்திச் சென்று - தேரைச் செலுத்திக்கொண்டு சென்று எனலுமாம். சந்து - மூட்டுவாய். இற - நொறுங்க. அந்தம் - முடிவு. அணுகும் - நெருங்கும்.
சிற்பி