திருவலஞ்சுழி


பண் :

பாடல் எண் : 1

ஓத மார்கட லின்விட முண்டவன்
பூத நாயகன் பொற்கயி லைக்கிறை
மாதொர் பாகன் வலஞ்சுழி யீசனைப்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகாலவிடத்தை உண்டவனும் , பூதங்களுக்கு நாயகனும் , பொன் வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும் , உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித்தொழுதால் நம் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

ஓதம் - நீர்ப்பெருக்கு . ஆர் - பொருந்திய . நாயகன் - தலைவன் . பொன் - பொன்மயமான . இறை - தலைவன் . பறையும் - அழியும் , நீங்கும் .

பண் :

பாடல் எண் : 2

கயிலை நாதன் கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீயெழ வெல்வல வித்தகன்
மயில்க ளாலும் வலஞ்சுழி யீசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.

பொழிப்புரை :

திருக்கயிலைத் தலைவனும் , சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள் .

குறிப்புரை :

கறுத்தவர் - சினங்கொண்டவராகிய . எயில்கள் - மதில்கள் . வெல்வல - வெல்லுதலில் வல்ல . ஆலும் - ஆடும் . பயில்கிலார் - வலஞ்சுழிப் பெருமான் திருநாமத்தைப் பழகாதவர் . தொழும்பர் - ஆளானவர் ; ஏவல் செய்வார் .

பண் :

பாடல் எண் : 3

இளைய காலமெம் மானை யடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள் நும்முடல்
வளையுங் காலம் வலஞ்சுழி யீசனைக்
களைக ணாகக் கருதிநீ ருய்ம்மினே.

பொழிப்புரை :

இளமைப்பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே ! நும் உடல் வளைந்து முதுமைக்காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக .

குறிப்புரை :

இளைய காலம் - கருவி கரணங்கள் ஓய்ந்து போகாமல் உள்ள இளமைக் காலத்திலேயே . துளையிலாச் செவித் தொண்டர்காள் - ` தோளாதசுரையோ தொழும்பர்செவி ` என்பது போலச் சிவன் புகழ் கேளாச் செவி கேளாச் செவி என்பதாம் . நும்முடல் வளையும் காலம் - உங்களது உடல் மெலிவு அடைந்து முதுமை எய்தும் காலம் . களைகணாக - பற்றுக்கோடாக , ஆதரவாக .

பண் :

பாடல் எண் : 4

நறைகொள் பூம்புனல் கொண்டெழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடுங் கூற்றுதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவ னையினி யென்றுகொல் காண்பதே.

பொழிப்புரை :

தேனைக்கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும் , வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல் ?

குறிப்புரை :

நறைகொள் - மணம் கொண்ட . பூம்புனல் கொண்டு எழு - சுரங்கப்பாதை வழியே காசிசென்று நாடோறும் அழகிய கங்கை நீரைக் கொண்டு வருகின்ற . மாணி - பிரமசாரியாகிய மார்க்கண்டேயர் . குறைவிலா - வலிமையில் குறையாத . கொல் - அசை .

பண் :

பாடல் எண் : 5

விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்தி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.

பொழிப்புரை :

பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ள மிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய , வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன் .

குறிப்புரை :

விண்டவர் - அறத்தின் நீங்கியவர் . மனம் பொருந்தாது நீங்கிய பகைவர் . திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில் . முரலும் - ஒலிக்கும் . அண்டன் - உலகங்களை உடையவன் . அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன் . ஏ - அசை .

பண் :

பாடல் எண் : 6

படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.

பொழிப்புரை :

படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும் , தேவர் தலைவனும் , மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன் .

குறிப்புரை :

பால்மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன் . அஞ்சடை அடங்க - அழகிய சடையின்கண்ணே அடங்கியிருக்க . உம்பர்தம்பிரான் - தேவர்கள் தலைவன் .

பண் :

பாடல் எண் : 7

நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி யீசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.

பொழிப்புரை :

நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த சடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன .

குறிப்புரை :

புரிசடை - முறுக்குண்ட சடை . மாக்கொள் - அடர்ந்திருத்தலால் கருமை நிறத்தைக்கொண்ட . ஏ கொள - அம்பு தொட்ட அளவால் . மாக்கொள் சோலை - மாமரங்களைக்கொண்ட சோலை .

பண் :

பாடல் எண் : 8

தேடு வார்பிர மன்திரு மாலவர்
ஆடு பாதம் அவரு மறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி யீசனைத்
தேடு வானுறு கின்றதென் சிந்தையே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும் , மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது !

குறிப்புரை :

ஆடுபாதம் - அருள்செய்யும் திருவடியாகிய தூக்கிய திருவடியை .

பண் :

பாடல் எண் : 9

கண்ப னிக்குங்கை கூப்புங்கண் மூன்றுடை
நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்
வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்ப னிப்பொனைச் செய்த பரிசிதே.

பொழிப்புரை :

கண்ணீர் ததும்புகின்றாள் ; கைகூப்பித் தொழுகின்றாள் ; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள் ; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும் .

குறிப்புரை :

பனிக்கும் - நீர் அரும்பும் . என்னை நான் கொடுப்பேன் எனும் - என்னை நானே கொடுத்துக்கொண்டு அவனுக்குரிமை யாக்கிக் கொள்வேன் என்று சொல்லுவாள் . பண்பன் - நற்பண்புகளின் வடிவமாயிருப்பவன் . பொனை - பொன் போன்றவளை . தோழி கூற்று .

பண் :

பாடல் எண் : 10

இலங்கை வேந்த னிருபது தோளிற
நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வாரடி யென்றலை மேலவே.

பொழிப்புரை :

இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய , மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன .

குறிப்புரை :

இற - நொறுங்க. நலங்கொள் - பிறருக்கு நன்மை செய்யும் குணத்தைக் கொண்ட. மலங்கு - மீன் வகையில் ஒன்று. வலங்கொள்வார்-வலம் செய்வார். `திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு துன்பங்கள் களைவாரே` திருஞானசம்பந்தர் தேவாரம் (தி.2. ப.106. பா.9.) அருளியமையையும் காண்க.
சிற்பி