திருவாஞ்சியம்


பண் :

பாடல் எண் : 1

படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்
உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம்
புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம்
அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. 

பொழிப்புரை :

படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான் தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை.

குறிப்புரை :

படையும் - மழு, சூலம் முதலிய ஆயுதங்களையும். புல்வாய்அதள் - மான்தோல். தங்கிய - தரித்த. புடை நிலாவிய - ஊர்ப் புறங்களில் விளங்கிய. அல்லல் - துன்பம்.

பண் :

பாடல் எண் : 2

பறப்பை யும்பசு வும்படுத் துப்பல
திறத்த வும்முடை யோர்திக ழும்பதி
கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு
சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. 

பொழிப்புரை :

பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக.

குறிப்புரை :

பறப்பை - கருடன் முதலிய பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண். நெய் வைக்கும் பாத்திரம் எனலுமாம். பசு - வேள்விப் பசு. படுத்து - சிறந்த பொருளாகக்கொண்டு நிகழ்த்தி. வேள்வித் தீயின் கண் நெய்யைச் சொரிந்தும், வேள்விச் சாலையின்கண் பசுவுக்கு வாயுறை கொடுத்தும் ஆராதித்தும் செய்யும் வேள்விச் செயல்களை உடையோர் வாழும் ஊர் எனக் குறித்தது.பல திறத்தவும் உடையோர் - பல வேள்விக் கூறுபாடுகளையும் உடையவர்கள். \\\\\\\"பறப்பைப் படுத் தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர் வாழ்வதில்லை\\\\\\\" (தி.1.ப.80. பா.2) என்றார் சம்பந்தரும். கறைப்பிறை - கறையை உடைய பிறைமதி. கண்ணுதல் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய பெருமான்.

பண் :

பாடல் எண் : 3

புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே. 

பொழிப்புரை :

புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.

குறிப்புரை :

ஆடரவு - ஆடுகின்ற பாம்பு. ஆடரவு - வினைத் தொகை; காலம் மூன்றிற்கும் பொது. புனல் - கங்கை. தெற்றும் - பொருந்திய. பற்றி - அடைந்து.

பண் :

பாடல் எண் : 4

அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே. 

பொழிப்புரை :

நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும் நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார்.

குறிப்புரை :

அங்கமாறு - வேதாங்கங்கள் ஆறு. அவையாவன சிக்ஷை, வியாகரணம், நிருத்தம் முதலியன. அருமறை - உணர்தற்கரிய ருக், யசுர், சாமம், அதர்வணம். தங்கு - பொருந்திய. பயிலும் - எழுந்தருளியிருக்கும். செங்கண்மால் - சிவந்த கண்ணையுடைய திருமால். அமரர்க்கு அமரர் - தேவர்க்குத் தேவர்.

பண் :

பாடல் எண் : 5

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே. 

பொழிப்புரை :

திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல்வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும்.

குறிப்புரை :

மாறுதான் ஒருங்கும் வயல் - நெற் பயிர்களுக்கு மாறாகிய களைகள் அழிந்து குறையும் வயல்கள். தேறி - தெளிந்து.

பண் :

பாடல் எண் : 6

அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க்
குற்ற நற்றுணை யாவா னுறைபதி
தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே.

பொழிப்புரை :

பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன்.

குறிப்புரை :

அற்று - ஆசையற்று. பற்றின்றி - ஆசை சிறிதேனுமில்லாமல். பற்று இன்றி அற்று எனமாற்றி ஆசை சிறிதும் இல்லாமல் விடுத்து என்றலுமொன்று. யாரையும் இல்லவர்க்கு - யாரையும் இல்லாத முற்றத்துறந்த துறவியர்க்கு. உற்ற - பொருந்திய. உறைபதி - உறைகின்ற தலம். தெற்று - கட்டப்பட்ட. கற்றுச் சேர்பவர்க்கு - இறைவன் திருப்பெயர்களைக்கற்று அடைய வல்லவர்களுக்கு. கருத்தாவது - அறிதற்குரிய கருத்துப் பொருளாவதாகும்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அருக்க னங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே. 

பொழிப்புரை :

சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.

குறிப்புரை :

அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. திருத்தும் - அவர்களைத் தவறு நீக்கித் திருத்தும். அருத்தி - ஆசை. அல்லல் - துன்பம்.
சிற்பி