திருக்கருவிலிக்கொட்டிட்டை


பண் :

பாடல் எண் : 1

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

பொழிப்புரை :

தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல் , நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக . கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக .

குறிப்புரை :

மட்டிட்ட - தேன் பொருந்திய ; மலர்களை அணிந்த எனக் கூட்டுக . குழலார் - கூந்தலையுடையவர் . சுழலில் - ஆசைச் சுழலாகிய . வலைப்பட்டு - வலையின்கண்ணே அகப்பட்டு . பரியாது - வருந்தாது . கட்டிட்ட - பந்தித்துநின்ற . கூடும் - சேருங்கள் .

பண் :

பாடல் எண் : 2

ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகில் நிறைந்த மனிதர்களே ! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு , நீர் உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

ஞாலம் - உலகம் . ஏலமாமலர் - பொருந்திய சிறந்த பெரிய மலர் . இலை - பச்சிலைகள் . காலனார் வருமுன் - இறக்குமுன் .

பண் :

பாடல் எண் : 3

பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

குற்றமுடையவற்றைப் பேசுதலால் , நீர் மங்கு மாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு , கங்கை சேர்ந்த சடை யானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பங்கம் - பயனற்றவை . பறைந்து - மனம் வருந்தி . மங்குமா - மனஎழுச்சி குன்றுமாறு . கொங்குவார் பொழில் - தேன் நிறைந்த நீண்ட சோலை .

பண் :

பாடல் எண் : 4

வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

மனிதர்களே ! நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

விசயற்கு - அருச்சுனனுக்கு . கோடுநீள் - மரக் கொம்புகள் நீண்டுள்ள . அடியாரிடர் தீர்க்க இறைவன்தானே வரும் என்பது குறிப்பு .

பண் :

பாடல் எண் : 5

உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்
கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகத்தில் உள்ளவர்களே ! இதுவே உய்யும்வழி ; கேட்பீராக ; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும் , மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற , கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பை - படம் . பாம்பு அரையான் - பாம்பை இடையிலே கட்டியவன் . மழுப்படையார் கையினான் என்க . படை - ஆயுதம் . கொய்கொள் - கொய்தலைக்கொண்ட . மலர்களையும் , இலைகளையும் பறித்தலைக் கொய்கொள் என்றார் .

பண் :

பாடல் எண் : 6

ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

நீர் , மிகவும் துன்பத்தில் அழுந்தாமல் , தோற்றுகின்ற தீ , நீர் , நிலம் , விசும்பு , காற்று ஆகி நின்றவனும் , கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

ஆற்றவும் - மிகவும் . அவலத்து - துன்பத்து . நீர் - நீங்கள் . தோற்றும் - விறகு முதலியவற்றால் வெளிப்படுத்தப்படும் . காய்ந்தவன் - சினந்தவன் .

பண் :

பாடல் எண் : 7

நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச்செய விரும்பாது , நீர் , கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

நில்லா - நிலையில்லாத . பொல்லா ஆறு - தீயவழி . புரியாது - விரும்பி எப்பொழுதும் செய்யாது . கல்லாரும் மதில் - கற்களால் கட்டப்படுதலைப் பொருந்திய மதில் . கொல்லேறு - கொம்பினால் கொல்லத்தக்கதாகிய சினவிடை .

பண் :

பாடல் எண் : 8

பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக ! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும் , எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பிணித்த - நம்மைப் பிணித்து நிற்கின்ற . நோய்ப் பிறவி - பிறவியாகியநோய் ; அல்லது நோயும் பிறவியும் . பிரிவெய்துமாறு - நீங்கும்படி . உணர்த்தலாம் - பிறவி என்னை விட்டு நீங்க ஆணையிட்டு உணர்த்தலாம் . நீங்கள் பிறப்பு நீங்குதலோடு பிறர்க்கும் உணர்த்தலாம் . உருத்திரகணத்தினார் - சிவகணங்கள் ; அடியார் கூட்டம் . குணத்தினான் - நற்குணங்களின் வடிவாயிருப்பவன் . சேர்வீராயின் நீங்கள் பிறவிநோயில் நீங்குதல் மட்டுமின்றிப் பிறர்க்கும் பிறவியை நீக்கும் ஆசாரியத் தலைமையைப் பெறுவீர்கள் என்றபடி . ` ஒரு நீயாகித் தோன்றப் பெறலரும் பரிசில் நல்கும் ` என்பது திருமுருகாற்றுப்படை .

பண் :

பாடல் எண் : 9

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

மனிதர்களே ! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக ; நாள்தோறும் தேவர்கள் ` எம்பெருமான் !` என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும் , பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

நம்புவீர் - உறுதியைக் கேட்டுணரும் விருப்பமுடையீர் . நம்பு - விருப்பம் . எம்பிரான் - எமது தலைவன் . ஏத்தும் - வணங்கும் . கம்பனார் - திரு ஏகம்பத்துறையும் பெருமானார் . கம்பன் - பிறருக்கு நடுக்கத்தைச் செய்வன் . கொம்பனார் - பூங்கொடி போன்ற அழகிய பெண்கள் .

பண் :

பாடல் எண் : 10

பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

பொழிப்புரை :

உலகிலுள்ளவர்களே ! இது கேட்பீராக ! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக .

குறிப்புரை :

பாருளீர் - உலகின்கண் உள்ளவர்களே! பருவரை - பெரிய மலை. பேருமாறு - பெயரும்படி. கார்கொள் நீர் - கருமை நிறத்தைக் கொண்ட தண்ணீர். இராவணனுக்கு அருள் செய்தது உலக மறிந்த நிகழ்ச்சியாகலின் பாருளீர் இதுகேண்மின் என விளித்தார்.
சிற்பி