திருக்கோடிகா


பண் :

பாடல் எண் : 1

சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்
வெங்கு லாமத வேழம் வெகுண்டவன்
கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே.

பொழிப்புரை :

சங்கு வளையல்கள் பொருந்திய முன்கையை உடைய உமாதேவியை ஒருபாகத்திலுடையவனும், சினவெம்மை பொருந்திய மதம் பொழியும் யானையினை வெகுண்டவனும், மணம் உலாவும் பொழிலை உடைய கோடிகாவில் உள்ளவனுமாகிய இறைவா! என்று கூற, எங்கும் இல்லாததோர் இன்பம் வந்து எய்தும்.

குறிப்புரை :

சங்கு உலாம் - சங்கினால் செய்த வளையல்கள் இங்கு மங்கும் அசைகின்ற. முன்கை - மணிக்கட்டினை உடைய. தையல் - பார்வதி. மதவேழம் - மதங்கொண்ட யானை. குலாம் - விளங்குகின்ற. வெகுண்டவன் - சினந்து உரித்துப் போர்த்தவன். கொங்கு - தேன். உலாம் - நிறைந்த. எங்கிலாததோர் இன்பம் - எங்கும் இல்லாததொரு பேரின்பம். \\\\\\\"செங்கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதா\\\\\\\" (தி.8 திருவாசகம் - 171.) எய்தும் - தானே வந்து அடையும்.

பண் :

பாடல் எண் : 2

வாடி வாழ்வதென் னாவது மாதர்பால்
ஓடி வாழ்வினை யுள்கிநீர் நாடொறும்
கோடி காவனைக் கூறீரேற் கூறினேன்
பாடி காவலிற் பட்டுக் கழிதிரே.

பொழிப்புரை :

நாள்தோறும் நீர் மாதர்பால் ஓடி, வாழ்வினையே நினைந்து வாடி வாழ்வது என் ஆவது? கோடிகா இறைவனைக் கூறீரேல், ஊர்க்காவலிற்பட்டுக் கழிவீர்; கூறினேன்.

குறிப்புரை :

வாடி - பலவகையாலும் வருந்தி. வாழ்வது - வாழ்வதாகிய வாழ்க்கை. என்னாவது - என்ன பயனைத்தருவது. மாதர்பால் - பெண்களினிடத்து; கூடிவாழ்வது என்னாவது என்க. ஓடி - விரைந்து சென்று. வாழ்வினை - உண்மையான வாழ்க்கையின் செயலை. உள்கி - நினைந்து. கோடிகாவன் - கோடிகா என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவன். கூறிரேல் - சொல்லவில்லையானால். கூறினேன் - நிச்சயமாகச் சொன்னேன். கழிதிர் - பயனின்றிக் கழிந்தொழிவீர். பாடி காவல் - அரச நீதி பிழைத்தாரை வழக்குநாடி அரசன் நிறுத்தும் தண்டத்தொழில். \\\\\\\"நெறியின்வழீ இயினாரை வழக்குவினாய் ஒப்ப நாடிச் செய்யும் தண்டத்தொழிலுணர்த்துவதோர் ஏசொல்\\\\\\\" என்பது சிவஞான மாபாடியம். ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவலிட்டாங்கு அவை அவனதாக்கினை யாகலான் என்க.

பண் :

பாடல் எண் : 3

முல்லை நன்முறு வல்லுமை பங்கனார்
தில்லை யம்பலத் தில்லுறை செல்வனார்
கொல்லை யேற்றினர் கோடிகா வாவென்றங்
கொல்லை யேத்துவார்க் கூனமொன் றில்லையே.

பொழிப்புரை :

முல்லையையொத்த நல்ல சிரிப்புடைய உமை ஒரு பங்கில் உடையவரும், தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் உறையும் அருட்செல்வரும், முல்லை நிலத்து ஏற்றினை வாகனமாக உடைய வரும் ஆகிய கோடிகா இறைவரே என்று விரைந்து ஏத்துவார்க்குக் குற்றம் ஒன்றும் இல்லை.

குறிப்புரை :

முல்லைநன் முறுவல் - முல்லை அரும்பு போன்று வெண்மையான நல்ல பற்களை உடைய. உமை - பார்வதி. தில்லையம்பலத்தில் - சிதம்பரத்தில். உறை - உறைகின்ற.
செல்வனார் - வீடு பேறாகிய செல்வத்தையுடையவர். கொல்லை - முல்லை நிலத்துக்குரிய. ஏற்றினர் - இடப ஊர்தியை உடையவர். ஒல்லை - விரைவாக. ஊனம் - குறை.

பண் :

பாடல் எண் : 4

நாவ ளம்பெறு மாறும னன்நன்னுதல்
ஆம ளஞ்சொலி யன்புசெ யின்னலால்
கோம ளஞ்சடைக் கோடிகா வாவென
ஏவ ளின்றெனை யேசுமவ் வேழையே. 

பொழிப்புரை :

நாவானது வளம் பெறுமாறு அழகிய நுதலை உடைய தலைவி இயன்ற அளவு அழகிய சடையையுடைய கோடிகா இறைவனே என்று அவன் திருப்புகழ் சொல்லி அன்பு செய்தால் பெறலாமேயன்றி அவனை இசைபாடும் வாயால் என்னை வசைபாடுகின்றாளே இந்நங்கை.

குறிப்புரை :

நாவளம் பெறுமாறும் - நம்முடைய நா பயன்தரும் இறைவன் திருப்புகழைப் பேசுவதால் நன்மையைப் பெறும்படியும். மன் நல்நுதல் - நிலைத்த அழகிய நல்ல நுதலை உடைய தலைவி; அன்மொழித்தொகை. ஆமளம் சொல்லி - ஆம் அளவும் சொல்லி எனப் பிரித்து இயன்ற அளவு அப்பெருமானை ஏத்திப் புகழ்ந்து எனப் பொருள்கொள்க. அன்புசெயின் அலால் - இறைவனிடத்து அன்பு செய்தாலல்லாமல். அன்பு செய்தால் அவனை அடையலாமேயன்றிப் பிறர் எவ்வாறு அடையமுடியும். இதை அறியாமல் அவ்ஏழை என்னை ஏசும் என்க. கோமளம்சடை - அழகிய சடை. கோடிகாவா என - கோடிகாவில் எழுந்தருளியவனே என்று. இறைவரது காதலிற்பட்டுத் தன் சொற்பழித்த மகளை நோக்கிச் செவிலித்தாய் கூற்றாகப் பாடியது.

பண் :

பாடல் எண் : 5

வீறு தான்பெறு வார்சில ராகிலும்
நாறு பூங்கொன்றை தான்மிக நல்கானேல்
கூறு வேன்கோடி காவுளா யென்றுமால்
ஏறு வேன்நும்மா லேசப் படுவனோ. 

பொழிப்புரை :

கோடிகாவில் உள்ள இறைவனே! பெருமை பெறுவார் சிலர் ஆயினும் நறுமணம் வீசும் கொன்றையை மிக அருளா தவனானால் கூறுவேன்; என்றும் காமத்துயர் மயக்கம் ஏறுவேன்; நும்மால் ஏசப்படுவனோ?

குறிப்புரை :

வீறுதான் - பெருமிதத்தினை. பெறுவார் - கொள்ளுவார். சிலர் - சில பெண்கள். இறைவனை அடைந்த அடியவர் அருளிறுமாப்புக் கொள்ளுவார்கள். \\\\\\\\\\\\\\\"இறுமாந்திருப்பன்கொலோ ஈசன் பல்கணத்தெண்ணப்பட்டுச் சிறுமானேந்தி தன்சேவடிக்கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ\\\\\\\\\\\\\\\" (தி.4.ப.9. பா.11) என்பது ஓர்க. நாறு - மணம் கமழ்கின்ற. பூங்கொன்றை - அழகிய கொன்றை மலர். தான் - அசை. மிகு - மிகுதியாக. நல்கானேல் - தாராதொழி வானேயானால்.கோடிகா உளாய் என்று கூறுவேன் மால் ஏறுவேன் என்க. கோடிகா உளாய் - கோடிகாவில் எழுந்தருளியவனே. மால் ஏறுவேன் - காமமயக்கம் அதிகமடைவேன். நும்மால் - உம்மால். ஏசப்படுவனோ - உம்மால் இகழப்படுதற்கு உரியவளாவேனோ.

பண் :

பாடல் எண் : 6

நாடி நாரணன் நான்முகன் வானவர்
தேடி யேசற வுந்தெரி யாததோர்
கோடி காவனைக் கூறாத நாளெலாம்
பாடி காவலிற் பட்டுக் கழியுமே. 

பொழிப்புரை :

திருமாலும் நான்முகனும் தேவர்களும் ஆராய முற்பட்டுத் தேடித் துயர் உறவும் தெரியாத இயல்பை உடைய ஒப்பற்ற கோடிகாவுறையும் இறைவனைக் கூறாத நாட்களெல்லாம் ஊர்க்காவலிற்பட்டுக் கழியும்.

குறிப்புரை :

நாடி - ஆராய்ந்து. வானவர் - தேவர். ஏசவும் - வருத்தவும். பாடிகாவல் - அரசநீதி. பட்டு - பொருந்தி. கழியும் - நீங்கும்.

பண் :

பாடல் எண் : 7

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 8

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

வரங்க ளால்வரை யையெடுத் தான்றனை
அரங்க வூன்றி யருள்செய்த அப்பனூர்
குரங்கு சேர்பொழிற் கோடிகா வாவென
இரங்கு வேன்மனத் தேதங்கள் தீரவே. 

பொழிப்புரை :

வரங்களாற்பெற்ற பலத்தால் திருக்கயிலையை எடுத்த இராவணனை அழிய ஊன்றி அருள்செய்த அப்பன் ஊராகிய குரங்குகள் சேரும் பொழிலை உடைய கோடிகா இறைவனே என்று என் மனத்துக் குற்றங்கள் தீர இரங்குவேன்.

குறிப்புரை :

வரங்களால் - இறைவனிடம் தான் பெற்ற வரங்களால். வரை - கயிலைமலை. அரங்க - கெட. ஏதங்கள் - குற்றங்கள்.
சிற்பி