திருப்புள்ளிருக்குவேளூர்


பண் :

பாடல் எண் : 1

வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்
புள்ளி ருக்குவே ளூரரன் பொற்கழல்
உள்ளிருக்கு முணர்ச்சியில் லாதவர்
நள்ளி ருப்பர் நரகக் குழியிலே. 

பொழிப்புரை :

வெள்ளெருக்கும், பாம்பும் விரவிய சடையொடு கூடிய புள்ளிருக்கு வேளூர்ச் சிவபெருமானின் பொன்னார் திருவடிகள் உள்ளத்துள் இருக்கும் உணர்ச்சி இல்லாதவர்கள் நரகக்குழியில் செறிந்திருப்பர்.

குறிப்புரை :

வெள்ளெருக்கு - வெள்ளெருக்க மலர். அரவம் - பாம்பு. விரவும் - கலந்தணிந்துள்ள. சடை - சடையையுடையவன். பொற்கழல் - அழகிய கழலணிந்த திருவடி. உள்ளிருக்கும் உணர்ச்சி - மனத்திற்குள் நினைத்துக்கொண்டிருக்கும் உணர்ச்சி. இல்லாதவர் - இல்லாதவர்கள். நள்ளிருப்பர் - சென்று நடுவில் இருப்பார்கள். நரகக் குழியில் - பாவமானவை செய்தார் செய்த தீவினை துய்க்குமிடத்தில்.

பண் :

பாடல் எண் : 2

மாற்ற மொன்றறி யீர்மனை வாழ்க்கைபோய்க்
கூற்றம் வந்துமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேற் புள்ளிருக்கு வேளூர்
சீற்ற மாயின தேய்ந்தறுங் காண்மினே. 

பொழிப்புரை :

விடைசொல்லும் தெளிவில்லாதவராய் மனையில் வாழும் வாழ்க்கைபோய். கூற்றுவன் வந்து உம்மைக் கொள்ளுவதற்கு முன்பே புள்ளிருக்குவேளூரைப் போற்றும் வல்லமை உடையீரேல் சீறுதற்குரிய தீக்குணங்கள் தேய்ந்து அறும்; காண்பீராக.

குறிப்புரை :

மாற்றம் - கூற்றுவனுக்குச் சொல்லும் மறுமொழி. நம்மைக் கொல்லவருங்காலையில் அவனைப் போ எனச் சொல்லும் விலக்கு. ஒன்று - யாதொன்றையும். அறியீர் - அறியாதவர்களே. மனைவாழ்க்கை போய் - மனைவியோடு வாழும் இல் வாழ்க்கை அழிந்து. கூற்றம் - வாழ்நாளைக் கூறுபடுத்தும் தெய்வம். கொள்வதன் முன்னமே - பற்றிக்கொண்டுபோவதற்கு முன்பே. புள்ளிருக்கு வேளூர்ப் போற்ற வல்லீரேல் - வேளூரில் எழுந்தருளிய வைத்திய நாதப் பெருமானை வணங்குவீரேயானால், சீற்றம் - நம்மைச் சீறும் கூற்றுவனது சீற்றம். தேய்ந்து அறும் - சிறிது சிறிதாகக் குறைந்து நீங்கும்.

பண் :

பாடல் எண் : 3

அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவ ருள்ளங் குளிருமே.

பொழிப்புரை :

அரிய வேதங்களை உடையவனும், ஆணொடு பெண்ணாகியவனும், கரிய ஆலகாலவிடம் மிக உண்ட விருப்பத்திற்குரிய திருநீலகண்டனும், வெள்ளியமுப்புரி நூலனும் ஆகிய பெருமானைப் புள்ளிருக்குவேளூரில் உருகி நையும் அடியார்களின் உள்ளம் குளிரும்.

குறிப்புரை :

அருமறையனை - அரிய வேதங்களின் வடிவாய் இருப்பவனை. ஆணொடு பெண்ணனை - ஆணும் பெண்ணுமாய் இருப்பவனை. மாதொரு கூறனை என்றபடி. கருவிடம் - கரிய நிறத்து விடம். மிக - மிகுதியாக. எம் - எமது. புரிவெண்ணூலனை. முப்புரியாக அமைந்த வெண்மையான பூணூல் அணிந்தவனை. உருகி நைபவர் - மனம் உருகிக்கனிபவர். உள்ளம் - மனமானது.

பண் :

பாடல் எண் : 4

தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.

பொழிப்புரை :

தன் உருவத்தை ஒருவர்க்கும் அறிய வொண்ணாத ஒளி உருவனும், மேனியில்பூசிய வெண்ணீற்றனும், பொன்னார் மேனியனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்கு வேளூர் என்று கூறவல்லவர்க்கு இடர்கள் இல்லை.

குறிப்புரை :

தன்னுருவை - தனது திருவுருவத்தை. ஒருவர்க்கு அறியவொணா - திருமால், பிரமன் முதலாகிய யாரும் அறிய முடியாத. யாரும் அறியமுடியாதவாறு தனது திருவுருவத்தை உடையவன் என்க. மின்னுருவன் - மின்னல்போன்று ஒளிவடிவத்தினன். பொன்னுருவன் - அழகிய வடிவுடையவன். என்ன வல்லவர்க்கு - என்று சொல்ல வல்லவர்களுக்கு.

பண் :

பாடல் எண் : 5

செங்கண் மால்பிர மற்கும் அறிவொணா
அங்கி யின்னுரு வாகி யழல்வதோர்
பொங்க ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
மங்கை பாகனை வாழ்த்த வருமின்பே. 

பொழிப்புரை :

சிவந்தகண்ணை உடைய திருமாலுக்கும் பிரமனுக்கும் அறியவொண்ணாத அக்கினியின் உருவாகிக் கனலுகின்ற ஒப்பற்ற, பொங்கியெழும் அரவம் அணிந்த இறைவனாகிய புள்ளிருக்குவேளூரில் உமையொருபாகனை வாழ்த்த இன்பம் வரும்.

குறிப்புரை :

செங்கண்மால் - சிவந்த நிறத்தை உடைய செந் தாமரைக் கண்ணனாகிய திருமால். அறிவொணா - அறிதல் ஒண்ணாத. அங்கி - நெருப்பு. அழல்வதோர் - நெருப்புப் போலச் சீறுவதொரு. பொங்கு - சினம் பொங்குகின்ற. அரவன் - பாம்பை அணிந்தவன். இன்பு - இன்பம்.

பண் :

பாடல் எண் : 6

குற்ற மில்லியைக் கோலச் சிலையினால்
செற்ற வர்புரஞ் செந்தழ லாக்கியைப்
புற்ற ரவனைப் புள்ளிருக்கு வேளூர்
பற்ற வல்லவர் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

குற்றங்கள் இல்லாதவனும், அழகுமிக்க மேருமலையாகிய வில்லினால் சினந்தவர் முப்புரங்களைச் செந்தழலாக்கியவனும், புற்றரவம் கொண்டவனுமாகிய இறைவன் உறையும் புள்ளிருக்குவேளூரைப் பற்றும் வல்லமை உடையவர்களது பாவங்கள் கெடும்.

குறிப்புரை :

குற்றமில்லி - இருவினைக் குற்றமில்லாதவன். கோலச் சிலை - அழகிய இமயவில் (மேருமலையாகிய வில்). செற்றவர் - உலகை அழித்து வந்த திரிபுராதிகள். புரம் - கோட்டை, செந் தழலாக்கி - சிவந்த நெருப்பு உண்ணும்படிச் செய்தவன். புற்றரவன் - புற்றிலே உள்ள பாம்பை அணிந்தவன். பற்றவல்லவர் - அடைய வல்லவர். பறையும் - நீங்கும்.

பண் :

பாடல் எண் : 7

கையி னோடுகால் கட்டி யுமரெலாம்
ஐயன் வீடின னென்பதன் முன்னம்நீர்
பொய்யி லாஅரன் புள்ளிருக்கு வேளூர்
மையு லாவிய கண்டனை வாழ்த்துமே.

பொழிப்புரை :

கைகளோடு கால்களையும் கட்டி உம்மைச் சேர்ந்தவரெல்லாம் எங்கள் ஐயன் இறந்தனன் என்று கூறுவதன்முன்பே, நீர் பொய்யில்லாத சிவபிரானும், புள்ளிருக்குவேளூர்த் திருநீலகண்டனுமாகிய பெருமானை வாழ்த்துவீராக.

குறிப்புரை :

கையினோடுகால்கட்டி - இறந்தவுடன் கைகளையும் கால்களையும் துணியால் கட்டி. உமர் - உம்மவர். உம்மைச் சேர்ந்த உறவினர். ஐயன் வீடினன் என்பதன் முன்னமே - குடும்பத் தலைவனாயிருப்பவன் இறந்தான் என்று சொல்வதன் முன்பாகவே. பொய்யில்லா - பொய்மையில்லாத; தன்னை வேண்டியவர்க்கு அருள் வழங்குதலில் பொய்யில்லாத. மை - கருமை. வாழ்த்தும் - வாழ்த்துங்கள்.

பண் :

பாடல் எண் : 8

உள்ள முள்கி யுகந்து சிவனென்று
மெள்ள வுள்க வினைகெடு மெய்ம்மையே
புள்ளி னார்பணி புள்ளிருக்கு வேளூர்
வள்ளல் பாதம் வணங்கித் தொழுமினே. 

பொழிப்புரை :

உள்ளத்தால் உள்ளி. உவப்புற்று \\\\\\\"சிவன்\\\\\\\" என்று மெல்ல உள்கினால் வினைகள் கெடுதல் மெய்மையே; சம்பாதி சடாயு ஆகிய புள்ளினார்பணிகின்ற புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கித் தொழுவீராக.

குறிப்புரை :

உள்ளம் உள்கி - மனத்தால் மீண்டும் மீண்டும். உகந்து - மகிழ்ந்திருந்து. சிவன் என்று மெள்ள உள்க - சிவன் சிவன் என்று பரபரக்காது சிந்திக்க. வினைகெடும் - நம் வினைப்பற்றுக் கெடும். மெய்ம்மையே - இது உண்மையேயாகும். புள்ளினார் - சம்பாதி சடாயு என்ற பறவைகளின் வடிவாய் இருந்தோர். பணி - வழிபாடு செய்த.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * *

பொழிப்புரை :

* * * * * * *

குறிப்புரை :

* * * * * * *

பண் :

பாடல் எண் : 10

அரக்க னார்தலை பத்து மழிதர
நெருக்கி மாமலர்ப் பாதம் நிறுவிய
பொருப்ப னாருறை புள்ளிருக்கு வேளூர்
விருப்பி னால்தொழு வார்வினை வீடுமே. 

பொழிப்புரை :

இராவணனது தலைபத்தும் அழியும்படி நெருக்கிப் பெருமைமிக்க திருவடி மலர்களை நிறுவிய திருக்கயிலாயமலைத் தலைவர் உறைகின்ற புள்ளிருக்குவேளூரை விருப்பத்தினால் தொழுவார் வினை கெடும்.

குறிப்புரை :

அரக்கனார் - இராவணன். ஆர், இழித்தற்பொருளில் வந்தது. அழிதர - அழிய. நெருக்கி - நெரித்து. மாமலர்ப்பாதம் - மலர்களிற் சிறந்த தாமரை மலர்போன்ற திருவடி. நிறுவிய - மீள அவன் உய்யும்படி நிறுத்திய. பொருப்பினார் - கயிலைமலையார். வீடும் - அழியும்.
சிற்பி