திருக்காட்டுப்பள்ளி


பண் :

பாடல் எண் : 1

மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம்
கேட்டுப் பள்ளிகண் டீர்கெடு வீரிது
ஓட்டுப் பள்ளிவிட் டோட லுறாமுனம்
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

செல்வத்திடத்து மகிழ்ந்து உறைவீர் ; கேட்டுப் பள்ளிகண்டீர் . உடம்பை விட்டு உயிர் ஓடலுறுவதற்கு முன்பு காட்டுப்பள்ளியிறைவன் திருவடிகளைச் சேர்வீராக .

குறிப்புரை :

மாட்டுப்பள்ளி - செல்வம் நிறைந்த இருக்கைகள் . உறைவீர்க்கெலாம் - தங்கி இறையுணர்வின்றியிருப்போர் எல்லாருக்கும் . இது கேட்டுப்பள்ளிகண்டீர் - இது கேடுதரும் இருக்கை என்பதை உணருங்கள் . கெடுவீர் - நிலையாத மனைவாழ்க்கையை நம்பியிருப்பின் கெட்டுவிடுவீர் . இது என்பதைக் கேட்டுப்பள்ளி என்பதனுடன் கூட்டுக . ஓட்டுப்பள்ளி - ஓடுகின்ற வீடு . விட்டு - பிரிந்து . ஓடலுறாமுனம் - உயிர்செல்வதற்குமுன்பே . காட்டுப் பள்ளியுளான் கழல் - திருக்காட்டுப்பள்ளி என்னும் தலத்து இறைவன் திருவடிகளை . சேர்மின் - அடைந்து வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 2

மாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே
நாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்
கூட்டை விட்டுயிர் போவதன் முன்னமே
காட்டுப் பள்ளியு ளான்கழல் சேர்மினே.

பொழிப்புரை :

செல்வத்தையே தேடி நீர் உமக்குள்ளே மகிழ்ந்து நாட்டிலுள்ள பொய்யெல்லாம் பேசிடும் நாணமற்றவர்களே ! இந்தக் கூடாகிய உடம்பைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டுப்பள்ளி யுள்ளான் திருவடி சேர்வீராக .

குறிப்புரை :

மாட்டை - செல்வத்தை . மகிழ்ந்து - மனம் செருக்கி . நும்முளே - உங்களுக்குள் . நாட்டுப்பொய்யெலாம் - உலகில் நடக்கும் பல உண்மையில்லாத நிகழ்ச்சிகளையெல்லாம் . நாணிலீர் - வெட்கமில்லாதவர்களே ! கூட்டைவிட்டு - உடலை விட்டு .

பண் :

பாடல் எண் : 3

தேனை வென்றசொல் லாளொடு செல்வமும்
ஊனை விட்டுயிர் போவதன் முன்னமே
கான வேடர் கருதுங்காட் டுப்பள்ளி
ஞான நாயக னைச்சென்று நண்ணுமே.

பொழிப்புரை :

தேனை வென்ற சொல்லை உடையவளாகிய மனைவியோடு செல்வமும் கெட்டு உடலைவிட்டு உயிர் போவதற்கு முன்பே காட்டு வேடர்கள் கருதும் காட்டுப்பள்ளியின் ஞான நாயகனைச் சென்று நண்ணுவீராக .

குறிப்புரை :

தேனைவென்ற - தேனினும் இனிய . சொல்லார் - சொல்லையுடைய பெண்கள் . ஊனைவிட்டு - உடலையும் விட்டு . பெண்டிர் செல்வம் உடல் இவை பிரிவதன் முன் ; இறக்குமுன்பு என்க . கானவேடர் - காட்டில் வாழும் வேடர் . கருதும் - எண்ணி வழிபடும் . ஞானநாயகன் - பேரறிவின் தலைவன் . நண்ணும் - அடைந்து வழிபடுங்கள் .

பண் :

பாடல் எண் : 4

அருத்த மும்மனை யாளொடு மக்களும்
பொருத்த மில்லைபொல் லாதது போக்கிடும்
கருத்தன் கண்ணுத லண்ணல்காட் டுப்பள்ளித்
திருத்தன் சேவடி யைச்சென்று சேர்மினே.

பொழிப்புரை :

பொருளும் , மனைவியோடு மக்களும் பொருத்தம் இல்லை ; பொல்லாத தீமை போக்கிடும் கருத்தனும் , நெற்றிக் கண்ணுடைய அண்ணலும் ஆகிய காட்டுப்பள்ளித் திருத்தன் சேவடியைச் சென்று சேர்வீராக .

குறிப்புரை :

அருத்தமும் - செல்வமும் . பொருத்தமில்லை - நம்மோடு பொருந்தியன அல்ல . பொல்லாதது போக்கிடும் கருத்தன் - தீயனவற்றை நீக்கியருளும் மூலகாரணன் . திருத்தன் - அழகியன் .

பண் :

பாடல் எண் : 5

சுற்ற முந்துணை யும்மனை வாழ்க்கையும்
அற்ற போதணை யாரவ ரென்றென்றே
கற்ற வர்கள் கருதுங்காட் டுப்பள்ளிப்
பெற்ற மேறும் பிரானடி சேர்மினே.

பொழிப்புரை :

சுற்றத்தாரும் துணைவியும் மனைவாழ்க்கையும் , உயிர் உடலைவிட்டு நீங்கியபோது பொருந்தாதவர்கள் என்று , கற்றவர்கள் கருதுகின்ற காட்டுப்பள்ளியில் இடபம் ஏறிய பெருமான் அடி சேர்வீராக .

குறிப்புரை :

துணை - மனைவி . அற்றபோது - உயிர் நீங்கிய காலத்து . அணையார் - நம்மொடு உடன் வாரார் . பெற்றம் - எருது .

பண் :

பாடல் எண் : 6

அடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்
துடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்
கடம்பன் தாதை கருதுங்காட் டுப்பள்ளி
உடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.

பொழிப்புரை :

அடும்பும் , கொன்றையும் , வன்னியும் , ஊமத்தமுமாகிய மலர்கள் சூடியிருக்கும் புனைதல் செய்யப்பட்ட சடையுடைய தூமணிச் சோதியானும் , கடம்பணிந்த முருகன் தந்தையும் ஆகிய பெருமானே உடம்பை உடையவர்க்கெல்லாம் உறுதுணை ஆவான் ; ஆதலின் காட்டுப்பள்ளியையே கருதுவீர்களாக .

குறிப்புரை :

அடும்பு - அடம்பமலர் . துடும்பல் - நிறைந்திருத்தல் . தூமணிச்சோதி - தூயமணியினது ஒளியை உடையவன் . கடம்பன் - கடம்பமலர்மாலை சூடிய முருகன் . தாதை - தந்தை . கருதும் - வழிபட்ட . உடம்பினார்க்கு - உடலோடு கூடி வாழ்பவர்களுக்கு . உறுதுணையாகும் - உற்ற துணையாகவுதவும் .

பண் :

பாடல் எண் : 7

மெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்
பொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்
கையின் மானுடை யான்காட்டுப் பள்ளியெம்
ஐயன் தன்னடி யேயடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

உடம்பில் அழுக்குடையவரும் , உடல் மூடுவாருமாகிய புத்தரது பொய்யை மெய்யென்று கருதிப் புகுந்து அவர்களுடன் வீழாதீர் ; கையின்கண் மான் உடையான் ஆகிய காட்டுப் பள்ளியில் எம் ஐயன் திருவடிகளையே அடைந்து உய்வீராக .

குறிப்புரை :

மெய்யின் - உடலின்கண் . மாசு - அழுக்கு . உடல் மூடுவார் - உள் அழுக்கை மறைத்துப் புறத்தே மூடிக்கொள்வாராகிய புத்தர்கள் . பொய்யை - அவர்கள் மெய்போலக்கூறும் பொய் மொழிகளை . புக்குடன்வீழன்மின் - பலரும் ஒரு சேரப் புகுந்து சென்று விழாதீர்கள் .

பண் :

பாடல் எண் : 8

வேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்
சீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்
காலையேதொழுங் காட்டுப்பள் ளிய்யுறை
நீல கண்டனை நித்தல் நினைமினே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! வேலை , அழகால் வென்ற கண்ணை உடைய பெண்டிரை விரும்பி , நீர் ஒழுக்கம் கெட்டுத் திகையாதீர் ; காட்டுப்பள்ளியில் உறையும் திருநீலகண்டனை நித்தமும் நினைந்து காலத்தே சென்று தொழுவீராக .

குறிப்புரை :

வேலை வென்ற கண்ணார் - கூர்மையால் சென்று தைத்தலில் வேலை வெற்றிகொண்ட கண்களை உடைய பெண்கள் . திகையன்மின் - உலகவாழ்விலேயே திகைத்துச் செயலற்று நிற்காதீர்கள் . காலையே தொழும் - உடலில் உயிர் உள்ள காலத்திலேயே தொழுது வணங்குங்கள் . நித்தல் - நாடோறும் .

பண் :

பாடல் எண் : 9

இன்று ளார்நாளை யில்லை யெனும்பொருள்
ஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்
அன்று வானவர்க் காக விடமுண்ட
கண்ட னார்காட்டுப் பள்ளிகண் டுய்ம்மினே.

பொழிப்புரை :

ஊமர்களே ! இன்றைக்கிருப்பார் நாளைக்கில்லை எனும் பொருள் ஒன்றும் உணராது திரிதருவோரே ! அன்று தேவர்களின் பொருட்டு விடமுண்ட திருக்கழுத்தினரது காட்டுப்பள்ளி கண்டு உய்வீராக .

குறிப்புரை :

இன்றுளார் - இன்றைக்கு இருப்பவர் . நாளை இல்லை - மறுநாள் இல்லாதவராவர் . எனும்பொருள் - என்று சொல்லும் பழமொழியின் உண்மைப்பொருள் மொழிகளை . உழி தரும் - திரியும் .

பண் :

பாடல் எண் : 10

எண்ணி லாஅரக் கன்மலை யேந்திட
எண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்
கண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை
நண்ணு வாரவர் தம்வினை நாசமே.

பொழிப்புரை :

நல்லெண்ணமில்லாத இராவணன் மலையை எடுக்க , அவன் திருந்துமாறு திருவுளத்து எண்ணி , அவன் நீண்ட முடிகள் பத்தையும் இறுத்தவனுக்குரிய ஞானக்கண்ணுடையவர் கருதி உணரும் காட்டுப்பள்ளியை நண்ணுவாருடைய வினைகள் நாசம் அடையும் .

குறிப்புரை :

எண்இலா - எண்ணமில்லாத ( நம் செருக்கு இறைவன் திருமுன் நிற்குமா என்ற எண்ணம் ). எண்ணி - இவனை நாம் திருத்துவது நிக்ரகத்தாலன்றியில்லை என்று எண்ணி . இறுத்தவன் - நெரித்தவன் . கண்ணுளார் - அறிவுக்கண் உள்ள சான்றோர்கள் .
சிற்பி