பொது


பண் :

பாடல் எண் : 1

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

பொழிப்புரை :

தமக்குமேல் தலைவன் இல்லாதவன். உள்ளக் கோயிலான். குணக்குன்று. வாழ்த்துவோர் வாய் இல்லமாக உடையவன். சத்தியை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

குறிப்புரை :

ஏயிலான் - தமக்குமேல் தலைவன் இல்லாதவன். இச்சை அகம்படிக்கோயில் - அன்பாலாகிய உள்ளக்கோயில். வாயிலான் - வாழ்த்தும் இவரது வாயை இல்லாக உடையவன். மனோன்மனியைப் பெற்றதாயிலான் - `இமவான் மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன்`(தி.8 திருவாசகம் -207) 1அரனுக்குத் தாயும் மகளும் நற்றாரமுமாமே` (தி.10. த.4-8. பா.24) நவந்தரு பேதங்களில் மனோன்மனி என்பது ஒரு சத்திபேதம். `சிவம் சத்தி தன்னை ஈன்றும் சத்திதான் சிவத்தை ஈன்றும்` (சித்தியார்- சுபக்கம்.77).

பண் :

பாடல் எண் : 2

முன்னை ஞான முதல்தனி வித்தினைப்
பின்னை ஞானப் பிறங்கு சடையனை
என்னை ஞானத் திருளறுத் தாண்டவன்
தன்னை ஞானத் தளையிட்டு வைப்பனே. 

பொழிப்புரை :

பழைய ஞான முதல் தனி வித்தும், பின்னை ஞானம் பிறங்கு சடையனும் , என்னை இருள் நீக்கி ஞானத்தால் ஆண்டவனும் ஆகிய இறைவன் தன்னை ஞானமென்னும் தளையினால் பிணித்து உள்ளத்தே வைப்பேன்.

குறிப்புரை :

முன்னை - பழமையான. ஞானமுதல் தனிவித்து - ஞானம் முளைத்தற்கிடமாயுள்ளவன். அறிவுக்கு முதற்காரணமாய வித்துப் போன்றவன். பின்னை - அதன்பின்னர். ஞானப்பிறங்கு சடையன் - அறிவு மயமான விளங்கிய சடைமுடியவன். என்னை - அடியனை. ஞானத்திருள் - அறிவை மறைத்துநிற்கும் அறியாமையாகிய இருட்டு. அறுத்து - நீக்கி. ஆண்டவன்தன்னை - ஆட்கொண்டவனை. ஞானத்தளையிட்டு - அறிவாகிய கயிற்றால் கட்டி.

பண் :

பாடல் எண் : 3

ஞானத் தால்தொழு வார்சில ஞானிகள்
ஞானத் தால்தொழு வேனுனை நானலேன்
ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு
ஞானத் தாயுனை நானுந் தொழுவனே. 

பொழிப்புரை :

சில ஞானிகள் நின்னை ஞானத்தால் தொழுவார்கள்; ஞானத்தால் உன்னை நான் தொழும் திறம் உடையேனல்லேன்; ஞானத்தால் தொழுகின்றவர்கள் தொழுதலைக் கண்டு, ஞானவடிவாகிய பொருளே! உன்னை நானும் தொழுவன்.

குறிப்புரை :

ஞானத்தால் - பேரறிவால். தொழுவார் - இறைவனை வணங்குவார்கள். நான் உனை ஞானத்தால் தொழுவேனலேன் என்க. தொழுவேனலேன் - வணங்குவேனல்லேன். ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு - ஞானநெறியினால் உன்னை வழிபடுவார்கள் செய்யும் வழிபாடுகளைக் கண்டு. ஞானத்தாய் - பேரறிவின் வடிவானவனே.

பண் :

பாடல் எண் : 4

புழுவுக் குங்குணம் நான்கெனக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே. 

பொழிப்புரை :

புழுவுக்கும் குணம் நான்கு; எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழு வினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்த அடியார் குழுவினுக்குச் சென்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?.

குறிப்புரை :

புழுவுக்கும் குணம் நான்கு - மண்ணில் வாழும் புழுக்களுக்குரிய குணங்கள் நான்கு. அவையாவன - உணவின் பொருட்டு முயலல், உண்டல், உறங்கல், இன்பதுன்பநுகர்ச்சி. எனக்கும் அதே - எனக்கும் நான்கு குணங்களே. இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு புழுவுக்கு இல்லை என்க. பொல்லாங்கு இவற்றின் பொருட்டுப் பிறரை வஞ்சித்தல், துன்புறுத்தல் முதலியன. புழுவினும் கடையேன் - புழுவினும் இழிந்தவனாகிய யான். புனிதன் தமர் குழுவுக்கு - தூயனாகிய அப்பெருமானது அடியார்களுக்கு. சென்றுகூட எவ்விடத்தேன் என்க. எவ்விடத்தேன் - எத்தகுதியை உடையேன்.

பண் :

பாடல் எண் : 5

மலையே வந்து விழினும் மனிதர்காள்
நிலையில் நின்று கலங்கப் பெறுதிரேல்
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே. 

பொழிப்புரை :

மனிதர்களே! மலையே வந்து விழுந்தாலும் தத்தம் நிலையில் நின்று கலங்காதீர்கள். ஈசன் அடியார்களை ஐம்பொறிகளாகிய யானைகள் கொன்றுவிடுமோ? கொல்லாவாம்.

குறிப்புரை :

மலையே வந்து விழினும் - மலையே புரண்டு விழுந்தாலும். நிலையில் நின்று - இறைவனது அருள் நிலையிலிருந்து. கலங்கப்பெறுதிர் - கலக்கம் அடையாதீர்கள். தமர்களை - அடியவர்களை. கொலைசெய் யானைதான் - கொல்லும் தன்மையையுடைய ஐம்புலன்களாகிய யானைகள். கொன்றிடுகிற்கும் - கொன்றிடும். ஏ - வினா. கொல்லவல்லதோ என்க. தம்மநுபவம் பொதுவாக்கியது.

பண் :

பாடல் எண் : 6

கற்றுக் கொள்வன வாயுள நாவுள
இட்டுக் கொள்வன பூவுள நீருள
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக் கோநம னால்முனி வுண்பதே.

பொழிப்புரை :

திருவைந்தெழுத்தைக் கற்றுக்கொள்ளுவதற்கு வாயும் நாவும் உள்ளன; இட்டுக்கொள்ளப் பூவும், நீரும் உள்ளன; தொகுதியாகிய சிவந்த சடையான் உள்ளான்; நாம் உள்ளோம். இவை யெல்லாம் இருக்க எமனால் முனிவுண்பது எற்றுக்கு?

குறிப்புரை :

கற்றுக்கொள்வன - இறைவன் புகழை ஓதிக் கற்பதற்குரியன. வாயுள நாவுள - வாயும் நாவும் உள்ளன. இட்டுக் கொள்வன - அபிடேகம் செய்வதற்கும் சூட்டுவதற்கும்; பூவுள நீருள - நீரும் பூவும் உள்ளன. கற்றைச் செஞ்சடையான் உளன் - தொகுதியான பல சிவந்த சடைகளை உடையவனாகிய பெருமான் அருள் வழங்கக் காத்திருக்கின்றான். நாம்உளோம் - அவ்வருளைப் பெறுதற்கேற்ற பிறவியோடு நாமும் இருக்கின்றோம். நமனால் - எமனால். எற்றுக்கு - எதற்கு. முனிவுண்பது - கோபத்தை அடைவது.

பண் :

பாடல் எண் : 7

மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கனிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே
புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி
இனிது சாலவு மேசற்ற வர்கட்கே. 

பொழிப்புரை :

மனிதர்களே! இங்கே வாருங்கள்; ஒன்று சொல்லுவேன்; பழம் தந்தால் பழத்தை உண்ணவும் வல்லமை உடையீரோ? புனிதனும் கழல்கள் அணிந்த இறைவனும் ஆகிய கனி; ஏசற்றவர்களுக்கு மிகவும் இனியது; காண்பீராக.

குறிப்புரை :

இங்கேவம் - இங்கேவாருங்கள். ஒன்று சொல்லுகேன்- பயன் தருவதாய செய்தி ஒன்று சொல்கின்றேன். கனி உண்ணவும் வல்லிரே - கனியை உண்ணும்வல்லமை உடையவர்கள் நீங்கள். புனிதன் - தூயன். பொற்கழல் - அழகிய வீரக்கழலையணிந்த திருவடிகள். ஈசன் எனுங்கனி - ஈசன் என்ற பெயரையுடைய கனி. `கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி` (தி.9 திருவிசைப்பா. 47) முதலிய திருமுறை மேற்கோள்களை எண்ணுக. சாலவும் இனிது - மிகவும் இனியது. ஏசற்றவர்கட்கு - குற்றமற்றவர்கட்கு.

பண் :

பாடல் எண் : 8

என்னை யேது மறிந்தில னெம்பிரான்
தன்னை நானுமுன் ஏது மறிந்திலேன்
என்னைத் தன்னடி யானென் றறிதலும்
தன்னை நானும் பிரானென் றறிந்தெனே. 

பொழிப்புரை :

முன் என்னையே ஏதும் அறிந்திலேன்; எம் பெருமானையும் அறிந்திலேன். என்னைத் தன் அடியான் என்று பெருமான் அறிதலும் தன்னைக்காணும் தலைவன் என்று நானும் அறிந்துகொண்டேன்.

குறிப்புரை :

என்னை - அடியேனை. ஏதும் அறிந்திலன் எம்பிரான் - சிறிதும் அறிந்தானில்லை எமது தலைவனாகிய இறைவன் என்றுமாம். சிறிது அறிந்திருந்தானாயின் நான் புறச்சமயச் சூழலிற் சென்று மயங்கும் நிலை ஏற்பட்டிராது என்றதைக் குறித்தது. தன்னை - அப்பெருமான்தன்னை. நானும் - அடியேனும். முன் - இளமைக் காலத்து. ஏதும் - சிறிதும். அறிந்திலேன் - அறியாதொழிந்தேன். என்னைத் தன்னடியான் என்று அறிதலும் - இறைவன் என்னை இவன் நம் அடியவனாதற்குரியான் என்று அறிந்ததும். தன்னை - அப் பெருமானை. பிரான் என்று - தலைவன் என்று.

பண் :

பாடல் எண் : 9

* * * * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * * * *

பண் :

பாடல் எண் : 10

தெள்ளத் தேறித் தெளிந்துதித் திப்பதோர்
உள்ளத் தேற லமுத வொளிவெளி
கள்ளத் தேன்கடி யேன்கவ லைக்கடல்
வெள்ளத் தேனுக்கெவ் வாறு விளைந்ததே. 

பொழிப்புரை :

மிக்குத் தெளிந்து தித்திப்பதாகிய ஒப்பற்ற உள்ளத்தேன்; அமுதப்பேரொளியும் வெளியும் ஆகிய அவ் அநுபவம் கள்ளம் உடையேனும், கவலைக்கடலைக் கடியாது அவ்வெள்ளத்தே விழுந்துகிடப்பேனுமாகிய எனக்கு விளைந்தது எவ்வாறு?

குறிப்புரை :

தெள்ளத்தேறித்தெளிந்து - தெள்ளத் தெளிவிக்க நானும் உண்மையெனத் தேறித் தெளிவடைந்து. தித்திப்பதோர் - இனிப்பதொரு. உள்ளத்தேறல் - மனத்தின்கண் விளையும் தேன். அமுத ஒளிவெளி - அமுத கிரணத்தை உடையவெளி. கள்ளத்தேன் - வஞ்சகத்தன்மையை உடையவன். கடியேன் - வெறுக்கத்தக்கவன். கவலைக்கடல் வெள்ளத்தேனுக்கு - மனக்கவலை என்னும் கடல் வெள்ளத்தை உடையவனாகிய எனக்கு. எவ்வாறு விளைந்தது - எப்படி உள்ளத்தே தேனும் அமுதமுமாய் விளைந்தது.
சிற்பி