பொது


பண் :

பாடல் எண் : 1

அண்டத் தானை யமரர் தொழப்படும்
பண்டத் தானைப் பவித்திர மார்திரு
முண்டத் தானைமுற் றாத இளம்பிறைத்
துண்டத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

அண்டத்தில் உள்ளவனும், தேவர்களால் தொழப் படும் பொருளும், பவித்திரம் உடைய நெற்றியை உடையவனும், இளம் பிறைப் பிளவினைச் சூடியவனுமாகிய பெருமானே தொழத் தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

அண்டத்தானை - உலகங்களின் வடிவானவனை. அமரர் தொழப்படும் - தேவர்களால் தொழப்படுகின்ற. பண்டத் தானை - உறுதிப்பொருளை. பவித்திரம் ஆர் திருமுண்டத்தான் - தூய்மை பொருந்திய அழகிய திருநீற்றை அணிந்த நெற்றியை உடையவன். பவித்திரம் என்பதற்குக் காணிக்கைப் பாத்திரம் எனவும் பொருளுண்டு. முண்டம் - நெற்றி.

பண் :

பாடல் எண் : 2

முத்தொப் பானை முளைத்தெழு கற்பக
வித்தொப் பானை விளக்கிடை நேரொளி
ஒத்தொப் பானை யொளிபவ ளத்திரள்
தொத்தொப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முத்து ஒப்பவனும், முளைத்தெழுகின்ற கற்பக வித்துப் போல்வானும், திருவிளக்கிடை நேர்கின்ற ஒளியை ஒத்திருப்பவனும், ஒளியையுடைய பவளத்திரளின் கொத்தினை ஒப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

முளைத்தெழு - முளைத்துத் தோன்றும். விளக்கிடை நேரொளி ஒத்தொப்பானை - விளக்கையும் அதனிடை ஒளியையும் ஒப்பவனை. பவளத்தின் தொத்து - பவளங்கள் திரண்ட கொத்து. தொழற்பாலது - தொழுந்தன்மையை உடையவன். தொத்து - திரட்சி.

பண் :

பாடல் எண் : 3

பண்ணொத் தானைப் பவளந் திரண்டதோர்
வண்ணத் தானை வகையுணர் வான்றனை
எண்ணத் தானை யிளம்பிறை போல்வெள்ளைச்
சுண்ணத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

பண் ஒத்தவனும், பவளம் திரண்டது போன்ற செவ்வண்ணம் உடையவனும், வகைகளையெல்லாம் உணர்பவனும், அடியார்கள் எண்ணத்தில் இருப்பவனும், இளம்பிறை போன்ற வெண்சுண்ணம் உடையவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

பண் - இசை. வண்ணம் - நிறம். வகை உணர்வான் தனை - நாம் செய்யும் பல்வகைக் கூறுபாடுகளையும் உணர்பவனை. எண்ணத்தானை - நம் எண்ணமாக இருப்பவனை. வெள்ளைச் சுண்ணம் - திருநீறு.

பண் :

பாடல் எண் : 4

விடலை யானை விரைகமழ் தேன்கொன்றைப்
படலை யானைப் பலிதிரி வான்செலும்
நடலை யானை நரிபிரி யாததோர்
சுடலை யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

விடலைப்பருவம் உடையவனும், மணங்கமழும் கொன்றைமாலை உடையவனும், பலிபெறுதற்காகத் திரிந்துசெல்லும் துன்பம் உடையவனும், நரிகள் பிரிந்துசெல்லாத சுடுகாட்டில் இருப்பவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

விடலை - ஆண்மக்களிற் சிறந்தவன். விரை - மணம். படலை - மாலை. பலிதிரிவான் - பிச்சையேற்றுத் திரிவதற்காக. நடலையான் - நடிப்புடையோன். நரி பிரியாததோர் சுடலை - நரிகள் கூடியிருக்கும் இடுகாடு.

பண் :

பாடல் எண் : 5

பரிதி யானைப்பல் வேறு சமயங்கள்
கருதி யானைக்கண் டார்மனம் மேவிய
பிரிதி யானைப் பிறரறி யாததோர்
சுருதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

ஞானசூரியனாக உள்ளவனும், பல்வேறு சமயங்களாற் கருதப்பட்டவனும், கண்டார் மனத்தை விரும்பியமர்ந்தவனும், பிறர் அறியாததோர் சுருதியானும் ஆகிய பெருமானே, தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

பரிதியான் - சூரியனாக இருப்பவன். பல்வேறு சமயங்களால் கருதப்படுபவன் என்க. \"யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவர்\" \"அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்\" சித்தியார்-சுபக்கம்.25.1) எனும் பாடல்கள் காண்க. கண்டார் - மெய்ப்பொருள் காட்சியைக் கண்டவர்கள். பிரிதியான் - ப்ரீதி என்னும் வடசொல் தமிழில் பிரிதி என்றுவரும். விருப்பம் என்பது பொருள்.

பண் :

பாடல் எண் : 6

ஆதி யானை அமரர் தொழப்படும்
நீதி யானை நியம நெறிகளை
ஓதி யானை உணர்தற் கரியதோர்
சோதி யானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முதல்வனும், தேவர்களால் தொழப்படும் நீதியானவனும், நியமநெறிகளை ஓதியவனும், உணர்தற்கு அரியதாகிய ஒப்பற்ற சோதியானும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

ஆதியானை - முதலில் தோன்றியவனை. நியமம் - செய்வன தவிர்வனவாய வரையறை. நெறி - நூல்வழி.

பண் :

பாடல் எண் : 7

ஞாலத் தானைநல் லானைவல் லார்தொழும்
கோலத் தானைக் குணப்பெருங் குன்றினை
மூலத் தானை முதல்வனை மூவிலைச்
சூலத் தானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

உலகமாகி உள்ளவனும், நல்லவனும், வல்லவர் தொழும் கோலத்தை உடையவனும், குணமாகிய பெருங்குன்றானவனும், மூலமாக உள்ளவனும், முதல்வனும், மூவிலை வடிவாகிய சூலத்தை உடையவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

நல்லான் - நன்மையின் வடிவானவன். வல்லார் - அநுபூதியில் வல்லவர்கள். மூலத்தானை - எல்லாவற்றிற்கும் மூலப்பொருளாய் உள்ளவனை.

பண் :

பாடல் எண் : 8

ஆதிப் பாலட்ட மூர்த்தியை ஆனஞ்சும்
வேதிப் பானைநம் மேல்வினை வெந்தறச்
சாதிப் பானைத் தவத்திடை மாற்றங்கள்
சோதிப் பானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

முதற்கண்ணே தோன்றிய அட்ட மூர்த்தியும், பஞ்ச கவ்வியம் அபிடேகம் கொள்பவனும், நமது மேல்வினைகள் வெந்து நீங்கும்படிக் கடைக்கண் சாதிப்பவனும், தவத்திடை மாற்றங்கள் தந்து சோதிப்பவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

ஆதிப்பால் - முதன்மைப் பகுதியான. அட்ட மூர்த்தியை - எட்டு வடிவங்களாயிருப்பவனை. நம்மேல் வினை வெந்தற வேதிப்பான் என்க. வேதித்தல் - அறிவித்தல். விரும்பு தவத்திடை சாதிப்பானை - நம்மைத் தவத்தின்கண்ணே நிறுத்துபவன். சாதித்தல் - முடித்தல். மாற்றங்கள் - நாம் செய்யும் தவறுகள். சோதிப்பான் - ஆராய்ந்து களைபவன்.

பண் :

பாடல் எண் : 9

நீற்றி னானை நிகரில்வெண் கோவணக்
கீற்றி னானைக் கிளரொளிச் செஞ்சடை
ஆற்றி னானை யமரர்த மாருயிர்
தோற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

திருநீறணிந்தவனும், ஒப்பற்ற வெள்ளிய கோவணக்கீறு உடையவனும், ஒளிகிளரும் சிவந்த சடைக்கண் கங்கையை உடையவனும் தேவர்க்கு உயிர்வழங்கினானுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

நிகர் இல் - ஒப்பில்லாத. கோவணக்கீறு - கோவணம். கீறு - கிழித்தது என்னும் பொருளது. கிளர் - விளங்கிய. ஒளி - ஒளியையுடைய. ஆறு - கங்கை. அமரர் தம் ஆருயிர் தோற்றினான் - தேவர்களுடைய அரிய உயிரை தன்னுள் ஒடுக்கி மீள உண்டாக்கியவன். அமரர்கள் நஞ்சுண்டு சாவாதுத் தோற்றியவன் எனலுமாம். தக்கன் வேள்வியில் அமரரை எழுப்பியதும் ஆம்.

பண் :

பாடல் எண் : 10

விட்டிட் டானைமெய்ஞ் ஞானத்து மெய்ப்பொருள்
கட்டிட் டானைக் கனங்குழை பாலன்பு
பட்டிட் டானைப் பகைத்தவர் முப்புரஞ்
சுட்டிட் டானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

மெய்ஞ்ஞானத்து அடியேனை விட்டவனும், மெய்ப்பொருளைக் காட்டியவனும், உமாதேவியினிடத்து அன்பு பொருந்தியவனும், பகைத்தவராகிய திரிபுராதிகள் முப்புரங்களைச் சுட்டவனுமாகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் விட்டிட்டானை - பரஞானமாகிய உண்மைப்பொருளை வெளிப்படுத்தியவனை. கட்டிட்டான் கனங்குழைபால் - கனவிய குழையினை உடையவளாய பார்வதியினிடத்து. கனங்குழைபால் கட்டிட்டு - பார்வதியினிடத்துக் கட்டுண்டு. அன்பு பட்டிட்டானை - அன்பால் பிணிக்கப்பட்டவன். முப்புரம் சுட்டிட்டானை - பகைவரது திரிபுரங்களைச் சுட்டெரித்தவனை.

பண் :

பாடல் எண் : 11

முற்றி னானை இராவணன் நீண்முடி
ஒற்றி னானை யொருவிர லாலுறப்
பற்றி னானையோர் வெண்டலைப் பாம்பரைச்
சுற்றி னானைக்கண் டீர்தொழற் பாலதே.

பொழிப்புரை :

எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவனும், இராவணன் நீண்முடிகளை ஒற்றியபோது ஒரு விரலால் உறப்பற்றியவனும், ஒரு வெண்டலை உடையவனும், பாம்பினை அரைக்கண் சுற்றியவனும் ஆகிய பெருமானே தொழத்தக்கவன்; காண்பீராக.

குறிப்புரை :

இராவணன் நீண்முடி முற்றினான் - இராவணனது நீண்ட முடியை முறியச்செய்தான். ஒரு விரலால் உறநெறி ஒற்றினான் - கால் விரல் ஒன்றினால் ஒற்றியவன். ஓர் வெண்தலை பற்றினான் - பிரமனது ஒரு தலையைக் கையில் தாங்கியவன். அரை - இடை.
சிற்பி