பொது


பண் :

பாடல் எண் : 1

பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்
மின் னுள் ளத்திரள் வெண்பிறை யாயிறை
நின்னுள் ளத்தருள் கொண்டிருள் நீங்குதல்
என்னுள் ளத்துள தெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! பொன்னும் நினையுமாறு அழகு திகழ்கின்ற புன்சடையின் புறத்தே ஒளியுள்ளதாகிய திரண்ட வெண்பிறை சூடியவனே ! நின் உள்ளத்துச் சிறிது அருள் கொண்டு என்னுள்ளத்துள் உளதாகிய இருள் நீங்கிடத் திருவுளம் பற்றியருள்க .

குறிப்புரை :

பொன்னுள்ளத்திரள் - பொன்நிறமுள்ளதாய்த் திரண்ட . புன்சடையின் - மெல்லிய சடையின் . புறம் - மேலே . மின்னுள்ளத்திரள் - மின்னலின் ஒளி உள்ளதாய்த் திரண்ட . வெண் பிறையாய் - வெள்ளிய பிறைச்சந்திரனை அணிந்தவனே . இறை - சிறிது காலம் . நின்னுள்ளத்து - உனது திருவுள்ளத்தில் . அருள் கொண்டு - கருணைகொள்ளுதலால் . இருள் நீங்குதல் - அஞ்ஞானம் அகலுதல் . இதனால் இப்பதிகம் மனத்தொகை எனப்பட்டது . என் மனத்தே நிகழ்வதாயுள்ள உள்ளக் கிடக்கை . எந்தை பிரானிரே - என் தந்தையாகிய பெருமானே . இர் - முன்னிலை விகுதி . ஏ - அசை . பெருமானே ! வெண்பிறையாய் ! இறைப் பொழுது நின்னுள்ளத்து அருள்கொள்ளுதலால் அறியாமையாகிய இருள் நீங்குதல் என் மனத்தே நிகழ்ந்துள்ளது என முடிவு செய்க .

பண் :

பாடல் எண் : 2

முக்க ணும்முடை யாய்முனி கள்பலர்
தொக்கெ ணுங்கழ லாயொரு தோலினோ
டக்க ணம்மரை யாயரு ளேயலா
தெக்க ணும்மில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! முக்கண்ணும் உடையாய் ! முனிவர்கள் பலர் கூடி எண்ணித் தியானிக்கும் கழலை உடையாய் ! புலித்தோலினோடு அழகிய நினது அருளேயல்லாது வேறு எவ்விடத்தும் பொருள் இல்லேன் .

குறிப்புரை :

முக்கணும் உடையாய் - மூன்று கண்களை உடையவனே . முனிகள் பலர் - முனிவர்கள் பலர் . தொக்கு எணும் கழலாய் - கூடி எண்ணும் திருவடிகளை உடையவனே . தோலினோடு - புலித்தோல் உடையோடு . அக்கு அம் அண் அரை - அக்கு மணிமாலை நெருங்கிய அழகிய இடை . அருளே அலாது - கருணையே வடிவாய் இருப்பானேயல்லாமல் . எக்கணும் - எவ்விடங்களிலும் . இலன் - கருணை வடிவின்றி வேறு வடிவு இலனாய எந்தை பிரானிரே என்க .

பண் :

பாடல் எண் : 3

பனியாய் வெங்கதிர் பாய்படர் புன்சடை
முனியாய் நீயுல கம்முழு தாளினும்
தனியாய் நீசரண் நீசல மேபெரி
தினியாய் நீயெனக் கெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! தண்ணியாய் ! விரும்புதற்குரிய தெண்ணிலவு பாயும் படர்புன்சடை முனிவனே ! நீ உலகம் முழுதும் ஆண்டாலும் தனியாய் ! சரண் நீயே ; என்பால் வஞ்சனையே பெரிது ; எனக்கு இனியாய் நீயே .

குறிப்புரை :

பனியாய் - பனிபோன்று குளிர்ந்த தன்மையனாய் . வெங் கதிர்பாய் - வெம்மையை உடைய சூரிய கிரணங்கள் பொருந்திய . படர் - விரிந்த . புன்சடை - மெல்லிய சடை . முனியாய் - முனிவனாய் . தனியாய் நீ - ஏகனாயிருப்பவன் நீ . சலமே - துன்பம் .

பண் :

பாடல் எண் : 4

மறையும் பாடுதிர் மாதவர் மாலினுக்
குறையு மாயினை கோளர வோடொரு
பிறையுஞ் சூடினை யென்பத லாற்பிறி
திறையுஞ் சொல்லிலை யெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! வேதங்களையும் பாடுவீர் ; பெரிய முனிவர்களது மயக்கத்தினுக்கு உறையும் ஆயினீர் ; கொள்ளும் பாம்பினோடு ஒரு பிறையும் சூடினை என்பதல்லால் வேறு சிறிதும் சொல் இல்லை .

குறிப்புரை :

மறையும் - வேதங்களையும் , மாதவர் மாலினுக்கு - தாருகாவனத்து முனிவர் . குறையும் மயக்கத்திற்கு - மயக்காகிய குறையாகவும் . கோளரவு - கொள்ளும் தன்மையதாய பாம்பு . பிறிது - வேறு . இறையும் - சிறிதும் .

பண் :

பாடல் எண் : 5

பூத்தார் கொன்றையி னாய்புலி யின்னதள்
ஆர்த்தா யாடர வோடன லாடிய
கூத்தா நின்குரை யார்கழ லேயல
தேத்தா நாவெனக் கெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! பூத்துச் செறிந்த கொன்றையினை உடையாய் ; புலியின் தோலை ஆர்த்துக் கட்டினாய் ; ஆடும் பாம்பினோடும் அனலோடும் ஆடும் கூத்தனே ! நின் ஒலிக்கும் கழலே அல்லது எனது நா வேறு ஒன்றையும் ஏத்தாது .

குறிப்புரை :

பூத்தார் கொன்றையினாய் - மலர்ந்த கொன்றைப்பூ மாலையை அணிந்தவனே . அதள் - தோல் . அரவோடு புலியின் அதள் ஆர்த்தாய் என்க . ஆர்த்தாய் - கட்டினாய் . அனலாடிய - தீயேந்தி யாடிய . குரையார் கழலேயலது - ஒலித்தலைப் பொருந்திய . திருவடிகளேயல்லாமல் . ஏத்தா நா - துதியாத நாக்கு . எனக்கு - எனக்குள்ளது .

பண் :

பாடல் எண் : 6

பைம்மா லும்மர வாபர மாபசு
மைம்மால் கண்ணியோ டேறுமைந் தாவெனும்
அம்மா லல்லது மற்றடி நாயினேற்
கெம்மா லும்மிலே னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! படத்தொடு ஒலிக்கும் அரவுடையவனே ! பரமனே ! இடபத்தின்மேல் அஞ்சனம் தீட்டிய கண்ணுடைய உமாதேவியோடு ஏறும் மைந்தனே ! என்றும் அம்மயக்கமல்லது மற்று அடி நாயினேனுக்கு வேறு எம் மயக்கமும் இல்லேன் . ` நாயினேன் ` என்றும் பாடம் .

குறிப்புரை :

பைம்மாலும் அரவா - படத்தோடு கூடிய நஞ்சினால் மயங்குதற்கு ஏதுவான . பசு - பசு இனத்துளதாய எருது . மைம்மால் கண்ணி - பார்வதி . பார்வதி - கரிய உருவத்தையும் மயக்கம் செய்யும் விழியையுமுடையவள் . மைந்தா - வலியனே . அம்மால் அல்லது - அந்த ஆசை அல்லாமல் . அடிநாயினேற்கு - அடிமையனாகிய நாயேனுக்கு . எம்மாலும் - வேறு எந்த ஆசையும் .

பண் :

பாடல் எண் : 7

வெப்பத் தின்மன மாசு விளக்கிய
செப்பத் தாற்சிவ னென்பவர் தீவினை
ஒப்பத் தீர்த்திடு மொண்கழ லாற்கல்ல
தெப்பற் றும்மில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! வெப்பத்தின் மனமாசு விளக்கும் செப்பம் உடைமையினால் ` சிவன் ` என்பவர் தீவினைகளை ஒப்பத் தீர்க்கும் ஒள்ளிய கழலை உடையானாகிய உமக்கல்லது வேறுபற்று இல்லேன் .

குறிப்புரை :

வெப்பத்தின் - ஞானஒளி வெப்பத்தினாலே . மனமாசு - மனத்தின்கண் உளதாய அறியாமையாகிய இருளை . விளக்கிய - விளங்கச்செய்த . செப்பத்தால் - செம்மைத் தன்மையால் . சிவன் என்பவர் - செம்மையன் என்று சொல்பவர் . ஒப்ப - முடிய . ஒண் கழலாற் கலது - ஒள்ளிய வீரக்கழலை அணிந்த திருவடியை உடைய பெருமானிடத்தேயல்லாமல் . எப்பற்றும் - வேறுஎவ்வித ஆசையும் .

பண் :

பாடல் எண் : 8

திகழுஞ் சூழ்சுடர் வானொடு வைகலும்
நிகழு மொண்பொரு ளாயின நீதியென்
புகழு மாறு மலானுன பொன்னடி
இகழு மாறில னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

எந்தை பெருமானே ! விளங்குகின்ற சுடர் சூழ்கின்றவனோடு நாள்தோறும் நிகழும் ஒள்ளிய பொருளாயின நீதிகளை என்னே புகழுமாறு ! அல்லது உன் பொன்னடிகளை இகழுமாறு இல்லேன் .

குறிப்புரை :

திகழும் - விளங்கும் . சூழ்சுடர் - சூழ்ந்த ஒளியோடு கூடிய சூரிய சந்திரர்களை ( உடையதான ). வானொடு - ஆகாயத்தோடு . நிகழும் - உலகின்கண் இயங்குகின்ற . ஒண்பொருளாயின - சிறந்த பொருளாயுமிருப்பன . சூரிய சந்திராகியும் , ஆகாயமாகியும் , உலகப் பொருளாயும் இருப்பவன் . விண்ணும் மண்ணுமாயிருப்பவன் என்க . புகழும் ஆறு அலால் - புகழ்வதையன்றி . நுன் பொன்னடி - உனது அழகிய திருவடி .

பண் :

பாடல் எண் : 9

கைப்பற் றித்திரு மால்பிர மன்னுனை
எப்பற் றியறி தற்கரி யாயருள்
அப்பற் றல்லது மற்றடி நாயினேன்
எப்பற் றும்மிலே னெந்தை பிரானிரே.

பொழிப்புரை :

திருமாலால் அறிதற்கரியவனே ! உன் திருவருளாகிய பற்றுக்கோடு ஒன்றைத் தவிர வேறு எப்பற்றும் எனக்கு இல்லை .

குறிப்புரை :

திருமால் பிரமன் - திருமாலும் பிரமனும் . எய்ப்பு அற்று - துன்பம் இன்றி . உன்னை எப்பெற்றியுடையவன் என்று அறிதற்கு அரியவனே என்க . கைப்பற்றியருள் எனக் கூட்டுக .

பண் :

பாடல் எண் : 10

எந்தை யெம்பிரா னென்றவர் மேல்மனம்
எந்தை யெம்பிரா னென்றிறைஞ் சித்தொழு
தெந்தை யெம்பிரா னென்றடி யேத்துவார்
எந்தை யெம்பிரா னென்றடி சேர்வரே.

பொழிப்புரை :

எந்தை எம்பிரான் என்று மனம் வாக்குக் காயங்களால் வழிபடுவார் இறைவன் திருவடி சேர்வர் .

குறிப்புரை :

என்றவர் மேல் - என்று கூறியவரிடத்து . மனம் - மனம் பொருந்த . என்று - என்றும் கூறி . இறைஞ்சி - தலைகுனிந்து . தொழுவார் - வணங்குவார் . இறைவன் அடியார்களை இறைவனாகவே கருதி வணங்குவார் என்க . அடியாரை வழிபட்ட பிறகு பெருமானை எந்தை எம்பிரான் என்று எல்லாரும் போற்றி . அடி சேர்வர் - இறைவனது திருவடியை அடைவார்கள் .
சிற்பி