பொது


பண் :

பாடல் எண் : 1

சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்
அந்தி வான்நிறத் தானணி யார்மதி
முந்திச் சூடிய முக்கண்ணி னானடி
வந்திப் பாரவர் வானுல காள்வரே.

பொழிப்புரை :

சிந்திப்பவர் மனத்து உறைபவனாகிய சிவனும் , சிவந்த சுடர் உடையவனாய் அந்திவானத்து நிறம் பொருந்தியவனும் , அழகு நிறைந்த பிறைமதியினை முந்துறச் சூடிக்கொண்ட முக்கண்ணினனுமாகிய பெருமான் திருவடிகளை வணங்குவார்கள் வானுலகை ஆள்வர் .

குறிப்புரை :

சிந்திப்பார் - தன்னை நினைப்பவர்கள் . செஞ்சுடர் அந்திவான் - சிவந்த ஒளியோடு கூடிய அந்திக்காலத்து வானம் . அணியார் - அழகு பொருந்திய . முந்தி - முற்பட அல்லது தலையிலே . வந்திப்பார் - வாழ்த்துபவர்கள் .

பண் :

பாடல் எண் : 2

அண்ட மாரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலுமோ ரொண்சுட ரச்சுடர்
கண்டிங் காரறி வாரறி வாரெலாம்
வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே.

பொழிப்புரை :

அண்டங்களையெல்லாம் உள்ளடக்கிய செறிந்த இருள் நடுவே கடந்து அப்பால் ஓர் ஒள்ளிய சுடர் உண்டுபோலும் ; அச்சுடரைக் கண்டு இங்குஆர் அறியவல்லவர்கள் ? அறிபவரெல்லாம் அதனை வெள்ளிய பிறையினை முடிக்கண்ணியாகக்கொண்ட வேதியன் என்பர் .

குறிப்புரை :

அண்டமார் இருள் - எல்லா உலகங்களிலும் பொருந்திய இருள் அனைத்தையும் . ஊடுகடந்து - இடையே நீங்கிச் சென்று . உம்பர் - வானோர் உலகிற்கும் உயர்ந்த உலகின்கண் . போலும் , ஒப்பில்போலி . ஒள்சுடர் - ஒளியையுடைய விளக்கு . அச்சுடர் இங்குக் கண்டறிவார் யார் - அவ்விளக்கை இவ்வுலகத்து அறிபவர் யார்?. திங்கட் கண்ணி - பிறையாகிய தலைமாலை .

பண் :

பாடல் எண் : 3

ஆதி யாயவ னாரு மிலாதவன்
போது சேர்புனை நீண்முடிப் புண்ணியன்
பாதிப் பெண்ணுரு வாகிப் பரஞ்சுடர்ச்
சோதி யுட்சோதி யாய்நின்ற சோதியே.

பொழிப்புரை :

தன்னுடலிற்பாதி பெண்ணுருவமாகி மேலாய சுடரை உடைய சோதியுட்சோதியாய் நின்ற சோதியாகிய பெருமான் , அனைத்துக்கும் ஆதி ஆகியவன் ; தனக்குப் பற்றாவார் ஆரும் இல்லாதவன் ; மலர்கள் சேர்த்துப் புனைந்த நீண்முடியை உடைய புண்ணியன் .

குறிப்புரை :

ஆதியாயவன் - முதல்வனானவன் . ஆரும் இலாதவன் - தந்தை தாய் யாரும் இல்லாதவன் . போது - மலர் . புனை - அலங்கரித்த . பரஞ்சுடர் - மேலான ஒளி . சோதியுட் சோதியாய் நின்ற சோதி - ஒளியாயும் ஒளிஉள் ஒளியாயுமிருப்பவன் .

பண் :

பாடல் எண் : 4

இட்ட திட்டதோ ரேறுகந் தேறியூர்
பட்டி துட்டங்க னாய்ப்பலி தேர்வதோர்
கட்ட வாழ்க்கைய னாகிலும் வானவர்
அட்ட மூர்த்திய ருளென் றடைவரே.

பொழிப்புரை :

ஏற்றினை உகந்து ஏறிப் பட்டிதோறும் மக்கள் இட்ட சோற்றினைப் பலிதேர்வதாகிய ஒரு துன்பவாழ்க்கை உடையவனாகிலும் தேவர்கள் ` அட்டமூர்த்தியே ! அருள்வாயாக ` என்று அடைவர் .

குறிப்புரை :

இட்டதுஇட்டது - அவரவரும் தமக்குப் பலியாய் இட்டவற்றை . ஓர் ஏறு உகந்துஏறி - ஒப்பற்ற எருது வாகனத்தை விரும்பி ஏறி . ஊர் - செலுத்தி . கட்டம் - கஷ்டம் . வானவர் - தேவர் . அருள் - அருள்செய்வீராக .

பண் :

பாடல் எண் : 5

ஈறில் கூறைய னாகி யெரிந்தவெண்
நீறு பூசி நிலாமதி சூடிலும்
வீறி லாதன செய்யினும் விண்ணவர்
ஊற லாயரு ளாயென் றுரைப்பரே.

பொழிப்புரை :

முடிவற்ற திக்குகளையே ஆடையாக உடுப்பவனாகி எரிந்துவெந்த திருநீறு பூசி நிலவினை உடைய பிறையைச் சூடினும் , தன் பெருமைக்கு உகவாதவற்றைச் செய்யினும் , தேவர்கள் ` இடையூறற்றவனே ! அருள்வாயாக ` என்று இரந்துரைப்பர் .

குறிப்புரை :

ஈறில் - முடிவில்லாத . கூறையன் - திக்குகளாகிய ஆடையை உடையவன் . வீறிலாதன - பெருமையற்ற செயல் . ஊறலாய் - அருளூற்றை உடையவரே , கண்ணீர் சொரிந்து எனலுமாம் .

பண் :

பாடல் எண் : 6

உச்சி வெண்மதி சூடிலும் ஊன்அறாப்
பச்சை வெண்தலை யேந்திப் பலவில்லம்
பிச்சை யேபுகு மாகிலும் வானவர்
அச்சந் தீர்த்தரு ளாயென் றடைவரே.

பொழிப்புரை :

உச்சிக்கண் வெள்ளியமதி சூடினும் , தசை நீங்காத பச்சை வெண்தலையோட்டைக் கையில் ஏந்திப் பல இல்லங்களுக்குப் பிச்சை ஏற்கப் புகுந்தாலும் , தேவர்கள் ` எம் அச்சம் தீர்த்து அருள்வாயாக ` என்று அடைவர் .

குறிப்புரை :

உச்சி - முடிமீது . ஊன்அறா - தசை நீங்காத . பச்சை - தலையோடு கூடிய . பல இலம் - பல வீடுகள் . பிச்சையே புகும் - பிச்சையேற்பதற்காகச் செல்லும் .

பண் :

பாடல் எண் : 7

ஊரி லாயென்றொன் றாக உரைப்பதோர்
பேரி லாய்பிறை சூடிய பிஞ்ஞகா
காரு லாங்கண்ட னேயுன் கழலடி
சேர்வி லார்கட்குத் தீயவை தீயவே.

பொழிப்புரை :

தனக்கென்று ஓர் ஊரில்லாதவனே ! ஒன்றாக உரைக்கும் பேரில்லாதவனே ! பிறைசூடிய பிஞ்ஞகனே ! கருமை பொருந்திய திருக்கழுத்தினனே ! உன் கழலணிந்த திருவடியைச் சேர்தல் இல்லாதவர்களுக்குத் தீயவையே என்றும் சேரும் .

குறிப்புரை :

ஊரிலாய் - தனக்கென ஓர் ஊர் இல்லாதவன் . என்று - இது என்று . ஒன்றாக உரைப்பது - ஒன்று சொல்லுவதற்குரிய . பேர் இலாய் - பெயர் இல்லாதவன் . கார் உலாம் - கருமை நிறம் பொருந்திய . கண்டனே - கழுத்தை உடையவனே . கழலடி - கழலணிந்த திருவடிகள் . சேர்விலார்கட்கு - அடையாதவர்கட்கு . தீயவை - தீமை தருவனவான தீவினைகள் . தீயவே - துன்பந்தருவனவே . அடிசேர்ந்தார்க்குத் தீயவும் நல்லவாம் என்றபடி .

பண் :

பாடல் எண் : 8

எந்தை யேயெம் பிரானே யெனவுள்கிச்
சிந்திப் பாரவர் தீவினை தீருமால்
வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
அந்த மாவளப் பாரடைந் தார்களே.

பொழிப்புரை :

எந்தையே ! எம்பெருமானே ! என உள்ளத்தால் நினைந்து சிந்திப்பார்களின் தீவினை தீரும் ; வெந்த திருநீறு பூசிய மெய்யை உடைய வேதியனை அடைந்தவர்கள் அந்தமாக அளக்குந் தன்மை உடையார் .

குறிப்புரை :

உள்கி - நினைத்து . தீரும் - நீங்கும் . ஆல் - அசை . அந்தமா அளப்பார் - அளப்பார் என்பதனை முன்னே கூட்டி நூல்களின் பொருளியல்பை ஆராய்பவர்கள் என்க .

பண் :

பாடல் எண் : 9

ஏன வெண்மருப் போடென்பு பூண்டெழில்
ஆனை யீருரி போர்த்தன லாடிலும்
தான வண்ணத்த னாகிலுந் தன்னையே
வான நாடர் வணங்குவர் வைகலே.

பொழிப்புரை :

பன்றியின் வெள்ளிய கொம்பினோடு எலும்பு அணிந்த அழகுமிக்க ஆனையினை ஈர்ந்து தோல் போர்த்துத் தீயுடன் ஆடினாலும் , தான் அவ்வியல்புடையனாயினும் தேவர்கள் நாள் தோறும் தன்னையே வணங்குவர் .

குறிப்புரை :

ஏனமருப்பு - பன்றிக்கொம்பு . எழில் - அழகு . ஆனை ஈருரி - ஆனையினை உரித்த தோல் . அனலாடினும் - தீயாடினாலும் . தான் அவ்வண்ணத்தன் - தானும் அனலாடியதற்கேற்ப அனலின் நிறத்தையே உடையவன் . வைகல் - நாடோறும் . தானவண்ணம் - பிச்சையேற்கும் கோலம் எனினுமாம் .

பண் :

பாடல் எண் : 10

ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம்
மெய்யன் மேதகு வெண்பொடி பூசிய
மைகொள் கண்டத்தன் மான்மறிக் கையினான்
பைகொள் பாம்பரை யார்த்த பரமனே.

பொழிப்புரை :

படம் கொண்ட பாம்பினை இடுப்பில் கட்டிய இறைவன் , தலைவன் ; அந்தணன் ; ( அழகும் குளிர்ச்சியும் உடையவன் ) ஆண் பெண் வடிவமுடைய திருமேனியினன் ; மேன்மை மிகுந்த வெண் திருநீறு பூசிய கருமைகொண்ட திருக்கழுத்தினன் ; மான்குட்டி உடைய கையினன் .

குறிப்புரை :

ஐயன் - அழகியன் . அந்தணன் - குளிர்ந்த தண்ணளியைச் செய்பவன் . மெய்யன் - உடலை உடையவன் . மேதகு - மேன்மை பொருந்திய . மைகொள் - கரிய நிறத்தைக் கொண்ட . மான்மறி - மான்குட்டி . பைகொள் பாம்பு - படத்தை உடைய பாம்பு . அரை - இடையிலே . ஆர்த்த - கட்டிய . பரமன் - மேலானவன் .

பண் :

பாடல் எண் : 11

ஒருவ னாகிநின் றானிவ் வுலகெலாம்
இருவ ராகிநின் றார்கட் கறிகிலான்
அருவ ராஅரை ஆர்த்தவ னார்கழல்
பரவு வாரவர் பாவம் பறையுமே.

பொழிப்புரை :

இவ்வுலகமெல்லாம் தான் ஒருவனே ஆகி நின்றவனும் , திருமாலும் பிரமனுமாகிய இருவராகி நின்றவர் அறிய இயலாதவனும் , அரிய பாம்பினை இடுப்பில் கட்டியவனும் ஆகிய இறைவனது நிறைந்த கழலணிந்த திருவடிகளை வணங்குவாரின் பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

இவ்வுலகெலாம் - இவ்வுலகங்கள் எல்லாவற்றிற்கும் . ஒருவனாகி நின்றான் - தலைவனாவான் இவன் ஒருவனேயாக இருப்பவன் . இருவர் - திருமால் , பிரமன் . அரு - அரிய . அரா - பாம்பு . அரை - இடை . ஆர்கழல் - பொருந்திய கழலை அணிந்த திருவடி . பறையும் - நீங்கும் .

பண் :

பாடல் எண் : 12

ஓத வண்ணனும் ஒண்மலர்ச் செல்வனும்
நாத னேயரு ளாயென்று நாடொறும்
காதல் செய்து கருதப் படுமவர்
பாத மேத்தப் பறையும்நம் பாவமே.

பொழிப்புரை :

கடல்வண்ணம் உடையவனாகிய திருமாலும் , ஒள்ளிய தாமரைமலர் மேலானாகிய பிரமனும் , ` தலைவனே ! அருள்வாய் ` என்று நாள்தோறும் விருப்பம் புரிந்து எண்ணப் படுவாராகிய இறைவன் பாதங்களை ஏத்த நம்பாவங்கள் கெடும் .

குறிப்புரை :

ஓதவண்ணன் - கடல்நீரை ஒத்த கரிய திருமால் . ஒண்மலர்ச் செல்வன் - பிரமன் . கருதப்படுமவர் - மனத்தால் எண்ணித் துதிக்கப்படுபவர் . தியானிக்கப்படுபவருடைய தியேயப்பொருளாயுள்ளவன் ` சிவஏகோத்தியேய :` என்பது வேதம் .

பண் :

பாடல் எண் : 13

ஔவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே.

பொழிப்புரை :

அவரவர் உடம்பினால் அடைவதற்கு வெவ்விய தன்மை உடையவன் என்ற கருத்தை ஒழிப்பீராக ; மலர்தல் உடைய நீண்ட மலர்மேல் உறைவானாகிய பிரமனோடு கடல்வண்ணனாகிய திருமாலுமாய்ப் பணிவார்கள் .

குறிப்புரை :

ஔவ தன்மையவரவர் - அந்தந்தத்தன்மையை யுடையவர் . வெவ்வதன்மையன் - கொடியவன் . என்பது ஒழிமின் - என்று கூறுவதைத் தவிருங்கள் . மௌவல் நீள்மலர்மேல் உறைவான் - தாமரை மலரில் உறையும் பிரமன் . முல்லை போலும் வெண்டாமரை மலர் . பவ்வ வண்ணன் - கடல் வண்ணனாகிய திருமால் .

பண் :

பாடல் எண் : 14

அக்கு மாமையும் பூண்டன லேந்தியில்
புக்குப் பல்பலி தேரும் புராணனை
நக்கு நீர்கள் நரகம் புகேன்மினோ
தொக்க வானவ ராற்றொழு வானையே.

பொழிப்புரை :

அக்கமணிகளும் ஆமையும் அணிந்து தீயை ஏந்தி இல்லங்கள்தோறும் புகுந்து பல பலிதேறும் பழமை உடையவனும் , தொகுத்த தேவர்களால் தொழப்படுவானுமாகிய இறைவனை விரும்பி நீங்கள் நரகத்துப்போகாமல் நற்பேறு அடைவீராக .

குறிப்புரை :

அக்கு - அக்குமணிமாலை , என்புமாம் . அஃகு என்ற ஆய்தக்குறியீடு . இல் புக்கு - பல வீடுகளுக்கும் சென்று . பல்பலி - பலவகையான பிச்சைகள் . தேரும் - ஆராய்ந்து கொள்ளும் . புராணன் - பழையவன் . நக்கு - இகழ்ந்து ; சிரித்து . புகேன் மின் - புகாதீர்கள் . தொக்க வானவர் - கூட்டமாய்க்கூடிய தேவர்களால் .

பண் :

பாடல் எண் : 15

கங்கை தங்கிய செஞ்சடை மேலிளந்
திங்கள் சூடிய தீநிற வண்ணனார்
இங்க ணாரெழில் வானம் வணங்கவே
அங்க ணாற்கது வாலவன் தன்மையே.

பொழிப்புரை :

அழகிய கண்ணராகிய கங்கை தங்கிய சிவந்த சடையின்மேல் இளம் பிறையினைச் சூடிய தழல்வண்ணர் ; இமைக்காத கண்ணை உடைய எழில் உடைய வானகத்துள்ளோர் வணங்க உள்ளார் ; அதுவே அவர் தன்மை .

குறிப்புரை :

தீ நிறவண்ணன் - சிவந்த நிறத்தையுடையவன் . இங்க ணார் - இங்கு எளிதில் வருபவர் ; இவ்வுலகில் அருள் வழங்க எழுந்தருளியிருப்பர் . எழில் வானம் - அழகிய வானுலக மக்கள் . அங்கணாற்கு - அங்கணனுக்கு ; அவன் தன்மை அது என்க . ஆல் - அசை .

பண் :

பாடல் எண் : 16

ஙகர வெல்கொடி யானொடு நன்னெஞ்சே
நுகர நீயுனைக் கொண்டுயப் போக்குறில்
மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
புகரில் சேவடி யேபுக லாகுமே.

பொழிப்புரை :

நல்ல நெஞ்சே ! வெல்லும் கொடி உடையானோடு நுகர்தற்கு நீ உன்னைக்கொண்டு உய்யப்போதலுற்றால் , மீனாகிய வெல்லும் கொடி உடைய மன்மதனைச் சினந்தவனாகிய பெருமானின் குற்றமற்ற சேவடியே தஞ்சப்பொருளாகும் .

குறிப்புரை :

ஙகரவெல் கொடியான் - இடபக்கொடியான் . படுத்திருக்கும் வடிவில் இடபம் ங போன்றிருத்தலின் ஙகரவெல்கொடியான் என்றார் . நுகர - போகம் பலவற்றையும் அனுபவிக்க . உய்யப்போக்குறில் - வாழ்விக்கச் செலுத்துவாயேயானால் . மகர வெல்கொடி - மகர மீன் பொருந்திய முற்றத்துறந்தாரையும் வெற்றி காணும் கொடி . வெல் கொடி , வினைத்தொகை . மைந்தன் - இளையனாகிய காமன் . காய்ந்தவன் - எரித்தவன் . புகரில் - குற்றமற்ற . புகலாகும் - அடைக்கலமாம் இடமாகும் .

பண் :

பாடல் எண் : 17

சரண மாம்படி யார்பிற ரியாவரோ
கரணந் தீர்த்துயிர் கையி லிகழ்ந்தபின்
மரண மெய்திய பின்னவை நீக்குவான்
அரண மூஎயில் எய்தவ னல்லனே.

பொழிப்புரை :

புகலடையத்தக்கவர் பிறர் யாவர் ? செயலற்று உயிர் இறக்கும்போது நம் வினைக்குற்றங்களைத் தீர்த்து அருள்பவன் வேறு யாவன் ? அரணமைந்த மூன்று கோட்டைகளையும் அழித்தவன் அல்லனோ ?

குறிப்புரை :

சரணமாம் படியார் - திருவடிகளில் அடைக்கலமாக அடைதற்குரிய தன்மையினர் ; பிறர்யாவர் என்க . சிவபெருமானைத் தவிரப் பிறர் யார் உள்ளனர் . கரணம் - அந்தக்கரணங்கள் . கையில் இகழ்ந்தபின் - கைவிட்டபின் . நவை - வினைக்குற்றங்கள் . அரண மூஎயில் - அரணமைந்த மூன்று கோட்டைகள் .

பண் :

பாடல் எண் : 18

ஞமனென் பான்நர கர்க்கு நமக்கெலாம்
சிவனென் பான்செழு மான்மறிக் கையினான்
கவனஞ் செய்யுங் கனவிடை யூர்தியான்
தமரென் றாலுங் கெடுந்தடு மாற்றமே.

பொழிப்புரை :

நரகர்க்கெல்லாம் ஞமனாகியும் , நமக்கெல்லாம் சிவன் எனப்படுவானாகியும் உள்ளவனும் , மான்குட்டி உடைய கையினனும் , விரைந்து செல்லும் பெருமைமிக்க இடப ஊர்தி உடையவனும் ஆகிய பெருமானின் தமர் என்றாலும் தடுமாற்றம் கெடும் .

குறிப்புரை :

நரகர்க்கு - மக்களில் இழிந்தவர்க்கு . எமன் என்பான் - இயமனாக இருப்பவன் . மான்மறி - மான்குட்டி . கவனம் - வேகநடை . கனவிடை - பெரிதாய எருது . ஊர்தி - வாகனம் . தமர் என்றாலும் - பெருமானுடைய சுற்றத்தினர் என்று கூறினாலும் . தடுமாற்றம் கெடும் - ஐயுறவு நீங்கும் .

பண் :

பாடல் எண் : 19

இடப மேறியு மில்பலி யேற்பவர்
அடவி காதலித் தாடுவ ரைந்தலைப்
படவம் பாம்பரை யார்த்த பரமனைக்
கடவி ராய்ச்சென்று கைதொழு துய்ம்மினே.

பொழிப்புரை :

இடபத்தின்மீது ஏறியும் , இல்லங்கள்தோறும் பலி ஏற்பவரும் , சுடுகாட்டினை விரும்பி ஆடுபவரும் , ஐந்தலை உடைய படர்ந்த பாம்பினை அரைக்கண் ஆர்த்தவரும் ஆகிய பரமனை வணங்கும் கடப்பாடுடையீராய்ச் சென்று கைதொழுது உய்வீராக .

குறிப்புரை :

இல்பலி - வீடுகளிற் பிச்சை . ஏற்பவர் - கொள்பவர் . அடவி - இடுகாடு . ஐந்தலைப் படவம் - ஐந்து தலைப்படங்களை உடைய . அரை ஆர்த்த - இடையிலே கட்டிய . கடவிராய் - கடமை உடையவராக .

பண் :

பாடல் எண் : 20

இணர்ந்து கொன்றைபொன் தாது சொரிந்திடும்
புணர்ந்த வாளர வம்மதி யோடுடன்
அணைந்த அஞ்சடை யானவன் பாதமே
உணர்ந்த வுள்ளத் தவருணர் வார்களே.

பொழிப்புரை :

கொத்தாகிய கொன்றை பொன் போன்ற மகரந்தத் தூளினைச் சொரிந்திடும் இயல்பினதும் , பொருந்திய வாள்போன்ற பாம்பும் மதியினுடன் அணைந்ததுமாகிய அழகிய சடையுடைய பெருமான் திருவடிகளை உணர்ந்த உள்ளத்தவரே உணர்வர் .

குறிப்புரை :

இணர்ந்து - கொத்துக்களாய் மலர்ந்து . தாது - மகரந்தம் . புணர்ந்த - கூடிய . வாளரவம் - ஒளியோடு கூடிய பாம்பு . அம்சடை - அழகிய சடை .

பண் :

பாடல் எண் : 21

தருமந் தான்தவந் தான்தவத் தால்வரும்
கருமந் தான்கரு மான்மறிக் கையினான்
அருமந் தன்ன அதிர்கழல் சேர்மினோ
சிரமஞ் சேரழல் தீவினை யாளரே.

பொழிப்புரை :

தொல்லைகள் சேர்ந்த அழலும் தீவினை யாளர்களே ! தானே தருமமாகவும் , தானே தவமாகவும் , தானே தவத்தால்வரும் செயலாகவும் உள்ள வலிய மான்குட்டியைக் கையில் உடைய பெருமானது , அரிய மருந்து போன்ற ( அமிர்தம் ) ஒலிக்கும் கழலணிந்த திருவடிகளைச் சேர்வீராக .

குறிப்புரை :

தருமம் , தவம் , கருமம் , முதலியனவாய் இருப்பவன் . கருமம் - செயல் . கருமான்மறி - வலிய மான்குட்டி . அருமருந்தன்ன என்பது அருமந்தன்ன என்றாயது . அதிர் - ஒலிக்கின்ற . சிரமம்சேர் அழல் தீவினை - வருத்தத்தைத் தரும் நெருப்புப் போன்ற தீய வினைகள் .

பண் :

பாடல் எண் : 22

நமச்சி வாயவென் பாருள ரேலவர்
தமச்ச நீங்கத் தவநெறி சார்தலால்
அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கைய னாகிலும்
இமைத்து நிற்பது சால அரியதே.

பொழிப்புரை :

நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர் தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும் .

குறிப்புரை :

அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையர் - செப்பமா யமைந்த வாழ்க்கையுடையவர் . இமைத்து நிற்பது - வாழ்வது . சால - மிகவும் .

பண் :

பாடல் எண் : 23

பற்பல் காலம் பயிற்றிப் பரமனைச்
சொற்பல் காலநின் றேத்துமின் தொல்வினை
வெற்பில் தோன்றிய வெங்கதிர் கண்டவப்
புற்ப னிக்கெடு மாறது போலுமே.

பொழிப்புரை :

பரமனைப் பலப்பல காலங்கள் பயிற்றிச் சொற்களால் பல காலம் நின்று ஏத்துவீராக ! உம் பழைய வினைகள் உதயகிரியில் தோன்றிய சூரியனைக்கண்ட அழகிய புல் நுனியில் உள்ள பனித்துளிகள் கெடுமாறு கெடும் .

குறிப்புரை :

பற்பல்காலம் - பலப்பலகாலம் . பயிற்றி - சொல்லி . சொற்பல்காலம் - புகழ்ச் சொற்களால் பலகாலம் . தொல்வினை - பழவினை . வெற்பில் - உதயகிரியில் . வெங்கதிர் - சூரியன் . புற்பனி - புல்லின் முனையில் உள்ள பனித்துளிகள் .

பண் :

பாடல் எண் : 24

மணிசெய் கண்டத்து மான்மறிக் கையினான்
கணிசெய் வேடத்த ராயவர் காப்பினால்
பணிகள் தாஞ்செய வல்லவர் யாவர்தம்
பிணிசெ யாக்கையை நீக்குவர் பேயரே.

பொழிப்புரை :

கரியமணிபோலும் கண்டத்தை உடையவரும் , மான்குட்டியை உடைய கையினரும் , கருதிச் செய்கின்ற வேடம் உடையவராகிய அவர் காத்தருள்வதால் பணிகளைச் செய்ய வல்லவர்களே நல்லோர் ; அவ்வாறு புரியாது நோய் செய்யும் உடம்பை வீணே கழிப்பவர் பேயர் .

குறிப்புரை :

மணிசெய் கண்டம் - நீலமணியின் நிறத்தைச் செய்யும் கழுத்து . காப்பினால் - காத்தல் தொழில் மேற்கொண்டதால் . பணிகள் - அடியார்களின் இருவினை நீக்கும் செயல்கள் . பேயர் - சிவகணத்தார் .

பண் :

பாடல் எண் : 25

இயக்கர் கின்னர ரிந்திரன் தானவர்
நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான்
மயக்க மெய்தவன் மாலெரி யாயினான்
வியக்குந் தன்மையி னானெம் விகிர்தனே.

பொழிப்புரை :

வியக்கும் தன்மை உடையவனாகிய எம் மேலோன் , இயக்கர் , கின்னரர் , இந்திரன் , தானவர் முதலியோர் விரும்ப நின்றவனும் , பிரமனும் திருமாலும் மயக்கம் எய்த வன்மை உடைய பேரெரிவடிவமாயினான் .

குறிப்புரை :

இயக்கர் - கந்தருவர் . கின்னரர் - அசுவமுகமும் நரசரீரமும் உள்ளவர் . கின்னரம் என்னும் வாத்தியத்தை வாசிப்பவர் . தானவர் - அசுரர் . நயக்க - விரும்ப . ஆழியான் - சக்கிராயுதத்தை உடையவன் . மயக்கம் எய்தவன் - அடிமுடி காணாது மயங்கச் செய்தவன் . மால்எரி - பெரிய நெருப்பு . விகிர்தன் - வேறுபாடில்லாதவன் .

பண் :

பாடல் எண் : 26

அரவ மார்த்தன லாடிய அண்ணலைப்
பரவு வாரவர் பாவம் பறைதற்குக்
குரவை கோத்தவ னுங்குளிர் போதின்மேல்
கரவில் நான்முக னுங்கரி யல்லரே.

பொழிப்புரை :

பாம்பினைக்கட்டி அனலோடு ஆடிய அண்ணலை வணங்குவோர் பாவம் கெடுதற்குக் குரவைக் கூத்து ஆடியவனாகிய திருமாலும் , குளிர்தாமரையின் மேல் கரத்தலில்லாத பிரமனும் சான்றாவார் அல்லரோ ?

குறிப்புரை :

அரவம் - பாம்பு . ஆர்த்த - கட்டிய . மறைதற்கு - நீங்குதற்கு . குரவை - பேயோடு கைகோர்த்து ஆடும் திருமால் கூத்து . குளிர்போதின்மேல் - குளிர்ந்த தாமரைப்பூவின் மேல் ( உறையும் ). கரவில் - வஞ்சனையில்லாத ; கரியல்லர் - சாட்சியாவார் இல்லை .

பண் :

பாடல் எண் : 27

அழலங் கையினன் அந்தரத் தோங்கிநின்
றுழலும் மூவெயி லொள்ளழ லூட்டினான்
தழலுந் தாமரை யானொடு தாவினான்
கழலுஞ் சென்னியுங் காண்டற் கரியனே.

பொழிப்புரை :

இறைவன் அழலை அழகிய கையிற்கொண்டவனும் , வானில் ஓங்கி நின்று திரியும் மூன்று மதில்களையும் ஒள்ளழல் ஊட்டியவனும் , எரியென மலரும் தாமரையிலுள்ள பிரமனோடு திருமாலும் பறந்தும் தாவியும் தன் கழலடிகளையும் சென்னியையும் காண்டற்கரியவனுமாவான் .

குறிப்புரை :

அழல் அம்கையினன் - நெருப்பை ஏந்திய அழகிய கையையுடையவன் . அந்தரத்து - ஆகாயத்தில் . ஓங்கி நின்று - உயர்ந்து பறந்து நின்று . உழலும் - திரியும் . தழலும் - நெருப்புப்போல் சிவந்திருக்கும் . தாமரையானொடு - திருமாலோடு . தாவினான் - அன்னமாய்ப் பறந்து சென்ற பிரமன் . கழல் - திருவடி .

பண் :

பாடல் எண் : 28

இளமை கைவிட் டகறலு மூப்பினார்
வளமை போய்ப்பிணி யோடு வருதலால்
உளமெ லாமொளி யாய்மதி யாயினான்
கிளமை யேகிளை யாக நினைப்பனே.

பொழிப்புரை :

இளமை கைவிட்டு நீங்குதலும் உடல் வளமையெல்லாம் கெட்டுப் பிணியோடு மூப்பு வருதலால் , உள்ள மெல்லாம் ஒளியாகி மதியாகிய பெருமானின் உரிமையையே உறவாக யான் நினைப்பேன் .

குறிப்புரை :

அகறலும் - நீங்கியதும் . மூப்பினார் - முதுமையை உடையவராய் . இகழ்ச்சி குறித்த பன்மை . வளமைபோய் - உடல் வளம் கெட்டு . பிணியோடு - நோயோடு . மதியாயினான் - அறிவின் வடிவமானவன் . கிளமையே கிளையாக நினைப்பன் - அவ்வுறவையே உறவாக எண்ணுபவன் .

பண் :

பாடல் எண் : 29

தன்னிற் றன்னை யறியுந் தலைமகன்
தன்னிற் றன்னை யறியில் தலைப்படும்
தன்னிற் றன்னை யறிவில னாயிடில்
தன்னிற் றன்னையுஞ் சார்தற் கரியனே.

பொழிப்புரை :

தன்னில் தன்னை அறியும் தலைமகனாகிய இறைவன் தன்னில் ஒருவன் தன்னையறிந்தால் தலைப்படுவான் ; தன்னில் தன்னை அறியும் அறிவிலனாகில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரிய இயல்பினன் ஆவன் .

குறிப்புரை :

தன்னில்தன்னை - தன்னுடைய உடலில் இறைவனை . அறியில் - அறிவார்களேயானால் . தலைப்படும் - அவரவர் உள்ளத்தில் இடம்பெறுவான் . அறிவிலனாய்விடில் - அங்ஙனம் ஒருவன் அறியா தொழிவானேயானால் . தன்னில் தன்னையும் சார்தற் கரியன் - நம்மிடமுள்ள பெருமானை அடைதற்கு அரியவனாவான் .

பண் :

பாடல் எண் : 30

இலங்கை மன்னனை யீரைந்து பத்துமன்
றலங்க லோடுட னேசெல வூன்றிய
நலங்கொள் சேவடி நாடொறும் நாடொறும்
வலங்கொண் டேத்துவார் வானுல காள்வரே.

பொழிப்புரை :

இராவணனைப் பத்துத் தலைகளும் அன்று அணிந்திருந்த மாலைகளோடு உடனே கெட ஊன்றிய நலம் உடைய பெருமான் சேவடிகளை நாள்தோறும் வலம்கொண்டு வழிபடுவார் வானுலகினை ஆள்வர் .

குறிப்புரை :

ஈரைந்து பத்தும் - இருபது தோள்களும். நாடொறும் - தினந்தோறும். தினந்தோறும் வணங்குதலின் இன்றியமையாமை குறித்தது.
சிற்பி