பொது


பண் :

பாடல் எண் : 1

பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்
ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல்
மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின்
காவ லாளன் கலந்தருள் செய்யுமே.

பொழிப்புரை :

பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே ! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக ; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான் .

குறிப்புரை :

பாவமும் பழி பற்று - பாவமும் பழி பற்றியிருத்தலும் . அற - நீங்க . வேண்டுவீர் - விரும்புகின்றவர்களே . ஆவில் அஞ்சு - பசுவிடம் உண்டாவனவாய பஞ்சகவ்வியம் . உகந்து - மகிழ்ந்து . ஆடும் - அபிடேகம் கொள்ளும் . கழல் - திருவடிகளை . மேவராய் - விரும்புபவராய் . உள்குமின் - நினையுங்கள் . காவலாளன் - காத்தல் செய்பவனாய அப்பரமன் . கலந்து - நம்மோடு உடனாய் நின்று .

பண் :

பாடல் எண் : 2

கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
ஒங்கு மாகட லோதநீ ராடிலென்
எங்கு மீச னெனாதவர்க் கில்லையே.

பொழிப்புரை :

கங்கை நீராடிலும் , காவிரியில் நீராடிலும் , மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும் , பெருகி ஒலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன் ? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

கொங்கு - மணம் நிறைந்த . ஓங்கு என்பதன் குறுக்கல் ஒங்கு . மா - பெரிய . ஓதநீர் - அலைநீர் . ஈசன் ஒருவன் இருக்கின்றான் அவனருள்பெற இத்தீர்த்தமாடுகின்றோம் என்று எண்ணாதவர்க்கு அத்தீர்த்தமாடுவதால் விளையும் பயன் இல்லை .

பண் :

பாடல் எண் : 3

பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென்
இட்டு மட்டியு மீதொழில் பூணிலென்
எட்டு மொன்று மிரண்டு மறியிலென்
இட்ட மீச னெனாதவர்க் கில்லையே.

பொழிப்புரை :

பட்டர் ஆயினும் , சாத்திரங்கள் பல கேட்பினும் , இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும் , எட்டும் ஒன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன் ? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

குறிப்புரை :

பட்டர் - குருக்கள் . இட்டும் - கொடைத்தொழில் செய்தும் . அடுதல் - விருந்து சமைத்தல் . ஈதொழில் - அடியார்களுக்குக் கொடுக்கும் தொழில் . பூணில் என் - மேற்கொண்டால் என்ன . எட்டும் அதனோடு ஒன்றும் இரண்டும் என்க . இட்டம் ஈசன் எனாதவர்க்கு - விருப்பம் ஈசனிடத்து உண்டு என்று சொல்லாதவர்க்கு .

பண் :

பாடல் எண் : 4

வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென்
நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென்
ஓதி யங்கமோ ராறு முணரிலென்
ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

வேதம் ஓதினாலும் , வேள்விகள் செய்தாலும் , நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும் , ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன் ? ஈசனை உள்குபவர்க்கு அன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம் .

குறிப்புரை :

நித்தல் - நாடோறும் . பயிற்றில் என் - பயின்றால் என்ன பயன் விளைக்கும் . இல்லை - அருள் இல்லை என்க .

பண் :

பாடல் எண் : 5

காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென்
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்
ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென்
ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

காலையில் சென்று கலந்து நீரில் மூழ்கினாலும் , வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும் , ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன் ? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

காலை சென்று - சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னுள்ள காலைப்போதிலேயே சென்று . கலந்து - தண்ணீரோடுகூடி . வேலைதோறும் - இடந்தோறும் . விதிவழி - நீதி நூல் வழியே . நிற்கில்என் - ஒழுகினால் விளையும் பயன்யாது ? ஆலை - வேள்வி செய்யுமிடம் . ஏல - மனம்பொருந்த .

பண் :

பாடல் எண் : 6

கான நாடு கலந்து திரியிலென்
ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென்
ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென்
ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே.

பொழிப்புரை :

காட்டுப் பகுதிகளிற் கலந்து திரிந்தாலும் , இழி வின்றிப் பெருந்தவம் செய்தாலும் , ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன் ? ஞானமயமாகியவன் என்பவர்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை .

குறிப்புரை :

கானநாடு - காடும் நாடும் . கலந்து மாறிமாறிக் கூடி . திரியிலென் - க்ஷேத்திராடனம் புரிவதால் என்ன பயன் விளையும் . ஈனம் - குற்றம் . இரும் - பெரிய . ஊனை உண்டல் ஒழிந்து - ஊனுண்டலை விடுத்து . வான் நோக்கிலென் - மேலுலக ஆராய்ச்சியில் ஈடுபட்டால் என்ன பயன் ? ஞானன் - ஞானவடிவினன் .

பண் :

பாடல் எண் : 7

கூட வேடத்த ராகிக் குழுவிலென்
வாடி யூனை வருத்தித் திரியிலென்
ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப்
பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே.

பொழிப்புரை :

வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும் , உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன் ? ஆடல்வேடத்தை உடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை .

குறிப்புரை :

கூட வேடம் - தாழ்வை மறக்கக்கூடிய வேடம் . குழுமிலென் - கூடினால் என்ன பயன் விளையும் . வாடி - மெய்வருந்தி . ஊன் - மாமிசம் . வருத்தி - இறக்கும்படி வருத்தி உண்டு . ஆடல் வேடத்தன் - ஆடுகின்ற தோற்றமுடையவன் . பாடலாளர்க்கு அல்லால் - பாடுபவர்களுக்கேயல்லாமல் .

பண் :

பாடல் எண் : 8

நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென்
குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலென்
சென்று நீரிற் குளித்துத் திரியிலென்
என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே.

பொழிப்புரை :

நன்கு தவம்நோற்றாலும் , உண்ணாவிரதம் கிடப்பினும் , மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும் , சென்று நீரிற் குளித்துத் திரிந்தாலும் என்ன பயன் ? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி மற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை .

குறிப்புரை :

நோற்றல் - தவம் செய்தல் . குன்றம் - மலை . இருந்தவம் - பெரியதவம் .

பண் :

பாடல் எண் : 9

கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை
ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல்
ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி
மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே.

பொழிப்புரை :

கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின் . ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக் குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஒருவனின் செயலோடே அது ஒக்கும் .

குறிப்புரை :

கோடி - பலவாய எண்ணிற்கு ஓர் வரையறை . பல என்பது பொருள் . ஓடும் நீரினை - ஓடும் தண்ணீரை . அட்டி - அள்ளி முகந்து . மூர்க்கன் - அறிவில்லாதவன் .

பண் :

பாடல் எண் : 10

மற்று நற்றவஞ் செய்து வருந்திலென்
பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக்
குற்ற நற்குரை யார்கழற் சேவடி
பற்றி லாதவர்க் குப்பய னில்லையே.

பொழிப்புரை :

மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன் ? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை .

குறிப்புரை :

பொற்றை - மலை. இங்கே கயிலையைக் குறித்தது. உடல் புக்குஇற - உடல் அகப்பட்டு நெரிய. நற்குரையார் கழல் - நல்ல ஒலி பொருந்திய வீரக்கழல்.
சிற்பி