பொது


பண் :

பாடல் எண் : 1

வேத நாயகன் வேதியர் நாயகன்
மாதின் நாயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக னாதிரை நாயகன்
பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே.

பொழிப்புரை :

வேதங்களுக்கு நாயகனும் , வேதியர்க்கு நாயகனும் , உமாதேவியின் நாயகனும் , பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும் , ஆதிநாயகனும் , ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும் , பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான் .

குறிப்புரை :

வேதநாயகன் - வேதங்களின் தலைவன் . வேதியர் - வேதம் ஓதுபவர் . மாது - பார்வதி . மாதவர் - சிறந்த தவத்தைச் செய்பவர்கள் . ஆதிநாயகன் - எல்லார்க்கும் முதன்மையான தலைவன் . ஆதிரை நாயகன் - திருவாதிரைநட்சத்திரத்திற்குரியவன் . பூதநாயகன் - பூதகணங்களுக்குத் தலைவன் . இப்பாடல் தி .5 ப .73 பா .7 ஆம் பாடலோடு ஒத்திருக்கிறது .

பண் :

பாடல் எண் : 2

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று
பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ
அத்த னென்றரி யோடு பிரமனும்
துத்தி யஞ்செய நின்றநற் சோதியே.

பொழிப்புரை :

மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்திசெய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதி செய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ ?.

குறிப்புரை :

தே என்று - தெய்வத்தன்மையுடையது என்று . பத்தி செய் - சுவர்க்கபோகங்களை அநுபவிக்க விரும்பிப் பக்தி செய்யும் . மனப்பாறைகளுக்கு - பாறைபோன்ற கல் மனம் உடையவர்க்கு . ஏறுமோ - என்சொல் காதில் ஏறுமோ . அத்தன் - தலைவன் . துத்தியம் செய - துதிக்க . துத்யம் - துதிக்கும்பாட்டு .

பண் :

பாடல் எண் : 3

நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயண ரங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர்
ஈறி லாதவன் ஈச னொருவனே.

பொழிப்புரை :

நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர் ; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள் ; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ் வண்ணமே ; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே .

குறிப்புரை :

நூறுகோடி ஆறுகோடி என்பன - பல என்பதற்குச் சொல்லிய எண்ணிக்கை . நொந்தினார் ( நுங்கினார் என்றும் பாடம் ) - அழிந்தனர் . ஆறுகோடி - பல . அங்ஙனே - அவ்வாறே அழிந்தனர் . ஏறு - மிக்க . இந்திரன் கங்கை மணலை எண்ணில் எத்துணையாகுமோ அத்துணையோர் இறந்தனர் . ஈறு இலாதவன் - அழிவு இல்லாதவன் .

பண் :

பாடல் எண் : 4

வாது செய்து மயங்கும் மனத்தராய்
ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள்
யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம்
மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே.

பொழிப்புரை :

அறிவற்றவர்களே ! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும் , யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை .

குறிப்புரை :

வாது - சொல்வாதம் . மயங்கும் - பொய்யை மெய் என்று எண்ணும் . ஏது சொல்லுவீராகிலும் - பொருந்தாத மொழிகளை உண்மை போலச் சொல்லுதல் முதலான எவ்வார்த்தைகளைச் சொல்லுபவர்கள் ஆனாலும் . ஏழைகாள் - அறிவற்றவர்களே . யாதோர் தேவர் எனப்படுவார்க்கெலாம் மாதேவன் அலால் தேவர் மற்றில்லையே - ` யாதொரு தெய்வங்கொண்டீர் அத்தெய்வமாகி யாங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் ` என்னும் சித்தியார் வாக்கோடு ஒப்பிட்டுணர்க .

பண் :

பாடல் எண் : 5

கூவ லாமை குரைகட லாமையைக்
கூவ லோடொக்கு மோகட லென்றல்போல்
பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால்
தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே.

பொழிப்புரை :

கிணற்றாமை கடலாமையை நோக்கி இக் கிணற்றோடொக்குமோ கடல் ? என்று கூறுதலைப்போன்று தேவ தேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர் .

குறிப்புரை :

கூவல் - கிணறு . குரை - ஒலிக்கின்ற . பாவகாரிகள் - பாவச்செயல் செய்பவர்கள் . பார்ப்பரிது - இறைவனது தன்மையைக் காணுதல் முடியாது .

பண் :

பாடல் எண் : 6

பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க்
கீவ னையிமை யோர்முடி தன்னடிச்
சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல்
சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே.

பொழிப்புரை :

பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும் , வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும் , தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும் , தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள் .

குறிப்புரை :

பேய்வனம் - இடுகாடு . ஈ வன் - ஈ பவன் என்பதன் இடைக்குறை . அடிச்சாய்வன் - அடியில் சாயப்பெற்றவன் . சலவார்கள் - வஞ்சனையுடையவர்கள் . உடல் சீவன் - உடலைச் சீவன் உண்ணின்றியக்குதல் போல அவர்களுக்குள் நின்று ஆட்கொள்ளுபவன் .

பண் :

பாடல் எண் : 7

எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன
துருவ ருக்கம தாவ துணர்கிலார்
அரிய யற்கரி யானை யயர்த்துபோய்
நரிவி ருத்தம தாகுவர் நாடரே.

பொழிப்புரை :

வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள் ; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர் .

குறிப்புரை :

எரி - வேள்வித்தீ . உருவருக்கம் - இறைவன் அட்ட மூர்த்தவர்க்கங்களில் தீ ஒன்றாதல் . நரி விருத்தமதாகுதல் - நரியின் எண்ணம்போன்று பயனற்றதாதல் . ` நரிவரால் கௌவச்சென்று நற்றசையிழந்ததொக்கும் `. ( தி .4. ப .27. பா .5).

பண் :

பாடல் எண் : 8

அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில்
அருக்க னாவா னரனுரு வல்லனோ
இருக்கு நான்மறை யீசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.

பொழிப்புரை :

அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர் ; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள் .

குறிப்புரை :

அருக்கன் - சூரியன் . அரனுரு - அட்டமூர்த்த வடிவங்களில் ஒன்று .

பண் :

பாடல் எண் : 9

தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர்
ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார்
பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய
மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே.

பொழிப்புரை :

பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர் .

குறிப்புரை :

அமுது - அன்பராயவர் உள்ளத்து ஊறும் இறைவன் திருவருள் . மாயன் - திருமால் .

பண் :

பாடல் எண் : 10

அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள்
பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை
அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர்
கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே.

பொழிப்புரை :

கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள் , இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர் .

குறிப்புரை :

அரட்டு - துட்டச்செயல் . அருத்தி - அன்பு . கயவக் கணம் - கீழ்மக்கட்கூட்டம் .
சிற்பி