திருஆமாத்தூர்


பண் :

பாடல் எண் : 1

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

காபாலக் கூத்தாடும் தலைமையை உடைய பெருமான் தாளத்தொடு பொருந்தப்பாடும் இசைகள் பாடிக் கொண்டு வந்து நின்று வற்புறுத்தி நம்வளைகளைக் கவர்ந்தவராய், நாம் மனம் நெகிழும் வகையாலே நம்மைத் தம் கண்களாகிய அம்புகளாலே துன்புறுத்திக் காமத்தீ மூண்டெழுமாறு பேசி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, பலவகை நறுமணப் பொடிகளையும் செறிவாகப் பூசிக்கொண்டு, விலங்குகளின் தோலை உடுத்துப் பூணூல் அணிந்து, தம் பேரழகு தோன்றச் செல்கின்றார். ஆமாத்தூர்த் தலைவராகிய அவர் அழகினை வந்து காணுங்கள்.

குறிப்புரை :

வண்ணங்கள்- தாளத்தொடு பொருந்தப் பாடும் இசைகள். இவற்றை இசை நூலார், `திறம்` என்ப. வலி செய்தல்- வலாற்காரம் செய்தல். அஃது இவ்வாறென்பது அடுத்துக் கூறப் படுகின்றது. ``வகையால்``, `நாம் மனம் நெகிழும் வகையால்` என்க. கனல-காமத்தீ மூண்டெழுமாறு. கண்ணம்பால் எய்தமையும், கனலப் பேசினமையுமே வலாற்காரஞ் செய்தனவென்க. சுண்ணங்கள்- வெண்பொடிகள் (சாம்பர்கள்). பொடியாயின பொருள்கள் பலவாகலின், பொடிகளும் பலவாயின. துதைய-நெருங்க; `திருமேனி மூழ்க` என்றவாறு. தோன்றுவது திருவுருவமாகக் கொள்க. அடுக்கு மிகுதி பற்றி வந்தது; `நன்கு தோன்ற` என்றபடி. அண்ணலார்- தலைவர்; தந்நிகரில்லாதவர். ``அண்ணலார்`` என்புழி `ஒருவர்` என்பது வருவிக்க. அழகியர்-நல்லியல்புடையவர். ஏகாரம் தேற்றம். ``கண் அம்பால் நின்றெய்து கனலப்பேசி..... போகின்றார் வந்து காணீர்`` என்றது, `வஞ்சித்து வரையாது நீங்குகின்றார்; இதனை நீவிர் காண்மின்கள்` என்னுங் கருத்தினாலாகலின், `அண்ணலார்` என்றதும், `அழகியரே` என்றதும் குறிப்பினாற் கூறிய நகைமொழியாதலறிக. பன்மையாற் கூறியதும் அது பற்றி. `வந்து காணீர்`` என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. காண்போர் தடுத்து நிறுத்துவாராதல் பயன், `மற்றுப் பற்றறுத்துத் தம்மையே பற்றாகப் பற்றுமாறு ஆண்டுகொண்ட அடியவர்களது பற்றினை முற்றுங் களையாது தளரவிடுகின்றார்; `இஃது இவர்க்குத் தக்கது போலும்!` என்பது உண்மைப் பொருள். இதனை,
``சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை யடிமைசெய்ய
எந்தைநீ யருளிச்செய்யாய் யாதுநான் செய்வதென்னே.``
(தி.4. ப.23. பா.4)
எனவும்.
``நின்னையெப் போதும் நினையவொட் டாய் நீ நினையப்புகின்
பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி.``
(தி.4. ப.112. பா.4)
எனவும் தம் நிலைக்கு இரங்கியும்,
``உன்னைஎப் போதும் மறந்திட் டுனக்கினி தாவிருக்கும்
என்னைஒப் பாருள ரோசொல்லு வாழி இறையவனே``
என, தம்மைத் தாமே நகைத்தும் அருளிச்செய்தன போன்ற திரு மொழிகள் நோக்கியுணர்க. இவையெல்லாம் வருகின்ற திருப்பாடல் கட்கும் ஒக்கும். ஐயனார்-முதல்வனார்.

பண் :

பாடல் எண் : 2

வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை
விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்
கந்தாரந் தாம்முரலாப் போகா நிற்கக்
கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன்
நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு
நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்
அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்
ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே.

பொழிப்புரை :

தீயிலிடப்பட்டு வெந்து போனவர் தம் வெள்ளிய சாம்பலைப் பூசி, வெண்ணிற மாலையைப் பரந்த சடையில் சூடி, வீணை ஏந்திக் காந்தாரப் பண்ணைப் பாடிக்கொண்டு எம்பெருமான் சென்று கொண்டிருக்க, அவரை நோக்கி `விடக்கறை வெளிப்பட்ட நீலகண்டரே! நும்ஊர் யாது?` என்று வினவினேன். பசியினால் வருந்தியவரைப் போல வந்து என் வீட்டினுள் புகுந்து `அசைகின்ற அழகிய இடையினை உடைய இளையவளே! அழகிய தாமரை மலர்மேல் வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் ஆமாத்தூரே நம்மூர்` என்று சொல்லிப் பெருமான் போய்விட்டார்.

குறிப்புரை :

வெந்தார் - வெந்தவரது. வெள்ளை மாலை, கொக்கிறகு ஊமத்தை முதலியவற்றாலாகிய மாலை. காந்தாரம், ஒருபண்; கந்தாரம் எனக் குறுக்கலாயிற்று. முரலுதல் - பாடுதல், `பிச்சையிடச் சென்ற யான் மனநெகிழ்வுற்று, அவர் பிச்சை ஏலாதே பாடிச் செல்லுதல் பற்றி நகைத்துரைப்பேன் போல ஊர் ஏதென்றேன்` என்க. நோதல் - பசியினாலாயது. வாயிலில் நிற்றல் முதலிய வற்றினின்று பிரித்தமையின், `இல்லே` என்னும் ஏகாரம் பிரிநிலை. `இல்லே புக்கு` என்றமையான், பிறவாற்றானும் தெளிவித்து அவளைத் தமக்கு உரியவளாக உடம்படுவித்தமை பெறப்படும். `நுடங்கு ஏர் இடை மடவாய்` என்றது நலம் பாராட்டியது. அளி வண்டு - `அளி` என்னும் பெயர்த்தாகிய வண்டு; `அளிக்கத்தக்க (இரங்கத்தக்க) வண்டு` என்பது உடனிலைப் பொருள். `அளிவண்டியாழ்செய் ஆமாத்தூர்` என்றதினின்றும், `அருள்பண்ணத் தக்கார்க்கு அருள் பண்ணுவேம் யாம்` என்னும் இறைச்சிப்பொருள் தோன்றியது. `ஆமாத்தூர் என்று போயினார்` என்றது. `ஊரேது` என்று வினாவிய எனது கருத்தினை யறிந்து அதற்கு உடம்படுவார்போல விடைகூறி, அக்கருத்தை முற்றுவியாதே போயினார் என்றபடி. கருத்து வரைந்து கோடல். `அவரைக் கூட்டுவியுங்கள்` என்பது குறிப்பெச்சம்.

பண் :

பாடல் எண் : 3

கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்
கடிய விடையேறிக் காபா லியார்
இட்டங்கள் தாம்பேசி யில்லே புக்கு
இடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்
பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்
பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம்
அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, காபாலக்கூத்தாடும் பெருமான் வேட்கையொடு பொருந்திய சொற்களைப் பேசியவாறே வீட்டிற்குள் புகுந்து வழங்கிய உணவையும் ஏற்றுக்கொள்ளாது, வீட்டை விடுத்துப் போதலையும் செய்யாது நெறிப்படாதனவும் வஞ்சனையை உடையனவுமாகிய செய்திகளையே பேசிக்கொண்டு தம்மை நோக்கும் மகளிரின் நிறை என்ற பண்பினை அழிப்பவர் போலக் காணப்படுகின்றார். வழங்கிய சிலவாகிய உணவுகளையும் ஏலாதவராய்த் தம் மனக்கருத்து இன்னது என்று வெளிப்படையாகக் கூறாதவராய் விளங்கும் ஆமாத்தூர்த் தலைவர் அழகியர்.

குறிப்புரை :

இட்டங்கள் - வேட்கையொடு பொருந்திய சொற்கள். `போவாரல்லர்` என்னும் எதிர்காலச் சொல், நிகழ்காலத்தின் கண் வந்த காலமயக்கம். பட்டிமை-நெறிப்படாமை. படிறு-வஞ்சனை. இவை இரண்டும் இத்தன்மையவான சொற்களைக் குறித்தன. `போல்கின்றார்` என்பதனை ஒப்பில் போலியாக்கி, `பரிசழிக்கின்றார்` என்றவாறாகக் கொள்க. `இடக் கொள்ளார்; பேசாநின்றார்; போல்கின்றார்` என்பன, `வந்து போகின்றானைக் கண்டேன்` என்புழி நிற்கும் நிகழ்காலச் சொற்போன்ற இறப்பில் நிகழ்வாய், `புக்கு` என்னும் செய்தெனெச்சத்தோடு இயைந்தன. பார்ப்பார்-தம்மை நோக்குவார். பரிசு - நிறை. `போல்கின்றார்` என்பதன்பின், `அதனால் யான் என் பரிசழிந்தேன்; பின்னர் வாளாபோகின்றார்` என நின்ற இசையெச்சம் வருவிக்க. அட்டிய - இட்ட. `கொள்ளார் விள்ளார்` என்றது பெயர்த்துரை. ஆண்டும், `நீங்குகின்றார்` என்பது எஞ்சி நின்றது, இவை அனைத்தையும் வினைப் பெயராக்கி, ஆமாத்தூர் ஐயனார் என்பதனோடு இயைத்து, `இவ்வாறு செய்யும் இவர் அழகியரே` என இரங்கியவாறாக உரைக்க. கொள்ளார், விள்ளார் என்பன சொல்லு வாளது குறிப்பினால் இறந்தகால மாயின வென்க.

பண் :

பாடல் எண் : 4

பசைந்தபல பூதத்தர் பாட லாடல்
படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங்
கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி
இமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர்
பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்
பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை
அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூர்த் தலைவர் படம் எடுக்கும் பாம்பைக் கச்சையாக உடுத்தித் தீப்போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத முக்கண்களை உடையவராய் நான்கு வேதங்களையும் ஓதுபவராய்த் திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராய்த் தம் உடம்பின் ஒரு பாகத்தை உமாதேவி நீங்காத தலைக்கோலத்தை உடையவராய், தெளிந்த நீரை உடைய கங்கை தங்கும் திருமுடியினராய்த் தீ ஏந்திய கையினராய், அழகியராய்க் காட்சி வழங்குகின்றார்.

குறிப்புரை :

பசைந்த - விரும்பிய. கச்சையர் என்புழி நின்ற அர் என்னும் இறுதிநிலை, பாடல் ஆடல் என்பதனோடும் இயையும். இசைந்தது-இசையச் செய்துகொண்டது. எரியினது மேனிபோலும் மேனியை, எரியின்மேனி என்றது உபசாரம். பிசைந்த - வடித்த. அசைந்த - தங்கிய. இவ்வாற்றான் அழகியரே என்க. அழகியரே என்றது, ஈண்டு, `பார்ப்பாரைப் பரிசழித்தற்கு உரியரேயாகின்றார்; அதனால், என்பரிசினையும் அழித்துச் செல்கின்றார்` என இரங்குதற் பொருட்டாய் நின்றது. இது, வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும்.

பண் :

பாடல் எண் : 5

உருளுடைய தேர்புரவி யோடும் யானை
யொன்றாலுங் குறைவில்லை யூர்தி வெள்ளே
றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்
இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்
பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்
புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ
அருளுடைய அங்கோதை மாலை மார்பர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை, என்பவற்றைக் குறைவறப் பெற்றிருப்பினும் வெள்ளிய காளையையே ஊர்தியாகக் கொண்டு, இருண்ட கழுத்தினராய், சிவந்த தீயின் நிறத்தினராய், பொருள் உடையவர் அல்லர் என்றோ பொருள் இல்லாதவர் அல்லர் என்றோ கூற முடியாத நிலையினராய்ப் புலித்தோலை உடையாக அணிந்து, பூதங்கள் தம்மைச் சுற்றி இருக்குமாறு, மாலை சூடிய மார்பினராய், அருளுடையவராய் உள்ள இமையவர்கள் வழிபட்டுத் துதிக்கும் இறைவராகிய ஆமாத்தூர்த் தலைவர் அழகியவர்.

குறிப்புரை :

ஒன்றாலும் குறைவில்லை என்புழி, ஆயினும் என்பது எஞ்சிநின்றது. பிச்சைக் கோலம் பூண்டமையின் பொருளுடையரல்லர் எனவும், இமையவர்கள் தொழுதேத்த நின்றமையின், இலரும் அல்லர் எனவுங்கூறினார்; `தானாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார் வானாள மண்ணாள வைத்து` என்றதுங் காண்க. (தி.11 கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி - 53.) அருளுடைய என்பது, மார்பர் என்பதன் இறுதிநிலையோடு முடியும். கோதை, மாலையின் வகை.

பண் :

பாடல் எண் : 6

வீறுடைய ஏறேறி நீறு பூசி
வெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்திக்
கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு
குழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து
பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்
பலிகொள்வா ரல்லர் படிறே பேசி
ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கங்கையைச் சடைமுடியில் கொண்ட எம் தலைவராகிய ஆமாத்தூர் ஐயர் நீற்றினைப் பூசிக் காதில் வெள்ளிய தோட்டினை அணிந்து இடக்கையில் வீணையை ஏந்தி இடப் பாகமாக உமாதேவியைக் கொண்டு காதுகளில் அணிந்த குழை அசையக் கொடுகொட்டிப் பறையை ஒலித்துக் கொண்டு பருந்துகள் புலால் நாற்றம் உணர்ந்து அணுகும் மண்டை ஓட்டினை ஒரு கையில் ஏந்தி, ஆற்றல் மிக்க காளையை இவர்ந்து வந்து, பிச்சைபெறாமல் வஞ்சனையாகிய சொற்களையே பேசும் அழகர் போலும்.

குறிப்புரை :

சங்கினால் ஆயினமையின், வெண்தோடாயிற்று. `இடக்கை` என்பது மெலிந்து நின்றது. இடப்பக்கத்திற்கையில் `வீணை ஏந்தி` என்றுரைத்தலுமாம். `கொடுகொட்டி` என்பது, சிவபிரான் ஆடிய ஒரு கூத்து. அஃது ஈண்டு ஆகுபெயராய் அதற்கேற்ப அடிக்கப்படும் வாச்சியத்தைக் குறித்தது. படுதலை - பட்ட (இறந்த) தலை; பட்டாரது செயல் அவர் தலைமேல் ஏற்றப்பட்டது; `பட்டதனாற் கிடைத்த தலை` எனலுமாம். ``எம் அடிகள்`` என்பதனை முதலிலும். `பலிகொள்வாரல்லர்`` என்பதனை `படிறே பேசி` என்பதன் பின்னும் வைத்துரைக்க. போலும் என்பது உரையசை. பலிகொள்வாரல்லர் என்பதற்கு, மேல், (தி.6. ப.9. பா.3.) போவாரல்லர் என்பதற்கு உரைத்தவாறே உரைக்க.

பண் :

பாடல் எண் : 7

கையோர் கபாலத்தர் மானின் தோலர்
கருத்துடையர் நிருத்தராய்க் காண்பார் முன்னே
செய்ய திருமேனி வெண்ணீ றாடித்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி
மெய்யொரு பாகத் துமையை வைத்து
மேவார் திரிபுரங்கள் வேவச் செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

கையில் மண்டை யோட்டை ஏந்தி, மான் தோல் உடுத்து, பகைவருடைய மும்மதில்களையும் தீயில் வேவச் செய்து, காண்பார் முன் கூத்தாடும் கருத்துடையவராய், தலைவராகிய பெருமான் செய்ய திருமேனியிலே வெள்ளிய நீற்றினைப் பூசித் திகழும் சிவந்த சடைமேல் திங்களைச் சூடி, உடம்பின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டு, அழகிய தோற்றத்தோடு போகின்றார். அந்த ஆமாத்தூர்த் தலைவரை வந்து காணுங்கள்.

குறிப்புரை :

கருத்து - பிச்சையேற்றலன்றி மற்றோர் எண்ணம்; அது, மகளிரை நிறையழியச் செய்தல். `நிருத்தராய்` என்புழி நின்ற `ஆய்` என்பது, `கபாலத்தர்` முதலியவற்றோடும் இயையும். `ஆடி` என்பதனை, `ஆட` எனத் திரிக்க. அன்றிச் சினைவினை முதன்மேல் நின்றதுமாம். ஆடுதல் - மூழ்குதல். சடைக்குப் புன்மை, உலகினரால் விரும்பிக் கொள்ளப்படாமை.

பண் :

பாடல் எண் : 8

ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே
றொற்றியூர் உம்மூரே யுணரக் கூறீர்
நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்
நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்
என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்
இருக்குமூ ரினியறிந்தோம் ஏகம்பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ
டழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

உமக்குக் குறை ஒன்றும் இல்லாதாகவும் காளையை வாகனமாகக் கொண்டு ஒற்றியூரை உம் ஊராகக் கொண்ட காரணத்தைக் கூறுகின்றீர் அல்லீர். ஒரு செயலும் செய்யாமல் நின்று கொண்டிருக்கின்றீர். நீர் எம்மை விடுத்துப் போகும் போது நும் நெற்றிக் கண்ணைக் காட்டி எங்கள் அடக்க குணத்தைக் கைப்பற்றிச் செல்கின்றீர். எல்லா நாள்களும் இப்படியே எங்களுக்குத் துன்பம் செய்கின்றீர். நீர் இருக்கும் ஊரை இப்போது அறிந்து விட்டோம். தலைவராகிய தாங்கள் எம்மை அழைத்துச் செல்லாமல் போகின்ற இடம் ஏகம்பமோ? ஆமாத்தூர்த் தலைவராகிய தாங்கள் எல்லா நிலையிலும் அழகியவரே.

குறிப்புரை :

``ஒன்றாலுங் குறைவில்லை`` என்பதன்பின், `என்பது ஆக` என்னும் முற்றுத்தொடர் வருவிக்க. `உம் ஊரே` என்புழி நின்ற ஏகாரம், வினாப்பொருட்டு. அஃது `ஒற்றியூர்` என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டு, வெள்ளேறு என்பதனோடும் இயையும். `உம்` என்பதும் `ஊர்தி` என்பதனோடும் இயையும். என்செய்வீர் என்றது, `எம்மை வரையமாட்டீர்` என்றவாறு. `அறிந்தோம்` என்றது யாமே அவண் வந்து சேர்வோம் என்னும் குறிப்பினது. ஏகம்பமோ என்னும் சிறப்போகாரம், அஃது எம்மால் நன்கறியப்பட்டதே என்பதுணர்த்தி நின்றது. `எம்மோடு அன்றித்தான் போகின்றீர்; போவீராகில்` என இயைத்து, கொண்டீர் என்பதன்பின் வைத்துரைக்க. அடிகள் என்றதும், `ஐயனாரே` என்றதும் விளி. இத் திருப்பாடல், நீங்கிச் செல்கின்றாரை எதிர்பெய்து கொண்டு கூறியது.

பண் :

பாடல் எண் : 9

கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்
கடிய விடையேறிக் காணக் காண
இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை
யென்றாருக் கெதிரெழுந்தே னெங்குங் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது
துருத்தி பழனமோ நெய்த்தா னமோ
அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

காளத்திப் பெருமான் கல்லலகு என்ற வாச்சியத்தைக் கையில் கொண்டு, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, எல்லோரும் காணும் வண்ணம் எம் வீட்டிற்குள் தாமே புகுந்து, `பிச்சை இடுமின்` என்று கூறினாராகப் பிச்சை கொண்டு வந்து பார்க்கும் போது, அவரை வீட்டினுள் எங்கும் காணேனாக, `ஒன்றும் சொல்லாதே வீட்டை விடுத்துப் போகின்றவரே! உம் ஊர் துருத்தியோ, பழனமோ, நெய்த்தானமோ யாது? என்று யான் வினவவும் கூறாது, என்னை வருத்தி, அவ்வடிகள் போகின்றார், அத்தகைய ஆமாத்தூர்த் தலைவர் எந்நிலையிலும் அழகியவர்.

குறிப்புரை :

கல்லலகு - (குறிப்புரை. ப.7. பா.1.) கடிய - விரைந்து செல்வதாகிய. `காணக்காண` என்றது, `பலருங்காண` என்றவாறு. புகுதா - புகுந்து. அயலாரோடு இரங்கிக் கூறுகின்றவள், ஆற்றாமை மிகுதியால் இடையே இறைவனை எதிர்பெய்து கொண்டு, `சொல்லாதே போகின்றீர்....நெய்த்தானமோ` என்றாள் என்க. ஓகாரங்கள் ஐயப்பொருள; `துருத்தி` என்புழியும் அவ்வோகாரம் விரிக்க.

பண் :

பாடல் எண் : 10

மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்
மணிமிழலை மேய மணாளர் போலும்
கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்
கொடுகொட்டி தாள முடையார் போலும்
செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்
தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்
அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே.

பொழிப்புரை :

ஒளி குறையாத திருநீற்றைப் பூசிய மார்பினர், அழகிய திருவீழி மிழலையிலே உகந்தருளியிருக்கும் திருமணக் கோலத்தினர். குவளை மலர் மாலையை அணிந்த உமையம்மைக்குத் தலைவர். கொடு கொட்டி ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவர். கயிலாயத்தில் உள்ள எம் செல்வர். தெற்கில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து சேர்ந்தவர். வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் தீர்த்து ஆட்கொள்ளும் ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே.

குறிப்புரை :

மழுங்கலா-ஒளிகுறையாத (வெள்ளிய) மணி - அழகு. மணாளர் - தலைவர். குவளைக் கோதை - குவளை மலரால் ஆகிய மாலையணிந்த உமையம்மை. `கொடுகொட்டி` (குறிப்புரை. பா.6.) அழுங்கினார்-வருந்தினவர். ஐயுறவு - `துன்பங் களைவரோ களையாரோ` என்னும் ஐயம். இத்திருப் பாடலை, முன்னெல்லாம் ஆற்றாளாய் இரங்கிக் கூறியவள், இறுதிக்கண், `பெரியோர் பிழையுட் படார்; அதனால், பின்பு வந்து வரைவார்` எனத்தேறி, ஆற்றியுரைத்ததாகக் கொள்க. அதனால், `அழகியரே` என்றதும் புகழுரையே.
சிற்பி